பாண்டிமாதேவி/இரண்டாம் பாகம்/பொருநைப் புனலாட்டு விழா

விக்கிமூலம் இலிருந்து
இரண்டாம் பாகம்

1. பொருநைப் புனலாட்டு விழா

அன்றைக்குக் காலையில் பொதிய மலைக்குக் கிழக்கே கரவந்தபுரக் கோட்டத்தில் பொழுது புலரும்போது கதிரவனுக்கு அடக்கமுடியாத ஆவல் உண்டாகியிருக்க வேண்டும். வைகறையில் வழக்கத்தைவிடச் சற்று முன்பாகவே உதயம் ஆகிவிட்டது போலிருந்தது.

சில நாட்களாக இடைவிடாத மழை பொதியமலையின் எழிலார்ந்த நீலக் கொடுமுடிகளைக் காண முடியாதபடி எப்போதும் கருமேகங்கள் திரையிட்டுக் கவிந்திருந்தன. ஆவேசம் பிடித்து ஒடும் பேய்கொண்ட பெண்களைப் போல் ஆறுகளெல்லாம் கரைமீறிப் பொங்கி ஓடிக்கொண்டிருந்தன. சந்தனமும், செந்தமிழும், மந்தமாருதமும் எந்தப் பொதிய மலையில் பிறந்தனவோ அதே பொதிய மலையில்தான் பொருநையும் பிறந்தாள். அருவிகளாக விழுந்து காட்டாறுகளாக ஒடி மலையை விட்டுத் தரையில் இறங்கும் வரை பிறந்த வீட்டில் சுதந்திரமாக இருக்கும் கன்னிப்பெண் போலிருந்தாள் அவள். தரையில் இறங்கிய பின்போ, புக்ககம் செல்லும் மணப்பெண்ணின் அடக்கமும், ஒரே நெறியை நோக்கி நடக்கும் பண்பும் அவளுக்கு வந்துவிட்டன. கணவன் வீடாகிய கடலை அடைவதற்குமுன் அவள்தான் இரு கரையிலும் எத்தனை காட்சிகளைக் காணப் போகிறாள்? விண் முகட்டை நெருடும் கோபுரங்கள், மண்ணில் புதையும் குடிசைகள், பெரிய மரங்கள், சிறிய நாணற்புதர்கள், அழுக்கு நிறைந்த மனிதர்கள், இன்னும் எத்தனை எத்தனையோ? போகிற வழியில், குற்றாலத்து மலை முகட்டிலிருந்து குதித்துக் குறும் பலாவை நனைத்துவரும் சித்திராநதித் தோழி பொருநையைத் தழுவிக் கொள்கிறாள். பொருநைக்குப் போகும் வழிக்குத் துணை கிடைத்துவிடுகிறது.

போகிற வழியெல்லாம் பொருநைக்கு நல்ல வரவேற்புதான். மலரும் மாலையும் துரவுவோர். மங்கல வாழ்த்தெடுப்போர், வாசனைத்துள்களை வாரியிறைப்போர், எல்லோரும் அவளைப் போற்றினார்கள். அது புனலாட்டு விழாக்காலம். பருவத்தில் பெய்த அந்த மழையால்தான் எவ்வளவு நன்மைகள். அந்த மேல்மழை பெய்திராவிட்டால் கொற்கைத்துறையில் முத்துச் சிப்பிகள் விளைவெய்தாமல் போயிருக்கும். சிப்பிகள் விளைவின்றிச் சலாபத்தில் முத்துக்குளி நடைபெறும் இடம்) முத்துக்குளி நின்று போனால் தென்பாண்டிப் பேரரசுக்கு வருவாய் குறையும். கரவந்தபுரத்து உக்கிரன் கோட்டைக் குறுநிலவேள் தென்பாண்டிப் பேரரசுக்கு அடங்கி நடப்பதாக ஒப்புக்கொண்ட நாளிலிருந்து கொற்கைத்துறையையும், முத்துச் சலாபத்தையும் நிர்வாகம் செய்யும் பொறுப்பு அவனிடம் அளிக்கப்பட்டிருந்தது.

