பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமணசமயப் புகழ்பாக்கள்

213



18. பல்லவர் ஆட்சி

நாட்டுப் பிரிவு

பல்லவப் பெருநாடு பல இராட்டிரங்களாக (மண்டலங்களாகப்) பிரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வோர் இராட்டிரமும் பல விஷயங்களாக (கோட்டங்களாக)ப் பகுக்கப்பட்டிருந்தது. பல்லவர் பட்டயங்களில் முண்ட ராட்டிரம் வெங்கோ ராட்டிரம்ட (வேங்கி ராட்டிரம்) முதலிய ஆந்திரப் பகுதி மண்டலங்களும் துண்டக ராட்டிரம் என்னும் தொண்டை மண்டலமும் குறிக்கப்பட்டுள்ளன. பல்லவர் ஆண்ட தமிழ் நாட்டில் கோட்டம் நாடு ஊர் என்னும் பிரிவுகள் காணப்படுகின்றன. ஆந்திர நாட்டுப் பகுதிகளின் பெயர்களையும் தமிழ் நாட்டுப் பகுதிகளையும் நோக்கப், பல்லவர், தமக்கு முன் இருந்த தமிழ் அரசர் தொண்டை நாட்டுப் பிரிவுகட்கு வைத்திருந்த பெயர்களை அப்படியே தங்கள் ஆட்சியிலும் கையாண்டு வந்தனர் என்பதை நன்குணரலாம். தொண்டை நாடு பல்லவர்க்கு முன்னரே 24 கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டு இருந்தது. அவையாவன:

1. புழல் கோட்டம், 2. ஈக்காட்டுக் கோட்டம், 3. மணவிற் கோட்டம், 4. செங்காட்டுக் கோட்டம், 5. பையூர்க் கோட்டம், 6. எயில் கோட்டம், 7. தாமல் கோட்டம், 8. ஊற்றுக்காட்டுக் கோட்டம், 9. களத்துர்க் கோட்டம், 10. செம்பூர்க் கோட்டம், 11. ஆம்பூர்க் கோட்டம், 12. வெண்குன்றக் கோட்டம், 13. பலகுன்றக் கோட்டம், 14.இலங்காட்டுக் கோட்டம், 15. கலியூர்க் கோட்டம், 16. செங்கரைக் கோட்டம், 17. படுவூர்க் கோட்டம், 18. கடிகூர்க் கோட்டம், 19.செந்திருக்கைக் கோட்டம், 20. குன்றவட்டான கோட்டம், 21. வேங்கடக்கோட்டம், 22. வேலூர்க்கோட்டம், 23. சேத்துர்க் கோட்டம், 24. புலியூர்க்கோட்டம்.[1]

அரச முறை

பெரும்பாலான பட்டயங்களால், பல்லவர் அரசமுறை தந்தையினின்று மூத்த மகனுக்கு உரிமையானதாகவே தெரிகிறது.


  1. Chingleput, Manual p.438.