உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அற்புதத் திருவந்தாதி.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

அரி, அரன் என்னும் மூவருருவில் நின்று ஒருங்கு இயற்றவல்ல இறைமைப் பண்புடையான் ஒருவனே யாதலின் பெருமானாகிய அவனை மூவர்க்கும் முதல்வனெனக் கூறுதலே தக்கது என உய்த்துணரவைத்த வாறார்.சிவபெருமான் முத்தொழில் கருதி அரன், அயன், அரி என்னும் மூவருருவாக விளங்குந் திறத்தினை. ‘பலமலி தொழிலது நினைவொடு பதும நன் மலரது மருவிய சிவன்’ எனவும், ‘உலகுகள் நிலைபெறுவகை நினைவொடுமிகும் அலைகடல் நடு வறிதுயிலமர் அரியுருவியல்பரன்’ எனவும் ‘முழுவதும் அழிவகை நினைவொடு முதலுருவியல் பரன்’ எனவும் வரும் ஆளுடைய பிள்ளையார் அருளுரைகளால் நன்குணர லாம். அரியபரன் - அரியாகிய அழகிய மேலோன். முற்கூறிய நான்முகனுக்கும் அரியபரன் எனப் பொருள் கூறுவாருமுளர்.

‘தனி விரலாற் செற்றானை’ எனவே படர்க்கை நிலையும், ‘யானவனை’ எனவே தன்மை நிலையும், ‘எம்மானை’ எனவே தமக்குப் பதியாய் முன்னின்று ஆண்ட தகவும் ஒருங்குணர்த்தப்பட்டன. யானவனை - எனது உயிர்க்குயிராய் யானாகி நின்றவனை. ‘நானாய பரனை’ என்பர் நம்பியாரூரர்.

இன்று நமக்கெளிதே மாலுக்கு நான் முகற்கும்
அன்றும் அளப்பரிய னானானை — என்றுமோர்
மூவா மதியானை மூவே ழூலகங்கள்
ஆவானைக் காணும் அறிவு. (19)

19. இ-ள்: (முன்னிலையில் வெளிப்பட்டுத் தோன்றிய) அந்நாளிலும் திருமாலும் நான்முகனுமாகிய அவ்விருவரும் ஒருங்கு கூடித் தேடியளத்தற்