நான் நாத்திகன் – ஏன்?/001-002

விக்கிமூலம் இலிருந்து

 

நான் நாத்திகன்-ஏன் ?

 

 

ஓர் புத்தம் புதிய பிரச்னை கிளம்பி இருக்கிறது. இந்தப் பிரச்னையானது சர்வ வல்லவனும், சர்வவியாபியும், சர்வ தயாபரனும் ஆகிய கடவுள் ஒருவன் உண்டு என்று நான் நம்பாதது அகங்காரமே காரணமாக இருக்குமா? இதுபோன்ற ஒரு பிரச்னையைப்பற்றி எப்போதாவது விவாதிக்க நேரிடுமென்று நான் கனவிலும் கருதியதில்லை. நான் நாத்திகம் பேசுவது அதிகப் பிரசங்கித்தனமென்றும், எனது அவநம்பிக்கைக்குக் காரணம் என்னுடைய ஆணவமும் அகந்தையுமேயென்றும், என்னோடு சில நாட்கள் பழகிய சில நண்பர்கள் அபிப்பிராயப்படுகிறார்களென்று, எனது ஆரூயிர்த் தோழர்கள் மூலமாக அறிந்துகொண்டேன். என்றாலும் இந்த பிரச்னை முக்கியமான பிரச்னை என்பதில் ஆட்சேபணை இல்லை. இதைத் தெள்ளத் தெளியப் பரிசீலனை செய்ய வேண்டியதும் அவசியந்தான். இவ்விதப் பரிசீலனை விஷயத்திலே நானே மகா நிபுணன் என்று என்னைப் பற்றிப் பெருமை பாராட்டிக் கொள்வதாக யாரும் நினைத்துவிடக் கூடாது என்று தெரிவித்துக்கொள்கிறேன். நான் ஒரு சாதாரணமான மனிதனேயொழிய, மனிதத் தன்மைக்கு மேற்பட்ட எவ்வித சக்தியும் உடையவனல்ல. இவ்வுலகில் எவனும் தன்னை மனிதத்தன்மைக்கு மீறினவன் என்று உரிமைக் கொண்டாட முடியவே முடியாது என்பது எனது முடிவு. என்னிடத்தில் சில குறைபாடுகள் இருப்பதை நான் உணர்வேன். எனது இயற்கை சுபாவத்திலே அகங்காரம் என்பதும் ஒரு பாகமாக இருக்கிறது. எனது தோழர்களிடையில் நான் ஒரு எதேச்சாதிகாரி (Autocrat) என்றே அழைக்கப்பட் டேன். எனது ஆருயிர்த்தோழரான பூதகேஸ்வர தத்தரும் (B. K. Dutt) கூட என்னைச் சிற்சில சமயங்களில் அவ்வாறு அழைத்ததுண்டு. சில சந்தர்ப்பங்களில் எனது தோழர்கள் என்னை அடாதுடிக்காரன் சொல்வதற்குகூட நான் ஆளாயிருக்கிறேன்.

தற்பெருமையா? அகங்காரமா?

நான் என்னை அறியாமலே எனது அபிப்பிராயங்களைப் பிறர்மீது சுமத்தி, அவைகளை அவர்கள் அங்கீகரித்தாக வேண்டுமென்று நிர்ப்பந்திக்கிறேன் என்பதாக, எனது தோழர்களில் சிலர் என்னை உண்மையிலேயே கடுமையாகக் குற்றங் கூறுகிறார்கள். இது ஒரு குறிப்பிட்ட அளவுக்கு உண்மைதான். நான் இதனை, மறுக்கவில்லை. இதை எனது அகம்பாவம் என்று கூறினாலும் கூறலாம். ஆனால், அப்படிப்பட்ட தற்பெருமையானது,. நம்மிடத்தில் மலிந்து கிடக்கும் பழக்கவழக்கங்களை எதிர்த்துப் போராடுவதற்கும் அவற்றை தாக்குவதற்கும் இருந்து வருகிறது. ஆனால் அதில் சுயநலம் ஏதுமில்லை. ஒருக்கால் அப்படியிருந்தாலும் நியாயமான வாழ்க்கைக்குரிய கவுரவமாகுமேயன்றி. அகங்காரத்தோடு சேர்க்கத்தக்கதாகாது. வீண்பெருமை—அல்லது தெளிவாகக் கூறினால் அகங்காரமென்பது—தன்னைப்பற்றி தகுதியற்ற முறையில் மிதமிஞ்சிய கர்வம் பாராட்டிக் கொள்ளவதேயாகும். மேலே சொன்ன தகுதியற்ற தற்பெருமைதான் என்னை நாத்திகனாகும்படி தூண்டிற்றா? அன்றி, சர்வ ஜாக்கிரதையாக விஷயங்களைக் கவலை கொண்டு விரிவாக, ஆழமாக, நுணுக்கமாகப் பரிசீலனை செய்து, இராப்பகலாகச் சிந்தித்ததின் பலனாக நான் நாஸ்திகத்தை மேற்கொண்டு கட வுள் மறுப்புக்காரனாக ஆனேனா? என்கிற பிரச்சினையைப் பற்றியே முதலில் நான் இங்கு விவாதிக்க விரும்புகிறேன். ஆனால், முதன் முதலில் தற்புகழ்ச்சியும், அகங்காரமும் இரண்டும் வெவ்வேறான தன்மைகள் என்பதை நான் தெளிவாக்க விரும்புகிறேன்.

முதலாவதாக, தற்பெருமையோ அல்லது வீண்கவுரவமோ மனிதனுக்கு எவ்வாறு தெய்வ நம்பிக்கைக்கு முட்டுக்கட்டையாக இருக்கக்கூடுமென்பதை, என்னால் கிஞ்சிற்றும் உணர்ந்து கொள்ள முடியவில்லை. நான் பெருந்தன்மைக்கு வேண்டிய யோக்கியதாம்சங்ககளின்றியோ அல்லது ஒரு பிரமுகனுக்கு இன்றியமையாத குணங்கள் இல்லாமலோ பொதுஜன செல்வாக்கைப் பெற்றிருந்தால்தான் நான் உண்மையான ஒரு மகானின் பெருமையை மறுக்கக்கூடும். ஆனால் கடவுள் நம்பிக்கையில் அழுந்தியிருக்கிற ஒருமனிதன், எவ்வாறு தன்னுடைய சொந்த அகங்காரத்தின் காரணமாக கடவுள் நம்பிக்கையைவிட முடியும்? இதற்கு இரண்டு வழிகள் தான். உண்டு. ஒன்று அவன் தன்னைக் கடவுளின் பரமவிரோதி என்று கருதத் தொடங்க வேண்டும் அல்லது அவன் தானே கடவுள் என்று நம்ப ஆரம்பிக்க வேண்டும். இவ்விரு விதத்தினாலும்கூட அவனை ஒரு சம்பூர்ணமான நாத்திகனென்று கொள்ள முடியாது. முதலாவது விசயத்தில் அவன் தனக்கு எதிரி அதாவது கடவுளைத் தனக்கு எதிரியாக நினைக்கிறவன், கடவுள் ஒருவர் இருக்கிறார் என்று நினைத்துத்தான் எதிரியாக்குகிறான். ஆதலால், கடவுள் உண்டு என்பதை மறுக்கவில்லை.

அடியோடு மறுக்கிறேன்!

இரண்டாவது விஷயத்தில், தன்னறிவோடு கூடிய ஒரு சக்தி திரைமறைவிலிருந்து பிரபஞ்சத்தை இயக்கிக் கொண்டிருக்கிறதென்பதை அவன் ஒத்துக்கொள்கிறான். அவன் அந்த “ஈடும் எடுப்புமில்லாத” வஸ்துவேதான் என்று கருதிக்கொண்டாலும் சரி, அல்லது அந்த மேலான வஸ்துவைத் தன்னையன்றிப் பிறிதொன்றாக அவன் கருதிக் கொண்டாலும் சரி, நாம் அதைப்பற்றிக் கவலைப்படவில்லை, அது நமக்கு முக்கியமான விஷயமுமல்ல. நான் குறிப்பிடுவதெல்லாம் ‘கடவுள் உண்டு’ என்கிற நம்பிக்கை—ஆராய்ச்சி விசயத்தின் கடவுள் உணர்ச்சிக்கு அடிப்படையான தத்துவம் ஆகியவை அதில் அடங்கியிருக்கிறது. ஆகவே, அப்படிப்பட்டவனை எவ்விதத்திலும் நாத்திகனென்று கூற முடியாது.

நன்று ! இங்கு எனது நிலைமையை விளக்குவது பொருந்தும். நான் மேலே கூறிய முதற் பிரிவையோ, இரண்டாவது பிரிவையோ சேர்ந்தவனல்ல. ‘சர்வலோக சரண்யனாகிய ஜகதீசன்’ ஒருவன்—அல்லது முழு முதற்கடவுள் ஒன்று—உண்டு என்பதையே நான் அடியோடு மறுக்கிறேன். நான் ஏன் மறுக்கிறேன் என்பதைப் பின்னால் விரிவுபடுத்துகிறேன். ஆனால் நான் நாத்திசுவாதக் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் உடையவனாயிருப்பது என்னுடைய அகங்காரத்தின் காரணமாகவோ, ஆணவத்தாலோ அல்ல என்பதை இங்குத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் அந்த முழு முதற் கடவுளுமல்ல! அதன் அவதாரமுமல்ல ! அதனோடு போட்டி போடுகிறவனுமல்ல ! எனவே, நான் நாஸ்திகக் கொள்கையைக் கொண்டதற்கு மேற்கூறியபடி எனது அகங்காரம் காரணமல்லவென்பது இதனால் தீர்மாணிக்கப்பட்டு விட்டது ஆயினும் இவ்விஷயத்தைப் பட்டவர்த்தனமாக உணர்த்தும் பொருட்டு நான் தகுந்த ஆதாரங்களைக் கொண்டு பல உண்மைகளைப் பரிசீலனை செய்ய விரும்புகிறேன்.

