திருவிவிலியம்/புதிய ஏற்பாடு/மத்தேயு நற்செய்தி/அதிகாரங்கள் 13 முதல் 14 வரை

விக்கிமூலம் இலிருந்து
"ஏரோதின் பிறந்த நாளில் ஏரோதியாளின் மகள் அவையினர் நடுவில் நடனம் ஆடி ஏரோதை அகமகிழச் செய்தாள். அதனால் அவள் எதைக் கேட்டாலும் அளிப்பதாக அவன் ஒரு வாக்குறுதியை ஆணையிட்டு அறிவித்தான். அவள் தன் தாய் சொல்லிக்கொடுத்தபடியே, 'திருமுழுக்கு யோவானின் தலையை ஒரு தட்டில் வைத்து இங்கேயே எனக்குக் கொடும்' என்று கேட்டாள்." - மத்தேயு 14:6-8

மத்தேயு நற்செய்தி (Matthew)[தொகு]

அதிகாரங்கள் 13 முதல் 14 வரை

அதிகாரம் 13[தொகு]

உவமைப் பொழிவு[தொகு]

விதைப்பவர் உவமை[தொகு]

(மாற் 4:1-9; லூக் 8:4-8)


1 அதே நாளில் இயேசு வீட்டிற்கு வெளியே சென்று கடலோரத்தில் அமர்ந்தார்.
2 மக்கள் பெருந்திரளாய் அவரிடம் ஒன்றுகூடி வந்தனர்.
ஆகவே அவர் படகில் ஏறி அமர்ந்தார்.
திரண்டிருந்த மக்கள் அனைவரும் கடற்கரையில் நின்றுகொண்டிருந்தனர்.
3 அவர் உவமைகள் வாயிலாகப் பலவற்றைக் குறித்து அவர்களோடு பேசினார்:
"விதைப்பவர் ஒருவர் விதைக்கச் சென்றார்.
4 அவர் விதைக்கும்பொழுது சில விதைகள் வழியோரம் விழுந்தன.
பறவைகள் வந்து அவற்றை விழுங்கி விட்டன.
5 வேறு சில விதைகள் மிகுதியாக மண் இல்லாப் பாறைப் பகுதிகளில் விழுந்தன.
அங்கே மண் ஆழமாக இல்லாததால் அவை விரைவில் முளைத்தன;
6 ஆனால் கதிரவன் மேலே எழ,
அவை காய்ந்து, வேரில்லாமையால் கருகிப் போயின.
7 மற்றும் சில விதைகள் முட்செடிகளின் இடையே விழுந்தன.
முட்செடிகள் வளர்ந்து அவற்றை நெருக்கிவிட்டன.
8 ஆனால் இன்னும் சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தன.
அவற்றுள் சில நூறு மடங்காகவும் சில அறுபது மடங்காகவும்
சில முப்பது மடங்காகவும் விளைச்சலைக் கொடுத்தன.
9 கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்" என்றார்.

உவமைகளின் நோக்கம்[தொகு]

(மாற் 4:10-12; லூக் 8:9-10)


10 சீடர்கள் அவரருகே வந்து,
"ஏன் அவர்களோடு உவமைகள் வாயிலாகப் பேசுகின்றீர்?" என்று கேட்டார்கள்.
11 அதற்கு இயேசு அவர்களிடம் மறுமொழியாகக் கூறியது:
"விண்ணரசின் மறைபொருளை அறிய உங்களுக்குக் கொடுத்து வைத்திருக்கிறது;
அவர்களுக்கோ கொடுத்து வைக்கவில்லை.
12 உள்ளவருக்குக் கொடுக்கப்படும்; அவர் நிறைவாகப் பெறுவார்.
மாறாக, இல்லாதவரிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும். [1]
13 அவர்கள் கண்டும் காண்பதில்லை;
கேட்டும் கேட்பதில்லை;
புரிந்து கொள்வதுமில்லை.
இதனால்தான் நான் அவர்களோடு உவமைகள் வாயிலாகப் பேசுகிறேன்.
14 இவ்வாறு எசாயாவின் பின்வரும் இறைவாக்கு அவர்களிடம் நிறைவேறுகிறது:

'நீங்கள் உங்கள் காதால் தொடர்ந்து கேட்டும் கருத்தில் கொள்வதில்லை.


