பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/366

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆங்கிலம்

320

ஆங்கிலம்

(1608-74), சர் தாமஸ் பிரவுன் (1605-52) ஆகியவர்களுடைய உரைநடையில் ஏட்டின் மணந்தான் வீசுகின்றது. உலக இயற்கை மணத்தைக் காணோம். பாட்டன், பிரவுன் இவர்களுடைய உரைநடையில் லாம் திளைத்தார். அதன் சாயலை அவர் நூலில் நாம் பார்க்கின்றோம்.

இப்படி ஒலியழகே முக்கியமாக இருந்த காலத்திலும் பன்யன் (1628-88), ஐசக் வால்ட்டன் (Izaak Walton 1593-1683), டிரைடன் (1631- 1700) ஆகிய இவர்களின் நூல்களில் எளிமை, இன்பம், இயற்கையின் போக்கு ஆகியவற்றைப் பார்க்கின்றோம்.

18ஆம் நூற்றாண்டு உரைநடைக்கே தோன்றியது என்று சொல்லிவிடலாம். டானியல் டீபோ (1659- 1731) கையாளுகிற உரைநடையில் ஓர் எளிமை, தெளிவு, வேகம் உண்டு. நாகரிகமும் பழுத்த மனப் பண்பும் அடிசனுடைய (1672-1719) நகைச்சுவை இலக்கியத்தில் மிளிர்ந்தன. ஸ்டீலின் (1672-1720) நடையில் உணர்ச்சி மிகுதி.

ஸ்விப்ட் (1667-1745) என்பவரைப் போல யாரும் உரைநடையைக் கையாளுவது அரிது. ஒருவித அணியும் இல்லாமல் இவர் உரைநடை விளங்குகின்றது; நீறுபூத்த நெருப்புப்போல் வெளியிலே தோன்றும். ஆனால், அதன் அடியில் அனல்போலக் கணகணவெனச் சுடர் விட்டெரியும். ஜான்சன் (1709-1784) சிறிய பொருள்களைக் கூறுமிடத்தும் நீண்ட சொற்றொடர்களை வழங்குவார். கோல்டுஸ்மித்தின் (1730-74) உரைநடையில் சோகம் ததும்பும். துக்கந்தோய்ந்த அவர் நகைச்சுவை மனத்தைக் கவரும். பர்க்கிடம் (1729-97) சொற்கள் நயாகரா நீர்வீழ்ச்சியைப்போல உருண்டு ஓடிவரும். கூப்பரின் (1731-1800) உரைநடை தெளிந்த அருவியேபோல இசைந்தோடும். கிப்பனிடம் (1737-94) காம்பீரியம் உண்டு. ஒரே சுருதியில் அவர் உரைநடை செல்லுவதால் அது தெவிட்டாத இன்பந்தராது.

மெக்காலேயின் (1800-59) உரைநடை நோக்கத் தகுந்தது. ஆழ்ந்த கருத்துக்களை அவரிடம் எதிர் பார்க்க முடியாது. விரைவாய் ஓடுகிறவர்க்கும் அவர் உரைநடை விளங்கும். லாண்டர் (1775-1864) உரைநடையில் ஒரு சிலரே திளைக்க முடியும். உயர்ந்த பொருளுக்கேற்ற சொல்லும் உயர்ந்த நடையிற் செல்லுகின்றது. மலைச் சிகரத்தில் உலாவும் உணர்ச்சி வரும். கோல்ரிட்ஜின் (1772- 1834) உரைநடை தருக்க முறையில் செல்லுகிறது. பொருள்தான் அவர் நோக்கம்; அலங்காரமான நடை அவருடைய கருத்தன்று. சதேயிடம் (Southey 1774-1843) எளிமையும் தெளிவுமுண்டு. ஹாஸ்லிட்டின் (1778-1830) உரைநடை போற்றத் தகுந்தது. உற்சாகம், ஒளி, ஒரு தனித்த பாணி, இசைநயம் ஆகிய யாவும் அதில் தோன்றுகின்றன.

லாம் (1775-1834) எழுதிய உரைநடை ஒரு தனிச் சிறப்பு வாய்ந்தது. சோகமும், சிரிப்பும் கலந்து ஓடுகின்றன. டி. குவின்சி (1758-1859) யினுடைய நூல்கள், உரைநடையிலும் கவிதைநயம் தோன்றக்கூடும் என்பதற்குத் தக்க சான்றுகளாகும்.

கார்லைல் (1795-1881) கவிதைநயம் மிளிரும் சொற்றொடர்களைப் படைப்பதில் ஆற்றலுள்ளவர். சொல்லோவியங்கள் தீட்டுவதில் சமர்த்தர். ஆந்தனி புரூடு (Anthony Froude 1818-1896) நடையில் ஒரு விருவிருப்புண்டு. பல சுருதிகளில் அது பேசும் ; சொற்சித்திரங்களை எழுப்பும். நியூமன் (1801-1890) உரை நடையை வியக்காதவரில்லை. அதில் தெளிவுண்டு நுணுக்கமுண்டு, வேகமுண்டு; எப்பொருளுக்கும் வளைந்து கொடுக்கும் ஆற்றலுண்டு.

