பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலால் மறுத்தல்

65


8.பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார்
அற்றார்மற் றாதல் அரிது.

கையில் பொருள் இல்லாதவர்கள் என்றைக்கேனும் ஒரு நாளில் பொருளைப் பெற்றுச் சிறப்புறுதல் கூடும். அருளில்லாதவர்களோ அழிந்தவரே ஆவர்.அவர்கள் மறுபடியும் அந்த அழிவு நிலையிலிருந்து உயர்வு பெறுதல் அரிது. 248

9.தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
அருளாதான் செய்யும் அறம்.

கருணை சிறிதும் இல்லாதவன் செய்யும் அறச் செயல்களை ஆராய்ந்து பார்த்தால், அவை உள்ளத் தெளிவில்லாதவன் உண்மைப் பொருளாகிய இறைவனைக் காண முயலுவதற்குச் சமமே ஆகும்.

தெருளாதான்-மனத் தெளிவில்லாதவன்; மெய்ப் பொருள்- உண்மைப் பொருள், பரம்பொருள். 249

10.வலியார்முன் தன்னை நினைக்கத்தான் தன்னின்
மெலியார்மேல் செல்லும் இடத்து.

அருளில்லாதவன் தன்னினும் எளியவர்களைத் துன்புறுத்தப் புகும் போது, தன்னினும் வலியவர்கள் தன்னை வருத்தும் காலத்துத்தான் அஞ்சி இருக்கும் நிலையை நினைத்தல் வேண்டும். 250

26. புலால் மறுத்தல்


1.தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்?

தன் உடம்பை வளர்ப்பதற்காக, மற்றோர் உயிரின் உடம்பைத் தின்பவன் பிற உயிர்களிடத்து எவ்விதம் அருள் உடையவனாய் இருக்க முடியும்?

ஊன்-மாமிசம், இங்கே உடலைக் குறிக்கும். 251