உங்கள் கண்களால் பார்த்துக் கொண்டேயிருந்தும் உணர்வதில்லை.
15 இம்மக்களின் நெஞ்சம் கொழுத்துப்போய்விட்டது;
காதும் மந்தமாகிவிட்டது.
இவர்கள் தம் கண்களை மூடிக்கொண்டார்கள்;
எனவே கண்ணால் காணாமலும் காதால் கேளாமலும்
உள்ளத்தால் உணராமலும் மனம் மாறாமலும் இருக்கின்றார்கள்.


நானும் அவர்களைக் குணமாக்காமல் இருக்கிறேன்.'[2]


16 உங்கள் கண்களோ பேறுபெற்றவை; ஏனெனில் அவை காண்கின்றன.
உங்கள் காதுகளும் பேறுபெற்றவை; ஏனெனில் அவை கேட்கின்றன.
17 நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்:
பல இறைவாக்கினர்களும் நேர்மையாளர்களும்
நீங்கள் காண்பவற்றைக் காண ஆவல் கொண்டிருந்தார்கள்.
ஆனால், அவர்கள் காணவில்லை.
நீங்கள் கேட்பவற்றைக் கேட்க விரும்பினார்கள்;
ஆனால் அவர்கள் கேட்கவில்லை. [3]

விதைப்பவர் உவமையின் விளக்கம்[தொகு]

(மாற் 4:13-20; லூக் 8:12-15)


18 "எனவே விதைப்பவர் உவமையைப் பற்றிக் கேளுங்கள்:
19 வழியோரம் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானோர்
இறையாட்சியைக் குறித்த இறைவார்த்தையைக் கேட்டும் புரிந்து கொள்ளமாட்டார்கள்.
அவர்கள் உள்ளத்தில் விதைக்கப்பட்ட விதைகளைத் தீயோன் கைப்பற்றிச் செல்லுவான்.
20 பாறைப் பகுதிகளில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானோர்
இறைவார்த்தையைக் கேட்டவுடன் அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வார்கள்.
21 ஆனால், அவர்கள் வேரற்றவர்கள்.
எனவே அவர்கள் சிறிது காலமே நிலைத்திருப்பார்கள்;
இறைவார்த்தையின் பொருட்டு வேதனையோ இன்னலோ நேர்ந்த உடனே
தடுமாற்றம் அடைவார்கள்.
22 முட்செடிகளுக்கு இடையில் விழுந்த விதைகளுக்கு ஒப்பானோர்
இறைவார்த்தையைக் கேட்டும்
உலகக் கவலையும் செல்வ மாயையும் அவ்வார்த்தையை நெருக்கிவிடுவதால்
பயன் அளிக்க மாட்டார்கள்.
23 நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானோர்
இறைவார்த்தையைக் கேட்டுப் புரிந்து கொள்வார்கள்.
இவர்களுள் சிலர் நூறு மடங்காகவும்,
சிலர் அறுபது மடங்காகவும்
சிலர் முப்பது மடங்காகவும் பயன் அளிப்பர்."