ஆண்டுதோறும் பொருநையில் புதுப் புனல் பெருகி அது பாயும் பகுதியெல்லாம் பசுமையும், வளமும் பரவி நிற்கும் நல்ல பருவத்தில் கொற்கை முத்துக்குளி விழா தொடங்கும். அன்று கரவந்தபுரத்துச் சிற்றரசன் தன் பரிவாரங்களோடு கொற்கைக்கு வருவான். சுற்றுப்புறங்களிலிருந்து திரள்திரளாக மக்கள் கூடுவார்கள். உள் நாட்டிலிருந்தும் கடலுக்கு அப்பாலுள்ள நாடுகளிலிருந்தும் பெரிய பெரிய வாணிகர்கள் முத்துக்களை விலை பேசி வாங்கிச் செல்ல வருவார்கள். கொற்கையில் திருவிழாக்கூட்டம் பெரிதாகக் கூடிவிடும்.

'கடலாடி மலையேறுதல்' என்று ஒரு பழைய மரபு. கொற்கையில் முத்துக்குளி முடிந்ததும், கரவந்தபுரத்தார் பொதியமலைச் சாரல்வரை சென்று பொருநையில் நீராடி மீள்வது வழக்கம். பொருநை கடலோடு கலக்கும் இடத்துக்குச் சற்று வடக்கே கொற்கை முத்துச் சலாபம் அமைந்திருந்தது.

கொற்கைத்துறையில் கரையின் மணற்பரப்பே தெரியாமல் கூடாரங்களும் மக்கள் கூட்டமும் நிறைந்திருந்தன. இன்னிசைக் கருவிகள் முழங்கின. வாழ்த்தொலி அதிர்ந்தது. முத்துக் குளிப்புக்கெனக் குறித்த மங்கல வேளையும் வந்தது. துறையின் முன்புறத்தில் சலாபத்துக்கு அருகே கரவந்தபுரத்துச் சிற்றரரசன் பெரும்பெயர்ச்சாத்தன் நின்றான். அவன் பக்கத்தில் அவனுடைய பட்டத்தரசி அடக்க ஒடுக்கமாக நின்றாள். அரச பரிவாரத்தைச் சேர்ந்தவர்கள் சூழ நின்றார்கள், விலைபேச வந்திருக்கும் பெருஞ் செல்வர்களான வாணிகர்கள் இன்னும் சிறிது தள்ளி நின்றார்கள். பல விதமான தோற்றத்தோடு கூடிய, பலமொழிகள் பேசும், பல தேசத்து வாணிகர்கள் அங்கே நிறைந்திருந்தனர். கடல் ஓசையும் வாத்தியங்களின் ஒலியும், பலமொழிக் குரல்களும் கலந்து ஒரே ஒலிக் குழப்பமாக இருந்தன. தண்ணிருக்குள் மூச்சை அடக்கும் ஆற்றல் வாய்ந்த கட்டிளங் காளைகளான இளைஞர்கள் வாட்டசாட்டமான தோற்றதோடு வரிசையாக நின்றார்கள். அவர்கள்தாம் முத்துக்குளிக்காகக் கடலில் மூழ்கும் பரதவ வாலிபர்கள். பளிங்கால் இழைத்தெடுத்துப் பொருந்தினது போல் உடற்கட்டுள்ள அவர்கள் தோற்றம் மனத்தைக் கவர்ந்தது.

சலாபத்துக்குப் பக்கத்தில் இருந்த சிறிய கோவிலில் முத்துக் குளிப்பதற்கு முன் அவர்கள் வழக்கமாக வழிபடும் கடல் தெய்வத்தின் சிலை இருந்தது. முறைப்படி அதை வழிபட்டபின் பரதவ இளைஞர்கள் அரசனை வணங்கிவிட்டு ஒவ்வொருவராகக் கடலில் குதித்தனர்.

அதைப் பார்த்துக் கொண்டிருந்த பெரும்பெயர்ச் சாத்தனின் பட்டத்தரசி, “எவ்வளவு துணிவு இந்த வாலிபர்களுக்கு?” என்று வியப்புடன் தன் கணவனை நோக்கிக் கூறினாள். பெரும் பெயர்ச்சாத்தன் அவள் கூறியதைக் கேட்டுச் சிரித்தான்.

