பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குடிமை

259



4.அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர்.

பல கோடி அளவில் அடுக்கிய பொருளைப் பெற்றாலும், நல்ல குடும்பத்தில் பிறந்தவர்கள் தங்கள் குடியின் சிறப்புக் குன்றுவதற்குக் காரணமான தீய செயல்களைச் செய்ய மாட்டார்கள்.

குன்றுவ-பிறரால் இகழப்படுவதற்குக் காரணமான தீய செயல்கள் 954

5.வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
பண்பின் தலைப்பிரிதல் இன்று.

தாம் முன்பு பிறருக்குக் கொடுத்துதவியதை விட வறுமையின் காரணமாகக் குறைவாகக் கொடுத்துதவக் கூடிய நிலை நேர்ந்த போதும், பழம் பெருமையுடைய குடும்பத்தில் பிறந்தவர்கள் தம் இயல்பிலிருந்து நீங்குவது இல்லை.

உள் வீழ்தல்-சுருங்க நேர்தல், குறைவாகக் கொடுக்க நேர்தல்; பழங்குடி பல தலைமுறையாக நல்ல குடும்பம் என்று பேரெடுத்து வந்த குடும்பம்; பண்பு-கொடுத்துதவும் குணம்; தலைப்பிரிதல்-நீங்குதல். 955

6.சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற
குலம்பற்றி வாழ்தும்என் பார்.

‘குற்றமற்ற நற்குடிப் பண்புடன் வாழ்வோம்' என்று எண்ணி வாழ்பவர், கோபம் காரணமாக அல்லது வஞ்சிக்கும் எண்ணம் கொண்டு தமக்குத் தகுதியில்லாத இழிசெயல்களைச் செய்ய மாட்டார்.

சலம்-வஞ்சனை அல்லது கோபம்; சால்பு-தகுதி, நல்ல பண்பு; ; மாசு அற்ற குலம்-குற்றம் அற்ற குடி. 956

7.குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்
மதிக்கண் மறுப்போல் உயர்ந்து.

உயர்ந்த குடும்பத்தாரிடம் உண்டாகும் குற்றம் வானத்தில் உள்ள சந்திரனிடம் காணப்படும் களங்கம் போலப் பலரும் அறியும்படி உயர்ந்து தோன்றும்.

விசும்பு-வானம்; மதி-சந்திரன்; மறு-களங்கம். 957