பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெகுளாமை

79


5. தன்னைத்தான் காக்கின் சினம்காக்க காவாக்கால்

தன்னையே கொல்லும் சினம்.

ஒருவன் தனக்குத் துன்பம் நேராமல் தன்னைத் தான் காத்துக் கொள்ள விரும்பினால் அவன் கோபத்தை அடக்கிக் கொள்ள வேண்டும். அவ்விதம் அவன் தன் கோபத்தை அடக்கிக் கொள்ளாவிட்டால், அந்தக் கோபமானது மற்றவர்களுக்குத் தீங்கு செய்வதை விடத் தனக்கே அழிவை உண்டாக்கும். 305

6.சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்

ஏமப் புணையைச் சுடும்.

தன்னைச் சேர்ந்தவரை அழிக்கும் குணமுடைய சினமாகிய நெருப்பு, அவரை அழிப்பதோடு நில்லாமல், அவருக்குப் பாதுகாவலாக உள்ள நல்லினத்தவராகிய தெப்பத்தையும் அழித்துவிடும்.

சேர்ந்தாரைக் கொல்லி-நெருப்பு; ஏமம்-பாதுகாவல்; புணை-தெப்பம் 306

7.சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு

நிலத்தறைந்தான் கைபிழையா தற்று.

தன் வலிமையைக் காட்டுவதற்குக் கோபத்தைக் கருவியாகக் கொண்டவன் கெடுவது, நிலத்தைத் தன் கையினால் ஓங்கி அறைந்தவனுடைய கை துன்புறுவது எவ்வளவு நிச்சயமோ, அவ்வளவு நிச்சயமாகும்.

பொருள்-இங்கே 'கருவி’ என்னும் பொருளில் வந்தது. பிழையாதற்று-(துன்புறுதல்) தவறாதது போன்றது. 307

8.இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்

புணரின் வெகுளாமை நன்று.

பல சுடர்களோடு கூடிய பெரிய நெருப்புத் தொகுதி தன்னைச் சூழ்ந்து வருத்தும் துன்பத்தைப் போன்ற கொடிய துன்பங்களை ஒருவன் தனக்குச் செய்யினும், தன்னால் முடியுமானால் அவன் மீதும் கோபம் கொள்ளாதிருத்தலே நன்று. 308