பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

திருக்குறள்


10.சொல்லுக சொல்லின் பயனுடைய சொல்லற்க
சொல்லின் பயனிலாச் சொல்.

சொற்களில் பயனுடைய சொற்களை மட்டும் நாம் சொல்லுதல் வேண்டும். பயனற்ற சொற்களைச் சொல்லுதல் கூடாது. 200

21. தீவினையச்சம்


1.தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை என்னும் செருக்கு.

தீவினை செய்தலாகிய அகந்தையான செயலைச் செய்வதற்கு, முன்பே தீய செயல்களைச் செய்து பழகிய பாவிகள் அஞ்ச மாட்டார்கள்; ஆனால் நற்குண சீலர்கள் அஞ்சுவார்கள்.

விழுமியார்-சிறந்த குணம் வாய்ந்த நல்லோர். 201

2.தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்.

தீய செயல்கள் (நன்மையைச் சிறிதும் விளைவிக்காமல்) தீமையையே விளைவிப்பனவாய் இருத்தலால், அச் செயல்கள் தீயைப் பார்க்கிலும் கொடியன எனக் கருதி அஞ்சுதல் வேண்டும். 202

3.அறிவினுள் எல்லாம் தலையென்ப தீய
செறுவார்க்கும் செய்யா விடல்.

தம்மைத் துன்பப்படுத்துவோருக்கும் தீமையானவற்றைச் செய்யாதிருத்தல் அறிவோடு செய்யும் செயல்கள் எல்லாவற்றிலும் முதன்மையானது ஆகும் என்று அறிஞர் கூறுவர்.

செறுவார்க்கும்-தமக்குத் தீமையைச் செய்பவர்க்கும். 203

4.மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.

பிறனுக்குத் தீமையை விளைவிக்கும் செயலை ஒருவன் தன்னை அறியாமலும் செய்ய எண்ணுதல் கூடாது.