சிறு வயதில் கடவுள் பக்தனே

டில்லி வெடிகுண்டு வழக்கு சம்பந்தமாயும், லாகூர் சதி வழக்கு சம்பந்தமாயும் நடந்த விசாரணைகளின் போது எனக்கு ஏற்பட்டுள்ள பொதுஜன செல்வாக்கினால் நான் தகுதியற்ற தற்பெருமைக்கு—கொடிய அகங்காரத்திற்கு—இரையாகி விட்டேன் என்பது எனது நண்பர்கள் பலரின் அபிப்பிராயம். அவர்கள் கொண்ட இவ்வபிப்பிராயம் சரிதானாவென்று ஆராய்வோம். எனது நாஸ்திக உணர்ச்சி இவ்வளவு சமீபகாலத்தில் தோன்றியதன்று. பிறர் என்னைத் தெரிந்துகொள்ளாத சாதாரண வாலிபனாக இருந்த காலத்திலேயும் மற்ற எனது தோழர் பலருக்கு கடவுள் என்பதாக ஒன்று இருக்கிறது என்று தெரிவதற்கு முன்பேயும் தெய்வ நம்பிக்கையை விட்டு விட்டேன். இதை எனது தோழர்கள் அறியார். கல்லூரி மாணாக்கனாக மட்டும் இருக்கும் ஒருவன், நாத்திக உணர்ச்சியைத் தூண்டத் தகுந்த அவ்வளவு மிதமிஞ்சின அகங்காரத்தைப் பெருக்கிக்கொள்ள முடியாது. கல்லூரியில் வாசிக்கும்பொழுது நான் சில ஆசிரியர்களால் நேசிக்கப்பட்டேன். சிலரால் வெறுக்கப்பட்டேன். என்றாலும், நான் ஒருபோதும் மிகுந்த சுறுசுறுப்புடைய மாணாக்கனாகவோ, சதா படித்துக்கொண்டிருக்கும் பையனாகவோ இருந்ததில்லை அந்நாளில் அகங்காரத்தால் தலைகொழுக்கும் உணர்ச்சிகள் ஊட்டும் சந்தர்ப்பங்கள் எனக்கு ஒன்றேனும் வாய்க்கவில்லை. நான் கபாவத்தில் நாணயமும். கூச்சமும் உள்ள பையனாக இருந்ததோடு, பிற்கால வாழ்க்கையில் நம்பிக்கையற்றவனாகவும். குழப்பமுடையவனாகவும் இருந்தேன். அக்காலத்தில் நான் ஒரு பூரண நாஸ்திகவாதியல்ல. என்னைச் சீராட்டிப் பாராட்டி வளர்த்த என்னுடைய பாட்டனார் மிகப் பிடிவாதமுள்ள வைதீக ஆரிய சமாஜி. ஆரிய சமாஜி வேறு எதற்கு வேண்டுமானாலும் இடங்கொடுப்பார் ஆனால் நாஸ்திகத்திற்கோ கடுகளவும் இடங்கொடாத பரம விரோதி. எனது ஆரம்பக்கல்வியை முடித்த பிறகு, நான் லாகூர் டி. எ. வி (D. A. V.) கலாசாலையில் சேர்ந்து அங்குள்ள விடுதியில் (Boarding House) ஒரு வருஷம் கழித்தேன். அங்கே நான், காலை மாலை பிரார்த்தனையோடு, காயத்திரி மந்திரத்தை மணிக்கணக்காக ஜெபிப்பது வழக்கம். அக்காலத்தில் நான் ஓர் பரம பக்தனாகவே இருந்தேன். பின்னர் எனது தகப்பனாரோடு வாழ ஆரம்பித்தேன். மத வைராக்யத்தைப் பொறுத்தமட்டில் அவர் ஒரு தாராள நோக்குடையவராகவே இருந்தார். அவருடைய உபதேசங்களால்தான் நான் சுதந்திரத்திற்காக எனது வாழ்க்கையைத் தத்தஞ் செய்யவேண்டுமென்ற உணர்ச்சியும், உறுதியும் கொண்டேன். ஆனால், அவர் ஒரு நாஸ்திகரல்ல, அவர் கடவுளிடத்தில் திடமான நம்பிக்கையுடையவர். தினசரி பிரார்த்தனை செய்யும்படியாக அவர் எனக்கு உற்சாக மூட்டுவது வழக்கம்.

இவ்விதமாகவே நான் ஆரம்பத்தில் வளர்க்கப்பட்டேன். ஒத்துழையாமை காலத்தில் நான் தேசியக் கல்லூரியில் சேர்ந்தேன். அங்குதான் எல்லா மதங்களைப் பற்றியும்— கடவுளைப்பற்றியும் கூட—தாராளமாக எண்ணுவதற்கும், ஆராய்ச்சி செய்வதற்கும், தர்க்கிப்பதற்கும், ஆரம்பித்தேன். அப்பொழுதும்கூட நான் பரம தெய்வ பக்தனாகவே இருந்தேன். அதுகால பரியந்தம். நான் எனது தலைமயிரைக் கத்தரித்துவிடாமல் (மதாச்சாரப்படி) வளர்த்துக் கட்டிக்காப்பாற்றி வந்தேனானாலும், சீக்கிய மதத்திலும் பிற மதங்களிலுமுள்ள சித்தாந்தங்களிலும் கொள்கைகளிலும் எனக்குக் கிஞ்சிற்றும் நம்பிக்கை என்பதே கிடையாது. ஆனால் கடவுள் ஒருவர் உண்டு என்பதில் மாத்திரம் எனக்குப் பூரண நம்பிக்கையிருந்தது.

புரட்சி இயக்கத்திலும் போலிகள் !

பிற்காலத்தில் நான் புரட்சி இயக்கத்தில் ஈடுபட்டேன். அங்கு முதன் முதலில் நான் சந்தித்த தலைவரானவர் கடவுள் உண்டு என்ற பூரண நம்பிக்கை உடையவர் அல்ல. என்றாலும் கடவுள் இல்லை என்றும் கூற அவருக்குத் துணிவு ஏற்படவில்லை. கடவுளைப்பற்றி நான் இடைவிடாது வற்புறுத்தி அவரிடம் கேட்கும் போதெல்லாம் அவர், “உனக்கு இஷ்டமிருந்தால் மாத்திரம் கடவுளை வணங்கு” என்றே சொல்லி வருவார். இந்தப்பதில் ஒரு நாஸ்திக உணர்ச்சியே ஆனாலும், பகிரங்கமாக நாஸ்திகத்தை ஒப்புக்கொள்வதற்குரிய அந்த தைரியம் அவருக்கு இல்லை. யான் சந்தித்த இரண்டாவது தலைவரோ பழுத்த ஆஸ்திகர். அவரது பெயர் கண்ணிடமிக்கத்தோபர் சசீந்திரநாத் சன்யால் (கராச்சி சதி வழக்கில் சம்பந்தப்பட்டு, இப்பொழுது ஆயுட்கால தீவாந்திர சிஷை அனுபவித்துக் கொண்டிருப்பவர்). அவர் “பண்டி ஜீவன்” அல்லது “அடிமை வாழ்க்கை” என்றொரு நூல் எழுதியிருக்கிறார். அது மிகவும் புகழ்பெற்றது நூலின் முதற்பக்கத்திலேயே, கடவுளின் பெருமையைப்பற்றி உத்வேகத்தோடும். ஆத்திரத்தோடும் பாடப்பட்டிருக்கிறது. அதனுடைய இரண்டாம் பாகத்தின் கடைசி பக்கத்தில் வேதாந்தத் தத்துவங்கள் செறிந்த ஈஸ்வர ஸ்தோத்திரங்கள் காணப்படுகின்றன. அவற்றை அவருடைய அபிப்பிராயங்களின் முக்கியாம்சம் எனக் குறிப்பிடலாம். 1925 ஜனவரி மாதம் 28ந் தேதி இந்தியா முழுவதும் பரப்பப்பட்ட “புரட்சித்துண்டுப் பிரசுரம்” அவருடைய புத்திக் கூர்மையின் விளைவே என்று பிராசிகூசன் தரப்பாரால் எடுத்துக்காட்டப்பட்து. கீர்த்தி வாய்ந்த தலைவர் தாம் அருமையாகப் பாராட்டுகிற அபிப்பிராயங்களை வெளியிடுகிறார். அவரைப் பின்பற்றுவோர் தாங்கள் மாறுபட்ட அபிப்பிராயமுடையோராயிருந்த போதிலும், அவருக்கு உடன்பட்டுத் தீரவேண்டியிருக்கிறது. இது இரகசிய வேலைகளில் தடுக்க முடியாதபடி நிகழ்கிறது. அந்தத் துண்டுப் பிரசுரத்தில் “சர்வேஸ்வரனையும்” அவனுடைய திருவிளையாடல்களையும் போற்றிப் புகழ்வதற்காக ஒரு முழுப்பத்தி தத்தஞ்செய்யப்பட்டிருக்கிறது. அதில் கூறப்பட்டிருக்கும் விஷயமோ முற்றும் “பிரம்ம ரகசியம்” நான் எடுத்துக்காட்ட விரும்புவது என்னவென்றால், புரட்சிக் கட்சியில்கூட (அதுவரையில்) “கடவுள் உண்டு” என்பதில் அவநம்பிக்கை கொள்ளும் அபிப்பிராயம் முளைக்கவில்லை என்பதேயாகும். பெரும் புகழ்பெற்ற காக்கோரி தியாகிகள் நால்வரும் தங்களுடைய கட்சி வாழ்நாட்களை பிரார்த்தனையிலேதான் கழித்தார்கள். ராம பிரசாத் பிஸ்மில் என்பவர் ஒரு வைதீக ஆரிய சமாஜியாவார். ராஜன்ய லாகிரி என்பவர் சமதர்மத்தையும், பொதுவுடமையையும் பற்றி விரிவாக ஆராய்ச்சி செய்திருந்தும் தனது கடைசிக் காலத்தில் கீதையிலிருந்தும், உபநிஷத்துக்களிலிருந்தும் சுலோகங்கள் ஜெபிக்கவேண்டுமென்று ஆர்வத்தை அவரால் அடக்க முடியவில்லை. அக்கூட்டத்தில் பிரார்த்தனையே செய்யாத ஒருவரை யான் கண்டேன். அவர் அடிக்கடி “மனிதனின் பலவீனத்தாலும் கட்டுப்பட்ட அறிவாலும் உதித்ததுதான் தத்துவ சாஸ்திரம்” என்று சொல்லுவார். அவரும் ஜென்ம தண்டனை விதிக்கப்பட்டு இப்பொழுது தீவாந்திர சிகைஷ அனுபவித்துக் கொண்டிருக்கிறார். ஆனால், அவர் கூட ஒரு போதும் கடவுள் உண்டென்பதை மறுத்துக் கூறத்துணிந்தாரில்லை.

ஆராய முற்பட்டேன்

அன்றுவரை, நான் ஓர் வீர இலட்சியங் கொண்ட புரட்சிக்காரனாக மாத்திரமே இருந்தேன். அதுவரை நாங்கள் பின்பற்றுகின்றவர்களாக மாத்திரமே இருந்தோம். அவர்கள் எல்லாம் தண்டனை அடைந்த பிறகு கட்சியின் முழுப் பொறுப்பையும் சுமக்கவேண்டிய பொறுப்பு எனக்கு ஏற்பட்டது. சிலகாலமாக ஏற்பட்ட தடுக்க முடியாத எதிர்ப்பால், கட்சி உயிரோடிருப்பது கூட அசாத்தியமென்று தோன்றிற்று. உணர்ச்சியும் : உத்வேகமும் உச்சி முதல் உள்ளங்கால் வரையிற் கொண்ட தோழர்கள்—ஏன் தலைவர்கள்கூட—எங்களைப் பார்த்து பரிகாசம் செய்ய ஆரம்பித்தார்கள் எங்களுடைய வேலைத்திட்டம் பிரயோசனமற்றதென்பதாகப் பிற்காலத்தில் எப்பொழுதாவது ஒருநாள் உணரும்படியான நிலைமை வருமோவெனச் சில சமயங்களில் பயந்ததுண்டு அது எனது புரட்சி வாழ்க்கையில் புதியதொரு மாறுதலை உண்டாக்கிய சம்பவமாகும். “கற்றுணர்—எதிராளிகளின் பலமான ஆட்சேபங்களுக்கு அச்சமின்றி ஆணித்தரமான ஆப்புகளும் கண்டனங்களும் கொடுப்பதற்காகக் கற்றுணர். உன்னுடைய இலட்சியம், கொள்கை இவைகளின் போக்கைப் பரிசீலனை வாதங்களால் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு கற்றுணர்” என்னும் உணர்ச்சிகள் என்னுடைய மனத்தின் வாசற்படியில், கடல் அலைகளைப் போன்று கிளம்பித் தாவித் தாவி முட்டின—மோதின. நானும் விஷயங்களைக் கற்றுணர—தெள்ளிதில் ஆராய்த்தறிய ஆரம்பித்தேன். என்னுடைய பழைய நம்பிக்கையும், முடிவுகளும் சிறப்பாக ஒரு பெரும் மாற்றம் கொண்டன. எங்களுக்கு முன் இருந்துவந்த புரட்சிக்காரர்களிடையில், மனக்கோட்டையான பலாத்கார ரகசிய முறைகளே பிரதானமடைந்திருந்தன. பற்பல புதிய அபிப்பிராயங்களால் அவைகள் மாற்றமடைவதற்கு இடம் தரவேண்டியதாயிற்று. அப்படிப்பட்ட மாற்றத்திற்கு மூடுமந்திரமோ மூடநம்பிக்கையோ சிறிதும் அவசியமில்லை எனக்கண்டு அனுபோக சாத்தியமான உண்மை தத்துவத்தையே கடைப்பிடித்தோம். தடுக்கமுடியாத நிலையில் அதுவும் அவசியம் நேர்ந்தால் பலாத்காரப் பிரயோகம் நியாய ரீதியானது என்று உணர்ந்தோம். ஆனால் “பொது ஜன இயக்கங்கள் எல்லாவற்றிற்கும் ‘சாத்வீகம்’ என்பது காரியம் சாதிக்கும் தோரணையில் அவசியமானது”. இவ்வளவுதான் இவற்றைப்பற்றிய இரகசியம்.

