பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

7


சொற்களஞ்சியம்
சுரதா!

நம் தமிழகத்தில் தோன்றிய கவிஞர்கள் பலராவர். செய்யுள்கள் மட்டும் யாத்தவர் சிலர் உரைநடையும் எழுதியோர் பலர்.

உரைநடையில் நாடகம், கட்டுரை, கதைகள் எழுதியோர் சிலர்.

பக்தி, சீர்திருத்தம், நாட்டு நலன் எனப் பல்வேறு துறைகளில் ஈடுபட்டோரும் உண்டு.

வரலாறு, ஆய்வு எனும் ஆர்வமுடையோரும் உண்டு.

பாரதியார், பாரதிதாசன், சுத்தானந்த பாரதியார், கவிமணி, கம்பதாசன், வாணிதாசன், முடியரசன், தமிழ்ஒளி, கண்ணதாசன் போன்றோர் பல துறைகளில் கால் பதித்ததை இலக்கிய வரலாறு காட்டுகிறது.

இவ்வரிசையில் சுரதா அவர்கள் சற்று மாறுபட்டவராகத் தோற்றமளிக்கிறார்.

இவர் வரலாற்றுணர்வு மிக்கவர். பழமைச் சிறப்புகளைப் படியெடுத்துப் பாராட்டுகிறார்; பரப்புகிறார். பழைய செய்திகளை, பழைய நிகழ்ச்சிகளை ஆர்வமுடன் தேடித் திரட்டுவது இவரது தனித்தன்மை.

தேடித் தேடிக் கண்டவற்றைத்தக்கவாறு வெளிப்படுத்துவதில் இவர் ஊக்கம் மிக்கவர்.

சுரதா செய்திக் களஞ்சியமாய்த் திகழ்கிறார். கவிஞர்களில் இவர் ஒரு தனிப் பிறவி, அமைதியானவர்; அடக்கமானவர் துணிச்சல்காரர்; இடக்காகவும் மடக்குவார்; இயல்பாயும் மடக்குவார். எளிமையாய்ப் பழகுவார்; இனிமையாய் உரையாடுவார்.