உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

144

அழைப்பு

“எனக்கு ஒரு கிளாஸ் ஓயின் மட்டும்போதும்” என்று ஸோரோ எண்ணினான். அந்தக் கணத்திலேயே, “நான் அலெஹைப் பார்க்கப் போவேன்” என்று அவன் மனம் தீர்மானித்தது.

“ஆடுகள் எங்கே தாத்தா?”

“கடவுளே, என் மண்டை வெடிக்கட்டும்” என்று ஸோரோ நினைத்தான். அவன் பார்வை இன்னும் சமவெளிமீதே நிலைத்திருந்தது.

“அதோ அலெஹ் என் கண் முன்னே இருக்கிறாள். ஆனாலும் நீண்ட காலம் நான் அவளைப் பார்க்கவேயில்லை. அவளைப் பார்க்க நான் ஒரு முறை போவேன்.”

“ஆடுகள் எங்குமே இல்லை, தாத்தா”

“எங்குமில்லையா!” ஸோரோ தன் கோலில் சாய்ந்தவாறே எழுந்து நின்றான்.

“ஆடுகள் அங்கே இருக்கின்றன” என்று தெளிவில்லாமல் எங்கோ கம்பால் சுட்டினான். “போங்கள். அவற்றை ஒன்று திரட்டி இங்கே கொண்டுவாருங்கள். அப்புறம் உட்கார்ந்து சாப்பிடுங்கள். நான் கிராமத்தை எட்டிப் பார்த்துவிட்டுத் திரும்பிவருவேன்” என்று கூறினான்.

ஸோரோ வீடு நோக்கி நடக்கையில், அலெஹைப் பார்க்கப் போகாமல் இருந்ததற்காக வழி நெடுகத் தன்னையே குறைகூறிக் கொண்டான். ஏன் போகவில்லை என்று அவனுக்கே வியப்பாக இருந்தது. நேரம் இருந்ததில்லையா? அவன் கண்களும் கால்களும் செயல் இழந்தனவா? போக அவனுக்கு வசதி இல்லையா? பின்னே அவன் ஏன் போகவில்லை? ஏன் இத்தனை காலமும் அந்தப் பயணத்தைத் தள்ளிப்போட்டிருந்தான்? எந்தவிதமான காரணமும் இல்லாமலே அவன் மனைவிதான் அவன் மனசில் குற்றவாளியாகத் தோன்றினாள். அவன் வீட்டுக்குள் அடிவைக்கும்போதே கடும்கோபம் கொண்டிருந்தான்.

“உன் கையால் செய்த ரொட்டி மோசமானது!”

வீட்டுக்குள் புகுந்ததுமே மனைவியுடன் சண்டை பிடிக்கத் தொடங்கினான் ஸோரோ. “அது மோசமாக இருக்கிறது.” என்று திரும்பச் சொன்னான். “நீ உன் வலது கையால் எனக்கு ரொட்டி தந்தாய். உன் இடது கையினால் என் ஆத்மாவைப் பறித்துக்கொண்டாய். நீ என்னை வேதனைப்படுத்தினாய். இந்தக் கம்பை நான் உன் தலைமேல் அடித்து முறிக்கவேண்டும்.”