உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை-2/340

விக்கிமூலம் இலிருந்து

340. புலத்தலும் இல்லேன்!

பாடியவர் : நக்கீரர்.

திணை : மருதம்.
துறை : பரத்தையின் மறுத்தந்த தலைமகனைத் தலைமகள் நொந்து சொல்லியது.

[(து-வி.) தலைமகன், பரத்தை மோகத்தால் தலைவியை மறந்து சிலகாலம் சுற்றியவன், மீண்டும் தன் தலைவியின் உறவை நாடி வருகின்றான். அவன் செயலைப் பாராட்டாது மறந்து, அவனிடம் மாறாத அன்புடைய தலைவியானவள், அவன் செயலுக்கு மனம் நொந்து கூறியதாக அமைந்த செய்யுள் இது. சிறப்பிக்கப் பெற்றோர்: செழியன், வாணன்.]


புல்லேன் மகிழ்ந! புலத்தலும் இல்லேன்—
கல்லா யானைக் கடுந்தேர்ச் செழியன்
படைமாண் பெருங்குள மடைநீர் விட்டெனக்
காலணைந்து எதிரிய கணைக்கோட்டு வாளை
அள்ளலம் கழனி உள்வாய் ஓடிப் 5
பகடுசேறு உதைத்த புள்ளிவெண் புறத்துச்
செஞ்சால் உழவர் கோற்புடை மதரிப்
பைங்காற் செறுவின் அளைமுதற் பிறழும்
வாணன் சிறுகுடி அன்ன என்
கோள்நேர் எவ்வளை நெகிழ்த்த நும்மே! 10

தெளிவுரை : மகிழ்நனே! பாகனின் குறிப்புக்கு இசைந்து நடப்பதற்குக் கற்றறியாத இளங்களிற்றைப் போன்றவன், விரையச் செல்லும் தேரினையுடைய செழியன். அவனுடைய படையினைப்போலப் பரப்பினாலே மாட்சிபெற்றது பெருங்குளம் ஒன்று. அது மிக்குப் பெருகியதனாலே, மடையைத் திறந்து நீரைப் புறம்போக விட்டனர். அதனாலே, கால்வாயை அடைந்து எதிரிட்டு வருவதாயிற்று, திரண்ட கொம்பினையுடை வாளை மீன் ஒன்று. அதுதான், சேற்றையுடைய அழகிய வயலின் உட்புறத்தேயாகப் பின்னர் ஓடியும் சென்றது. உழும் பகடுகள் சேற்றினைக் காலால் உதைத்தலாலே தெறித்த சேற்றுத் துளிகள் காய்ந்து வெண்ணிறப் புள்ளிகளாக உடலிலே தோன்ற, செவ்விய சாலினை மடக்கி உழுகின்ற உழவர்களின் கைக்கோலால் அடிக்கப்படுவதற்கும் அதுதான் அஞ்சிற்றில்லை. பசுமை பொருந்திய வயலின் வரம்பிடத்தே சென்று, அதன் அடிப்பக்கத்திலேயே புரண்டபடி யிருந்தது. இத்தகைய வளம் கொண்டது வாணனின் 'சிறுகுடி' என்னும் ஊர். அவ்வூரின் வளமை போன்ற, என்னுடைய கொள்ளுதல் பொருந்திய ஒளிகொண்ட வளைகளைப் பிரிவுத் துயரால் நெகிழச் செய்தவர் நீர். நும்மை, யான் தழுவுதலையும் செய்யேன்; ஆனால், வெறுத்தேனும் அல்லேன்.

கருத்து : 'புலத்தலும் இல்லேன்' என்றதால், அவன் முற்பட்டு வந்து தழுவ, அவளும் இசைந்து தழுவுவாள் என்பதாம். சொற்பொருள் : புல்லேன் – தழுவேன். புலத்தல் – ஊடல். கல்லா – கற்றறிவு இல்லாத. கல்லா யானை – வலிமிகுந்த இளங்களிறு. கடுந்தேர் – விரையச் செல்லும் தேர். செழியன் – பாண்டியன். கால் – கால்வாய். கணைக்கோட்டு வாளை – திரண்ட கொம்புடைய வாளை மீன்; கொம்பு தலையின் இருபுறத்துமுள்ள கூரிய முட்களைக் குறிக்கும். அள்ளல் – சேறு. பகடு – எருமைக்கடா. புள்ளிவெண்புறம் – சேற்றுப்புள்ளி காய்ந்து வெண்மையாகத் தோன்றும் உழவனின் உடற்புறம் சால் – உழவு சால். புடை மதரி – புடைத்தற்கும் அஞ்சாமல். பைங்கால் – பசுமையான நீர்வளம். அணை – வரம்பு. சிறுகுடி – ஓர் ஊர். கோள் நேர் – கொள்ளுதல் அமைந்த தன்மையுடைய; இறுகப் பிடித்திருந்த.

உள்ளுறை : குளத்திலிருந்து மடைநீரோடு வெளியேறிச் சென்ற வாளை மீனானது, கால்வாய் வழியாகச் சென்று, வயலுள் ஓடி, உழவர் புடைத்தற்கும் அஞ்சாமல்,வரப்படியிலே சென்று புரளும் என்றனர். இவ்வாறே மனையகம் நீங்கிய தலைவன், பாணன் காட்டிய வழியே பற்றிச்சென்று, பரத்தையர் சேரியுட் புகுந்து, பிறர் பழியுரைக்கும் அஞ்சாதவனாக, ஒருத்தியின் வீட்டினுட் சென்று, அவளோடு இன்பம் துய்த்துக் கிடந்தவனாவான் என்பதாம்.

விளக்கம் : செழியன் படைமாண் பெருங்குளம் – செழியன் படைத்த மாண்போடு கூடிய பெருங்குளம் எனினும் பொருந்தும். எதிரிய – எதிர்த்து நீந்தி வந்த; நீர் வரத்தில் எதிர் ஏறி வருதல் இது. 'பகடு சேறு உதைத்த புள்ளி வெண் புறத்து' என்பது, வயலுள் உழுங்காலத்தே பகடுகள் சேற்றுக்காலால் உதைக்கவும், மேலெல்லாம் புள்ளிபட்டுக் காய்ந்த வெண்ணிறமான முதுகுப்புறத்தைப் பெற்ற உழவர் என, உழவரின் தன்மை கூறினர்; இது சேற்று உழவு. 'கடுந்தேர்ச் செழியன்'—பாண்டியன் நெடுஞ்செழியனைக் குறித்தது. வாணன் – வாணன் மரபினன். சிறுகுடி – காவிரியின் வடபால் உள்ளதொரு ஊர் என்பர்; இதனால், அந்நாளில் செழியனுக்கு அப்பகுதி உட்பட்டிருந்தது எனலாம். கணவனின் குறையைப் பாராட்டாது பொறுத்து ஏற்கும் மனைவியின் மாண்பு இதனாற் புலனாகும். பெருங்குளம் விட்டகன்ற வாளை வயல் வரப்படியில் புரளுதல் போல, அவனும் மனையகம் விட்டுச்சென்று பரத்தையில்லில் துயின்றனன் என்று கூறி, அவன் சிறுமைக்கு மனம் நொந்ததும் ஆம்.

பாடபேதம் : பெயர்மாண் பெருங்குளம்.

பயன் : ஊடல் நீங்கிக் கூடி மகிழ்தலைத் தலைவி மேற்கொள்வாள் என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/340&oldid=1698647" இலிருந்து மீள்விக்கப்பட்டது