70
அரக்கனாகிய இராவணனையும் முற்பட்டு நின்று அழுத்தி வருத்தின எ-று.
அரற்றி ஏத்த, மகிழ்ந்து ஏத்த என ஏத்த என்பதனை ஈரிடத்துங் கூட்டுக. ஏத்த முன்னின்று காலனையும் உதைத்து வென்ற கால், அரக்கனையும் அடர்த்த என முடிக்க. காலனையும் என்புழி உம்மை உயர்த்தற்கண் வந்த சிறப்பும்மை. காலனை யுதைத்ததோடன்றி அரக்கனையும் முன்னின்று அடர்த்த என்பது பொருளாகலின், அரக்கனையும் என்புழி உம்மை எச்சப்பொருள் பட வந்தது. அடர்த்த - அடர்த்தன ; அன்சாரியையின்றி வந்த அஃறிணைப் பன்மைமுற்று. இராவணனுக்கு அமைந்த தோள்கள் இருபது என்னுந்தொகையினவாயினும் எண்ணில்லாத தோள்களின் திண்மையும் ஆற்றலும் படைத்தன என்பார் எத்தனையோ திண்தோள் அரக்கனையும் என்றார். இறைவன் திருவடிகள் அன்பர்க்கு அணியனவாய் முன்வந்து அருள்புரியவும் அன்பரல்லாத தீயோரை ஒறுத்து அடக்கவும் வல்லன என அவற்றின் சிறப்புணர்த்தியவாறு.
காலனையும் வென்றோங் கடுநரகங் கைகழன்றோம்
மேலை யிருவினையும் வேரறுத்தோங்—கோல
வரணா ரவிந்தழிய வெந்தீயம் பெய்தான்
சரணார விந்தங்கள் சார்ந்து.
(81)
இ-ள்: வனப்புமிக்க முப்புரங்களில் வாழ்ந்த அவுணர்கள் இறந்தொழிய வெம்மைமிகுந்த அனலம்பினை எய்து எரித்தருளிய இறைவனுடைய தாமரை மலர்போலுந் திருவடிகளைச் சார்பாக அடைந்தமையால் அவனடியார்களாகிய நாங்கள் (யாவராலுந்