38
‘உன்ன உன்ன உவகை தருவான்’ ஆதலின் ‘மனக்கினிய சீராளன்’ என்றார். மனக்கு இனிய-மனத்துக்கு இனிய; அத்துச்சாரியை யின்றி வந்தது. இறைவன் மனக்கினிய சீராளன் ஆதலால் அருளாமைக்குரிய வன்கண்மையாகிய குற்றம் அவன்பால் இல்லையென்றும் அவனருளைப் பெறுவதற்கு ஏற்ற தகுதி முற்றும் என்பால் அமைந்திலது எனக் கருதுதலே ஏற்புடைய தென்றும் குறிப்பால் அறிவுறுத்துவார், ‘மனக்கினிய சீராளன்...பிரான் எனக்கே அருளாவாறு என்கொல்’ என்றார். அருளாவாறு— அருளாமைக்குரிய காரணம்.
“துஞ்சும்போதும் துற்றும்போதுஞ் சொல்லுவ னுன் திறமே
தஞ்சமில்லாத் தேவர்வந்துன் தாளிணைக் கீழ்ப் பணிய
நஞ்சையுண்டாய்க் கென்செய்கேனோ நாளும் நினைந்தடியேன்
வஞ்சமுண்டென் றஞ்சுகின்றேன் வலிவல மேயவனே”
என ஆளுடைய பிள்ளையாரும்,
‘உன்னா லொன்றுங் குறைவில்லை உடையா யடிமைக் காரென்பேன்’
என ஆளுடைய அடிகளும் அருளிய திருப்பாடல்கள் இங்குச் சிந்திக்கத்தக்கன.
பிரானவனை நோக்கும் பெருநெறியே பேணிப்
பிரானவன்றன் பேரருளே வேண்டிப் பிரானவனை
எங்குற்றா னென்பீர்கள் என்போல்வார சிந்தையினும்
இங்குற்றான் காண்பார்க் கெளிது.
(45)