பச்சை நாத்திகனானேன்

ஆனால், நமது போராட்டத்திற்குரிய லட்சியம் எது என்று தெளிவாக அறிந்திருக்கவேண்டியதே மிகமுக்கியம். நாங்கள் காரியத்தில் காட்டித் தீரவேண்டிய குறிப்பான திட்டமெதுவும் அப்பொழுது எங்களுக்கு இல்லாதிருந்த காரணத்தால் உலகப் புரட்சி சம்பந்தமான பல திறப்பட்ட லட்சியங்களை ஆர அமர சீர் தூக்கிப் பார்ப்பதற்குப் போதுமான சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது நான் அராஜகத் தலைவரான (Anarchist Lecder) பக்குனின என்பவரின் தத்துவங்களைக் கற்றேன். பொது உடைமைத் தத்துவத்தின் தந்தையாகிய மார்க்சின் நூல்களில் சிலவற்றைக் கற்றுணர்ந்தேன். ஏகச்சக்ராதிபத்திய ஆதிக்க இருள் அடர்ந்திருந்த தங்களுடைய நாட்டில் புரட்சியை வெற்றிகரமாகச் செய்து முடித்த கர்ம வீரர்களான லெனின், ட்ராஸ்கி இன்ன பிறரால் இயற்றப்பட்ட நூற்களில் பெரும்பாலானவற்றை அலசி அலசி ஆராய்ச்சி செய்தேன். அவர்கள் எல்லோரும் பச்சை நாத்திகர்களே.

பக்குனின் எழுதிய “கடவுளும் ராஜ்யழும்” (God and State) என்ற நூல் பூர்த்தி செய்யப்படாது துண்டு துணுக்குகளாக இருந்தபோதிலும், விசயத்தை வெகு ருசிகரமாக விளக்குகிறது. சில காலத்திற்குப் பின் நிர்லம்ப சாமியால் எழுதப்பட்ட ‘பகுத்தறிவு’ (Commen Sence) என்னும் புத்தகத்தையும் படிக்க நேர்ந்தது. அதில் நாத்திக வாதம் தெளிவுபடும்படியில்லாமல் ஒரு தினுசாகக் கூறப்படுகிறது. இந்த விசயமானது அந்தக் காலத்தில் எனக்கு மிக ருசிகரமானதாகி, எனது உள்ளத்தைக் கொள்ளைக் கொண்டு விட்டது. 1926-ம் ஆண்டு முடிவில், இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்து, காத்து, நடத்தி வரும் சர்வ சக்தி வாய்ந்த கடவுள் ஒருவர் உண்டு என்ற கொள்கை அடியோடு ஆதாரமற்றதென உணர்ந்து கொண்டுவிட்டேன். என்னுடைய இந்த தெய்வ நம்பிக்கையற்ற தன்மையை—நாத்திக வாதத்தை பகிரங்கப்படுத்தினேன். நான் இவ்விஷயங்களைப்பற்றி எனது தோழர்களோடும் விவாதிக்கத் தொடங்கினேன். அது என்னவென்பதைப் பற்றிக் கீழே விவரிக்கிறேன்.

கைது செய்யப்பட்டேன்!

1927-ஆம் ஆண்டு மே மாதம் நான் லாகூரில் கைது செய்யப்பட்டேன். கைது செய்யப்பட்டது தீடீரென ஏற்பட்டதாகும். போலீசார் என்னைத் தேடித் திரிகிறார்கள் என்ற விசயம் எனக்குக் கொஞ்சமும் தெரியவராது. நான் ஒரு தோட்டத்தின் வழியாகப் போய்க்கொண்டிருக்கும் பொழுது திடீரென என்னைப் போலீசார் சூழ்ந்துகொண்டதைக் கண்டேன். அச்சந்தர்ப்பத்தில் நான் மிகுந்த சாந்தமாகவும், ஆச்சரியப்படும்படியாகவும், அமைதியாகவும், பொறுமையாகவும் கொண்டதானது எனக்கே ஆச்சரியமாய் இருந்தது. அது சமயம் நான் எவ்விதமான பரபரப்பும் துடிதுடிப்பும் கொள்ளவோ இல்லை. போலீஸ் பந்தோபஸ்துக்கு கொண்டுபோகபட்டேன். மறுநாள் நான் ரயில்வே போலீஸ் சிறைக்குக் கொண்டு செல்லபட்டேன். அங்கு ஒரு முழு மாதத்தைக் கழிக்கவேண்டியிருந்தது. போலீஸ் அதிகாரிகளோடு பல நாட்கள் சம்பாசித்ததன் பயனாக என்னுடைய அரஸ்டுக்குக் காரணமாய் கோரிக் கட்சியில் எனக்குள்ள தொடர்பைப்பற்றியும், புரட்சி இயக்க சம்பந்தமான என்னுடைய செய்கைகளைப் பற்றியும் அவர்களுக்கு சில தகவல்கள் கிடைத்திருக்க வேண்டுமென ஊகித்தேன். அதாவது லக்னோவில் விசாரணை நடந்து கொண்டிருந்த சமயம் நான் அங்கிருந்துவந்தேனென்றும், அவர்களுடைய விடுதலைக்காக ஒருவிதமான திட்டத்தைப் பற்றி நான் அவர்களோடு கலந்து ஆலோசித்தேனென்றும், அவர்கள் சம்மதம் பெற்ற பிறகு நாங்கள் சில வெடி குண்டுகளைத் தயாரித்தோமென்றும், அவற்றைப் பரிசோதனை செய்து பார்ப்பதற்காக 1926-ம் ஆண்டு தசராப் பண்டிகையின்போது பெருங்கூட்டத்திடையே ஒரு வெடிகுண்டு வீசியெறியப்பட்டது என்றும், அவர்கள் என்னிடம் கூறினார்கள். என்னுடைய சொந்த நன்மையை உத்தேசித்து புரட்சி இயக்க சம்பந்தமான நடவடிக்கைகளைப் பற்றிய சில உண்மைகளை நான் வெளியீடுவதாய் இருந்தால் என்னைக் கைதியாக வைத்திருப்பதில் இருந்து விடுதலை செய்யப்படுவதோடு கோர்ட்டில் அப்ரூவராக (கோர்ட்டு சாட்சியாகக்)கூட கொண்டுவந்து நிறுத்தாமல் எனக்கு வெகுமதி அளிக்கப்படுமென்றும் வெகு வினயமாக அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள். நான் அவர்களுடைய ஆலோசனையைக் கேட்டுச் சிரித்தேன். அது முழுவதும் ஹம்பக் ஏனெனில் எங்களையொத்த மனோபாவமுடையவர்கள் நிரபராதிகளான தங்களுடையசொந்த ஜனங்களின்மீது வெடிகுண்டுகளை வீசமாட்டார்கள்.

சில நிபந்தனைகள்

மனோகரமான ஒருநாள் காலையில் சி.அய்.டி. இலாக்காவின் பிரதம சூப்பிரன்டெண்டான மிஸ்டர் நியூமென் (New Man) என்னிடம்வந்தார். அவர் மிகுந்த அனுதாபத்தோடு நீண்ட நேரம் என்னோடு பேசிக்கொண்டிருந்தார். பின் முடிவாக, அவர்களால் கோரப்படுகிறபடி நான் எவ்விதமான அறிக்கையும் கொடுக்காவிட்டால், காக்கோரி வழக்கு சம்பந்தமாய், யுத்தம் தொடங்கச் சதியாலோசனை செய்ததாகவும், தசரா வெடிகுண்டுவிபத்து சம்பந்தமாய் கொடிய கொலைகள் செய்ததாகவும், என்னை விசாரணைக்கு அனுப்புமாறு தாங்கள் நிர்ப்பந்திக்கப்படுவோமென்று கூறினார். மேலும் அவர் என்னைக் குற்றவாளியாக்கவும் தண்டித்துத் தூக்குத் தண்டனை விதிக்கவும் போதுமான சாட்சியங்கள் இருப்பதாகவும் என்னிடம் கூறினார். நான் முற்றும் குற்றமற்ற நிரபராதியாயிருந்தேன். ஆயினும் அந்தக் காலத்தில் போலீசார் எதையும் இஷ்டப்பட்டால் இஷ்டப்படி முடித்து விடுவார்களென்று நம்பினேன் அன்றையதினமே சில போலீஸ் உத்தியோகஸ்தர்கள் என்னிடம் வந்து ஒழுங்காக இரண்டு வேளைகளிலும் கடவுளைப் பிரார்த்தனை செய்யும்படி என்னைத்தூண்ட ஆரம்பித்தார்கள். நானோ அப்பொழுது ஒரு நாஸ்திகனாக இருந்தேன். சமாதானமும் சந்தோஷமும் குடிகொண்டிருக்கும் பொழுது மாத்திரம்தான் நான் நாஸ்திகவாதியென்று தற்புகழ்ச்சியடைந்து கொள்வதா அன்றி மிக்க கஷ்ட திசையிலும்தான் கொண்ட கொள்கையில் விடாப்பிடியாக ஒட்டிக் கொண்டிருப்பதா என்பதைக் குறித்து எனக்குள்ளாகவே ஒரு முடிவுக்கு வரவேண்டுமென்று விரும்பினேன். நீண்ட நெடும் ஆலோசனைக்குப் பின்னர் எனது மனோரதம் நம்பிப் பிரார்த்தனை செய்யும்படி தூண்டக்கூடாதென்று முடிவு கட்டினேன். அம்முடிவின்படி நான் எவ்விதப் பிரார்த்தனையும் செய்யவேயில்லை. எனது உண்மையான சோதனைகள் அதுதான். நான் அதில் வெற்றி சூடினேன்.

துணிவு ஒரு விளையாட்டுப் பொருளல்ல!