வயலில் தோன்றிய களைகள் உவமை[தொகு]


24 இயேசு அவர்களுக்கு எடுத்துரைத்த வேறு ஓர் உவமை:
"விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்.
ஒருவர் தம் வயலில் நல்ல விதைகளை விதைத்தார்.
25 அவருடைய ஆள்கள் தூங்கும்போது
அவருடைய பகைவன் வந்து கோதுமைகளுக்கிடையே
களைகளை விதைத்துவிட்டுப் போய்விட்டான்
26 பயிர் வளர்ந்து கதிர் விட்டபோது களைகளும் காணப்பட்டன.
27 நிலக்கிழாருடைய பணியாளர்கள் அவரிடம் வந்து,
'ஐயா, நீர் உமது வயலில் நல்ல விதைகளை அல்லவா விதைத்தீர்?
அதில் களைகள் காணப்படுவது எப்படி?' என்று கேட்டார்கள்.
28 அதற்கு அவர், 'இது பகைவனுடைய வேலை' என்றார்.
உடனே பணியாளர்கள் அவரிடம்,
'நாங்கள் போய் அவற்றைப் பறித்துக் கொண்டு வரலாமா? உம் விருப்பம் என்ன?'
என்று கேட்டார்கள்.
29 அவர், 'வேண்டாம், களைகளைப் பறிக்கும்போது
அவற்றோடு சேர்த்துக் கோதுமையையும் நீங்கள் பிடுங்கிவிடக்கூடும்.
30 அறுவடைவரை இரண்டையும் வளர விடுங்கள்.
அறுவடை நேரத்தில் அறுவடை செய்வோரிடம்,
"முதலில் களைகளைப் பறித்துக் கொண்டு வந்து
எரிப்பதற்கெனக் கட்டுகளாகக் கட்டுங்கள்.
கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்து வையுங்கள்"
என்று கூறுவேன்' என்றார்."

கடுகு விதை, புளிப்பு மாவு உவமைகள்[தொகு]

(மாற் 4:30-32; லூக் 13:18-21)


31-32 இயேசு அவர்களுக்கு எடுத்துரைத்த வேறு ஓர் உவமை:
"ஒருவர் கடுகு விதையை [4] எடுத்துத் தம் வயலில் விதைத்தார்.
அவ்விதை எல்லா விதைகளையும்விடச் சிறியது.
ஆனாலும், அது வளரும்போது
மற்றெல்லாச் செடிகளையும் விடப் பெரியதாகும்.
வானத்துப் பறவைகள் அதன் கிளைகளில் வந்து தங்கும் அளவுக்குப் பெரிய மரமாகும்.
விண்ணரசு இக்கடுகு விதைக்கு ஒப்பாகும். [5]


33 அவர் அவர்களுக்குக் கூறிய வேறு ஓர் உவமை:
"பெண் ஒருவர் புளிப்புமாவை எடுத்து
மூன்று மரக்கால் மாவில் பிசைந்து வைத்தார்.
மாவு முழுவதும் புளிப்பேறியது.
விண்ணரசு இப்புளிப்புமாவுக்கு ஒப்பாகும்."

உவமைகள் வாயிலாகவே பேசும் இயேசு[தொகு]

(மாற் 4:33-34)


34 இவற்றையெல்லாம் இயேசு மக்கள் கூட்டத்துக்கு
உவமைகள் வாயிலாக உரைத்தார்.
உவமைகள் இன்றி அவர் அவர்களோடு எதையும் பேசவில்லை.
35 "நான் உவமைகள் வாயிலாகப் பேசுவேன்;
உலகத் தோற்றமுதல் மறைந்திருப்பவற்றை விளக்குவேன்" என்று
இறைவாக்கினர் உரைத்தது இவ்வாறு நிறைவேறியது. [6]

வயலில் தோன்றிய களைகள் உவமையின் விளக்கம்[தொகு]


