பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

194

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



திருந்து செங்கோல் வளையாமை
அறிந்தேன் வாழி காவேரி!

என்று பாடினாள். இப்பாடலில் மாதவி, காவிரியின் கற்புக்குச் சோழனின் செங்கோலே காரணம் என்று பாடுகிறாள். இதில் யாதொரு தவறுமில்லை. இங்ஙனம் கூறுவதன் மூலம் மனைவியின் கற்புக்குக் கணவன் காவலனாக அமைய வேண்டும் என்பது பெறப்படுகிறது. இஃதொரு சிறந்த கருத்து. இந்த அளவோடு நின்றிருந்தால் மாதவியிடம் தவறு காண முடியாது.

ஆனால் உணர்ச்சி வேகம் எல்லை கடந்து போகிறது. கோவலன் நங்கை ஒருத்தியின் காதலில் சிக்கித் தவித்தேன் என்று பாடியதைப் போலவே மாதவியும் தான் ஒரு நெய்தல் தலைவனின் காதல் வழிப்பட்டதாகப் பாடுகிறாள்.

“அடையல் குருகே அடையல் எங்கானல்
அடையல் குருகே அடையல் எங்கானல்
உடைதிரைநீர் சேர்ப்பதற்கு உறுநோய் உரையாய்
அடையல் குருகே அடையல் எங்கானல்”

என்று பாடுகிறாள்.

மாதவி இந்த உத்தியைக் கையாண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. கோவலன் போக்கில், தான் கண்ட குற்றத்தைக் கடிந்து சொல்லியிருந்தாலும் ஏற்றிருப்பான்; மனம் மாறுபடான். கோவலனின் நடைமுறையில் மாதவிக்கு இருந்த ஐயமும் அச்சமும் நீங்கினபாடில்லை. அதனால் கடிந்து கூறவும் தயக்கம்.

ஆனால் தனது உணர்வை வெளிப்படுத்த தேர்ந்தெடுத்த செயல்முறை எளிதில் ஏற்றுக்கொள்ள முடியாததாகி விடுகிறது. தலைவன் தலைவியிடையே ஒத்த உரிமைகள் உண்டானாலும் தலைமகன் சோரம்போதல் போல தலை