பக்கம்:வேலூர்ப்புரட்சி.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புதிய விழிப்பு

15


கலெக்டராகிய ஸ்ட்ரேட்டன் (Mr. Stratton) துணை கொண்டு பாளையக்காரர்களை நொறுக்கி எறியத் திட்டம் தீட்டியது. வட ஆர்க்காடு பாளையக்காரர்களோ கலங்காது போர்க்களம் புகத் துணிந்தனர். பத்துக்கு மேற்பட்ட பாளையக்காரர்கள் சுதந்தரப் போரில் கலந்து கொள்ளத் தோள் கொட்டினர். ஆம், தமிழகத்தின் வட எல்லையில் ஒரு பாஞ்சாலங்குறிச்சியையும் சிவ கங்கையையும் உண்டுபண்ண அவர்கள் உள்ளம் துடித்தது. வட ஆர்க்காடு மாவட்டத்திலும் கட்டபொம்மன்களும் ஊமைத்துரைகளும் மருது பாண்டியர்களும் தோன்றுவார்களோ என்று எண்ணி மனம் கலங்கியது கும்பினி அரசாங்கம். ‘கூடிய வரையிலும் கொஞ்சிக் குலாவிக் காரியத்தைச் சாதிப்போம்; முடியாவிட்டால் கொலைவாளை எடுப்போம்; பீரங்கிகளைப் பயன்படுத்துவோம்’ என்று முடிவு செய்தது வெள்ளை முதலாளி வர்க்கம். எவ்வழியாலும் வட ஆர்க்காடு மாவட்டத்துப் பாளையக்காரர்கள் இதயத்தில் பொங்கி எழுந்த சுதந்தரத் தீயை அவிக்க முடியாது என்று கண்டவுடன் ஆங்கிலேய ஏகாதிபத்தியம் கர்னல் டார்லேயின் தலைமையில் 1804-ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஆறும் தேதி ஒரு பெரும்படையைச் சித்தூருக்கு அனுப்பியது. அப் படை சித்தூருக்குள் ஜூலை மாதம் 17-ஆம் தேதி புகுந்தது. காக்பர்ன் என்ற ஒரு அதிகாரியை மாவட்டத்தின் நிர்வாகம் முழுவதையும் ஏற்றுக்கொள்ளும் பொருட்டும் அனுப்பி வைத்தது வெள்ளை ஏகாதிபத்தியம். ஸ்ட்ரேட்டன், காக்பர்ன், டார்லி (Mr.-