“இப்படிச் சில ஆண்பிள்ளைகள் துணிந்தால்தான் உங்களைப் போன்ற பெண்களின் கழுத்தில் முத்துமாலை இருக்கமுடியும்.” அவன் அவள் கழுத்தை வளைத்துக்கிடந்த முத்து மாலையைச் சுட்டிக்காட்டிச் சொன்னான்.

“ஓகோ பெண்களை மட்டம் தட்டியா பேசுகிறீர்கள்?”

“அப்படி ஒன்றுமில்லை! உலகத்தில் ஆண்பிள்ளைகள் அதிகத் துன்பத்தின் பேரில் அடையவேண்டிய பொருள்களெல்லாம் பெண்களின் தேவைகளாயிருக்கின்றன என்றுதான் சொல்ல வந்தேன்."

“அழகுள்ளவர்களுக்குத்தானே அழகான பொருள்கள் தேவை?” என்று தன் கணவனைப் பேச்சில் வென்றாள் அந்தப் பட்டத்தரசி. சுற்றிலும் இருந்த உயர்தர அரசாங்க அதிகாரிகள் அரசனுக்கும் அரசிக்கும் இடையே நிகழ்ந்த இந்த நகைச்சுவைப் பேச்சைச் சிரித்து வரவேற்றனர்.

கடலில் மூழ்கிய இளைஞர்கள் கிடைத்தமட்டில் முத்துச் சிப்பிகளை அள்ளிக்கொண்டு வந்தார்கள். மறுபடியும் மறுபடியும் உடல் அலுப்பு அடைகின்றவரையில் மூழ்கிக்கொண்டே இருந்தார்கள். முத்து வணிகத்துக்காக வரும் அயல்நாட்டு வணிகர்களின் கப்பல்கள் மேலும் மேலும் வந்துகொண்டே இருந்தன. துறையில் கப்பல்கள் நிறுத்தப் போதுமான இடமின்றி ஒரே நெருக்கமாக இருந்தது. எனவே கடலில் கண்ணுக்குத் தென்பட்ட தொலைவு வரை கப்பல்களின் பாய் மரக் கூம்புகள் தெரிந்தன. பல நாட்டுக் கொடிகள், பலவிதச் சின்னங்களோடு, பல நிறத்தில் அவற்றின் உச்சியில் பறந்தன. வானில் வட்டமிடும் பறவைக் கூட்டங்களுக்கும் அந்தக் கொடிகளுக்கும் வேறுபாடு தெரியாமல் பார்க்கிறவர்கள் மயக்கமுறும் வண்ணம் அவை அதிகமாயிருந்தன.

ஐந்தாறு நாழிகைகளுக்குப் பின் முத்துக்குளி நின்றது. அதுவரையில் எடுத்த சிப்பிகள் அரசனுக்கு முன்னால் வரிசையாகக் குவிக்கப்பட்டிருந்தன. அவற்றிலிருந்த உயர்ந்த முத்துக்களை எடுத்து அரசனிடம் கொண்டு வந்து கொடுத்து வணங்கினான் ஒரு வயது முதிர்ந்த பரதவன். அது ஒரு வழக்கமான மரியாதை. அந்த முத்துக்களை பெற்றுக் கொண்டு அரசன் ஏதோ ஒரு குறிப்பை நினைப்பூட்டும் புன்னகையோடு தன்னுடைய பட்டத்தரசியின் கையில் அவைகளைக் கொடுத்தான்.

“ஆண்பிள்ளைகள் அதிகத் துன்பப்பட்டு அடையும் பொருள்களெல்லாம் பெண்களுக்கே வந்து சேர்கின்றன!" அவற்றை வாங்கிக்கொண்டு அவள் குறும்பாகப் பேசினாள்.

“என்ன செய்யலாம்? உலகம் பரம்பரையாக அப்படிக் கெட்டுப்போய்க் கொண்டிருக்கிறது!"— அவன் வருத்தப்பட்டுச் சொல்வதுபோல் இந்த வார்த்தைகளைச் சொல்லி நடித்தான்.

சுற்றி நின்றவர்கள் சிரிப்பை அடக்க முடியாமல் இரைந்தே சிரித்துவிட்டார்கள். பட்டத்தரசி சிறிது நாணத்தோடு தலையை குனிந்து கொண்டாள்.

