பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

திருக்குறள்



10. இனியவை கூறல்


1.இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.

இன்சொற்களாவன அன்பு கலந்து வஞ்சனை அற்றவைகளாய், மெய்ப்பொருள் உணர்ந்தவர்களின் வாயிலிருந்து வரும் சொற்களாகும்.

ஈரம்-அன்பு; அளைஇ-கலந்து; படிறு-வஞ்சனை; செம்பொருள்- உண்மைப் பொருள். 91

2.அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகன்அமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்.

முகமலர்ச்சியோடு இனிமையான சொற்களைச் சொல்லுங் குணமானது வாய்க்கப் பெற்றால், அது மனமகிழ்ந்து ஒரு பொருளை உதவும் ஈகைக் குணத்திலும் சிறந்ததாகும்.

அகன்-மனம்; அமர்ந்து-விரும்பி, மகிழ்ந்து. 92

3.முகத்தான் அமர்ந்தினிது நோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம்.

முகத்தினால் மகிழ்ச்சி பொருந்தி இனிமையாகப் பார்த்து, மனம் உவந்து தோன்றும் இனிய சொற்களைச் சொல்வதே அறமாகும்.

அமர்ந்து - (மகிழ்ச்சி) பொருந்தி; அகத்தான் ஆம்- மனத்தினிடத்ததாகிய; சொலினது-சொல்லைச் சொல்லுதலின் கண்ணது. 93

4.துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு.

எல்லாரிடத்தும் மகிழ்ச்சியை விளைவிக்கும் இனிய சொற்களைச் சொல்ல வல்லார்க்குத் துன்பத்தை விளைவிக்கும் வறுமை நிலை இல்லையாகும். 94

5.பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற.