பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

262

திருக்குறள்



தலையில் உள்ள வரை நறுநெய் பூசி அணி செய்யப்படும் மயிர் தலையிலிருந்து உதிர்ந்து விட்டால் வெறுத்து ஒதுக்கப் படுகிறது. அங்ஙனமே தம் நிலையில் உள்ள வரையில் ஒருவருக்குப் பெருமை உண்டு: நிலையின் இழிந்தால் உலகத்தவரால் வெறுக்கவே படுவர் என்பது கருத்து.

மாந்தர்-மக்கள்; இங்கே உயர்குடி மக்களைக் குறிக்கும்; இழிந்த-நீங்கிய, தாழ்ந்த; நிலை-பதவி. 964

5.குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
குன்றி அனைய செயின்.

செல்வம், சிறப்பு முதலியவைகளால் மலை போன்ற நிலையில் உள்ளவரும் இழிவுக்குரிய செயல்களில் ஒரு குன்றி மணி அளவு செய்ய நேர்ந்தாலும், தமக்குரிய மதிப்பில் குறைந்து போய் விடுவர்.

குன்றின் அனையார்-மலை போன்று உயர்ந்த தன்மையர்; குன்றுவர்-குறைந்து விடுவர்; குன்றுவ-தாழ்தற்குக் காரணமான செயல்; குன்றி-குன்றிமணி. 965

6.புகழ் இன்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் என்மற்று
இகழ்வார்பின் சென்று நிலை.

தன்னை இகழ்ந்துரைப்பார் பின் சென்று நிற்கும் நிலை ஒருவனுக்கு இம்மையிலும் புகழைத் தராது: மறுமையிலும் அவனைத் தேவருலகத்துச் செலுத்தாது. எனவே, அவரைப் பின்பற்றிச் செல்வதால் என்ன பயன்?

இகழ்ந்துரைப்பார் பின் சென்று நிற்பவனுக்கு இழிவைத் தவிர்த்து நன்மை சிறிதும் இல்லை என்பது கருத்து.

இன்றால்-இன்று, ஆல், அசை; புத்தேள் நாடு-தேவர் உலகம்; உய்யாது-செலுத்தாது; என்-என்ன பயன்; மற்று-அசை நிலை; சென்று நிலை-சென்று நிற்கின்ற நிலை. 966

7.ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே
கெட்டான் எனப்படுதல் நன்று.

தன்னை மதித்துத் தம்முடன் சேர்த்துக் கொள்ளாதவர் பின் சென்று ஒருவன் உயிர் வாழ்வதை விட, அவன் தன் நிலையிலேயே நின்று அழிந்தான் என்று சொல்லப் படுதல் அவனுக்கு நன்று.