எந்தக்கணத்திலும் எந்தவித முகாந்தரத்தைக் கொண்டும் நான் என்னுடைய உயிரைக் காத்துக்கொள்ள இஷ்டப்படவில்லை! இவ்விதமாக நான் பழுத்த நாஸ்திகனானதோடு. அதன்பின் அவ்விதமே வாழ்ந்தேன் கொடிய சோதனையின் முன் நிமிர்ந்து நிற்பது ஒரு விளையாட்டுக் காரியமல்ல. தெய்வ நம்பிக்கை, கஷ்ட நிஷ்டூரங்களைச் சாந்தப்படுத்துகிறது. அது அவைகளை இனிமையாகவுஞ் செய்யும். மனிதன் கடவுளிடத்தில் மிகுந்த ஆறுதலையும். தேறுதலையும் காணக்கூடும். சண்டமாருதங்களுக்கும் பிரசண்டமாருதங்களுக்கும் இடையில் தன் காலிலேயே நிற்கத் துணிவது பிள்ளை விளையாட்டுப்போல் எளிய காரியமன்று. இத்தகைய சோதனைக் காலங்களில் அகங்காம்—ஏதேனுமிருந்தால்-புகைந்துப் போய்விடும். பொதுவாக மனிதன் தெய்வ நம்பிக்கையை மறுதலித்துப் பேசத் துணியமாட்டான். அவ்விதம் பேசத் துணிவானாயின், அவனிடம் கேவலம் அகங்காரத்தைத்தவிர, வேறு சில சக்திகளிருக்க வேண்டுமென்று நாம் தீர்மானிப்பதே முறை. எனது அப்போதுள்ள நிலைமையும் அதுவே விசாரணையில் தீர்ப்பு எவ்வாறாகுமென்பதோ, முன்னமேயே மிக நன்றாகத் தெரிந்த விசயம். ஒரு வாரத்துக்குள் அறிவிக்கப்பட வேண்டியதாய் இருந்தது. ஒரு லட்சியத்திற்காக எனது வாழ்வைத் தியாகம் செய்யப்போகிறேன் என்ற அபிப்பிராயம் நீங்கலாக வேறு ஏதாயினும் உண்டா? நம்பிக்கையுள்ள ஓர் ஹிந்து மறுபிறப்பில் ஓர் அரசனாகப் பிறக்கலாம் என்று பார்க்கலாம். ஒரு முஸ்லீமோ அன்றி ஒரு கிறிஸ்தவனோ தன்னுடைய நஷ்டங்களுக்காகவும் தியாகத்திற்காகவும் சன்மானமாக சொர்க்கத்தில் போகபோக்கியங்களை அனுபவிக்கலாமென்று கனவு காணலாம். ஆனால், நான் எதை எதிர்பார்ப்பது? என்னுடைய கழுத்தைச் சுற்றிக் கயிறு மாட்டப்பட்டு, காலடியிலுள்ள பலகை தட்டிவிடப்படும் நிமிசமெதுவோ, அதுவே எனது இறுதி நிமிசம். அதுவே எனது வாழ்க்கையின் முடிவான நிமிஷம் இன்னும் விளக்கமாக வேதாந்த சாஸ்திரத்தின் சிறப்புச் சொற்களால் கூறினால், எனது ‘ஆத்மா’ எல்லாம் அக்கணமே முடிந்துவிடும். அதற்கப்பால் ஒன்றுமில்லை. இந்த நிகழ்ச்சியை நாஸ்திகக் கண்ணோடு பார்க்கும் தைரியம் எனக்கிருந்தால் “எத்தகைய மாபெரும் முடிவுமின்றி போராடிக் கொண்டிருந்த சிறிய ஜீவிதம்” தான் எனது வாழ்க்கையின் சன்மானமென்பது விளங்கும், அவ்வளவுதான்.

சுதந்திர சகாப்தம் உதயம்!

சுயநல உணர்ச்சியின்றி, இந்த வாழ்விலோ இதற்கப்பாலோ சன்மானிக்கப்படுவேன் என்ற ஆசையின்றி, பூரணமான தன்னல மறுப்புடன், சுயேச்சையடையும் பொருட்டு எனது வாழ்வை நான் தத்தஞ் செய்து விட்டேன். ஏனென்றால் எனக்கு இதைவிட வேறு மார்க்கமில்லை. இவ்வித மனோரதத்தோடு, ஆண் சிங்கங்களும், வீராங்கனைகளும் வேறெதிலும் திவலைக்கூடக் கவலை செலுத்தாமல், மனித வர்க்கத்திற்குத் தொண்டு புரிவதற்காக—கஷ்ட நிஷ்டூரத்திற்கும் கொடுமைக்கும் கொள்ளைக்கும் இரையாகி கண்ணீருங் கம்பலையுமாய்க் கதறும் ஏழை எளியவர்களின் விடுதலைப் போராட்டத்திற்காக எந்தக் காலத்தில் தங்களுடைய வாழ்க்கையை அர்ப்பணஞ் செய்து கொண்டு முன்னிலையில் வருகிறார்களோ, அந்தக் காலந்தான் சுதந்திர சகாப்தத்தின் உதயகாலமாகும். அவர்கள் உண்மை உணர்ச்சியும், ஊக்கமும், உத்வேகமும் கொண்டு கொடுமைப் படுத்துகின்றவரோடும். கொள்ளையடிக்கின்றவர்களோடும், கொடுங்கோலரோடும் கடுமையாகப் போர்த்தொடுப்பது, தாங்கள் மன்னாதி மன்னர்களாகலாமென்பதற்காகவோ அன்றி இப்பிறப்பிலோ, இறந்தபின் சொர்க்கத்திலோ போதிய சன்மானம் பெற்று, பூரிப்பும் இன்பமும் பொருந்தக் களிக்கலாமென்பதகாகவோ அல்ல. மற்ற மனித வர்க்கத்தின் கழுத்திலிருந்து அடிமை நுகத்தடியை இறக்கவும், சாந்தியையும் சுதந்திரத்தையும் ஸ்தாபிக்கவுமே. அன்னார்கள் தங்களைப் பொறுத்தமட்டில் அபாயத்தை விளைக்கக்கூடியதும், உன்னத உணர்ச்சியுடன் ஊன்றி நோக்குங்கால், மகோன்னதமான ஒரு தனிச்செந்நெறியாய்த் திகழ்கின்றதுமான இப்பாதையின் வழிச் செல்கின்றார்கள். அத்தகையோரின் உயர்ந்த லட்சியமும், தியாகமும் ஈன்றெடுத்த தற்பெருமையைத் தவறாக “அகங்காரம்” என்று திரித்துக் கூறலாமா? “அகங்காரம்” என்கிற அக்கிரமான வார்த்தையை அவர்கள் நேர்க்குப் பிரயோகிக்க எவன்தான் துணிவு கொள்வான் ? அவ்விதம் எவனேனும் கூறுவானாயின், ஒன்றில் அவன் முட்டாளாக இருக்கவேண்டும். இல்லையாயின் போக்கிரியாக இருக்க வேண்டும் என்றுதான் நான் சொல்வேன். அந்தத் தியாக சொரூபிகளான புருஷோத்தமர்களின் மன ஆழம், உத்வேகம், எழுச்சி, “உள்ளங் கவர்ந்தெழுந்து ஓங்கும்” உணர்ச்சிகள் ஆகியவற்றை உண்மையாக உணர்ந்து கொள்ள அவன் சக்தியற்றவனானதால், நாம் அவனை மன்னித்துவிடுவோம். அவனுடைய இருதயம் கேவலம் மாமிசப் பிண்டத்தைப் போல் மரத்து உணர்ச்சியற்றுக் கிடக்கிறது. அவனுடைய கண்கள் பார்வைக்குறைவாயிருக்கின்றன. இன்னும் வேறுபல கேடுகளும் அவனுடைய இருதயத்தையும் கண்களையும் மறைத்துக்கொண்டே வந்திருக்கின்றன. தன்னம்பிக்கை (தற்காப்பு) என்பதை “அகங்காரம்” என்றே எப்போதும் வியாக்கியானம் செய்யும் நிலைமை ஏற்பட்டு வந்திருக்கிறது. இது மிகவும் வருந்தத்தக்கது. ஆனால் வேறு வழியில்லை.

புரட்சிக்காரனின் இரு குணங்கள்

இன்று அனுஷ்டானத்திலிருக்கும் சம்பிரதாயத்தை—நம்பிக்கையை—மதத்தை நீங்கள் விரோதித்துப் பாருங்கள். குற்றங் குறைகளற்றவரென்றும், பூரணமானவரென்றும் தீர்மானித்து, குணாகுணங்களைப் பரிசீலனை செய்வதற்கு அப்பாற்பட்டவரெனப் பொதுவாக நம்பப்படுகிற, ஒரு வீரனையோ, மகாத்மாவையோ, தேவ தூதனையோ, அவதார புருஷனையோ கூறிப்பாருங்கள். உங்களுடைய தர்க்க வன்மை, பொது மக்கள் உங்களை வீண் கர்வம் பிடித்தவர்களென்று பழித்து இழித்துக் கூறும்படியான நிலைக்குக் கொண்டுவந்துவிடும். மனத்தால் எண்ணாது, மூளையால் யோசியாது, சலனமின்றித் தேங்கி நிற்பதன் பலனே இந்நிலைமை. ஆராய்ச்சித் திறனும் சுயேச்சையாக யோசிக்கும் மனப்பான்மையும் புரட்சிக்காரனின் இன்றியமையாத மிகமிக அவசியமான இரு பெருங்குணங்கள்.

“மகாத்மாஜி ஒரு பெரியவர், ஆதலால் அவரைக் குறை கூறக் கூடாது; அவர் உயர்நிலை அடைந்து விட்டார் என்பதற்காக அவர் சொல்வதெல்லாம்—அரசியல் துறையிலோ, பொருளாதாரத் துறையிலோ அன்றி மதத் துறையிலோ, பொருளாதாரத் துறையிலோ அன்றி நீதி தர்மத் துறையிலோ—சரியானதேயாகும்; உனக்குச் சரியென்று பட்டாலும், படாவிட்டாலும் ‘ஆம் அவர் கூறுவது உண்மைதான்’ என்று சொல்லித் தீரவேண்டும்” என்கிற இப்படிப்பட்ட மனப்பான்மை நம்மை முன்னேற்றப் பாதையில் ஒரு அடிகூட நடத்தாது. இது மிக மிகப் பிற்போக்கான எண்ணம்.

பழிகள் வரும்

நம்முடைய முன்னோர்கள் ஏதோ உயர்ந்த வஸ்துவான சர்வசக்தியுள்ள கடவுள் மீது நம்பிக்கை வைத்துக்கொண்டிருந்தவர்களென்ற காரணத்திற்காக. யாரேனும் ஒருவன் அந்த நம்பிக்கையின் உண்மையை மறுக்கத் துணிந்தால், அல்லது அந்த சர்வ சக்தி பொருந்திய வஸ்துவை மறுப்பதற்குத் திடங்கொண்டால், அவன் மதத்துரோகியென்றும் விசுவாச காதகனென்றும் பழித்துரைக்கப்படுகின்றான். அவனுடைய வாதங்கள், எதிர்வாதங்களால் அசைக்க முடியாதபடி ஆணித்தரமானவைகளாயிருந்தால் அவனுடைய உணர்ச்சி பயங்கரமான கஷ்ட நிஷ்டூரங்களாலும் சர்வசக்தியுள்ள கடவுளின் கோபாக்கினியாலும் சிதறடிக்கப்படாத வன்மையுடையதாயிருந்தால், அவனை அகங்காரம் பிடித்தவனென்றும், அவனுடைய உணர்ச்சியைத் தற்பெருமை கொண்டதென்றும், எள்ளி இழித்துத் தூற்றுகிறார்கள். பின்னர் ஏன் இவ்வாஸ்திக சிகாமணிகள்— இந்த வீண் வாதத்தில் காலங்கடத்த வேண்டும்? சகல விஷயங்களையும் பூராச்சங்கதிகளையும் பூரணமாகத் தர்க்கித்துவிட ஏன் முயற்சி செய்யவேண்டும்? முதன் முதலாக இப்பொழுதுதான் பொதுமக்களுக்கு இத்தகைய கேள்விகள் தோன்ற ஆரம்பித்திருக்கின்றன. முதன் முதலாக இப்பொழுதுதான் பொதுமக்களால் இது காரியானுஷ்டானத்திலும் கையாளப் படுகிறது. எனவே இவ்விஷயத்தை விரிவாக ஆராய்ச்சி செய்ய நேரிட்டிருக்கிறது.

