பஞ்ச தந்திரக் கதைகள்/தன் வாயினால் கெட்ட கழுதை

விக்கிமூலம் இலிருந்து

2. தன் வாயினால் கெட்ட கழுதை

ஒரு வண்ணான் பொதி கழுதை யொன்றை வளர்த்து வந்தான். அவன் தன் அழுக்கு மூட்டைகளை யெல்லாம் அதன்மேல் ஏற்றிக் குளத்திற்குக் கொண்டு போவான். துவைத்து முடிந்த பின் மீண்டும் சுமை ஏற்றிக் கொண்டு வருவான்.

இவ்வளவு உழைக்கின்ற அந்தக் கழுதைக்கு அவன் தீனி வைப்பதில்லை, ஆனால், கழுதையின்  வயிற்றை நிரப்ப அவன் ஒரு தந்திரம் கண்டு பிடித்திருந்தான். இரவு நேரத்தில் அந்தக் கழுதையின் மேல் ஒரு புலித்தோலைப் போட்டுப் போர்த்தி, அதை அருகில் உள்ள ஒரு பயிர்க் கொல்லையில் மேயவிட்டு விடுவான். கழுதை வயிறு நிறையப் பச்சைப் பயிரை மேய்ந்து நன்றாகக் கொழுத்து வளர்ந்தது. வண்ணானுக்கும் மிகுந்த வேலை பார்த்திது.

இரவில் பயிர்க்கொல்லையைக் காவல் செய்பவர்கள் கழுதையைக் கண்டவுடன் புலி என்று நினைத்துக் கொண்டு பயந்து ஓடிப் போவார்கள். அது வேண்டுமட்டும் மேய்ந்து விட்டுப் போகும். இப்படி நெடுநாள் நடந்து வந்தது.


`புலி பசித்தாலும் புல்லைத் தின்னுமா என்று பழமொழி யிருக்கிறது. ஆனால், இப்போது புலி நெல்லைத் தின்னும் புதுமையைப் பார்க்கிறோம். எல்லாம் கலிகாலக் கோலம்' என்று எல்லோரும் எண்ணி வியப்பு கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒரு முரடன் இருந்தான். இது உண்மைதானா , அல்லது சூழ்ச்சியா என்று அறிந்து கொள்வதற்காக அந்தத் துணிச்சல்காரன், கையில் ஓர் ஈட்டியை ஏந்திய வண்ணம், கம்பளத்தால் தன் உடல் முழுவதும் மூடிக் கொண்டு ஓர் இடத்தில் ஒளிந்திருந்தான்.

வழக்கம் போல் பயிர் மேய்வதற்காகக் கழுதை வந்த நேரம் பார்த்து அவன் எழுந்திருந்தான். கம்பளப் போர்வையோடு வந்த உருவத்தைக் கண்டதும், அது பெட்டைக் கழுதை என்று நினைத்துக் கொண்டு, புலித்தோல் போர்த்த கழுதை கத்தத் தொடங்கியது. அதன் குரலைக் கேட்டவுடன், ஈட்டிக்காரன், `பூ! நீ ஒரு கழுதைதானா? சரி, இதோடு தீர்ந்து போ!’ என்று தன் கை ஈட்டியால் ஓங்கி ஒரு குத்துக் குத்தினான்.

அவ்வளவுதான்! கழுதை சுருண்டு பிணமாக விழுந்தது.

வாயடக்கம் வேண்டும். இல்லாவிட்டால் இந்தக் கழுதையைப் போல், தன் வாயினாலேயே கெட்டொழிய நேரிடும்.