பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

166

செயலும் செயல் திறனும்



கண்டு கொள்ளாதபொழுது, நம் உள்ளம் சோர்வடைந்திருப்பது நமக்கு மட்டுமே தெரிய வரும் ஒரு செய்தியாகும். எனவே, இதனைப் பிறர்க்கு அல்லது ரெளிக்குத் தெரியாதவாறு நாம் மறைத்துக் கொள்ள முடியும். உலகில் பெரும்பாலார், இப்படித்தான், தங்களுக்குற்ற மனத்துயரங்களையும் சோர்வுகளையும் பிறர் அறியாதவாறு மறைத்துக் கொள்கின்றனர். அவ்வாறு மறைத்துக் கொள்வதுடன், பிறர்க்குத் தாங்கள் மகிழ்ச்சியாக உள்ளவர்கள் போலவும், தென்பை அல்லது ஊக்கத்தை இழக்காதவர்கள் போலவும், வெளிக்குக் காட்டிக் கொள்கின்றனர். இவ்வாறு இருப்பதைத் தவறு என்று சொல்ல முடியாது. ஒருவாறு இப்படிச் செய்வது அவர்களுக்கு இரு வகையிலும் நன்மையாகவே இருக்கும். இன்னொரு படியில், இவருக்கு அண்மையிலிருப்பவர்க்கு தொல்லையாக, அஃதாவது அவரின் தாக்கம் பிறர்க்கும் துன்பம் தராததாக இருக்கும்.

3. உள்ளச் சோர்வை மூடி மறைப்பதால் உண்டாகும் நன்மைகள்

இனி, தங்கள் உள்ளச் சோர்வை மூடி மறைத்துக் கொள்பவர்களுக்கு விளைவதாகக் கூறும் இருவகை நன்மைகள் எவை? ஒன்று, தங்கள் உள்ளச் சோர்வையோ, துன்பத்தையோ பிறர் அறியமாட்டார்கள். அதனால் இவரை விரும்பாதவர்கள் இவரைக் குறைத்து மதிப்பிடவோ, இவர்மேல் பொறாமை கொண்டவர்கள், இவர் துன்புறுவதைப் பார்த்து மகிழ்ச்சியடையவோ முடியாது. அல்லது இவரைப் பகைப்பவர்கள் இவர் வீழ்ச்சியடைவதை எதிர்பார்க்கவும் இயலாது. இவ்வகையில் இவர்க்கு அந்நிலை நன்மையாகவே இருக்கும்.

இரண்டு, இவர் மெலிவை யுணர்ந்தால், இவருக்கு உண்மையாக உதவக் கூடியவர்கள் கூட, ஒரு வேலை உதவாமல் போனாலும் போகலாம். அந்நிலை, இவர் அத்துன்பத்திலிருந்து தம்மை உய்வித்துக் கொள்ளவும் அடுத்து மேலும் தம்மை நிலைப்படுத்திக் கொள்ளவும், முன்னேற்றிக் கொள்ளவும் இயலாமல் செய்துவிடும். இது அவருக்கு செயல்நிலை முடக்கத்தை உண்டாக்கிவிடலாம்.

அதுவுமின்றி, நாம் நம் மனச்சோர்வுகளையும் மனத் துயரங்களையும் பிறரிடம் கூறி அவர்களுக்கு ஏன் வருத்தத்தை உண்டாக்க வேண்டும்? இது பெரும்பாலானவர்களின் மனநிலைக்கு ஏற்றதன்று. நம்மேல் உண்மையான அன்பும் நட்பும் கொண்டவர்கள்தாம் நம் துன்பங்களையும் துயரங்களையும் மிகவும் அன்புடனும் அக்கறையுடனும் கேட்டு, இரக்கமும் ஆறுதலுரையும் கூறுவார்கள். ஆனால் மற்ற பிறர் தங்களுக்குள் மகிழவே செய்வார்கள். இப்படித் தான் பெரும்பாலாரின் மனநிலை இருக்கும். இது மாந்த மனவியலைச் (Sodal Psychology) சார்ந்த உண்மையாகும். மேலும், நம்மைச் சூழ்ந்திருப்பவர்களின் மனநிலையை, இந்த வகையில் எடையிடுவதும்