முதல் கேள்வியைப் பொறுத்தவரையில் என்னை நாஸ்திகனாகும்படித் தூண்டியது எனது அகங்காரமல்லவென்பதைத் தெளிவுபடுத்திவிட்டேனென்றே கருதுகிறேன். என்னுடைய விவாதத்தின் போக்கைப்பரிசீலனை செய்து பொருத்தமுடையதா அல்லவா என்று தீர்மானிக்கவேண்டிய பொறுப்பு வாசகர்களைச் சேர்ந்ததேயன்றி என் பொறுப்பன்று. அப்பொழுதுள்ள நிலைமையில் கடவுள் நம்பிக்கையானது எனது வாழ்வில் ஆறுதலளித்து பாரத்தையும் குறைக்கும் கடவுள் நம்பிக்கையற்ற தன்மையோ, சந்தர்ப்பங்களையெல்லாம் சங்கடத்திற்குள்ளாக்குவதோடு நிலைமையை மோசமாக்கி கடுமையும் கொடுமையும் நிறைந்ததாகச் செய்துவிடும். மதோன் மத்தர் போதம் துளியளவு இருப்பினும் வாழ்க்கை காவிய வர்ணனைக் காண்பதுபோல் நயமுள்ளதாகத் திகழும். ஆனால் எனது முடிவுக்குத் துணை புரிய எந்தவிதமான போதையையும்—மயக்க வெறியையும்—நான் விரும்பவில்லை. நான் ஒரு யதார்த்தவாதி. என்னுள் எழும் உணர்ச்சியைப் பகுத்தறிவின் துணையால் அடக்கியாள முயற்சித்துக் கொண்டு வருகிறேன். இந்த முடிவை அடைவதில் நான் எப்பொழுதுமே வெற்றி பெற்று வரவில்லை. ஆனால் மனிதனுடைய கடமை இடையறாது முயற்சிப்பதே. ஜெயாப ஜெயம் சந்தர்ப்பத்தையும் சுற்றுச்சார்புகளையும் பொறுத்தது.

தத்துவ சாத்திரம்—மனித வர்க்கத்தின் பலகீனமே.

இரண்டாவது கேள்வியைப் பொறுத்த வரையில் அன்றும் இன்றும் நடைமுறையில் இருந்துவரும் கடவுள் நம்பிக்கையை நிராகரிப்பதற்குக் காரணம் அகங்காரமல்லவென்றால், வேறு போதுமான தக்கக் காரணங்கள் இருக்க வேண்டும். ஆம் இவ்விஷயத்தைப்பற்றி இங்கு பிரஸ்தாபிக்கிறேன். இவ்வளவு நம்பிக்கைக்கும் காரணமுண்டு. யோகாசனா சக்தி படைத்த ஒவ்வொரு மனிதனும் தன்னைச்சுற்றி நிகழும் ஒவ்வொரு காரியத்திற்கும் காரணம் கண்டுபிடிக்க முயல்கிறான் என்பது எனது அபிப்பிராயம். நேரடியான தெளிவுகள் (Proofs) கிட்டாதவிடத்தில் வேதாந்த தத்துவம் முக்கியமான இடம்பெறுகிறது. நான் முன்னர்குறிப்பிட்டுள்ளபடி, தத்துவ சாத்திரமென்பது மனித வர்க்கத்தின் பலவீனத்தால் தோன்றியதென்று, எனது புரட்சிக்கார கூட்டங்களில் ஒருவர் அடிக்கடி கூறுவார். உலகத்தின் முற்கால, தற்கால, பிற்கால நிகழ்ச்சிகள்; உலகம் ஏன், எங்கிருந்து உற்பத்தியாயிற்று? முதலிய இரகசியங்களைப் பரிசீலனை செய்யப் போதுமான சாவகாசம் நமது முன்னோர்களுக்கு ஏற்பட்டபொழுது, அவர்கள் ஒவ்வொருவரும், நேரடியான தெளிவுகள் கிஞ்சிற்றும் கிடையாத காரணத்தால் தங்கள் தங்கள் மனம் போன போக்கில் முடிவு கட்டப் பிரயத்தனப்பட்டார்கள். இதே காரணத்தால்தான், பல வேறுபட்ட மதங்களின் ஆதாரமான, அடிப்படையான கொள்கைகளில் பெருத்த வித்தியாசமிருக்க காண்கிறோம். இன்னும் சில சமயங்களில் மூலாதரத் தத்துவங்கள் ஒன்றுக்கொன்று நேர்முரண்பட்டு முட்டிக்கொள்ளும் தன்மையிலிருப்பதையும் பார்க்கின்றோம். கீழ்நாட்டுத் தத்துவசாஸ்திரமும், மேல்நாட்டுத் தத்துவசாஸ்திரமும் மாத்திரந்தான் வித்தியாசப்பட்டுக் காணப்படுவதாகக் கருதவேண்டாம்.

மத மோதல்கள் !

ஒவ்வொரு நாட்டுத் தத்துவ சாஸ்திரங்களிலும் பலதிற அபிப்பிராய பேதங்கள் காணக் கிடக்கின்றன. கீழ் நாட்டு மதங்களை எடுத்துக்கொண்டால், மகம்மதிய மதம் ஒருக்காலும் இந்துமதத்தோடு இணைந்து நிற்பதில்லை. இந்தியாவைமட்டும் நோக்கினால், ஜைன மதமும், பவுத்த மதமும், பிராமண மதமாகிய இந்து மதத்திலிருந்து முற்றும் வேறாகக் காணப்படுகின்றன. இந்து மதத்திலேயே ஒன்றுக்கொன்று முரண்பாடான ஆரிய சமாஜமும், சனாதன தர்மமும் அடங்கி இருப்பதைப் பார்க்கலாம். மற்றும், சாருவாகருடைய (Charwak) கொள்கையோ, பண்டைப் பழங்காலத்திலிருந்தே தனிப்பட்ட சுயேச்சையுடையதாக விளங்குகிறது. அவர் அந்த மிகத் தொன்மையான காலத்திலேயே கடவுள் ஒருவர் உண்டா? என்று (ஆஸ்திகர்களை) அறைகூவி அழைத்திருக்கிறார் மதங்கள் அவைகளின் கொள்கைகள், யாவும் அடிப்படையிலேயே ஒன்றுக்கொன்று மாறுபட்டும் வேறுபட்டும் காணப்படுகின்றன. ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் கொள்கையே சரியானதென்று கருதுகிறார்கள்—இந்த வேற்றுமைதான் நமது துர்ப்பாக்கிய நிலைமையின் வித்து. அஞ்ஞானத்தை எதிர்த்துப் போராட வேண்டிய நமது வருங்காலப் போராட்டத்தின் அஸ்திவாரமாக, முற்கால விஞ்ஞானிகளும் ஆராய்ச்சி மிகுந்த அறிஞர்களும் கைக்கொண்ட பரிசோதனை முறைகள், மொழிப்பிரயோகப் போக்குகள் ஆகியவற்றை உபயோகித்து, இந்த மாயா ரகசியப் பிரச்சினையைத் தீர்க்க வழிகோல வேண்டும். நாமோ அவ்விதம் இன்றி, பழைய பெத்தான் பெத்தான் என்ற கதையில், சுத்தச் சோம்பேறிகளாய் மதம் மதமென்று உரத்த கூச்சலிட்டு, மனித நாகரீக முற்போக்கில்லாத பெருத்த குற்றத்திற்கு ஆளாகியிருக்கிறோம்.

பழைய நம்பிக்கையைப் போட்டிக்கழைக்க !

முன்னேற்றத்தை நாடும் எந்த மனிதனும், பழைய மதத்தின் ஒவ்வொரு பாகத்தையும் அலசி அலசி ஆராய்ச்சி செய்து தீரவேண்டும். பழைய கொள்கைகளையும் கோட்பாடுகளையும் போட்டிக்கழைத்துத் தீரவேண்டும். பிரஸ்தாபத்திலிருக்கும் மத சம்பிரதாயங்கள் ஒவ்வொன்றுக்கும்—எவ்வளவு அற்ப சொற்பமானதாயிருந்தாலும்—காரண காரியங்கள் கண்டுபிடித்துத் தீரவேண்டும். இவ்விதமாக ஆழமாய் ஆராய்ச்சி செய்தபின், ஒருவன் ஏதேனுமொரு கொள்கையை அன்றி, கோட்பாட்டை நம்பும்படி நேர்ந்தால், அவனுடைய நம்பிக்கை தப்பும் தவறுமுடையதாக தவறான வழியில் செலுத்தப்பட்டதாக, மயக்கம் நிறைந்ததாக இருக்கலாம். இருந்தபோதிலும், அவன் சீர்திருத்தமடைவதற்கு இடமுண்டு. ஏனென்றால், பகுத்தறிவே அவனுக்கு வழிகாட்டும் நட்சத்திரமாக ஒளிர்கின்றது. ஆனால், விருதா நம்பிக்கையும் குருட்டு நம்பிக்கையும் ஆபத்தை விளைக்கும். அது மூளையை மந்தப்படுத்தி, மனிதனைப் பிற்போக்காளனாக மாற்றி விடுகிறது. தான் உண்மை நாடுவோன் என்று உரிமைப் பாராட்டிக் கொள்ளும் எந்த மனிதனும் பழைய நம்பிக்கை முழுவதையும் போட்டிக்கழைத்தாகவேண்டும். பழைய நம்பிக்கையால் ஆராய்ச்சிக்கு ஈடுசெய்ய முடியாவிட்டால், அது நொறுங்கி தவிடு பொடியாகிவிடும். எனவே, அவனுடைய முதற்கடமை, அதனைச் சின்னாபின்னமாகச் சிதறியடிப்பதன்மூலம், புதிய தத்துவத்தை நிலைநிறுத்துவதற்கான நிலத்தைச் செப்பனிடுவதாகும். இது அழித்தல் வேலை. இதன் பிறகுதான் ஆக்கல் வேலையின் ஆரம்பம் இந்தப் புனருத்தாரனத்திற்குப் பழையவற்றில் சிலவற்றை சாதகமாக உபயோகப்படுத்திக் கொள்ளவும் செய்யலாம்.

தத்துவ சாஸ்திரத்தின் சாரம்

என்னைப் பொறுத்த வரையில். இந்த விஷயத்தைப் பற்றி பழமையிலிருந்து அதிகமாகக் கற்றுக்கொள்ள முடியவில்லை என்பதை ஆரம்பத்திலேயே ஒப்புக்கொள்ள வேண்டியவனாயிருக்கிறேன். கீழ்நாட்டுத் தத்துவங்களைக் கற்றுக்கொள்ள வேண்டுமென அளவுகடந்த ஆர்வம் எனக்கிருந்தது. ஆனால், அதற்கான சமயமோ, சந்தர்ப்பமோ என்னால் பெற முடியவில்லை. ஆயினும், அழித்தல் வேலையை—கடவுள் இல்லையென்னும் நாஸ்திகக் கொள்கையை விவாதிக்கப் போதிய அளவு பழைய கொள்கையான மதத்தின் பூரணத்துவத்தைப் பற்றிய சந்தேகாஸ்பதமான கேள்விகளைக் கேட்கத் தக்கவாறு என்மனம் மாற்றமடைந்து இருக்கிறது. பிரபஞ்சத்தை இயக்கி, தனது ஆக்ஞா சக்கரத்தைச் செலுத்திக் கொண்டு இருக்கும் நன்னறிவோடு கூடிய முழுமுதற் பொருள் (கடவுள்) ஒன்று இல்லை என்று நான் உணர்ந்துகொண்டு வந்திருக்கிறேன். நாம் இயற்கையில் நம்பிக்கை வைக்கிறோம். முன்னேற்ற இயக்கம் முழுவதும், மனிதன் தனக்கு ஊழியஞ் செய்வதற்காக இயற்கையை அடக்கி ஆதிக்கம் செலுத்துவதில் குறிக்கொண்டிருக்கிறது. ஒரு ‘சின்மய’ சக்தி பின்னாலிருந்து இயற்கையை நடத்திக்கொண்டிருக்கிறதென்பதுதான் நமது தத்துவ சாஸ்திரத்தின் சாரம்.

கேள்விகள் எழுப்புகிறேன்

நாஸ்திகவாதத்தின் சார்பாக நான் சில கேள்விகளை ஆஸ்திகர்களிடம் கேட்கிறேன். (1) நீங்கள் நம்புவது போல் சர்வ வியாபியும், சர்வக்ஞனும், சர்வசக்தனுமாகிய ஒரு கடவுள் இந்த உலகத்தைப் படைத்திருந்தால், அவன் ஏன் இதைப் படைத்தானென்று தயவுசெய்து கூறுங்கள். அந்தோ! துன்பமும், துயரமும், கஷ்ட நிஷ்டூரங்களும் நிறைந்த உலகம்! பலதிறப்பட்ட சதா இருந்துகொண்டிருக்கிற கணக்கு வழக்கற்ற முடிவுகள் ! பூரணமாக திருப்தியடைந்த ஜீவன் ஒன்றுகூட இல்லை.

