தொந்தியைக் குறைக்க சுலபமான வழிகள்/6. களைப்பு எப்படி ஏற்படுகிறது

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search

6. களைப்பு எப்படி ஏற்படுகிறது


உடல் எடையும் - உள் எடையும்

நமது உடலின் அடிப்படை அமைப்பு செல் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும். பல லட்சக்கணக்கான செல்கள் சேர்ந்து திசுக்கள் (Tissues) ஆவதும், பல்லாயிரக்கணக்கான திசுக்கள் சேர்ந்து ஓர் உறுப்பு (Organ) ஆவதும் பல உறுப்புக்கள் சேர்ந்து ஓர் அமைப்பு (System) ஆவதும் நீங்கள் அறிந்ததே.

ஆக, உடலின் அடிப்படையான திசுக்கள் தாம் முக்கிய பங்கேற்கின்றன. நமது உடலின் எடையில் எவ்வாறு இந்த திசுக்கள் எடுப்பாக அமைகின்றன என்று பார்ப்போம்.

திசுக்கள் ஒரு பெயர் கொண்டதாக இருந்தாலும் அமைப்பில் அந்தந்த இடத்திற்கேற்ப வடிவத்திலும் செயலிலும் மாறுபாடு கொண்டு வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றன.

அவைத் தசைத் திசுக்கள், உறுப்புக்களை இணைக்கும் பொருத்தும் திசுக்கள், எபிதிலியம், இரத்தத் திசுக்கள், மார்புத் திசுக்கள் என்பதாக பெயர் பெற்றிருக்கின்றன.

இந்த அடிப்படையில் தான் உடலின் எடையானது அமைந்திருக்கிறது என்பது ஆய்வறிஞர்களின் முடிவாகும். உடல் எடை என்று என இருந்தால் இது இப்படியாக அமையும்.

1. 1/2 பாகம் தசைத்திசுக்கள் (Muscle Tissue)

2. 1/5 பாகம் இணைத்திசுக்கள் (connective Tissues)

3. 1/10 பாகம் எபிதிலியம் (Epithelium)

4. 1/10 பாகம் இரத்தத்திசுக்கள் (Blood Tissue)

5. 1/10 பாகம் நரம்புத் திசுக்கள் (Nerve Tissue)

களைப்பு எப்படி ஏற்படுகிறது.

உடல் உறுப்புக்கள், நொடிக்குநொடி, உற்சாகமாக உழைத்துக் கொண்டிருக்கின்றன. ஒப்புயர்வற்ற வகையில் உற்பத்திகளைப் பெருக்கி உன்னத வளர்ச்சிகளை உண்டாக்கிக் கொண்டிருக்கின்றன.

அப்பொழுது அவயவங்களுக்கு இடையே ஆரவாரித்துக் கொண்டு எழுகின்ற கழிவுப் பொருட்கள் உடலுக்கு உள்ளே தேங்கி விடாமல் உடனுக்கு உடன் வெளியேற்றி விடுவது என்பது உடலின் திறமையான செயல் கூறாகும்.

கூடி குவிந்துவிடும் கழிவுப் பொருட்களை கூட்டி வைத்துத் தேக்கிக் கொண்டு விட்டால் தேகமானது திணறிப் போய்விடுகிறது. திக்கித் திகைத்துப் போய் விடுகிறது.

அந்தத் திணறல், திசுக்கள் திகைத்தல் போன்றவற்றிற்கு மறுபெயராக ஒரே பெயரால் விளங்குவது களைப்பு என்பதாகும்.

களைப்பின் விளக்கம் தான் என்ன?

களைப்பு என்றால் உழைப்பில் உற்சாகம் இழந்த நிலை, செயலாற்றும் திறமையில் சிரத்தையின்மை உடலாலும், மனதாலும் சோர்ந்து போய் விடுதல் போன்றவை.

களைப்பு முதலில் மனதில் தோன்றி வலையாக வளர்ந்து. உடல் மீது கவனமாக அழுத்தி, உறுப்புக்களையும் உணர்வுகளையும் தளரச் செய்து விடுகின்றன.

இனி களைப்புக்கான சில அறிகுறிகளைக் காண்போம்.

1. வேலை செய்யும் ஆற்றல் விழுந்து போகிறது.

2. உழைப்பிலே உண்டாகின்ற முனைப்பு திசை மாறிப்போகிறது.

3. ஒரு முகமாக களைத்து, கணிப்பும் கவனிப்பும் உள்ள உழைப்புநிலை கெட்டுப்போகிறது.

4. வசதியற்ற நிலை போன்ற (Uneasy) மனநிலை வலுத்துக்கொள்கிறது.

5. நெற்றிப் பொட்டிலே அழுத்தம் தலைவலிக்குக் கொண்டு போய்விடுகிறது. 6. தூக்கம் வருவது போன்ற மந்த நிலை தலைவலியின் தொடக்கம்.

7. சோம்பலின் ராஜாங்கம் தொடங்கிவிட தேகம் சோர்ந்து போக விறைப்பான தேகநிலை சரிந்து கொள்ள முயல்கிறது.

8. மனோ நிலையில் திடீர் மாற்றங்கள், நினைப்பூட்டும் வகையில் நெடித்தெழுகின்றன.

9. தூக்கமின்மை ஏற்படுகிறது. மீறித் தூங்கும்போது கலைந்து போகின்ற தூக்கமாக, கெட்ட கனவுகள் சஞ்சரிக்கும் நிலமாக மனம் மாறிப்போகிறது.

10. தோலில் ஏற்படும் மாற்றங்கள் பல கண்களுக்கு அடிப்பாகத் தில் பரந்து விரிந்து வருகின்ற கரு வளையங்களை கண்கள் குழி விழுந்து இருப்பது போன்ற காட்சிகளை உண்டாக்குகிறது.

11. பசி குறைகிறது. அஜீரணம் தலை தூக்குகிறது. மலச்சிக்கல் முற்றுகிறது. ஜீரணக் கோளாறுகள் பெருகுகின்றன.

12. சுவாச முறையில் திடீர் மாற்றம் , மார்பு வலிப்பது போன்ற உணர்வுகளின் முற்றல் நிலை.

13. சிறு குழந்தைகளுக்கு அடிக்கடி களைப்பு ஏற்பட்டால் அவர்களது வளர்ச்சியே குறைந்து போகிறது.

14. களைப்பானது உணர்வுகளில் மாற்றங்களை ஏற்படுத்தி நீதி நியாயம் தர்மம் போன்ற நல்லுணர்வுகளில் கூட எரிச்சலை உண்டுபண்ணி விடுகின்றது.

15. இன்னும் காற்றோட்டமில்லாத, அறையில் உட்கார்ந்திருக்கும்போது போதிய வெளிச்சம் இன்மை, கூனிக் குறுகி அமரும் பழக்கம், சரியான ஆசனமின்மை, சளித் தொல்லை, ஒய்வின்மை, போரடிக்கும் பேச்சைக் கேட்டால் கலைகள், குழப் பங்கள் எல்லாமே களைப்பை மிகுதிப்படுத்துகின்றன.

களைப்பை களிப்பாக மாற்றும் செயல் திட்டங்களை இனிவரும் பகுதிகளில் காண்போம்.