36 அதன்பின்பு இயேசு மக்கள் கூட்டத்தினரை அனுப்பிவிட்டு வீட்டுக்குள் வந்தார்.
அப்போது அவருடைய சீடர்கள் அவரருகே வந்து,
"வயலில் தோன்றிய களைகள்பற்றிய உவமையை
எங்களுக்கு விளக்கிக் கூறும்" என்றனர்.
37 அதற்கு அவர் பின் வருமாறு கூறினார்:
"நல்ல விதைகளை விதைப்பவர் மானிடமகன்;
38 வயல், இவ்வுலகம்;
நல்ல விதைகள், கடவுளின் ஆட்சிக்குட்பட்ட மக்கள்;
களைகள், தீயோனைச் சேர்ந்தவர்கள்;
39 அவற்றை விதைக்கும் பகைவன், அலகை;
அறுவடை, உலகின்முடிவு;
அறுவடை செய்வோர், வானதூதர்.
40 எவ்வாறு களைகளைப் பறித்துத் தீக்கிரையாக்குவார்களோ
அவ்வாறே உலக முடிவிலும் நடக்கும்.
41 மானிட மகன் தம் வானதூதரை அனுப்புவார்.
அவர்கள் அவருடைய ஆட்சிக்குத் தடையாக உள்ள அனைவரையும் [7]
நெறிகெட்டோரையும் ஒன்று சேர்ப்பார்கள்;
42 பின் அவர்களைத் தீச்சூளையில் தள்ளுவார்கள்.
அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்.
43 அப்போது நேர்மையாளர் தம் தந்தையின் ஆட்சியில்
கதிரவனைப்போல் ஒளிவீசுவர்.
கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்."

புதையல் உவமை[தொகு]


44 "ஒருவர் நிலத்தில் மறைந்திருந்த புதையல் ஒன்றைக் கண்டுபிடிக்கிறார்.
அவர் அதை மூடி மறைத்து விட்டு
மகிழ்ச்சியுடன் போய்த்
தமக்குள்ள யாவற்றையும் விற்று
அந்த நிலத்தை வாங்கிக்கொள்கிறார்.
விண்ணரசு இப்புதையலுக்கு ஒப்பாகும்.

முத்து உவமை[தொகு]


45-46 "வணிகர் ஒருவர் நல்முத்துகளைத் தேடிச் செல்கிறார்.
விலை உயர்ந்த ஒரு முத்தைக் கண்டவுடன்
அவர் போய்த் தமக்குள் யாவற்றையும் விற்று
அதை வாங்கிக்கொள்கிறார்.
விண்ணரசு அந்நிகழ்ச்சிக்கு ஒப்பாகும்.

வலை உவமை[தொகு]


47 "விண்ணரசு கடலில் வீசப்பட்டு எல்லா வகையான மீன்களையும்
வாரிக் கொண்டுவரும் வலைக்கு ஒப்பாகும்.
48 வலை நிறைந்ததும் அதை இழுத்துக்கொண்டு போய்க்
கரையில் உட்கார்ந்து நல்லவற்றைக் கூடைகளில் சேர்த்து வைப்பர்;
கெட்டவற்றை வெளியே எறிவர்.
49 இவ்வாறே உலக முடிவிலும் நிகழும்.
வானதூதர் சென்று நேர்மையாளரிடையேயிருந்து தீயோரைப் பிரிப்பர்;
50 பின் அவர்களைத் தீச்சூளையில் தள்ளுவர்.
அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்."

முடிவுரை[தொகு]


51 "இவற்றையெல்லாம் புரிந்து கொண்டீர்களா?" என்று இயேசு கேட்க,
அவர்கள், "ஆம்" என்றார்கள்.
52 பின்பு அவர்,
"ஆகையால் விண்ணரசு பற்றிக் கற்றுக்கொண்ட எல்லா மறைநூல் அறிஞரும்
தம் கருவூலத்திலிருந்து
புதியவற்றையும் பழையவற்றையும் வெளிக்கொணரும்
வீட்டு உரிமையாளரைப்போல் இருக்கின்றனர்"
என்று அவர்களிடம் கூறினார்.

