நான் நாத்திகன் – ஏன்?/002-002

விக்கிமூலம் இலிருந்து

பகவத்சிங்கைப்பற்றி ‘குடிஅரசு!’

[இந்த வியாசம் 29-3-31ல் வீரர் பகத்சிங் தூக்கிலிடப்பட்டது குறித்து குடி அரசு இதழில் எழுதப்பட்ட தலையங்கமாகும்]

வீரர் பகவத்சிங் இவ்வாரம் தூக்கிலிடப்பட்டதைப் பற்றி அனுதாபங் காட்டாதார்கள் யாருமே இல்லை அவரைத் தூக்கிலிட்ட காரியத்திற்காக சர்க்காரைக் கண்டிக்காதவர்களும் யாரும் இல்லை. அதோடு மாத்திரமல்லாமல், இந்தக் காரியம் நடந்துவிட்டதற்காக திரு. காந்தியவர்களையும்கூட அநேக தேசபக்தர்கள் என்பவர்களும், தேசிய வீரர்கள் என்பவர்களும் இப்போது வைகின்றதையும் பார்க்கின்றோம்.

இவை ஒருபுறம் நடக்க, இதே கூட்டத்தாரால் மற்றொருபுறத்தில் என்ன நடக்கின்றது என்று பார்ப்போமானால், அவர்கள் சர்க்கார் தலைவரான மேன்மை தங்கிய ராஜப் பிரதிநிதி திரு. இர்வின் பிரபு அவர்களைப் பாராட்டுவதும், அவரிடம் ராஜி பேசி முடிவு செய்து கொண்ட திரு காந்தி அவர்களைப் புகழ்வதும், பகத்சிங்கைத் தூக்கிலிடக் கூடாது என்கின்ற நிபந்தனையில்லாத ராஜி ஒப்பந்தத்தைப்பற்றி மிக்க திருப்தியடைந்திருப்பதோடல்லாமல், அதை ஒரு பெரிய வெற்றியாய்க் கருதி, வெற்றிக் கொண்டாட்டங்கள் கொண்டாடுவதுமான காரியங்கள் நடைபெறுகின்றன. இவ்வளவோடு மாத்திரமல்லாமல், திரு. காந்தியவர்கள் திரு. இர்வின் பிரபுவை மகாத்மா என்று கூறி, அந்தப்படியே அழைக்கும்படியாக தேச மகாஜனங்களுக்குக் கட்டளையிடுவதும், திரு. இர்வின்பிரபு அவர்கள் திரு. காந்தியவர்களை ஒரு பெரிய மகான் என்றும், தெய்வத் தன்மை பொருந்தியவர் என்றும், வெள்ளைக்காரர்கள் அறிய விளம்பரம் செய்வதுமான காரியங்கள் நடைபெறுகின்றன.

ஆனால், இப்போது வெகு சீக்கிரத்திலேயே அதே மக்களால், “காந்தீயம் வீழ்க,” “காங்கிரஸ் அழிக,” “காந்தி ஒழிக,” என்கிற கூச்சல்களும், திரு. காந்தியவர்கள் செல்லுகின்ற பக்கம் கருப்புக் கொடிகளும், அவர் பேசும் கூட்டங்களில் குழப்பங்களும் செய்வது சகஜமாகிவிட்டன.

இவைகளையெல்லாம் பார்க்கும்போது அரசியல் விஷயமாய் நமது பொதுஜனங்களுடைய அபிப்பிராயம் என்ன? அவர்களது கொள்கைதான் என்ன? என்பவைகளைக் கண்டுபிடிக்கவே முடியாமல் இருப்பதோடு, நம் மக்கள் யாருக்காவது ஏதாவது ஒரு கொள்கை விஷயமாய் நமது உண்டா என்றுகூடச் சந்தேகிக்க வேண்டியதாக இருக்கிறது.

