பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

154

திருக்குறள்



6.துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்து
என்செயினும் சோர்விலது ஒற்று.

துறவிகளின் கோலம் தாங்கி, உட்செல்லுவதற்கு அரிய இடங்களில் எல்லாம் சென்று ஆராய்ந்து, பகைவர் தன் மீது சந்தேகம் கொண்டு எவ்வளவு துன்புறுத்தினாலும் சோர்வடைந்து தன்னை வெளிப்படுத்தாதவனே ஒற்றன் ஆவான்.

துறந்தார்-துறவிகள்; படிவம்-வேடம், கோலம்; இறந்து ஆராய்தல்-உட்செல்லுதற்கு அரிய இடங்களில் எல்லாம் சென்று ஆராய்தல். 586

7.மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவை
ஐயப்பாடு இல்லதே ஒற்று.

மறைவாகப் பிறர் புரிந்த செயல்களையும் பிறர்பால் கேட்டு அறிய வல்லவனாய், அவ்விதம் அறிந்த செய்திகளைச் சந்தேகம் இல்லாமல் ஆராய்ந்து தெளிந்து துணிய வல்லவனே ஒற்றன ஆவான்.

மறைந்தவை-மறைவாகச் செய்யும் செயல்கள்; கேட்க வற்றாகி- கேட்டறிய வல்லவனாகி. 587

8.ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்
ஒற்றினால் ஒற்றிக் கொளல்.

ஒர் ஒற்றன் மறைவாக இருந்து கேட்டு அறிந்து வந்த செய்தியை, மற்றுமோர் ஒற்றனாலும் அறிந்து ஒப்புமை கண்ட பின்பு உண்மை என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

ஒற்று ஒற்றித் தந்த பொருள்-ஒற்றன் மறைவாக இருந்து கேட்டு அறிந்து வந்த செய்தி; ஒற்றிக் கொளல்-கேட்டறிந்து ஒத்துப் பார்த்து உண்மை அறிக. 588

9.ஒற்றொற்று உணராமை ஆள்க உடன்மூவர்
சொல்தொக்க தேறப் படும்.

ஒர் ஒற்றனை மற்றோர் ஒற்றன் அறியாதபடி அனுப்பி ஆளுதல் வேண்டும். அங்ஙனம் ஒன்றைப் பற்றி ஆயத் தனித்தனியே மூன்று ஒற்றர்களை அனுப்பி, அம்மூவரும் அறிந்து வந்த செய்திகள் ஒத்திருந்தால், அச்செய்தி உண்மையானது என்று தெளிதல் வேண்டும். 589