28
பிள்ளைப் பிறையாகிய ஒருகதிர் என்க. ஒருகதிர்- ஒருகலை. முதற்கண்ணான் - (எல்லாவுலகிற்கும் காரணமாய்) முன்னே உள்ளவன். ‘முளைத்தானை யெல்லார்க்கும் முன்னே தோன்றி’ என்பர் திருநாவுக்கரசர்.
நூலறிவு பேசி நுழைவிலா தார்திரிக நீல மணிமிடற்றான் நீர்மையே—மேலுலந்த தெக்கோலத் தெவ்வுருவா யெத்தவங்கள் செய்வார்க்கும் அக்கோலத் தவ்வுருவே யாம். (33)
இ-ள்: நுண்ணறிவு வாய்க்கப்பெறாதார் வெறும் நூற்புலமையினையே கருவியாகக்கொண்டு தமக்குத் தோன்றியவாறே பேசித்திரிவாராக. நீலமணிபோலும் நிறமும் ஒளியும் வாய்ந்த கண்டத்தினையுடைய சிவபெருமானது பெருமையே தனக்கு மேலாவதெதுவுமின்றி உயர்ந்ததாகும்.(அஃது எவ்வாறெனின்) யார் யார் எந்தக்கோலத்தில் எவ்வகைத் திருவுருவங்களை நினைந்து எத்தகைய தவச்செயல்களை மேற்கொண்டு வழிபடுவாராயினும் அவரவர் கருதிய திருவுருவில் வெளிப்பட்டருள்வோன் அவன் ஒருவனேயாதலின். எ-று.
நுழைவு-நுட்பம்; நுண்ணறிவு. நுழைவு இலா தார் நூலறிவு பேசித் திரிக எனவே, மெய்ப் பொருளை யுணர்ந்து மகிழ்தற்குச் சிறிதும் பயன்படாத அன்னோர் கூறும் வெற்றுரைகள் பொருளாக மதிக்கத்தக்கன அல்ல என அறிவுறுத்தவாறு. நீர்மை -புகழ்த் திற மாகிய பெருமை. மேல் உலந்தது - தனக்கு மேலாவது ஒன்றுளதாம் நிலைமை கெட்டது; உயர்வறவுயர்ந்தது என்பது பொருள். அன்பால் நினைந்து வழிபடும் அடி யார்களுக்கு அவரவர் நினைந்த திருமேனிகொண்டு