எது எப்படி இருந்தபோதிலும் திரு. காந்தியவர்களின் உப்புச் சக்தியாக்கிரகக் கிளர்ச்சியின் ஆரம்பக் காலத்திலேயே “இக்கிளர்ச்சிமக்களுக்கோ, தேசத்திற்கோ, சிறிதும் பயன்படாது” என்றும், “பயன்படாமல் போவதோடல்லாமல், தேசத்தின் முற்போக்குக்கும், கஷ்டப்படும் மக்களின் விடுதலைக்கும் விரோதமானது” என்றும் எவ்வளவோ தூரம் எடுத்துச் சொன்னோம். நாம் மாத்திரமல்லாமல், திரு காந்தியவர்களே இக்கிளர்ச்சி ஆரம்பிப்பதற்கு முக்கிய காரணம் பகத்சிங் போன்றவர்கள் செய்யுங் காரியங்களைத் தடுப்பதற்கும், ஒழிப்பதற்குமே என்ற கருத்துப்பட நன்றாய் வெளிப்படையாகவே எடுத்துச் சொல்லியிருக்கின்றார். போதாக்குறைக்கு அக்கம்பக்கத்து தேசத்தவர்களில் உண்மையான சமதர்மக் கொள்கை உடைய தேசத்தார்களும் “திரு. காந்தியவர்கள் ஏழைகளை வஞ்சித்துவிட்டார்; சமதர்மக் கொள்கைகளை ஒழிக்கவே இக்காரியங்கள் செய்கின்றார்: திரு காந்தி ஒழியவேண்டும்; காங்கிரஸ் அழியவேண்டும்” என்று ஆகாயம்முட்ட கூப்பாடு போட்டுக்கொண்டும். இருந்தது யாவருக்கும் தெரியும்.

ஆனால், நமது “தேசிய வீரர்கள்”, “தேச பக்தர்கள்” என்பவர்கள் இவை ஒன்றையும் கவனியாமல், பலாபலனையும் உணராமல் விளக்கைப் பிடித்துக்கொண்டு கிணற்றில் விழுவது போலவும், பந்தயங் கூறிக்கொண்டு பாறையில் முட்டிக் கொள்வது போலவும் தலை கிறுகிறுத்துக் கண்தெரியாமல் கூத்தாடினார்கள். அதன் பயனாய்ச் சிறை சென்று வீரர்களாய் “வாகை மாலை சூடி” திரும்பி வந்தார்கள். அதன் பெருமைகளையும் அடைந்து கொண்டார்கள். பிறகு, இப்போது பகத்சிங் தூக்கிலிடப் பட்டதைப் பார்த்துவிட்டு, “காந்தீயம் வீழ்க,” “காங்கிரஸ் அழிக,” “காந்தி ஒழிக” என்று கூப்பாடும் போடுகின்றார்கள். இதனால் என்ன பயன் ஏற்பட்டு விடும் என்பது நமக்கு விளங்கவில்லை.

பகத்சிங்கின் திருப்தி

நிற்க, நம்மைப் பொறுத்தவரை நாம் உண்மையைச் சொல்லவேண்டுமானால், பகத்சிங் அவர்கள் இந்த மாதிரி பொறுப்பும், கவலையும் அற்ற மூட மக்களும், மட மக்களும் பலாபலனை எதிர்பாராமல் எப்படியாவது தங்களுக்குக் கவுரவம் கிடைத்தால் போதுமென்கிற சுயநல மக்களும் உள்ள நாட்டில் உயிருடன் வெகுகாலம் இருந்து கொண்டு இவர்களது நடவடிக்கைகளைப் பார்த்துக் கொண்டு வினாடிதோறும் வேதனைப்பட்டு, இவர்களது முட்டுக்கட்டைகளை அனுபவித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கிலும் அவர் தன் உயிரைவிட்டு மறைய நேர்ந்தது அவருக்கு—‘பகத்சிங்’கிற்கு மெத்த ‘சாந்தி’ என்றும், நன்மையென்றுமே கருதுகின்றோம். அந்தப்பேற்றை நாம் அடையமுடியவில்லையே என்றுகூட கவலைப்படுகிறோம்.

ஒரு மனிதன் தன் கடமையைச் செய்தானா? இல்லையா? என்பதுதான் கேள்வியே தவிர, பலன் என்ன ஆச்சுது என்பது இங்கு நமது கேள்வி அல்ல. என்றாலும், அக்கடமைகளைக் “காலமறிந்து, இடமறிந்து செலுத்த வேண்டும்” என்பதை நாம் நாம் ஒப்புக்கொள்ளுகின்றோமெனினும், பகத்சிங் கொள்கைக்குக் காலமும், இடமும் நடப்பும் விரோதமில்லை என்றும், பொருத்தமாய் உள்ளதென்றும் சொல்லுவோம் ஆனால், அவர் தனது கொள்கையை நிறைவேற்றக் கைக்கொண்ட மூறைகளில் சிறிது தவறு நேர்ந்துவிட்டது என்பதாக நம் புத்திக்குத் தோன்றியபோதிலும், அவரது கொள்கை குற்றமுடையது என்று சொல்ல நாம் ஒருக்காலும் துணியவே மாட்டோம். அதுவேதான் உலகத்தின் சாந்த நிலைக்கொள்கையுமாகும்.

