118
திருக்குறள்
10.நல்லினத்தின் ஊங்கும் துணைஇல்லை தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉம் இல்.
ஒருவனுக்கு நல்ல இனத்தை விடச் சிறந்ததாகிய துணையும் (இவ்வுலகத்தில்) இல்லை. தீய இனத்தை விட மிகுந்த துன்பத்தைத் தரும் பகையும் இல்லை.
ஊங்கு-சிறந்தது, மிகுந்தது; அல்லல்-துன்பம்; படுப்பதூஉம்-துன்பத்தை உண்டாக்குவதும், துணை என்பதற்கேற்பப் பகை என்பது வருவித்துக் கொள்ளப்பட்டது. 460
47. தெரிந்து செயல் வகை
1.அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல்.
ஒரு செயலைச் செய்யத் தொடங்கு முன் ஆதனால் அழியக் கூடியதையும், பிறகு அதன் வழியாக உண்டாகக் கூடிய ஊதியத்தையும் ஆராய்ந்து பார்த்துச் செய்தல் வேண்டும்.
தெரிந்து செயல் வகை-ஆராய்ந்து செய்யும் வகை; வழி பயத்தல்- அதன் வழியாக உண்டாதல்; ஊதியம்-நன்மை, இலாபம்; சூழ்ந்து-ஆராய்ந்து பார்த்து.
வரவு, செலவு, இலாபம் ஆகிய இம்மூன்றையும் எண்ணிப் பார்த்து ஒரு செயலைச் செய்தல் வேண்டும். 461
2.தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதொன்றும் இல்.
தகுந்தவர்கள் என்று தெரிந்து கொள்ளப்பட்ட நண்பர்களோடு, கலந்து ஆராய்ந்து, தம் அறிவைக் கொண்டும் எண்ணிப் பார்த்து, ஒரு காரியத்தைச் செய்ய வல்லவர்களுக்கு அருமையான செயல் எதுவும் இல்லை.
தெரிந்த இனம்-தக்கவர்கள் என்று ஆராய்ந்து தெரிந்து கொள்ளப் பட்ட நண்பர்கள்; தேர்ந்து எண்ணி-பிறரோடு ஆராய்ந்து பார்த்துத் தாமும் தமக்குள் எண்ணிப் பார்த்து. 462
3.ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை
ஊக்கார் அறிவுடை யார்.