தயவுசெய்து தெய்வ சங்கற்பம்—கடவுள் சித்தம்—ஈசன் இட்ட சட்டம் என்று கூறிவிடாதீர்கள். அவன் எந்தச் , சட்டத்திலாவது கட்டுப்படுத்தப் பட்டுவிட்டால், அவன் சர்வ சக்தியுடையவனல்ல. அவனும் நம்மைப் போன்ற மற்றொரு அடிமையாகத்தான் இருக்க முடியும். அது அவனுடைய பொழுதுபோக்கு—தமாஷ் (Enjoyment) லீலா வினோதம் என்பீர்களோ? தயவுகூர்ந்து அவ்வாறு சொல்லாதீர்கள். நீரோ என்பவன் ரோமாபுரியை எரித்தான் ஆனால் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையுள்ள ஜனங்களையே அவன் கொன்றான். அவன் சில பயங்கரமான—துக்கம் நிறைந்த சம்பவங்களைத்தான் உண்டுபண்ணினான். தான் பூரண மகிழ்ச்சியடைவதற்காகவே, இவற்றையெய்லாம் அவன் செய்தான். இதன் பயனாக சரித்திரத்தில் அவன் பெற்ற இடம் என்ன? சரித்திரக்காரர்கள் அவனை எப்பெயரிட்டு அழைக்கின்றனர் தெரியுமா? கொடிய அடைமொழிகள் யாவும் அவன் மீது சரமாரியாகப் பொழியப்பட்டிருக்கின்றன. “நீரோ, கொடுங்கோலன், ஈரமற்றநெஞ்சினன். கேடுகெட்டவன்” என்றுபலமாகக் கண்டித்து, கர்ண கடூரமான தூஷணை சொற்களால் வசைமாரி செய்திருப்பதால் சரித்திரத்தின் பக்கங்கள் கறைபட்டுப் போயின. செங்கிஷ்கான் என்பவன் தனது சந்தோஷத்தையும் இன்பத்தையும் நாடி சில ஆயிரம் பேர்களை பலியிட்டான். நாம் அவனை மிகக் கடுமையாக வெறுக்கிறோம். அவனுடைய பெயரைக்கூட வெகுவாக நிந்திக்கிறோம்.

என்ன தீர்ப்பு சொல்கிறீர்கள் ?

அப்படியானால் கணக்கு வழக்கற்ற கொலைகளை, துக்கமும் துயரமும் நிறைந்த சம்பவங்களை—ஒவ்வொரு நாளிலும், ஒவ்வொரு நாழிகையிலும், ஒவ்வொரு நிமிஷத்திலும் செய்து கொண்டிருக்கிற “என்றுமுள” நீரோவாகிய முழு முதற் கடவுளுக்கு—நீங்கள் என்ன தீர்ப்புக் கூறப்போகிறீர்கள் ? செங்கிஷ்கான் தோற்றோடும்படியாக ஒவ்வொரு கணத்திலும் நடைபெறும் அவனுடைய (கடவுள்) தீய காரியங்களை நீங்கள் எவ்வாறு ஆதரிக்க நினைக்கிறீர்கள்? அவன் இந்த உலகத்தை—மெய்யான (கண்கண்ட) நரகத்தை—சதா கவலையும், குழப்பமும், சஞ்சலமும் நிறைந்த கசப்புக்குரிய அமைதியற்ற ஸ்தலத்தை—எதற்காக படைத்தான்? படைக்காதிருக்கக்கூடிய சக்தியும் தன்னிடமிருக்கும்பொழுது, சர்வ சக்தனாகிய அக்கடவுள் மனிதனை, ஏன் இத்தகைய உலகில் சிருஷ்டித்தான்? இவற்றிற்கெல்லாம் என்ன நியாயம் சொல்லப்போகிறீர்கள்? உத்தமர்களான நிரபராதிகளான தியாக மூர்த்திகளை, உண்மையின் பொருட்டுக் கஷ்ட நிஷ்டூரங்களுக்கு இரையாகின்றவர்களை மறுமையில் சன்மானிப்பதற்காகவும், துஷ்டர்களை, கொடியவர்களை, மோச நாசக்காரர்களை மறுமையில் தண்டிப்பதற்காகவுமே கடவுள் சிருஷ்டித்தார் என்று கூறுகிறீர்களா? நன்று, நன்று! உங்களிடம் ஒன்று கேட்கிறேன். பின்னால் மிகமிருதுவான பஞ்சால் ஒத்தடம் கொடுத்து, அரிய இனிய சிகிச்சையால் நோவைக் குறைத்து நோவை. சுகப்படுத்துவதற்காக, தற்பொழுது உடம்பில் படுகாயம் பண்ணுகிறேன் என்று கூறும் ஒரு மனிதனுடைய வாதத்தை நீங்கள் ஒத்துக் கொள்வீர்களா ? கிளாடியேட்டர் (Cladiatcr) ஸ்தாபனத்தை ஆதரிக்கிறவர்களும் நிர்வகிக்கிறவர்களும், அகோரப் பசியால் பயங்கரமான கோபாவேசத்துடன் கர்ஜிக்கும் சிங்கங்களின் முன்னால் மனிதர்களைத் தூக்கியெறிகிறார்கள். அவ்வாறு தூக்கியெறிவது, எறியப்படுகிறவர்கள் சிங்கங்களோடு போராடி, அந்தக் கொடிய மிருகங்களால் ஏற்படும் மரணத்திலிருந்து தப்பித்துக்கெண்டாரானால், அவர்களைப் பின்னால் பாதுகாத்து நல்லமாதிரியிற் பராமரிப்பதற்காகவேயென்று காரணம் கூறுகிறார்கள். இந்த நியாயம் பொருத்தமாயிருக்கமுடியுமா? முடியாது. இதனாலேதான் அந்த முழுமுதற் கடவுள் எதற்காக உலகத்தைப் படைத்து, அதில் மனிதனைச் சிருஷ்டித்தான் என்றும், தமாஷ் பண்ணி பொழுதுபோக்கவென்றால் அவனுக்கும் நீரோவுக்கும் என்ன வித்தியாசமென்றும் நான்கேட்கிறேன்.

மகம்மதியர்களே ! கிருஸ்தவர்களே ! உங்களையும் கேட்கிறேன் !

ஏ மகமதியர்களே ! கிருஸ்தவர்களே!! இந்துக்களின் தத்துவசாஸ்திரமோ இன்னுமொரு காரணத்தைப் பிடித்து தொங்கிக்கொண்டு ஊசலாடுகிறது. ஆகவே முதலில் உங்களைக் கேட்கிறேன். மேலே குறித்த கேள்விக்கு விடை என்ன? முற்பிறப்பில்—ஜென்மத்தில்—உங்களுக்கு நம்பிக்கை இல்லை போன ஜென்மத்தில் செய்த தீவினையின் பயனாகவே இந்த ஜென்மத்தில் குற்றமற்ற நல்லோர்கள் கஷ்ட நிஷ்டூரங்களுக்கு ஆளாகிறார்களென்று இந்துக்கள் சொல்வதுபோல் நீங்களும் தர்க்கம் செய்ய முடியாது. நான் உங்களை ஒன்று கேட்கிறேன். சர்வ சக்தனாகிய கடவுள் ஏன் இந்த உககத்தைப படைக்க வார்த்தைகளின் மூலமாக ஆறு நாட்கள் உழைத்தான்? எல்லாம் நன்றாயிருந்ததென்று ஏன் ஒவ்வொரு நாளும் கூறினான்? இன்று அவனைக் கூப்பிடுங்கள் சென்றகாலச் சரித்திரத்தைக் காட்டுங்கள். தற்கால நிலைமையை அவன் படிக்கும்படி செய்யுங்கள். “எல்லாம் நன்றாயிருக்கிறது” என்று சொல்லுகிற தைரியம் இன்று அவனுக்கு இருக்கிறதா என்று பார்ப்போம்.

ஏனிந்த மவுனம்?

காரிருள் செறிந்த காற்றோட்டமற்ற வெஞ்சிறைக் கூண்டுகளிலிருந்து குச்சுக்களிலும் குந்திக் குடியிருக்கும் கோடிக்கணக்கான மனிதப் பிராணிகளைச் சித்திரவதை செய்து, உண்டு உறிஞ்சி விழுங்கி ஏப்பமிடும், அகோரப் பசிக் களஞ்சியங்களிலிருந்து— கொடிய முதலாளிப் பூதங்கள், தங்களுடைய ரத்தத்தை இடையறாது உறிஞ்சிக்கொண்டிருப்பதையும், சாதாரண மனிதனும் நினைத்தால் நெஞ்சம் திடுக்கிடும் மாதிரி மனித சக்தி மிதமிஞ்சித் துர்விநியோகஞ் செய்யப்படுவதையும் சகிப்புத் தன்மையோடு அல்ல—உணர்ச்சி மழுங்கிய தன்மையோடு பார்த்துக்கொண்டிருந்து கொள்ளைக்கிரையாகும் தொழிலாளிகளிலிருந்து—அபரிமிதமாக உற்பத்தி செய்த பண்டங்களை உற்பத்தி செய்த மக்களின் அவசியத்தைத் தவிர்ப்பதற்குப் பங்கிட்டுக் கொடுப்பதைவிட, கடலில் கொட்டி அழித்துவிடுவதைத் தேர்ந்தெடுக்கும் மனப்பான்மையிலிருந்து—மனிதர்களின் எலும்புகளையே அஸ்திவாரமாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கும் ராஜாதி ராஜாக்களின் வானமளாவிய அரண்மனைகள் வரையில்... இவைகள் எல்லாவற்றையும், அவன் (கடவுள்) நன்றாக கண்ணைத் திறந்துப் பார்வையிட்டுவிட்டு, “எல்லாம் நன்றாயிருக்கிறது” என்று சொல்லட்டும். “ஏன்? எதற்காக?” என்பதுதான் எனது கேள்வி. நீங்களோ மவுனம் சாதிக்கிறீர்கள் அல்லவா ? அப்படியானால் சரி ; நான் மேலே செல்கிறேன்.

நல்லது ! இந்துக்களே! நீங்களே இன்று-கஷ்டப்படுகிறவர்கள் எல்லோரும் பூர்வ ஜென்மத்தில் பாவஞ் செய்த கோஷ்டியைச் சேர்ந்தவர்கள் என்று சொல்கிறீர்கள். இன்று மக்களை அடக்கி ஒடுக்கி நசுக்கித் துவைக்கும் ஆதிக்க வர்க்கத்தினர் எல்லோரும், அவர்களுடைய பூர்வ ஜென்மத்தில் புன்னிய மூர்த்திகளாக, மகானுபாவர்களாக இருந்தமையால், இப்பிறப்பில் ஆட்சியையும் அதிகார ஆதிக்கத்தையும் அனுபவிக்கிறார்கள் என்று நீங்கள் கூறுகிறீர்கள். உங்களுடைய முன்னோர்கள் அபார யுக்தி நுட்பமுடையவர்களென்பதையும், அறிவியல் வாதமும், அவநம்பிக்கையும், செய்யும் முயற்சிகளையெல்லாம் உடைத்து நொறுக்கத் தகுந்த தன்மை கொண்ட கொள்கைகளையும், கோட்பாடுகளையும் கண்டுபிடிக்கப் பகீரதப் பிரயத்தனஞ்செய்தார்களென்பதயும் நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், இந்த வாதம் உண்மையாகவே ஊற்றுக்கு நிற்குமா என்பதை அலசி ஆராய்வோம்.