பகத்சிங் நடந்துகொண்டது சரிதான்!

உண்மையிலேயே பகத்சிங் அவர்கள் தனது கொள்கைகள் முழுவதையும் சரி என்று மனப்பூர்த்தியாய் நிச்சயித்துக்கொண்டு அதை நிறைவேற்ற அவர் நடந்து கொண்ட மாதிரிகள்தான் சரியான மார்க்கம் என்று அவர் முடிவும் செய்துகொண்டு இருந்து இருப்பாரேயானால், கண்டிப்பாக அவர் நடந்துகொண்டபடியேதான் நடந்து இருக்கவேண்டியதென்று நாம் சொல்லுவதோடு, அந்தப்படி அவர் நடக்காமல் இருந்திருந்தால் அவர் யோக்கியமான மனிதரென்று சொல்லமுடியாது என்றும் சொல்லுவோம். ஆதலால், நாம் அவரை ஒரு உண்மையான மனிதர் என்று சொல்லுவோம். இந்தியாவுக்கு பகத்சிங் கொள்கைதான் உண்மையாக வேண்டியது என்பது நமது பலமான அபிப்பிராயமாகும். ஏனெனில், நாமறிந்தவரை திரு. பகத்சிங்கிற்கு சமதர்மமும், பொது உடைமையும்தான் அவரது கொள்கையென்று கருதி இருக்கிறோம். இதற்கு உதாரணம் என்னவென்றால், திரு. பகத்சிங் பஞ்சாப் கவர்னருக்கு எழுதிய கடிதத்தில் கீழ்க்கண்ட வாக்கியம் காணப்படுகிறது. அதாவது. “பொது உடைமைக் கட்சி அதிகாரம் பெற்று, ஜனங்களுக்குள் வித்தியாசமான அந்தஸ்துகள் இல்லாமல் இருக்கும்வரை எங்கள் யுத்தம் நடந்துகொண்டுதானிருக்கும். எங்களைக் கொல்வதோடு இந்த யுத்தம் முடிந்துவிடாது; அது பகிரங்கமாகவும், ரகசியமாகவும் நடந்துதான் தீரும்” என்று குறிப்பிட்டிருக்கிறார். அன்றியும், அவர் கடவுள் விஷயத்திலும், “எல்லாம் கடவுள் செயல்” என்பதிலோ, நம்பிக்கை இல்லாத தன்னம்பிக்கையுடையவர் என்றும் கருதிக்கொண்டிருக்கிறோம். ஆகவே, அவரது இந்தக் கொள்கையானது எந்தச் சட்டத்தின்படியும் குற்றமாகக்கூடியது அல்லவென்றும், ஆவதாயிருந்தாலும்கூட யாரும் பயப்படவேண்டியதில்லை என்றும் சொல்லுவோம். ஏனென்றால், இதனால் பொதுமக்களுக்கு எவ்வித நஷ்டமோ, கஷ்டமோ ஏற்பட்டுவிடாது என்று உறுதிகொண்டிருக்கிறோம். அந்தப்படி ஒருசமயம் ஏதாவது ஏற்படுவதாயிருந்தாலும் நாம் நம் மனப்பூர்வமாய் யாதொரு தனி மனிதனிடமாவது, தனி வகுப்பினிடமாவது, தனி தேசத்தினிடமாவது துவேஷம் இல்லாமலும், எந்தத் தனி மனிதனுடைய திரேகத்திற்கும் துன்பமுண்டு பண்ணாமலும், நம்மை எவ்வளவு தூரம் வேண்டு மானாலும் கஷ்டப்படுத்திக் கொள்ளவும் சம்மதிக்கின்றதான தியாகத் தன்மையுடன் இருந்துகொண்டுதான் இக்கொள்கையை நிறைவேற்ற முயற்சிக்கின்றோம். ஆதலால்தான் நாம் எதற்கும் கவலைப்படவோ, பயப்படவோ வேண்டியதில்லை என்று சொல்லுகின்றோம்.

தீண்டாமையும், ஏழ்மையும் !

இன்னும் விளக்கமாகச் சொல்லவேண்டுமானால், சாதாரணமாக நாம் தீண்டாமை ஒழியவேண்டும் என்று சொல்லுவதில் என்ன தத்துவம் அடங்கி இருக்கின்றதோ அதுதான் மக்களின் ஏழ்மைத் தன்மையை ஒழிக்கவேண்டும் என்பதிலும் அடங்கி இருக்கின்றது.

