பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

 திருக்குறள்


5.அன்புற் றமர்ந்த வழக்கென்ப வையத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு.

இவ்வுலகத்தில் தம் உற்றார் உறவினரோடு அன்பினால் பிணைக்கப்பட்டு இனிதே இல்வாழ்க்கை நடத்தி மகிழ்ந்தவர் விண்ணுலகத்தும் இன்புறுவர். அவர் வானுலகத்தே அடையும் சிறப்பு, அவர் மண்ணுலகத்தே நடத்திய அன்பு வாழ்க்கையின் விளைவேயாம்.

இக்குறளுக்கு "இவ்வுலகத்தில் இன்பத்தோடு வாழ்வார் அடையும் பெருஞ் சிறப்பு அவர் முற்பிறவியில் பிறர் பால் செலுத்திய அன்பின் விளைவேயாம்," என்றும் பொருள் கூறுவர். 75

6.அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை.

அறியாதார் அறச்செயல்கள் மட்டுமே அன்பின் விளைவு எனக் கூறுவார். மறச்செயலை நீக்கவும் அன்பு துணை செய்கிறது. ஒருவன் செய்த பகைமை பற்றி மனத்திலே மறச் செயல் தோன்றிய போது அவனை நட்பாகக் கருதி அம்மறச் செயல் எண்ணத்தைப் போக்குவதும் அன்பேயாம்.

அறத்திற்கு - அறச்செயல்கள் செய்வதற்கு; சார்பு-துணை; மறத்திற்கு-மறச்செயல்களை நீக்குவதற்கு. 76

7.என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்.

எலும்பே யில்லாத உடலையுடைய புழுவைக் காய்ந்து கொல்லும் வெயில் போல் அன்பில்லாதவர்களை அறக் கடவுள் வருத்தும்.. 77

8.அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று.

அன்பில்லாத ஒருவன் இல்வாழ்க்கை நடத்துதல் பாலை வனத்தில் உலர்ந்ததாகிய மரமொன்று தளிர்ப்பது போன்றது. பட்டுப் போன மரம் பாலைவனத்தில் தளிர்க்காது. அது போலவே அன்பில்லாத இல்வாழ்க்கையும் நடைபெற முடியாது.

வன்பால்-வலிய பாலை நிலம்; தளிர்த்தற்று-தளிர்த்தது போன்றது.. 78