சிப்பிகளை விலை பேசும் நேரம் வந்தது. அதற்காக அமைக்கப்பட்டிருந்த கூடாரத்தில் வாணிகர்கள் நூற்றுக் கணக்கில் கூடினார்கள். பெரும்பெயர்ச் சாத்தனும் அவன் மனைவியும், கரவந்தபுரத்து அரண்மனையைச் சேர்ந்த முக்கிய அதிகாரிகளும் சிப்பிகளுக்கு அருகே இருக்கைகளில் அமர்ந்திருந்தனர்.

மன்னர்களுக்கு ஈடான செல்வச் செருக்குள்ள சில பெரிய வாணிகர்கள் மட்டும் முன்வந்து தைரியமாக விலை கேட்க ஆரம்பித்தனர். அப்படி முன்வந்த பெரிய வாணிகர்களின் தொகை பத்துப் பன்னிரண்டு பேருக்குமேல் இருக்காது. அவர்களில் இருவர் விலை கேட்கத் தொடங்கிய விதம், கேட்கும் போது வார்த்தைகளை வெளியிட்ட முறை — எதுவும் மரியாதையாகத் தெரியவில்லை. எடுத்தெறிந்த பேச்சும், குதர்க்கமும் அவ்விருவரும் வியாபாரத்துக்குப் புதியவர்களோ என்று நினைக்கச் செய்தன. எல்லோருடைய கவனமும் அந்த இருவர் மேல் நிலைத்தன. அப்படி நடந்து கொண்டார்கள் அவர்கள். இதையெல்லாம் பார்த்த பெரும்பெயர்ச்சாத்தன் பொறுமையாக இருந்தான்.

“எங்கள் நாட்டிலும் முத்துக்குளிக்கிறோம்! ஆனால் இவ்வளவு அநியாய விலைக்கு விற்றுக் கொள்ளை யடிப்பதில்லை.”

“நீங்கள் எந்த நாடு?”

“ஏன் அதைச் சொன்னால்தான் எங்களுக்கு முத்து விற்பீர்களோ?”

“அது இல்லை. முத்துக்களைப் புளியங்கொட்டைபோல் மலிவாக விற்கும் நாடு எது என்று தெரிந்துகொள்ள ஆவலாயிருக்கிறது எனக்கு.”

“நாங்கள் இருவரும் சோழநாட்டினர். எங்கள் நாட்டிலும் புகார்த்துறைக்கு அருகில் சில இடங்களில் முத்துக் குளிக்கிறார்கள், தெரியுமா?”

“தெரியும்! சோழநாட்டு முத்துக்களை என்றுமே உலகம் முத்துக்களாக ஒப்புக்கொண்டதில்லை. எங்கள் கொற்கைதான் உலகம் போற்றும் முத்துச்சலாபம். இதை நீங்கள் மறுக்க முடியாது."— சொல்லிவிட்டு அவர்களைப் பார்த்துக் கொஞ்சம் ஏளனமாகச் சிரித்துவிட்டான் கரவந்தபுரத்துச் சிற்றரசன். அது அந்த இருவருக்கும் பொறுக்கவில்லை.

“இதே கொற்கைப் பகுதி இதற்கு முன்பும் பலமுறைகள் சோழநாட்டு ஆட்சிக்கு உட்பட்டதுண்டு. இனிமேலும் அப்படி ஆகாதென்று யார் சொல்ல முடியும்? அதை நீங்கள் மறந்து பேசுகிறீர்களே”

பெரும்பெயர்ச் சாத்தனுக்குச் சினம் மூண்டது “நீங்கள் முத்து வாணிகத்துக்கு வந்திருக்கிறீர்களா? அல்லது அரசியல் பேசி வம்பு செய்ய வந்திருக்கிறீர்களா?” என்று ஆத்திரத்தோடு இரைந்து கத்தினான் அவன்.

