பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

திருக்குறள்


3.புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறங்கூறும் ஆக்கம் தரும்.

ஒருவனைக் காணாத போது இழிவாகக் கூறி, அவனைக் கண்ட போது பொய்யாகப் புகழ்ந்துரைத்து உயிர் வாழ்வதைக் காட்டிலும் இறந்து போதல் அற நுால்களில் புகழ்ந்து கூறப்படும் நல்வினைப் பயனை அளிக்கும். 183

4.கண்நின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க
முன்இன்று பின்நோக்காச் சொல்.

ஒருவன் முகத்திற்கு எதிரே நின்று சிறிதும் தாட்சண்யமில்லாமல் கடுஞ்சொற்களைச் சொன்னாலும், அவனுக்கு முன்பாகப் பேசாமல் புறத்தே சென்று சொல்லும் பழிச் சொற்களைப் பேசாமல் இருத்தல் வேண்டும்.

கண்நின்று-கண்களுக்கு எதிரே நின்று; கண் அற-கண்ணோட்டம் இல்லாமல்; முன்இன்று-முகத்திற்கு எதிரே நின்று பேசாமல்; பின்நோக்காச் சொல்-பின்னால் நேரும் விளைவினைக் கருதாத சொற்கள்; அஃதாவது பழிச் சொற்கள். 184

5.அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்
புன்மையால் காணப் படும்.

நீதி நெறியைப் பிறருக்கு விளக்கிக் கூறத்தக்க நற்குணம் ஒருவனிடம் சிறிதும் இல்லாமையை அவன் பிறரைத் குறித்துப் புறம் கூறுகின்ற இழி குணத்தால் தெரிந்து கொள்ளலாம். 185

6.பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்
திறன்தெரிந்து கூறப் படும்.

பிறன் குற்றத்தை அவன் இல்லாத போது பிறரிடம் கூறுகின்ற பழக்கமுடைய ஒருவன், தன் குற்றத்தையும் அவ்வாறு பிறர் கூறுவார்களே என்பதை அறிந்து கூறுதல் வேண்டும்.

தன்பழி உள்ளும்-தான் புரிந்த தீமைகளையும்; திறன் தெரிந்து-பிறர் தன்னைப் போல் புறம் கூறுவார்களே என்பதைப் பகுத்தறிந்து. 186