குற்றவாளிகள் மீது சுமத்தப்படும் தண்டனையை, பிரசித்திப் பெற்ற ஜூரிகள் அபிப்பிராயப்படி மூன்று வகையாகப் பிரிக்கலாம். அவைகளாவன : பழிக்குப் பழிவாங்கல், பதிலுக்குப் பதில் கொடுத்தல், சீர்திருத்தல், பயங்காட்டித் தடுத்தல். பழிக்குப் பழிவாங்கும் கொள்கையானது முற்போக்குடைய மதியூகிகள் எல்லோராலும் பலமாகக் கண்டிக்கப்படுகிறது. பயங்காட்டித் தடுக்கும் முறையும் அம்மாதிரியே கண்டிக்கப்படுகிறது. சீர்திருத்தும் வழி ஒன்றுதான், மனித முற்போக்குக்கு முக்கியமானதாயும். இன்றியமையாததாயுமிருக்கின்றது இது குற்றஞ் செய்தவனைக் கடுமையாகத் தண்டிப்பதற்குப் பதிலாக, அவனை யோக்கியப் பொறுப்புடைய, சமாதானத்தை நேசிக்கின்ற பிரஜையாக சமுதாயத்திற்குத் திருப்பிக் கொடுக்கும் லட்சியத்தைத் தன்னகத்தடக்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் கடவுள், தான் குற்றவாளிகள் என்று கருதுகிற மக்களுக்கு— நாமும் அம்மனிதர்களைக் குற்றவாளிகளென்றே வைத்துக் கொள்வோம். விதிக்கும் தண்டனையின் தன்மை என்ன ? நீங்கள் கடவுள் அவர்களை மாடாகவும், பூனையாகவும், மரமாகவும், கொடியாகவும் இன்னும் பலவகைப் பிராணீகளாகவும் அனுப்புகிறான் என்று சொல்கிறீர்கள். இத்தண்டனைகளை நீங்கள் 84 லட்சமென்று கணக்கெடுத்தும் வைத்திருக்கிறீர்கள். இதனால் மனிதன் அடையும் சீர்திருத்தமென்ன? பூர்வத்தில் பாவஞ்செய்ததன் பயனாக, போன ஜென்மத்தில் கழுதையாகப் பிறந்தோமென்று உங்களைச் சந்தித்த மனிதர்கள் எவரேனும் கூறியதுண்டா ? ஒருவரும் இல்லை. உங்களுடை புராணங்களைப் புரட்டி உதாரணங்காட்டப் புறப்பட்டு விடாதீர்கள். ஏனெனில், உங்கள் புராணங்களை சந்தியிலிழுக்க நான் விரும்பவில்லை. இதுவுமன்றி, தரித்திரனாய் இருப்பதுதான் உலகத்திலேயே பெரும்பாவமென்பது உங்களுக்கு தெரியுமா? தரித்திரம் ஒரு பாவம், அது ஒரு தண்டனை. குற்றவாளியைக் குற்றஞ்செய்வதிலிருந்து தடுக்கமுடியாது. அதிகப்படியாகக் குற்றம் செய்வதற்குத் தூண்டும் தன்மை பொருந்திய தண்டனைகளை விதிக்கும் கிரிமினல் சட்ட நிபுணனையோ (Criminologist) ஜூரியையோ அன்றி, சட்டகர்த்தாவையோ நீங்கள் எவ்வாறு புகழ்வீர்களென்று தான் கேட்கிறேன். இதைப்பற்றி உங்கள் கடவுள் யோசித்ததில்லையா? அல்லது மனிதவர்க்கத்தைச் சகிக்க முடியாத சித்திரவதைக்குள்ளாக்கி, அதன் பயனாகப் பெற்ற அனுபவத்தாலேதான் அவன் இவ்விஷயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டுமா?

சிறைச்சாலை—தூக்குமேடை எப்படி வந்தது?

தரித்திரமும். மூடத்தனமும் தலைவிரித்தாடும் ஒரு தோட்டியின் குடும்பத்திலோ அன்றி, ஒரு சாமர் சாதிக்காரன் (தீண்டக் கூடாதவன்) குடும்பத்திலோ ஒரு மனிதன் பிறந்தால் அவன் கதி என்னாகும்? அவன் பரம ஏழை ஆகையால் படிப்பது அசாத்தியம். சாதித் திமிர் கொண்ட மேல் ஜாதிக்காரர்களால் அவன் வெறுத்து ஒதுக்கப்படுகிறான். அவனுடையமூடத்தனம், அவனுடைய தரித்திரம், அவன் நடத்தப்படுகின்ற தன்மை இவைகளெல்லாம் ஒன்றாகி சமுதாயத்தை வெறுக்கும்படியான நிலைமைக்கு கொண்டுவந்துவிடுகிறது. அதன் காரணமாக அவன் குற்றஞ் செய்கிறானென்று வைத்துக் கொள்வோம். அதற்கு ஜவாப்தாரி யார்? கடவுளா? அவனா? அல்லது சமுதாயத்தின் படித்த கூட்டத்தாரா? மமதையும், பேராசையும் உச்சிமுதல் உள்ளங்கால்வரையில் கொண்ட, குதிக்கும் ‘பிராமணர்களால்’ வேண்டுமென்றே நிர்மூடத்தனத்தில் ஆழ்த்தி அமுக்கப்பட்டிருக்கும் தாழ்த்தப்பட்ட மக்களின் தண்டனைக்கு பொறுப்பாளி யார்? உங்களுடைய “பரிசுத்த ஞான நூற்க”ளாகிய வேதங்களிலிருந்து சில வாக்கியங்களை அவர்கள் கேட்டாலும், அவர்களுடைய காதில் ஈயத்தை காச்சி ஊற்ற வேண்டுமென்று தண்டனை விதித்ததற்கு அபராதம் செலுத்த வேண்டியவர்கள் யார்? அவர்கள் ஏதாவது குற்றஞ் செய்தால் யார் பொறுப்பேற்று தண்டனைக்குத் தலை கொடுப்பார்? என்று அன்புக்குரிய நண்பர்களே! மேற்கூறிய கோட்பாடுகளெல்லாம் விசேஷ சலுகையடைவோரின் கற்பனைகள், இக்கோட்பாடுகளின் உதவியால் அவர்கள் தாங்கள் பிறரிடமிருந்து பறித்துக்கொண்ட அதிகாரம், அய்ஸ்வர்யம், அந்தஸ்து முதலானவையென்று தீர்மானிக்கிறார்கள். ஆம்! உப்தன் சிங்கிளார் (Upton Sinclair) ஓரிடத்தில் எழுதுகிறார்: “ஒருவன் நித்தியத்துவத்தில் (Immortality) நம்பிக்கைக் கொள்ளச் செய்து, அவனுடைய அய்ஸ்வர்யங்களையும், உடைமைகளையும் திருடிக் கொள்ளுங்கள். அவன் கொஞ்சமேனும் குரோதபுத்தியின்றி, இவ்விஷயத்தில் உங்களுக்கு ஒத்தாசை புரிவான். மதாச்சாரிகளுக்கும், அதிகார வர்க்கத்தாருக்கும் ஏற்பட்ட கூட்டுறவே, சிறைச்சாலைகளையும் தூக்குமேடைகளையும், கசையடிகளையும் பிறப்பித்தது” என்று.

கடவுள் ஒரு செங்கிஷ்கான்–வீழ்த்துங்கள் அவனை!

சர்வ சக்தனாகிய உங்கள் கடவுள் ஒரு மனிதன் பாவமோ, குற்றமோ செய்கிறபொழுதே ஏன் தடுத்து விடக்கூடாது என்றுதான் கேட்கிறேன். அவ்வாறு செய்வது அவனுக்கு எளிதான காரியந்தானே! யுத்தத் தலைவர்களான பிரபுக்களைக் கொன்றாவது அன்றி அவர்களுடைய உள்ளத்தில் கொழுந்து விட்டெறிந்த கலக நெருப்பை அவித்தாவது, அவன் ஏன் கழிந்த மகா யுத்தத்தால் உலக மக்களின் தலையில் விடிந்த ஆறாப் பெருந்துயரை—துரதிஷ்ட முடிவைத் தடுத்திருக்கக் கூடாது? இந்தியாவுக்கு சுதந்திரம் அளிக்குமாறு ஓர் வகையான நல்லுணர்ச்சியைப் பிரிட்டிஷ்மக்களின் மனதில் ஏன் அவன் புகுத்தவில்லை? அவன் ஏன் சகல, முதலாளிகளின் ஹிருதயங்களிலும் பரோபகார உணர்ச்சியைக் கொளுத்தி தனி உடமைகளெல்லாம் அவர்களாலேயே பொது உடைமையாகும்படி செய்து, தொழிலாளர் சமூகத்தை அல்ல மனித வர்க்கம் பூராவையுமே அடிமைக் கட்டிலிருந்து விடுதலை செய்து காப்பாற்றாதிருக்கிறான்? சமதர்மிகள் கூறும் திட்டம் அனுபவ சாத்தியமாவென அறிய நீங்கள் விரும்பலாம். வேண்டுமானால் அதை அனுபவ சாத்தியமாக்க வேண்டிய பொறுப்பை சர்வ சக்தி வாய்ந்த உங்கள் கடவுளிடமே விட்டுவிடத் தயார். ஜனங்கள் பொதுவாக சமதர்மத்தின் யோக்கியதையையும் அதனால் ஏற்படும் நன்மையையும் அங்கீகரிக்கிறார்கள். ஆனால் அவர்கள் “அது அசாத்தியமானது” நடக்கக்கூடியதல்ல என்றுகூறிக் கொண்டு எதிர்க்கிறார்கள். எனவே எல்லாம் வல்ல இறைவன் இவ்விஷயத்தில் தலையிட்டு யாவற்றையும் முறைப்படுத்தி ஒழுங்கு செய்யக்கூடாதா? இப்பொழுது நீங்கள் தலையைச் சுற்றி மூக்கைப் பிடிக்கும் தர்க்கவாதத்தில் கிளம்பிவிட வேண்டாம். ஏனென்றால் அது பிரயோஜனப்படாது. பிரிட்டிஷார் இங்கு ஆட்சி புரிகிறார்கள். அவர்கள் ஆட்சி செய்வது கடவுளின் திருவுளத்தாலன்று. அவர்களிடம் அதிகாரம் இருக்கிறது. நமக்கு அவர்களை எதிர்க்கத் துணிவில்லை. இதுதான் காரணம். தெய்வ சகாயத்தாலன்று. நம்மை அடக்கி அவர்கள் ஒடுக்கிக் காலடியில் போட்டு மிதித்துத் துவைக்கிறார்கள். துப்பாக்கி, பீரங்கிகள், வெடிகுண்டு, பாணாத்தடிகள், போலீஸ் ராணுவங்கள், நமது உணர்ச்சியற்ற மானங்கெட்ட தனம் இவைகளாலேயே அவர்கள் சமுதாயத்திற்கு விரோதமான மிகவும் வருந்தத்தக்க பாதகத்தை, ஒரு தேசம் மற்றொரு தேசத்தைக் கொடுமையாகக் கொள்ளையடிக்கும் குற்றத்தை வெற்றிகரமாகச் செய்து கொண்டிருக்கிறார்கள். (இதைக் கண்ணாரக் கண்ட பின்பும்) கடவுள் எங்கே இருக்கிறான்? அவன் என்ன செய்து கொண்டிருக்கிறான்? மனித வர்க்கத்தின் கஷ்ட நிஷ்டுரங்களையெல்லாம் தமாஷாக பார்த்து அனுபவித்து பொழுது போக்கிக்கொண்டிருக்கிறான்? அவன் ஒரு பெரும் நீரோ! மாபெரும் செங்கிஷ்கான்! வீழ்த்துங்கள் அவனை !

