தொல்காப்பியம்/எழுத்ததிகாரம்/நூல் மரபு
Jump to navigation
Jump to search
ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு
- எழுத்து எனப்படுப
- அகரம் முதல்
- னகர இறுவாய் முப்பஃது என்ப
- சார்ந்து வரல் மரபின் மூன்று அலங்கடையே. 1
- அவைதாம்,
- குற்றியலிகரம் குற்றியலுகரம்
- ஆய்தம் என்ற
- முப்பாற்புள்ளியும் எழுத்து ஓரன்ன. 2
- அவற்றுள்,
- அ இ உ
- எ ஒ என்னும் அப் பால் ஐந்தும்
- ஓர் அளபு இசைக்கும் குற்றெழுத்து என்ப. 3
- ஆ ஈ ஊ ஏ ஐ
- ஓ ஔ என்னும் அப் பால் ஏழும்
- ஈர் அளபு இசைக்கும் நெட்டெழுத்து என்ப. 4
- மூ அளபு இசைத்தல் ஓர் எழுத்து இன்றே. 5
- நீட்டம் வேண்டின் அவ் அளபுடைய
- கூட்டி எழூஉதல் என்மனார் புலவர். 6
- கண் இமை நொடி என அவ்வே மாத்திரை
- நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட ஆறே. 7
- ஔகார இறுவாய்ப்
- பன்னீர் எழுத்தும் உயிர் என மொழிப. 8
- னகார இறுவாய்ப்
- பதினெண் எழுத்தும் மெய் என மொழிப. 9
- மெய்யொடு இயையினும் உயிர் இயல் திரியா. 10
- மெய்யின் அளபே அரை என மொழிப. 11
- அவ் இயல் நிலையும் ஏனை மூன்றே. 12
- அரை அளபு குறுகல் மகரம் உடைத்தே
- இசையிடன் அருகும் தெரியும் காலை. 13
- உட் பெறு புள்ளி உரு ஆகும்மே. 14
- மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல். 15
- எகர ஒகரத்து இயற்கையும் அற்றே. 16
- புள்ளி இல்லா எல்லா மெய்யும்
- உரு உரு ஆகி அகரமொடு உயிர்த்தலும்
- ஏனை உயிரொடு உருவு திரிந்து உயிர்த்தலும்
- ஆயீர் இயல உயிர்த்தல் ஆறே. 17
- மெய்யின் வழியது உயிர் தோன்று நிலையே. 18
- வல்லெழுத்து என்ப க ச ட த ப ற. 19
- மெல்லெழுத்து என்ப ங ஞ ண ந ம ன. 20
- இடையெழுத்து என்ப ய ர ல வ ழ ள. 21
- அம் மூ ஆறும் வழங்கு இயல் மருங்கின்
- மெய்ம்மயக்கு உடனிலை தெரியும் காலை. 22
- ட ற ல ள என்னும் புள்ளி முன்னர்
- க ச ப என்னும் மூ எழுத்து உரிய. 23
- அவற்றுள்,
- ல ளஃகான் முன்னர் ய வவும் தோன்றும். 24
- ங ஞ ண ந ம ன எனும் புள்ளி முன்னர்
- தம்தம் இசைகள் ஒத்தன நிலையே. 25
- அவற்றுள்,
- ண னஃகான் முன்னர்
- க ச ஞ ப ம ய வ ஏழும் உரிய. 26
- ஞ ந ம வ என்னும் புள்ளி முன்னர்
- யஃகான் நிற்றல் மெய் பெற்றன்றே. 27
- மஃகான் புள்ளி முன் வவ்வும் தோன்றும். 28
- ய ர ழ என்னும் புள்ளி முன்னர்
- முதல் ஆகு எழுத்து ஙகரமொடு தோன்றும். 29
- மெய்ந் நிலை சுட்டின் எல்லா எழுத்தும்
- தம் முன் தாம் வரூஉம் ர ழ அலங்கடையே. 30
- அ இ உ அம் மூன்றும் சுட்டு. 31
- ஆ ஏ ஓ அம் மூன்றும் வினா. 32
- அளபு இறந்து உயிர்த்தலும் ஒற்று இசை நீடலும்
- உள என மொழிப இசையொடு சிவணிய
- நரம்பின் மறைய என்மனார் புலவர். 33