4. விண்ணரசின் அமைப்பு[தொகு]

சொந்த ஊரில் இயேசு புறக்கணிக்கப்படுதல்[தொகு]

(மாற் 6:1-6; லூக் 4:16-30)


53 இவ்வுவமைகளை இயேசு சொல்லி முடித்த பின்பு
அவ்விடத்தை விட்டுச் சென்றார்.
54 தமது சொந்த ஊருக்கு வந்து
அங்குள்ள தொழுகைக் கூடத்தில் அவர்களுக்குக் கற்பித்தார்.
அதைக் கேட்டவர்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள்.
அவர்கள், "எங்கிருந்து இந்த ஞானம் இவருக்கு வந்தது?
எப்படி இந்த வல்ல செயல்களைச் செய்கிறார்?
55 இவர் தச்சருடைய மகன் அல்லவா?
இவருடைய தாய் மரியா என்பவர்தானே?
யாக்கோபு, யோசேப்பு, சீமோன்,
யூதா ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா?
56 இவர் சகோதரிகள் எல்லாரும் நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா?
பின் இவருக்கு இவையெல்லாம் எங்கிருந்து வந்தன?" என்றார்கள்.
57 இவ்வாறு அவரை ஏற்றுக்கொள்ள அவர்கள் தயங்கினார்கள்.
இயேசு அவர்களிடம்,
"தம் சொந்த ஊரிலும் வீட்டிலும் தவிர
மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர்" என்றார். [8]
58 அவர்களுக்கு நம்பிக்கை இல்லாததால்
அவர் அங்குப் பல வல்ல செயல்களைச் செய்யவில்லை.


குறிப்புகள்

[1] 13:12 = மத் 25:29; மாற் 4:25; லூக் 8:18; 19:26.
[2] 13:14,15 = எசா 6:9,10; யோவா 12:40; திப 28:26.
[3] 13:16,17 = லூக் 10:23,24; 22:15; 1 பேது 1:12.
[4] 13:31 - இங்கே குறிக்கப்படுவது பாலஸ்தீன நாட்டில் வளரும் ஒருவகைக் கடுகு மரம்.
[5] 13:32 = எசே 17:24.
[6] 13:35 = திபா 78:2.
[7] 13:41 - "அனைவரையும்" என்னும் சொல் மூல பாடத்தில் "அனைத்தையும்" என்றுள்ளது.
[8] 13:57 = யோவா 4:44.


அதிகாரம் 14[தொகு]

திருமுழுக்கு யோவான் கொல்லப்படுதல்[தொகு]

(மாற் 6:14-19; லூக் 9:7-9)


1 அக்காலத்தில் குறுநில மன்னன் ஏரோது,
இயேசுவைப்பற்றிய செய்தியைக் கேள்வியுற்றான்.
2 அவன் தன் ஊழியரிடம்,
"இவர் திருமுழுக்கு யோவான்தான்.
இறந்த யோவானைக் கடவுள் உயிர்பெற்றெழச் செய்தார்.
இதனால்தான் இந்த வல்ல செயல்களை இவர் செய்கிறார்" என்று கூறினான்.
3 ஏரோது தன் சகோதரனான பிலிப்பின் மனைவியாகிய
ஏரோதியாவின் பொருட்டு
யோவானைப் பிடித்துக் கட்டிச் சிறையில் அடைத்திருந்தான்.
4 ஏனெனில் யோவான் அவனிடம்,
"நீர் அவளை வைத்திருப்பது முறையல்ல" என்று சொல்லிவந்தார். [1]
5 ஏரோது அவரைக் கொலைசெய்ய விரும்பினான்;
ஆயினும் மக்கள் கூட்டத்தினர் அவரை ஓர் இறைவாக்கினர் எனக் கருதியதால்
அவர்களுக்கு அஞ்சினான்.
6 ஏரோதின் பிறந்த நாளில்
ஏரோதியாளின் மகள் அவையினர் நடுவில் நடனம் ஆடி
ஏரோதை அகமகிழச் செய்தாள்.
7 அதனால் அவள் எதைக் கேட்டாலும் அளிப்பதாக
அவன் ஒரு வாக்குறுதியை ஆணையிட்டு அறிவித்தான்.
8 அவள் தன் தாய் சொல்லிக்கொடுத்தபடியே,
"திருமுழுக்கு யோவானின் தலையை
ஒரு தட்டில் வைத்து இங்கேயே எனக்குக் கொடும்" என்று கேட்டாள்.
9 இதைக் கேட்ட அரசன் வருந்தினான்;
ஆனாலும் தான் விருந்தினர் முன் ஆணையிட்டதால்
அதை அவளுக்குக் கொடுக்கக் கட்டளையிட்டான்;
10 ஆள் அனுப்பிச் சிறையில் இருந்த யோவானின் தலையை வெட்டச் செய்தான்.
11 அவருடைய தலையை ஒரு தட்டில் வைத்துக் கொண்டுவரச் செய்து
அதைச் சிறுமியிடம் கொடுத்தான்.
அவளும் அதைத் தன் தாயிடம் கொண்டு சென்றாள்.
12 யோவானுடைய சீடர் வந்து
அவருடைய உடலை எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர்;
பின்னர் இந்நிகழ்ச்சியினை இயேசுவிடம் போய் அறிவித்தனர்.

