17
கரியனாய் நின்றவனும், எக்காலத்தும் முதிராத இளம் பிறையையணிந்தவனும், மேல், கீழ், நடு என்னும் மூன்று நிலைகளிலும் எவ்வேழாக அடுக்கியமைந்த எல்லா வுலகங்களுமாய் நீக்கமறக் கலந்து விளங்குபவனும் ஆகிய இறைவனைக் கண்டு தெளியும் அறிவு. (அத்தேவர் இருவர்க்கும் அக்காலத்து அரிதாயினும், அவ னது திருவருளைப் பெற்ற) இன்று நம்மைப் போன்ற அடியார்களுக்கு மிகவும் எளிதாயிற்று. எ-று.
இன்று- அவனது திருவருள் கிடைக்கப்பெற்ற இன்று, இம்முத்திக்காலத்து என்பது பொருள்; ‘யானே யுலகென்பன் இன்று’ (சிவஞானபோதம் - உதாரண வெண்பா) என்புழிப்போல. அன்றும் என்புழி உம்மை அளத்தற்குரிய சந்தர்ப்பம் கிடைத்த அப்பொழுதும் எனக் காலத்தின் அருமையைச் சிறப்பித்து நிற்றலின் சிறப்பும்மை. காணும் அறிவு நமக்கு இன்று எளிதே என இயைத்துரைக்க.
அறிவானுந் தானே அறிவிப்பான் தானே அறிவா யறிகின்றான் தானே — அறிகின்ற மெய்ப்பொருளுந் தானே விரிசுடர்பார் ஆகாசம் அப்பொருளுந் தானே யவன். (20)
இ-ள்: அறியும் இயல்புடைய ஆன்மாவேயாய் ஒற்றித்து நிற்பவனும் அவனே. ( கண்ணும் அதற்கு விளக்கத்தரும் ஞாயிறும் போலப் பொருட்டன்மையால் வேறு நின்று) உயிர்கட்குப் பொருள்களின் இயல்பினை அறிவித்து நிற்பவனும் அவனே. (கண்ணினது ஒளியும் அதனோடு உடன் நின்று காணும் உயிரின் அறிவும் போல) உயிரின் அறிவினுள்ளே அத்துவிதமாகக் கலந்து உடனிருந்து