19ஆம் நூற்றாண்டிலிருந்த நாவலாசிரியர்களின் உரைநடையும் நோக்கத் தகுந்தது. ஸ்காட் (1771-1832) தமது உரைநடையைப் பற்றிக் கவலைகொள்ளவில்லை. ஜேன் ஆஸ்டின் (1775-1817) எழுதிய நூல்களில் தெளிவும், மனப்பண்பாடும், ஒழுங்கும், நகைச் சுவையும் தோன்றுகின்றன. தாக்கரேயின் (1811-63) நடை ஒரு படித்த கனவானின் பேச்சை ஒக்கும்; பண்பாடுள்ளது ; தெளிவுள்ளது. இவர் கிண்டலாகப் பேசும் ஆற்றலுள்ளவர். டிக்கென்ஸின் (1812-70) உள்ளம் தங்கமான உள்ளம். அவருக்குப் படிப்பு அதிகமில்லை. மிகுதியான வருணனை, மிகுதியான நகைச்சுவை இவைகள் மிகுதி. மெரிடித்தின் (1828-1909) உரை நடை சற்றுக் கடினம். பிரௌனிங் எழுதிய கவிதை எப்படியோ அப்படியே இவர் உரைநடை என்று சொன்னால் மிகையாகாது. நாவலாசிரியர்களிடையே நடைக்காகப் போற்றத் தகுந்தவர் ஹார்டி (1840-98) என்பவரே. தெளிவும் இனிமையும் கவிதை நயமும் இவரிடத்தில் பார்க்கின்றோம். வாழ்க்கைப் போராட்டத்தையும் மனிதனின் ஆதரவு அற்ற நிலையையும் செஞ்சொற்கள் கொண்டு சோகம் ததும்பச் சித்திரிப்பார்.

ஸ்டீவன்சன் (1850-94) உரைநடைக்கே பிறந்தவர்; கலைப்பண்புள்ளவர்; பொருளிலும் சொல்லிலும் மாசுமறுவற்ற இயல்புள்ளவர். ரஸ்கின். (1819-1900) வனப்பிலே திளைக்கின்றவர். வாழ்க்கையையும் கலைக் கண்ணோடு பார்க்கவேண்டும் என்று அரும்பாடுபட்டார். இவருடைய உரைநடையில் அழகும் கவிதைநயமும் குழைந்து பெருகுகின்றன.

மாத்தியு ஆர்னல்டின் (1822-88) உரைநடையில் தெளிவும், அறிவின் முதிர்ச்சியும், பழுத்த சொல்லாட்சியும் நாகரிக முறையில் அமைந்து கிடக்கின்றன. கிண்டல் பேச்சும் இடையிடையே தோன்றும். கூறியது கூறல் குற்றமாயின் அக்குற்றத்தை இவரிடம் பார்க்கலாம். தம்முடைய கருத்துக்களைப் பரப்புவதற்கு இவர் கையாண்ட முறை இதுவாகும். மேலும் எதிரிகளைக் கேலி செய்வதற்காகவும் திரும்பத் திரும்பக் கூறுவார். பேட்டர் (Pater 1838-94) பொருளுக்கேற்ற சொல்லைத் தேடிப் பயன்படுத்தும் பிரெஞ்சு ஆசிரியர் பிளாபெர் (Flaubert) அடிச்சுவட்டைப் பின்பற்றுகிறவர். இவர் நடை செதுக்கிய சிற்பத்தின் அழகையுடையது.

ஆஸ்கார் வைல்டு ஒரு சொல்லின் செல்வர். முரணாகப் பேசும் ஆற்றலுடையவர். பேட்டரைப் பின்பற்றுகிறார். செஸ்ட்டர்ட்டன் முரண் அணியை மிகுதியாய்க் கையாள்கின்றார். லூகஸ், லிண்ட் என்னும் இவர்கள் லாம்பை நினைவூட்டுகின்றனர். ஷாவிடம் ஸ்விப்டின் அமிசத்தை ஓரளவில் காண்கின்றோம். கான்ராடிடம் கடற்சித்திரக் கவிதை நயம் உடையது. மாக்ஸ் பீர்பாம் உரைநடைச் செல்வர். லிட்டன் ஸ்டிரேச்சியின் உரைநடையும் போற்றத்தகுந்தது. வர்ஜீனியா உல்ப் கவிதைச் சித்திரங்களைத் தருகின்றார். சார்லஸ் மார்கனிடம் பேட்டரின் உரைநடையைப் பார்க்கின்றோம். ரஸ்ஸல் நடை தெளிந்த நீரோட்டத்தை ஒத்தது. ஆங்கில உரைநடை பல்லாயிரக்கணக்கான நரம்புகளையுடைய யாழாகக் காட்சி அளிக்கின்றது. எக்கருமத்தையும், எவ்வுணர்ச்சியையும் வெளியிடும் ஆற்றலுடையது. பார்க்க: நாவல், சிறுகதை, நாடகம், கட்டுரை, கதைப்பாட்டு, காப்பியம், வசையிலக்கியம் ரா. ஸ்ரீ. தே.