ஐயாயிரம் பேருக்கு உணவு அளித்தல்[தொகு]

(மாற் 6:30-44; லூக் 9:10-17; யோவா 6:1-14)


13 இதைக் கேள்வியுற்ற இயேசு அங்கிருந்து புறப்பட்டுப் படகிலேறிப்
பாலைநிலத்திலுள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்றார்.
இதைக் கேள்விப்பட்ட திரளான மக்கள்
ஊர்களிலிருந்து கால்நடையாக அவரைப் பின்தொடர்ந்தனர்.
14 இயேசு அங்குச் சென்றபோது
பெருந்திரளான மக்களைக் கண்டு அவர்கள்மீது பரிவுகொண்டார்;
அவர்களிடையே உடல் நலமற்றிருந்தோரைக் குணமாக்கினார்.
15 மாலையானபோது, சீடர் அவரிடம் வந்து,
"இவ்விடம் பாலைநிலம் ஆயிற்றே, நேரமும் ஆகிவிட்டது.
ஊர்களுக்குச் சென்று தங்களுக்குத் தேவையான உணவு வாங்கிக்கொள்ள
மக்கள் கூட்டத்தை அனுப்பிவிடும்" என்றனர்.
16 இயேசு அவர்களிடம்,
"அவர்கள் செல்ல வேண்டியதில்லை;
நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்" என்றார்.
17 ஆனால் அவர்கள் அவரைப் பார்த்து,
"எங்களிடம் இங்கே ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் தவிர
வேறு எதுவும் இல்லை" என்றார்கள்.
18 அவர், "அவற்றை என்னிடம் இங்கே கொண்டு வாருங்கள்" என்றார்.
19 மக்களைப் புல்தரையில் அமருமாறு ஆணையிட்டார்.
அவர் அந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து,
வானத்தை அண்ணாந்து பார்த்து,
கடவுளைப் போற்றி,
அப்பங்களைப் பிட்டுச் சீடர்களிடம் கொடுத்தார்.
சீடர்களும் மக்களுக்குக் கொடுத்தார்கள்.
20 அனைவரும் வயிறார உண்டனர்.
எஞ்சிய துண்டுகளைப் பன்னிரண்டு கூடைகள் நிறைய எடுத்தனர்.
21 பெண்களும் சிறு பிள்ளைகளும் நீங்கலாக
உணவுண்ட ஆண்களின் தொகை ஏறத்தாழ ஐயாயிரம்.