தீண்டாமை ஒழிவதாயிருந்தால் எப்படி மேல் ஜாதி, கீழ்ஜாதி தத்துவம் அழிந்துதானாக வேண்டும் என்கின்றோமோ, அதுபோலவேதான் ஏழ்மைத் தன்மை ஒழிவதாயிருந்தால் முதலாளித்தன்மை, கூலிக்காரத் தன்மை ஒழிந்துதானாக வேண்டும் என்கின்றோம். ஆகவே, இந்தத் தீன்மைகள் மறைபடுவதுதான் சமதர்மத் தன்மை, பொது உடைமைத் தன்மை என்பவைகளே ஒழிய வேறில்லை. இந்தக் கொள்கைகள்தான் திரு. பகத்சிங் போன்றவர்களின் கொள்கைகள். ஆதலால், இக்கொள்கைகளை நியாயமானவையென்றும், அவசியமானவையென்றும் கருதுகின்ற ஒருவன், காங்கிரஸ் ஒழிக ! காந்தீயம் அழிக!! என்று சொல்லுவதில் நமக்கு ஆச்சரியமோ, குற்றமோ ஒன்றுமே தோன்றவில்லை. ஆனால், “நாங்களும் இதே கொள்கையைத்தான் கொண்டவர்கள்” என்று சொல்லிக் கொள்ளுபவர்கள், “காங்கிரசுக்கு ஜே.”, “காந்திக்கு ஜே” என்று சொல்லுவது தான் நமக்கு மிக மகி ஆச்சரியமாக இருக்கின்றது.

காந்தியாரும்—பார்ப்பனியாரும் ஒன்றே!

திரு. காந்தியவர்கள் என்றைய தினம் கடவுள் தான். தன்னை நடத்துகின்றார் என்றும், வர்ணாச்சிரமந்தான் உலக நடப்புக்கு மேலானதென்றும், எல்லாம் கடவுள் செயல் என்றும் சொன்னாரோ, அன்றே பார்ப்பனீயத்திற்கும், காந்தீயத்திற்கும் வித்தியாசமில்லை என்று கருதியதுடன், அத்தத்துவம்கொண்ட காங்கிரசு ஓழிந்தாலொழியா நாட்டுக்கு நன்மை இல்லையென்றும் கருதிவிட்டோம். ஆனால், அந்த உண்மையை இன்றாவது மக்களில் சிலராவது கண்டுபிடித்து, "காந்தீயம் அழிக" என்று சொல்லத்தக்க அறிவையும் துணிவையும் அடைந்திருக்கிறார்கள் என்கின்ற விஷயம். நமக்கு மிகுதியும் மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் கொடுக்கத்தக்கதாய் இருக்கிறது. அன்றியும், இது நமது கொள்கைகளுக்கு ஒரு பெரிய வெற்றியுமாகும்.

திரு. பகத்சிங் தூக்கிலிடப்பட்டு உயிர் துறந்திருக்காவிட்டால் இந்த வெற்றி இவ்வளவு பிரபலத்தில் ஏற்படுவதற்கு ஆதாரமே இருந்திருக்காது. மேலும். பகத்சிங்கைத் தூக்கிலிடாமல் இருந்திருந்தால் காந்தீயத்திற்கு இன்னமும் ஆக்கம் ஏற்பட்டு இருக்கும் என்றுகூடச் சொல்லுவோம். சும்மா தானாகவே நோய்கொண்டு அவஸ்தைப்பட்டு, செத்துச் சாம்பலாகி இருக்கவேண்டிய பகத்சிங்குக்கு இந்திய மக்களுக்கு–ஏன் உலக மக்களுக்கே உண்மையான சமத்துவமும், சாந்தியும் அளிக்கத்தக்கப் பாதையைக் காட்டுவதற்குப் பயன்படத்தக்கதாய் தனது உயிரைவிட நேர்ந்தது. சாதாரணத்தில் வேறு எவரும் அடையமுடியாத பெரும்பேறு என்றே சொல்லி, பகத்சிங்கை மனமார, வாயார, கையாரப் பாராட்டுகின்றோம்! பாராட்டுகின்றோம்!! பாராட்டுகின்றோம்!!! இதே சமயத்தில் நமது அரசாங்கத்தாரையும் இனியும் இப்படிப்பட்ட உணமையான எண்ணமுடையவர்களாகப் பார்த்து, மாகாணத்திற்கு 4 பேர் வீதமாவது தூக்கிலிட வேண்டுமென்றும் மனமார வேண்டுகின்றோம்.



 

"https://ta.wikisource.org/w/index.php?title=நான்_நாத்திகன்_–_ஏன்%3F/002-002&oldid=1476651" இலிருந்து மீள்விக்கப்பட்டது