பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

திருக்குறள்


பாகக் கொண்டொழுகும் பெரியாருக்கு அடுத்த நிலையில்தான் இருக்க வேண்டியவராவார்.

‘உண்ணாது’ என்பதற்கு மாமிசம் முதலியவைகளை உட்கொள்ளாது என்றும் பொருள் கூறுவர். 160

17. அழுக்காறாமை


1.ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு.

ஒருவன் தன் உள்ளத்தின் கண்ணே பொறாமை இல்லாமல் வாழத்தக்க நல்ல தன்மையைச் சிறந்த ஒழுக்கத்திற்குரிய வழியாகக் கொள்ளுதல் வேண்டும்.

ஒழுக்காறு-நல்லொழுக்கத்திற்கு உரிய சிறந்த வழி; அழுக்காறு-பொறாமை; இயல்பு-தன்மை. 161

2.விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின்.

யாராயிருப்பினும் அவரிடத்தில் பொறாமை கொள்ளும் குணம் இல்லாமையை ஒருவன் பெற்று இருப்பானேயானால், அவன் பெறுதற்குரிய சிறந்த செல்வங்களுள் அதற்கு ஒப்பாக இருப்பது வேறொன்றுமில்லை.

விழுப்பேறு-சிறந்த செல்வம்; யார்மாட்டும்-யாவரிடத்தும்; அன்மை-இல்லாதிருத்தல்; பெறின்-பெற்றிருந்தால். 162

3.அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறன்ஆக்கம்
பேணாது அழுக்கறுப் பான்.

மறுமைக்கு வேண்டிய அறச்செயலையும், இம்மைக்கு வேண்டிய செல்வத்தையும் விரும்பாதவன் என்று எண்ணத் தக்கவனே மற்றவருடைய செல்வத்தைக் கண்டு மகிழாமல், பொறாமைப்படுவான்.

அழுக்கறுத்தல் - பொறாமைப்படுதல்; பேணாது-மகிழாமல் 163