திருவிவிலியம்/புதிய ஏற்பாடு/மத்தேயு நற்செய்தி/அதிகாரங்கள் 3 முதல் 4 வரை

விக்கிமூலம் இலிருந்து
"அதன்பின் இயேசு யோவானிடம் திருமுழுக்குப் பெற
கலிலேயாவிலிருந்து யோர்தானுக்கு வந்தார்... இயேசு திருமுழுக்குப் பெற்றவுடனே தண்ணீரை விட்டு வெளியேறினார். உடனே வானம் திறந்ததையும் கடவுளின் ஆவி, புறா இறங்குவது போலத் தம்மீது வருவதையும் அவர் கண்டார். அப்பொழுது, "என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்" என்று வானத்திலிருந்து ஒரு குரல் கேட்டது." - மத்தேயு 3:13,16-17


மத்தேயு நற்செய்தி (Matthew)[தொகு]

அதிகாரங்கள் 3 முதல் 4 வரை


அதிகாரம் 3[தொகு]

1. விண்ணரசு பறைசாற்றப்படல்[தொகு]

திருமுழுக்கு யோவான் விண்ணரசின் வருகையை அறிவித்தல்[தொகு]

(மாற் 1:1-8; லூக் 3:1-9, 15-17; யோவா 1:19-28)


1-2 அக்காலத்தில் திருமுழுக்கு யோவான்
யூதேயாவின் பாலை நிலத்துக்கு வந்து,
"மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது"
என்று பறைசாற்றி வந்தார். [1]
3 இவரைக் குறித்தே,

"பாலைநிலத்தில் குரல் ஒன்று முழங்குகிறது:


ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்;


அவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள்"


என்று இறைவாக்கினர் எசாயா உரைத்துள்ளார். [2]
4 இந்த யோவான் ஒட்டக முடியாலான ஆடையை அணிந்திருந்தார்;
தோல் கச்சையை இடையில் கட்டி இருந்தார்;
வெட்டுக்கிளியும் காட்டுத்தேனும் உண்டு வந்தார். [3]
5 எருசலேமிலும் யூதேயா முழுவதிலும்
யோர்தான் ஆற்றை அடுத்துள்ள பகுதிகளனைத்திலும் இருந்தவர்கள்
அவரிடம் சென்றார்கள்.
6 அவர்கள் தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு
யோர்தான் ஆற்றில் அவரிடம் திருமுழுக்குப் பெற்றுவந்தார்கள்.
7 பரிசேயர், சதுசேயருள் பலர்
தம்மிடம் திருமுழுக்குப் பெற வருவதைக் கண்டு
அவர் அவர்களை நோக்கி,
"விரியன் பாம்புக் குட்டிகளே,
வரப்போகும் சினத்திலிருந்து தப்பிக்க இயலும் என
உங்களிடம் சொன்னவர் யார்? [4]
8 நீங்கள் மனம் மாறியவர்கள் என்பதை
அதற்கேற்ற செயல்களால் காட்டுங்கள்.
9 'ஆபிரகாம் எங்களுக்குத் தந்தை' என
உங்களிடையே சொல்லிப் பெருமை கொள்ள வேண்டாம்.
இக்கற்களிலிருந்தும் ஆபிரகாமுக்குப் பிள்ளைகளைத் தோன்றச் செய்யக்
கடவுள் வல்லவர் என உங்களுக்குச் சொல்கிறேன். [5]
10 ஏற்கெனவே மரங்களின் வேரருகே கோடரி வைத்தாயிற்று.
நற்கனி தராத மரங்கள் எல்லாம் வெட்டப்பட்டுத் தீயில் போடப்படும். [6]
11 நீங்கள் மனம் மாறுவதற்காக நான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கிறேன்.
எனக்குப் பின் ஒருவர் வருகிறார்.
அவர் என்னைவிட வலிமை மிக்கவர்.
அவருடைய மிதியடிகளைத் தூக்கிச் செல்லக்கூட எனக்குத் தகுதியில்லை.
அவர் தூய ஆவி என்னும் நெருப்பால்
உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுப்பார்.
12 அவர் சுளகைத் தம் கையில் கொண்டு
கோதுமையையும் பதரையும் பிரித்தெடுப்பார்;
தம் கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார்;
ஆனால், பதரை அணையா நெருப்பிலிட்டுச் சுட்டெரிப்பார்" என்றார்.

