பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

164

திருக்குறள்



4.மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற
இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து.

வண்டியை இழுத்துச் செல்லும் எருது வழியில் தடை நேர்ந்த போதும், அந்தத் தடையினைக் கண்டு உள்ளம் ஒடியாமல் மேலும் முயன்று தடை நேர்ந்த இடங்களில் எல்லாம் வெற்றியைக் காண்பது போல், துன்பம் நேர்ந்த போதெல்லாம் அதைப் பொருட்படுத்தாது, தன் தொழிலை மேற்கொள்ளும் ஒருவனிடம் அந்தத் துன்பமே துன்பப்படும் நிலையை அடையும்.

மடுத்த வாய் எல்லாம்-இடையூறு நேர்ந்த இடத்தில் எல்லாம்; பகடு-எருது; இடர்ப்பாடு-துன்பம். 624

5.அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற
இடுக்கண் இடுக்கட் படும்.

துன்பங்கள் பலவாக அடுக்கி ஒன்றன் மேல் ஒன்றாக வந்த போதும், உள்ளத் தளர்ச்சி இல்லாதவனிடம் வந்த துன்பங்களே துன்பங்களை அடையும்.

அடுக்கி வருதல்-ஒன்றன் மேல் ஒன்றாகத் தொடர்ந்து வருதல்; அழிவு இலான்-தளராதவன். 625

6.அற்றேமென்று அல்லற் படுபவோ பெற்றேமென்று
ஓம்புதல் தேற்றா தவர்.

செல்வம் வந்த போது, 'இது பெற்றோமே!’ என்று மகிழ்ந்து (அதை எவர்க்கும் உதவாமல் பூதம் போல்) பாதுகாத்திருத்தலை அறியாதவர், அது தம்மை விட்டுப் போகும் போதும், 'நாம் இழந்து விட்டோமே' என்று துன்பப்படுவாரா? (சிறிதும் துன்பப்பட மாட்டார்? எள்ளி நகையாடுவார்.) 626

7.இலக்கம் உடம்பிடும்பைக்கு என்று கலக்கத்தை
கையாறாக் கொள்ளாதாம் மேல்.

உடம்பு துன்பத்துக்கு இடமாக இருப்பது என்று தெளிந்து, மேலோர் தமக்குத் துன்பம் வந்த போது, மனக் கலக்கத்தை ஒழுக்க நெறியாகக் கொள்ள மாட்டார்.