பூவும் கனியும்/கல்விப் பயன்

விக்கிமூலம் இலிருந்து


V
கல்விப் பயன்
--oo--

பி. எஸ். ஜி. கலைக் கல்லூரிச் சமூகப்பணித் தொண்டர்களே!

தாய்மார்களே! பெரியோர்களே!

தங்கைகளே! தம்பிகளே!

இன்று இந்த ஊருக்கு வரவும், உங்கள் எல்லோரையும் பார்க்கவும், உங்களுக்குத் துணிமணிகளை வழங்கவும் வாய்ப்புக் கொடுத்த உங்கள் எல்லோருக்கும் நன்றியும் வணக்கமும்.

மெய்யான அறிவு

பி. எஸ். ஜி. கலைக் கல்லூரி மாணவர்கள் நல்ல சமூகத் தொண்டர்கள் என்பது முன்னமே எனக்குத் தெரியும். முன்னர் ஒரு தடவை அவர்கள் சமூகப் பணியைப் பார்த்து மகிழ்ந்திருக்கிறேன். அன்று கண்டு மகிழ்ந்ததைவிட இன்று பெரு மகிழ்ச்சியடைகிறேன்; அவர்களைப் பாராட்டுகிறேன். ஏன் எனில் கல்வியின் நோக்கம் நல்ல மக்களை-சான்றோர்களை- நல்ல தொண்டர்களை ஆக்குவதே ஒழிய, வெறும் அறி வாளிகளைமட்டும் உண்டாக்குவது அன்று; திறமை சாலிகளைமட்டும் உண்டாக்குவது அன்று. படித்தவன் யார், கற்றவன் யார், மெய்யான அறிவுடையவன் யார் என்றால், எவன் பிறருக்காகப் பாடுபடுகின்றானோ அவன்தான் மெய்யாகப் படித்தவன். அவன்தான் அறிவாளி என்பதனை நான் சொல்லவில்லை; வெகு காலத்திற்கு முன்னே இருந்த வள்ளுவர் கூறுகின்றார். அம் முறையிலே இக்கல்லூரி மாணவர்கள் வெறும் ஏட்டுப் படிப்போடு நிற்காமல், தங்களுக்குத் திறமையைத் தேடிக்கொள்வதோடுமட்டும் நிற்காமல் தொண்டுப் பண்பையும், சேவை முறையினையும் கற்கிறார்கள். அவற்றைக் கற்பதோடுமட்டு மன்றி, நடைமுறையிலும் கொண்டுவருகின்ற இவர்களே மனமாரப் பாராட்டுகின்றேன், வாழ்த்துகின்றேன். இதேபோல மேலும் என்றும் செய்யவேண்டுமாய் வணக்கத்தோடு கேட்டுக்கொள்கிறேன்.

கேட்டுப் பயனடைக

இன்று இரண்டு நல்ல நிகழ்ச்சிகள் நடந்தன. ஒன்று தலைவர் வானொலிப் பெட்டியைத் திறந்து வைத்த நிகழ்ச்சி. இதன்மூலம் நல்ல பாட்டுக்களைக் கேட்கலாம். பாட்டு, பொழுது போக்குவதற்கு மகிழ்ச்சியாக இருப்பதற்கு. அதுமட்டு மன்று; நல்ல பேச்சினைச் சில நேரமாவது கேட்கலாம். வள்ளுவர், 'கற்றிலனாயினும் கேட்க என்று சொல்கின்றார் இந்தக் கிராமத்தில் உள்ளவர்களில் பலர் பெரியவர்கள்; அந்தக் காலத்தில் படிக்க வாய்ப்புப் பெறாதவர்கள். இப்போதுகூட முதியோர் பள்ளிக்குச் சிலர் வருவீர்கள்; பலர் வரமாட்டீர்கள். பள்ளிக்கூடத்திற்கு வராவிட்டாலும் இந்த வானொலிப் பெட்டியைக் கேட்கவந்து, கேட்டு, புத்திசாலிகளாக, திறமைசாலிகளாக, கேள்வி அறிவு பெற்றுக்கொள்ளுங்கள். அப்படிப் பெறும் அறிவால் யாருக்கும் ஏமாறதவர்களாக இருக்க உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

பிறருக்கு உதவுக

இன்னொரு நல்ல நிகழ்ச்சி என்ன என்று கேட்டால், நான் பல குழந்தைகட்கு, சிறுவர் சிறுமியர்களுக்குப் பரிசுகள் வழங்கியது; துணி, சட்டை, பாவாடைகளை வழங்கினேன். அவற்றை எல்லாம் வாங்கக் கல்லூரி மாணவர்கள் பணம் திரட்டிக் கொடுத்திருக்கிறார்கள்; அவர்களுக்கு என் நன்றியும் வணக்கமும். சேவையி ல் உடல் உழைப்பைக் கொடுக்கப் பல மாணவர்கள் ஆயத்தமாயிருப்பர். பணம் கொடுப்பது என்றால் கொஞ்சம் கடினம். சினிமா இருக்கிறது; வேடிக்கை இருக்கிறது; இவற்றுக் கெல்லாம்போக மிச்சப்படுத்தி, உங்களைப்போல 'ஏழை பாழை’களுக்கும், நீங்களும் நன்றாக இருக்க வேண்டும் என்று, உழைப்போடு, பணமும் உதவிய மாணவரைப் பாராட்டுகின்றேன். இப்படியே 'பகுத் துண்டு பல்லுயிர் ஒம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை' என்ற வள்ளுவர் குறள்வழி நின்று, உங்களால் ஆன உதவியை மற்றவர்க்குச் செய்ய வேண்டும், உடலுழைப்புத் தரவேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

எப்படியும் குழந்தைகளைப் படிக்கவையுங்கள்

எனக்குப் பேரவா உண்டு. பேரவா தன்னைப் பொறுத்தவரை இருப்பது தவறு; மற்றவரைப் பொறுத்து-தேசத்தைப் பொறுத்து-இருக்கலாம். ஒன்று நடக்க வேண்டும்; இந்த நாட்டில் நடக்க வேண்டும்; மற்ற இடத்தில் நடக்கிறதோ இல்லையோ, தமிழ் நாட்டில் நடக்கவேண்டும். நடக்கக்கூடியது தமிழ்நாட்டில்தான் என்பது என் எண்ணம். இந்தத் தேசத்தில் அரிசனம், மற்றவர் என்று இல்லாமல் எல்லோரும் ஒரே சனம் என்ற நிலை ஏற்பட வேண்டும். மனிதர்களே இத் தமிழ்நாட்டில் இருக்கி றார்களே ஒழிய, அரிசனமோ அறியாத சனமோ! ஐயரோ ஐயர் அல்லாதவரோ, முதலியாரோ, பிள்ளையோ இல்லை என்று சொல்லும் நிலை வரவேண்டும். எல்லா மனிதரும் ஒரே இனம், ஒரே நிறை, எல்லோரும் ஒரு குலம் என்ற காலம் வரவேண்டும் என்பது என் அவா.'உழைக்கத் துணிபவர் அதற்கு உழைக்க வேண்டும். நெஞ்சு உரம் இருக்கின்றவர்கள் அதற்கு வழி காட்டவேண்டும். ஆனால் ஒரு சிலர் காட்டினால் மட்டும் போதாது. நீங்கள் இன்று 'ஏழைபாழை'களாக இருந்தாலும், அரிசனங்களாக இருந்தாலும், நாளை அந்த அரி என்பதனை நீக்கிவிட்டு மக்கள் ஆதல் வேண்டும். அதற்கு உங்கள் கடமையைச் செய்ய வேண்டும். என்ன கடமை? நாங்கள் என்ன ஆலையிலே, வயலிலே உழைக்கவில்லையா என்று கேட்கலாம். நீங்கள் உழைக்கிறீர்கள்; உண்மைதான். ஆனால், நீங்கள் உழைப்பதோடு இன்னொன்றும் செய்ய வேண்டும்? உங்கள் குழந்தை குட்டிகளைப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்ப வேண்டும். எவ்வளவு துன்பம் இருந்தாலும், வாயைக் கட்டி, வயிற்றைக் கட்டிப் பள்ளிக்கூடம் அனுப்பவேண்டும். அங்கே சம்பளம் கொடுக்கவேண்டிய தில்லை. புத்தகம் வாங்கப் பணம் கொடுக்கவேண்டியது இல்லை. உடைக்கும், இப்படி மாணவர்கள் வந்து ஒத்தாசை செய்கிறார்கள். இந்த ஒத்தாசை வீணாகக்கூடாது. ஒரு கட்டுத்திட்டம் பண்ணிப் பள்ளிக்கு இந்தக் குழந்தைகளை யெல்லாம் அனுப்ப வேண்டும். எவ்வளவு காலம்? ஒரு வருடம் 2, 3, 4, 5 வருடம் அனுப்பினால் போதுமா? போதவே போதாது. உயர்நிலைப்பள்ளி வகுப்புகளில் வெற்றி பெற்றால் போதுமா? அதுவும் போதாது. உங்கள் பையன்கள் எல்லாம் கல்லூரியில் படிக்கிறவரை தாக்குப் பிடித்துத் துணிவாக, உற்சாகமாகத் தட் டிக்கொடுங்கள். உங்கள் துன்பம் உங்களோடே தொலையட்டும். அவர்கள் வாழ்வாவது நன்றாக இருக்கப் படிக்க வைக்கவேண்டும்.

