பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

181


செய்யப்பெற்றாலும் வலிவற்றதாகவே இருக்கும். எனவே, கலக்கமுற்று, மனம் துன்பத்திற்குள்ளாகமல் காப்பது அறிவின் பாற்பட்டது. அறிவால், மனம் கலக்கமுறாமல் காத்தல் வேண்டும்.

கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
தூக்கம் கடிந்து செயல். (668)

ஒரு செயலின்கண் ஏற்படும் துன்பத்தால் மனம் கலக்கமுறு மாயின்' செயலிலும் ஈடுபாடு கொள்ளாமை நேரும். எனவே, செயல் தாழ்த்தமும், முடக்கமும், தேக்கமும் வினை நீட்டிப்பும் ஏற்படும். அக்கால இடைவெளியால் செயல் நாளுக்கு நாள் மிகவும் தொப்வுறலாம். எனவேதான் திருவள்ளுவப் பேராசான், கலங்காமல், வினைசெய்ய வேண்டும் என்று மட்டும் சொல்லாமல், அதனால் நேரும் தேக்கத்தையும், கால நீட்டிப்பையும் செய்ய வேண்டாம் என்று வேறு எச்சரிக்கிறார். துளங்குதல் என்பது மன அசைவைக் குறித்தல் போலவே, மன அச்சத்தையும் குறித்து, மேற்கொண்டு இயங்காத நிலைப்பாட்டையும் குறிக்கும். துன்பத்தால் தாக்கமுற்ற மனம் முதற்கண் வருந்தும். பின் அந்த வருத்தத்தை ஏற்படுத்திய வினைக்கண் மேலும் செல்ல அச்சப்படும் அவ்வச்சத்தால் சோர்வுற்றுக் காலத்தை நீட்டிக்கும். அக்கால் செயல், மேலும் வலிவிழக்கும். எனவே, துளங்காது, தூக்கம் கடிந்து அஃதாவது சோர்வால் செயலிழந்து நிற்காது, மேன்மேலும் அச்செயலில் ஈடுபட வேண்டும் என்று வலியுறுத்தினார் என்க. திருவள்ளுவப் பேராசான் மிகச் சிறந்த மனவியலாசிரியர்; ஆகையால், செயலின்கண் நேரும்.அசைவுகளிலெல்லாம் மனம் எவ்வெந்தத் தாக்கவுணர்வுகளுக்குட்படும் என்றும் அவற்றை எவ்வாறு தவிர்த்தல் வேண்டும் என்றும் உணர்த்தினார் என்க.

3. துன்பம் இல்லாத செயல் உலகில் இல்லை

ஒரு செயலின் கண், அச்செயலால் வரும் துன்பம் இருக்கவே செய்யும். துன்பமில்லாத செயல் உலகத்தில் ஒன்றும் இல்லை. தாம் எடுத்துக் கொண்ட செயலுக்கேற்றபடி துன்பமும் குறைத்தோ, மிகுத்தோ வரும். செயல் எளிதாயின் அதனால் வரும் துன்பமும் எளிதாகவே இருக்கும்; செயல் வலியதாயின் அதனால் வரும் துன்பமும் வலிதாகவே இருக்கும். வலிய செயலுக்கு எளிதான துன்பம் வராது; வலிய துன்பம் வரும்.

எனவே, செயலை வலிதாக எடுத்துக் கொண்டவர்கள் வலிதான துன்பத்தையே எதிர்கொள்ளும் அளவுக்கு மனத்தையும் உறுதியாக வைத்துக் கொள்ளவேண்டும். எந்தச் செயலையும் எவரும் எளிதாகக் கருதிவிடுதல் வேண்டா. சிறிய கல்லைப் பெயர்த்தெறிவதற்குச் சிறிய வலிவே போதும். பெரிய கல்லைப் பெயர்ப்பதாயின் பெரிய வலிவே