இனி உலக உற்பத்தி, மனித உற்பத்தி ஆகியவைகளைக் குறித்து என்னிடம் காரணம் கேட்பீர்கள். ரொம்ப சரி, இவ்விஷயத்தைப்பற்றி நான் கூறக் கடமைப் பட்டிருக்கிறேன். இவ்விஷயத்தில் சிறிது பிரகாசமளிக்கும் பொருட்டு சார்ல்ஸ் டார்வின் என்ற உலகப் பிரத்திப் பெற்ற விஞ்ஞான புலவர் முயற்சித்திருக்கிறார். அவர் கூறும் உண்மைகளைப் படித்துப் பாருங்கள். சோகம்ஸ்வாமியால் எழுதப்பட்ட “சாதாரண அறிவு” (Common Sense) என்ற நூலையும் படித்துப் பாருங்கள்; அது உங்கள் கேள்விக்கு ஒருவாறு பதில் கூறும் இந்த உலகும் மனிதரும் இயற்கையின் ஓர் தோற்றம். பல வேறுபட்ட பொருட்கள் தற்செயலாகக் கலந்து, நெபுலே (Nebula) உருவத்திலாகிப் பிறப்பித்ததே இவ்வுலகம் எப்பொழுது? சரித்திரத்தை ஆராய்ந்து மிருகங்களையும், நீண்ட காலத்திற்குப்பின் மனிதனையும் உற்பவித்தது. டார்வினால் எழுதப்பட்ட “ஜீவராசிகளின் உற்பத்தி” (Origin of theSpecies) என்ற நூல் இவ்விஷயத்தில் குறிப்பிட்டுப் படிக்கத்தக்கது. மனிதன் தோன்றிய பின் நடந்த நிகழ்ச்சிகளெல்லாம், மனிதன் இயற்கையோடு இடையறாது போராடிய போராட்டமும், அவன் அதனை ஆட்சிசெய்ய எடுத்துக்கொண்ட பிரயத்தனங்களுமேயாகும். இதுவே உலக உற்பத்தியைப் பற்றிய இரத்தினச் சுருக்கமான விளக்கம்.

பூர்வ ஜென்மப் பலனா?

பூர்வ ஜென்மக் கர்ம பலன் இல்லையென்றால், ஒரு குழந்தை பிறக்கும்பொழுதே, குருடாகவோ, அல்ல நொண்டியாகவோ ஏன் பிறக்கிறது என்பது உங்கள் வாதத்தின் அடுத்த கேள்வி. இந்தப் பிரச்னையானது, கேவலம் உயிர்கள் சம்பந்தப்பட்ட சங்கதிதானென்று உயிர் நூல் வல்லுநர்களால் (Biologists) விளக்கிக் காட்டப்பட்டாகிவிட்டது. அவர்களுடைய அபிப்பிராயப்படி, இந்நிகழ்ச்சிகளின் பூராப் பொறுப்பும் பெற்றோர்களின் தோள் மீதுதான் விழுகிறது. பெற்றோர்கள் தெரிந்தோ தெரியாமலோ செய்யும் செய்கைகளின் பலனாகத்தான் பிறப்பதற்கு முன்னதாகவே குழந்தைக்கு அங்கவீனம் ஏற்படுகிறது.

சாரத்தில் சிறுபிள்ளைத்தனமுடையதாயிருந்தாலும். நீங்கள் இயல்பாகவே கேட்கும் வேறொரு கேள்வியுமுண்டு அதாவது, கடவுள் ஒருவர் இல்லையானால், ஜனங்கள் எவ்வாறு கடவுள் நம்பிக்கை கொள்ள ஆரம்பித்தார்கள்? என்பதுதான். இதற்கு விடை சுருங்கச் சொல்லி விளங்க வைக்கலாம். அவர்கள் பூதங்களிடம் தீய பைசாசங்களிடமும் எப்படி நம்பிக்கை கொண்டார்களோ அப்படித்தான் கடவுளிடமும் நம்பிக்கைக் கொண்டார்கள் ஒரு வித்தியாசமென்னவென்றால், கடவுள் நம்பிக்கை உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. அதன் தத்துவமும் மிக அபிவிருத்தியடைந்திருக்கிறது. தீவிரவாதிகளில் பலர், பிறரை வஞ்சித்து வாழும் பித்தலாட்டக்காரர், பொதுஜனங்களை அடிமையாக்கி வைத்திருக்க வேண்டுமென்ற சுயநல நோக்கத்தோடு, புத்திசாலித்தனமாக ஒரு கடவுளைச் சிருஷ்டித்து ஆஸ்திகப் பிரசாரம் செய்தார்களென்றும் அப்பால், அவ்விஷயத்தில் தாங்களே அதிகாரிகளென்றும் தங்களுடைய விசேஷச் சலுகையும் அந்தஸ்தும் கடவுளாலேயே அனுமதிக்கப்பட்டதென்றும் அவர்கள் உரிமை பாராட்ட ஆரம்பித்தார்களென்றும் அபிப்பிராயப்படுகிறார்கள். நான் அவ்வாறு கருதவில்லை. சர்வ மதங்களும், மத நம்பிக்கைகளும். சமயக் கொள்கைகளும் சாதி ஆசாரங்களும் இன்னும் இவை போன்ற ஸ்தாபனங்களும், நாளேற கொடுமையும், கொள்ளையும் ஓருருவாய்த் திரண்ட ஸ்தாபனங்களுக்கும், தனி மனிதருக்கும், வகுப்பாருக்கும் ஒத்து ஊதுகின்ற நிலைமைக்கு வந்து விட்டனவென்ற முக்கிய விஷயத்தில் எனக்கும், அவர்களுக்கும் வித்தியாசமில்லை. ராஜத் துரோகம், அரசனை எதிர்த்துக் குழப்பம் புரிவது—மாபெரும் மகா பாவமென்றே சகல மதங்களும் கூறுகின்றன.

கடவுள் உற்பத்தி ஏன்?

கடவுள் உற்பத்தியைப் பற்றி என்னுடைய அபிப்பிராயம் பின்வருமாறு:— மனிதன் தன்னுடைய வாழ்க்கையை வரையறுத்துத் தனக்கேற்படும் விபத்துக்களையும் அவற்றை சமாளிக்க முடியாத தன்னுடைய பலவீனங்களையும் யோசித்துப் பார்த்த காலத்தில்தான், சோதனைக்குரிய சந்தர்ப்பங்களிலெல்லாம் தைரியமாகத் தலைகொடுப்பதற்கு. நிகழும் ஆபத்துக்களை ஆண்மையுடன் தாங்கி நிற்பதற்கும், செல்வம் குன்றி தரித்திரம் மேலிட்ட காலத்தில் மனந்தளராது இருப்பதற்கும் தைரியமூட்டுவான் வேண்டி, மானசீகமாகக் கடவுள் உற்பத்தி செய்யப்பட்டது. அக்கடவுளை, சர்வசக்தி வாய்ந்த தனிச் சட்டங்கள் படைத்தவனென்றும், “பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிவு” கொண்ட அம்மையப்பனென்றும் கற்பித்து வெகுவிரிவாகச் சித்திரிக்கப்பட்டது. ஆகையால், மனிதன் கடவுளுடைய குணாதிசயங்கள், கோபதாபங்கள் சட்ட திட்டங்களாகியவற்றைக் குறித்து தர்க்கித்தபொழுது, அவனால் சமுதாயத்திற்குத் தீங்கு நேராதிருக்க, கடவுள் அவனைத் தண்டித்துத் தடுக்க வேண்டியவனாயிருந்தான். கடவுள் மனிதரால் அம்மையப்பனென்று வர்ணிக்கப்பட்டு போற்றிப் புகழப்பட்டபொழுது அவன் அவர்களுக்குத் தாயாகவும், தந்தையாகவும், சகோதரச் சகோதரிகளாகவும், சிநேகிதனாகவும், துணைவனாகவும் இருந்து தீரவேண்டியவனானான். ஆகையால், மனிதன் தனது நண்பர்களெல்லோராலும் வஞ்சிக்கப்பட்டு, கைவிடப்பட்டு, ஆழ்ந்த துயரத்தில் அமிழ்ந்து தவிக்கும்பொழுது, தனக்கு எப்பொழுதும் ஆதரவளிக்க, உற்றதுணை புரிய உண்மையான நண்பன் ஒருவன் இருக்கிறானென்றும், அவன் தான் கடவுளென்றும் அவனால் எதுவும் செய்ய முடியுமென்றும் கருதுகிறான். இந்த அபிப்பிராயத்தால் மனிதன் ஒருக்கால் ஆறுதல் அடையலாம். ஆதிகாலத்தில், மனிதன் மிருகப் பிராயத்திலிருந்த நாளில், இந்த அபிப்பிராயம் உண்மையாகவே அவனுக்கு உபயோகமாயிருந்தது. கடவுள் உணர்ச்சி கஷ்ட திசையிலிருக்கும் மனிதனுக்கு உதவி செய்யக்கூடும்.

ஆனால், மதத்தின் குறுகிய நோக்கத்தோடும், விக்கிரக ஆராதனையோடும் போராடியதுபோல் சமுதாயம் இந்தக் கடவுள் நம்பிக்கையோடும் போராடித் தீரவேண்டும். இவ்விதமாக மனிதன், தன் கையே தனக்குத் துணையெனக் கொண்டு, யதார்த்தவாதியாக முயற்சிக்கின்றபொழுது, அவன் கடவுள் நம்பிக்கையை உண்மையாகவே உதறித் தள்ளுவதோடு, சந்தர்ப்பங்களாலேற்படும் துயரங்களையும், தொந்தரவுகளையும் எதிர்த்துத் தீர வேண்டிவரும். இதுதான் எனது உண்மையான நிலைமை.

நண்பரின் ஆசை !

தோழர்களே ! இது எனது அகங்காரமல்ல. எனது ஆராய்ச்சியின் தோரணையே. என்னை நாஸ்திகனாக்கிற்று. கடவுள் நம்பிக்கையும், தினசரிப் பிரார்த்தனைகளும் சுயநலம் நிறைந்த மனிதனை அகவுரவப்படுத்துகின்ற செய்கைகளென்று நான் கருதுகிறேன். ஆகவே இப்படிப்பட்ட பிரார்தனைகள், எனக்கு உதவி புரியக்கூடுமென்று நிரூபிக்குமா அல்லது எனது நிலைமையை மோசமாக்குமாவென்பது எனக்கே விளங்கவில்லை. நான் கஷ்ட நிஷ்டூரங்களைத் தைரியமாக எதிர்த்து நின்ற நாத்திகர்கள் பலரைப் பற்றிப் படித்திருக்கிறேன். ஆதலால், எனது முடிவுரையில், தூக்குமேடையிற்கூட ஆண்மையுள்ள மனிதனைப்போல் தலை நிமிர்ந்து நிற்கவே முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்.

நான் எவ்வாறு நாஸ்திகத்தை அனுஷ்டிக்கிறேன் என்று கூறுகிறேன். ஒருநண்பர் பிரார்த்தனை செய்யும்படி என்னை வேண்டிக்கொண்டார். நான் எனது நாஸ்திகத்தைப் பற்றிப் பிரஸ்தாபித்தேன். அப்பொழுது அவர், “உனது கடைசி நாட்களில் நீ நம்பிக்கைக் கொள்ள ஆரம்பித்து விடுவாய்” என்றார். நான் அவரிடம், “ அன்பார்ந்த அய்யா! அப்படிநேரவே நேராது. அவ்வாறு நம்புவது, என்னை அகவுரவப்படுத்தி, அவமானப்படுத்துவதாகவே நினைப்பேன் பலவீனத்தால், சுயநல நோக்கங்களால் நான் பிரார்த்தனை செய்யப்போவதில்லை” என்று சொன்னேன். 'வாசகர்களே! நண்பர்களே!! “இது அகங்காரமாகுமா?” அகங்காரந்தானென்றால் நான் அப்படிப்பட்ட அகங்காரத்தையே விரும்புகிறேன்.


"https://ta.wikisource.org/w/index.php?title=நான்_நாத்திகன்_–_ஏன்%3F/001-002&oldid=1476652" இலிருந்து மீள்விக்கப்பட்டது