இயேசு திருமுழுக்குப் பெறுதல்[தொகு]

(மாற் 1:9-11; லூக் 3:21-22)


13 அதன்பின் இயேசு யோவானிடம் திருமுழுக்குப் பெற
கலிலேயாவிலிருந்து யோர்தானுக்கு வந்தார்.
14 யோவான், "நான்தான் உம்மிடம் திருமுழுக்குப் பெற வேண்டியவன்;
நீரா என்னிடம் வருகிறீர்?" என்று கூறித் தடுத்தார்.
15 இயேசு, "இப்பொழுது விட்டுவிடும்.
கடவுளுக்கு ஏற்புடையவை அனைத்தையும்
நாம் நிறைவேற்றுவதுதான் முறை" எனப் பதிலளித்தார்.
அதற்கு யோவானும் இணங்கினார்.
16 இயேசு திருமுழுக்குப் பெற்றவுடனே தண்ணீரை விட்டு வெளியேறினார்.
உடனே வானம் திறந்ததையும்
கடவுளின் ஆவி, புறா இறங்குவது போலத்
தம்மீது வருவதையும் அவர் கண்டார்.
17 அப்பொழுது, "என் அன்பார்ந்த மைந்தர் இவரே.
இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்" என்று
வானத்திலிருந்து ஒரு குரல் கேட்டது. [7]


குறிப்புகள்

[1] 3:2 = மத் 4:17; மாற் 1:15; திப 2:38.
[2] 3:3 = எசா 40:3; யோவா 1:23.
[3] 3:4 = 2 அர 1:8.
[4] 3:7 = மத் 12:34; 23:33; எசா 59:5.
[5] 3:9 = யோவா 8:33; உரோ 9:7,8.
[6] 3:10 = மத் 7:19.
[7] 3:17 = தொநூ 22:2; திபா 2:7; எசா 42:1;
மத் 12:18; 17:5; மாற் 1:11; லூக் 9:35.


அதிகாரம் 4[தொகு]

இயேசு சோதிக்கப்படுதல்[தொகு]

(மாற் 1:12-13; லூக் 4:1-13)


1 அதன்பின் இயேசு அலகையினால் சோதிக்கப்படுவதற்காகப்
பாலை நிலத்திற்குத் தூய ஆவியால் அழைத்துச் செல்லப்பட்டார். [1]
2 அவர் நாற்பது நாள் இரவும் பகலும் நோன்பிருந்தார்.
அதன் பின் பசியுற்றார்.
3 சோதிக்கிறவன் அவரை அணுகி,
"நீர் இறைமகன் என்றால் இந்தக் கற்கள் அப்பமாகும்படிக் கட்டளையிடும்" என்றான்.
4 அவர் மறுமொழியாக,

"'மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல,


மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர்' என


மறைநூலில் எழுதியுள்ளதே"


என்றார். [2]
5 பின்னர் அலகை அவரை எருசலேம் திருநகரத்திற்குக் கூட்டிச் சென்றது.
கோவிலின் உயர்ந்த பகுதியில் அவரை நிறுத்தி,
6 "நீர் இறைமகன் என்றால் கீழே குதியும்;

'கடவுள் தம் தூதருக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார்.


உமது கால் கல்லில் மோதாதபடி அவர்கள்


தங்கள் கைகளில் உம்மைத் தாங்கிக் கொள்வார்கள்'


என்று மறைநூலில் எழுதியுள்ளது" என்று அலகை அவரிடம் சொன்னது. [3]
7 இயேசு அதனிடம்,

"'உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்கவேண்டாம்'


எனவும் எழுதியுள்ளதே" என்று சொன்னார். [4]
8 மறுபடியும் அலகை அவரை மிக உயர்ந்த ஒரு மலைக்குக் கூட்டிச் சென்று
உலக அரசுகள் அனைத்தையும், அவற்றின் மேன்மையையும் அவருக்குக் காட்டி,
9 அவரிடம், "நீர் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து என்னை வணங்கினால்,
இவை அனைத்தையும் உமக்குத் தருவேன்" என்றது.
10 அப்பொழுது இயேசு அதனைப் பார்த்து, "அகன்று போ, சாத்தானே,

'உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி,
அவர் ஒருவருக்கே பணி செய்'


என்றும் மறைநூலில் எழுதியுள்ளது" என்றார். [5]
11 பின்னர் அலகை அவரை விட்டு அகன்றது.
உடனே வானதூதர் வந்து அவருக்குப் பணிவிடை செய்தனர்.