கடல்மீது நடத்தல்[தொகு]

(மாற் 6:45-52; யோவா 6:5-21)


22 இயேசு கூட்டத்தினரை அவ்விடத்திலிருந்து அனுப்பிக் கொண்டிருந்தார்.
அப்பொழுது சீடரையும் உடனே படகேறித்
தமக்குமுன் அக்கரைக்குச் செல்லுமாறு அவர் கட்டாயப் படுத்தினார்.
23 மக்களை அனுப்பிவிட்டு,
அவர் தனியே இறைவனிடம் வேண்டுவதற்காக
ஒரு மலையின்மேல் ஏறினார்.
பொழுது சாய்ந்தபிறகும் அங்கே அவர் தனியே இருந்தார்.
24 அதற்குள் படகு கரையிலிருந்து நெடுந்தொலை சென்றுவிட்டது.
மேலும் எதிர்க்காற்று அடித்துக்கொண்டிருந்ததால்
அலைகளால் படகு அலைக்கழிக்கப்பட்டது.
25 இரவின் நான்காம் காவல்வேளையில் [2]
இயேசு அவர்களை நோக்கிக் கடல்மீது நடந்து வந்தார்.
26 அவர் கடல்மீது நடப்பதைக் கண்ட சீடர் கலங்கி,
"ஐயோ, பேய்" என அச்சத்தினால் அலறினர்.
27 உடனே இயேசு அவர்களிடம் பேசினார்.
"துணிவோடிருங்கள்; நான்தான், அஞ்சாதீர்கள்" என்றார்.


28 பேதுரு அவருக்கு மறுமொழியாக,
"ஆண்டவரே நீர்தாம் என்றால்
நானும் கடல்மீது நடந்து உம்மிடம் வர ஆணையிடும்" என்றார்.
29 அவர், "வா" என்றார்.
பேதுருவும் படகிலிருந்து இறங்கி
இயேசுவை நோக்கிக் கடல்மீது நடந்து சென்றார்.
30 அப்பொழுது பெருங்காற்று வீசியதைக் கண்டு அஞ்சி அவர் மூழ்கும்போது,
"ஆண்டவரே, என்னைக் காப்பாற்றும்" என்று கத்தினார்.
31 இயேசு உடனே தம் கையை நீட்டி அவரைப் பிடித்து,
"நம்பிக்கை குன்றியவனே, ஏன் ஐயம் கொண்டாய்?" என்றார்.
32 அவர்கள் படகில் ஏறியதும் காற்று அடங்கியது.
33 படகில் இருந்தோர் இயேசுவைப் பணிந்து,
"உண்மையாகவே நீர் இறைமகன்" என்றனர். [3]

கெனசரேத்தில் நலமளித்தல்[தொகு]

(மாற் 6:53-56)


34 அவர்கள் மறு கரைக்குச் சென்று
கெனசரேத்துப் பகுதியை அடைந்தார்கள்.
35 இயேசுவை யாரென்று அறிந்துணர்ந்த அவ்விடத்து மக்கள்
சுற்றுப் புறமெங்கும் ஆள் அனுப்பி
எல்லா நோயாளர்களையும் அவரிடம் கொண்டு வந்தனர்.
36 அவரது மேலுடையின் ஓரத்தையாவது அவர்கள் தொட அனுமதிக்குமாறு
அவரை வேண்டினர்; தொட்டவர் யாவரும் நலமடைந்தனர். [4]


குறிப்புகள்

[1] 14:4 = லேவி 18:16; 20:21.
[2] 14:25 - இரவு நான்கு பிரிவுகளாக (சாமங்களாக) பிரிக்கப்பட்டுக்
காவல் பணி மேற்கொள்ளப்பட்டது.
இங்கே குறிக்கப்படுவது விடியற்காலை 3 மணி முதல் 6 மணிவரை
உள்ள காலப்பிரிவு.
[3] 14:33 = மத் 4:3; 16:16.
[4] 14:36 = மத் 9:20.


(தொடர்ச்சி): மத்தேயு நற்செய்தி: அதிகாரங்கள் 15 முதல் 16 வரை