பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இன்னா செய்யாமை

81


தம்மீது பகைமை கொண்டு ஒருவன் தமக்குத் துன்பம் பலவும் செய்த அந்த நேரத்திலும், அந்தத் துன்பங்கட்கு எதிராக அவனுக்குத் தீங்கு செய்யாமலிருத்தலே குற்றமற்ற பெரியோர்களது கொள்கையாகும்.

கறுத்து-கோபம் கொண்டு; செய்த அக்கண்ணும்- செய்த அந்த நேரத்திலும்; மறுத்து-பதிலாக. 312

3.செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்
உய்யா விழுமம் தரும்.

ஒருவன் ஒரு தீங்கும் செய்யாமலிருக்க, அவனைப் பகைத்து அவனுக்குப் பெருந் தீங்கினைச் செய்தவர்க்கும் அவன் கெடுதி செய்தால், அச்செயல் அவன் தப்ப முடியாத துன்பத்தை அவனுக்குத் தரும். 313

4.இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.

தனக்குத் தீங்கு செய்தவர்களைத் தண்டித்தலாவது தீங்கு செய்தவர்களே வெட்கித் தலை குனியும்படி அவர்களுக்கு நன்மை தரும் செயல்களைச் செய்து, அவர்கள் செய்த தீங்கினையும் தான் செய்த நன்மையினையும் மறந்து விடுவதே யாகும். 314

5.அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தன்நோய்போல் போற்றாக் கடை.

மற்ற உயிருக்கு நேர்ந்த துன்பத்தைத் தமக்கு நேர்ந்த துன்பம் போல் எண்ணி, அந்த உயிரைக் காப்பாற்றா விட்டால், ஒருவர் பெற்றுள்ள அறிவினால் உண்டாகக் கூடிய பயன் என்ன இருக்கிறது? 315

6.இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்கண் செயல்.

இவை மக்களுக்குத் துன்பத்தைத் தருவன என்று அறிந்து கொண்ட எந்தச் செயல்களையும், ஒருவன் மற்றவனுக்குச் செய்யும் முயற்சியில் ஈடுபடாமல் இருத்தல் வேண்டும். 316

.