பெரும்பெயர்ச்சாத்தனது சுடுசொற்களைக் கேட்டதும், இருவரும் கதிகலங்கிவிட்டனர். தங்கள் குட்டு வெளிப்பட்டு விடுமோ என்ற கவலை அவர்களைப் பிடித்துக்கொண்டது. அவசரக்கோலம் அள்ளித் தெளித்த கதையாக அங்கிருந்து நழுவிவிடுவது என்று சமிக்ஞை மூலம் திட்டமிட்டுக் கொண்டனர். அது இன்னும் சந்தேகத்தை விளைவித்துவிடுமே என்று அப்பொழுது அவர்களுக்குத் தோன்றவில்லை. எனவே, அந்த இருவரும் வாணிகர் கூட்டத்திலிருந்து வெளியேறி மெல்ல நழுவி விட்டனர். அவர்கள் நடந்துகொண்ட முறையையும், சொல்லாமல் கொள்ளாமல் நழுவிவிட்டதையும் காணப் பெரும்பெயர்ச்சாத்தனின் சந்தேகம் வலுத்தது. தன் அருகில் நிறை மானகவசன்” என்னும் மெய்க் காவலனை அழைத்து, இருவரையும் அவர்களுக்குத் தெரியாம்ல் பின்பற்றிச் சென்று கண்காணிக்குமாறு இரகசியமாகச் சொல்லி அனுப்பினான். அவனுடைய மனத்தில் பலத்த சந்தேகத்தை உண்டாக்கிவிட்டுப் போய்விட்டார்கள் அவர்கள். ஏற்கெனவே வடபுறம் எல்லைக் காவல் வீரர்களிடமிருந்து அவனுக்குச் சில செய்திகள் வந்திருந்தன. கடந்த இரு வாரங்களுக்குள் சோழநாட்டு ஒற்றர்களாகச் சந்தேகிக்கப் பட்டவர்கள் இருபது முப்பது பேருக்குமேல் உக்கிரன் கோட்டைச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தார்கள். பாண்டி நாட்டு எல்லைக்குள் அந்நியர்களை எச்சரிக்கையாகக் கவனித்து அனுமதிக்குமாறு அங்கங்கே எல்லைப்புறக் காவல் வீரர்கள் ஆணையிடப்பட்டிருந்தார்கள். அப்படியிருந்தும் வாணிகர்களைப்போல், துறவிகளைப்போல், யாராவது வந்து கொண்டுதான் இருந்தார்கள்.

முத்துக்குளி விழாவுக்கு மறுநாள் பொதியமலைச் சாரலில் பொருநை நதியில் புனலாட்டு விழாவிற்குச் சென்றபோது அங்கும் அந்த முத்து வாணிகர் இருவரைச் சந்தித்தான் பெரும்பெயர்ச்சாத்தன். மூன்றாம் நாள் கரவந்தபுரம் திரும்பியபின் ஒரு மாலைப்போதில் மேல்மாடத்திலிருந்து தெருவைப் பார்த்துக்கொண்டிருந்த பெரும்பெயர்ச்சாத்தனின் பட்டத்தரசி அதே ஆட்கள் தெருவில் நடந்து சென்றதைக் கண்டதாகக் கூறினாள். பொறுமை இழந்து பெரும்பெயர்ச்சாத்தன், மானகவசனைக் கூப்பிட்டு “இனியும் அவர்களைப் பின்பற்ற வேண்டாம் பிடித்துச் சிறையில்அடைக்க ஏற்பாடு செய்” என்று கடுமையாக உத்தரவிட்டான். ஆனால் அந்த இருவரும் அகப்படவே இல்லை!

கரவந்தபுரத்து எல்லையிலேயே தென்படாமல் மறைந்து விட்டார்கள். பாண்டியநாட்டு எல்லையோரச் சிற்றூர்களில் சிறு களவுகள், கலவரங்கள், அடிபிடிகள் நடக்கும் செய்திகள் வளர்ந்தன. இந்த அடையாளங்களெல்லாம் எதற்கு முன் அறிவிப்பு என்பது பெரும்பெயர்ச்சாத்தனுக்குப் புரிந்து விட்டது.

“இனியும் மூடி மறைப்பதில் பயனில்லை. செய்தியை மகாமண்டலேசுவரருக்கும், மகாராணியாருக்கும் எட்டவிட வேண்டியதுதான்” என்று தீர்மானத்துக்கு வந்தான். அந்தத் தீர்மானத்தை உடனே செயலாற்றியும் முடித்துவிட்டான்.