இயேசு கலிலேயாவில் பணி தொடங்குதல்[தொகு]

(மாற் 1:14-15; லூக் 4:14-15)


12 யோவான் கைது செய்யப்பட்டதை இயேசு கேள்விப்பட்டுக்
கலிலேயாவுக்குப் புறப்பட்டுச் சென்றார். [6]
13 அவர் நாசரேத்தைவிட்டு அகன்று செபுலோன், நப்தலி
ஆகிய இடங்களின் எல்லையில் கடலோரமாய் அமைந்திருந்த
கப்பர்நாகுமுக்குச் சென்று குடியிருந்தார். [7]
14 இறைவாக்கினர் எசாயா உரைத்த பின்வரும் வாக்கு இவ்வாறு நிறைவேறியது:

15 "செபுலோன் நாடே! நப்தலி நாடே!


பெருங்கடல் வழிப் பகுதியே!
யோர்தானுக்கு அப்பாலுள்ள நிலப்பரப்பே!
பிற இனத்தவர் வாழும் கலிலேயப் பகுதியே!
16 காரிருளில் இருந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்.
சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர் மேல்


சுடரொளி உதித்துள்ளது." [8]


17 அதுமுதல் இயேசு,
"மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது" எனப்
பறைசாற்றத் தொடங்கினார். [9]

முதல் சீடர்களை அழைத்தல்[தொகு]

(மாற் 1:15-20; லூக் 5:1-11)


18 இயேசு கலிலேயக் கடலோரமாய் நடக்கும்போது,
சகோதரர் இருவரைக் கண்டார்.
ஒருவர் பேதுரு எனப்படும் சீமோன்,
மற்றவர் அவர் சகோதரரான அந்திரேயா.
மீனவரான அவ்விருவரும் கடலில் வலைவீசிக் கொண்டிருந்தனர்.
19 இயேசு அவர்களைப் பார்த்து,
"என் பின்னே வாருங்கள்;
நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்" என்றார்.
20 உடனே அவர்கள் வலைகளை விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்.
21 அங்கிருந்து அப்பால் சென்றபோது
வேறு இரு சகோதரர்களைக் கண்டார்.
அவர்கள் செபதேயுவின் மகன் யாக்கோபும்
அவர் சகோதரரான யோவானும் ஆவர்.
அவர்கள் தங்கள் தந்தை செபதேயுவுடன் படகில்
வலைகளைப் பழுது பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
இயேசு அவர்களையும் அழைத்தார்.
22 உடனே அவர்கள் தங்கள் படகையும் தந்தையையும் விட்டுவிட்டு
அவரைப் பின்பற்றினார்கள்.

திரளான மக்களுக்குப் பணி புரிதல்[தொகு]

(லூக் 6:17-19)


23 அவர் கலிலேயப் பகுதி முழுவதும் சுற்றி வந்தார்;
அவர்களுடைய தொழுகைக் கூடங்களில் கற்பித்தார்;
விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்;
மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார். [10]
24 அவரைப் பற்றிய பேச்சு சிரியா நாடு முழுவதும் பரவியது.
பல்வேறு பிணிகளாலும் வாதைகளாலும் வருந்திய நோயாளர்,
பேய் பிடித்தோர், மதிமயங்கியோர், முடக்குவாதமுற்றோர்
ஆகிய அனைவரும் அவரிடம் அழைத்து வரப்பட்டனர்.
அவர் அவர்களைக் குணமாக்கினார்.
25 ஆகவே கலிலேயா, தெக்கப்பொலி, எருசலேம்,
யூதேயா, யோர்தானுக்கு அக்கரைப் பகுதி
ஆகிய இடங்களிலிருந்து வந்த மக்கள்
பெருந்திரளாய் அவரைப் பின்தொடர்ந்தனர்.


குறிப்புகள்

[1] 4:1 = விப 24:18; 34:28; எபி 2:18; 4:15.
[2] 4:4 = இச 8:3.
[3] 4:6 = திபா 91:12.
[4] 4:7 = இச 6:16.
[5] 4:10 = இச 6:13.
[6] 4:12 = மத் 14:3; மாற் 6:17; லூக் 3:19,20.
[7] 4:13 = யோவா 2:12.
[8] 4:15,16 = எசா 9:1,2.
[9] 4:17 = மத் 3:2; மாற் 1:15.
[10] 4:23 = மத் 9:35; மாற் 1:39.


(தொடர்ச்சி): மத்தேயு நற்செய்தி: அதிகாரங்கள் 5 முதல் 6 வரை