இழிவு நம் தலைமுறையோடு தொலையட்டும்

"எல்லோரும் கல்லூரியில் படித்தால் மற்றவர்கள் என்ன ஆவது? அத்தனே பேருக்கும் வேலை எங்கே? என்றெல்லாம் கேட்பார்கள். எனக்கே நான் பதில் சொல்லிக்கொள்கிறேன். அதாவது நாங்கள் உயர்ந்த அலுவல் பார்க்கிறோம். எங்கள் அடுத்த தலைமுறை உங்கள் வேலையைச் செய்யட்டும்; அப்போது நீங்கள் அந்த அலுவல் பாருங்கள்; மாற்றிக்கொள்வோம். அலுவல்கள் கொஞ்சம்தான் என்றால், ஏன் பார்த்தவனே பார்க்க வேண்டும்? ஏன்? உயர் கல்வி ஒன்றால் எல்லோரும் சமமாய்ப் போகவேண்டும். சட்டத்தால் சொல்லால் சமமாகலாம். ஆனால் மெய்யான சமத்துவத்தை ஏற்படுத்தக் கல்விதான் துணைசெய்யும். ஆகையால் உங்கள் பிள்ளைகள் நிறையப் படிக்கவேண்டும். இவர்கள் கொடுக்கும் உதவியையும் பெற்றுப் பயன்படுத்தி, நல்ல காலத்தையும் நல்ல சூழ்நிலையையும் வீணாக்காமல், சண்டை சச்சரவில் போக்காமல் நம்மையெல்லாம் யார் இந்த நிலைக்குத் தள்ளினார் என்ற சவப் பரிசோதனையில் ஈடுபடாமல், `கீழே இருக்கிறோம் . மேலே போகவேண்டும்; விரைவில் போகவேண்டும்; நம் தலைமுறையிலேயே மேலுக்கு வர வேண்டும்' என்று பிடிவாதமாக முன்னேறவேண்டும். கைகொடுக்க இப்படிப் பலர் இருக்கும்போதே அவர்கள் கொடுக்கும் கையைப் பிடித்துக்கொண்டு நாம் முன்னேறவேண்டும். எனக்குப் பல விருப்பங்கள் உண்டு. பலவற்றைச் செய்ய எண்ணுகிறேன். என்னைப் போன்றவர்கள்மட்டும் நினைத்தால் போதாது. செல்வரும் செல்வாக்கு உள்ளவரும் ஆதரவு தரவேண்டும்.

இன்றைய மாணவர்கள் எதிர்காலத்திலும்
வழிகாட்டிகளாய் வாழவேண்டும்

மாணவத் தோழர்கள் இங்கே எப்படி எடுத்துக்காட்டாக இருக்கிறார்களோ, அதைப்போலவே, மெய்யாக, ஓரினம், ஓர் நிறை ஏற்பட- பேச்சிலேமட்டும் அல்லாமல், காரியத்திலே செய்ய-முற்படவேண்டும். இந்த மாணவர்கள், ‘எப்படி மாற்ற முடியும்' என்று சொல்லாதவர்கள்; 'பல காலப் பழக்கமாயிற்றே’ என்று சொல்லாதவர்கள். அப்பா, அம்மா பார்க்காத சினிமாவையெல்லாம் பார்க்கிறோமே, அதற்குமட்டும் அப்பா அம்மாவுக்குப் பயப்படுவதில்லையே! ஆனால் ஒரே இனமாக இருக்கமட்டும் சாக்குப் போக்குச் சொல்லலாமா? மற்றவர்கள் எப்படிச் சொன்னாலும், மாணவர்கள் சொல்லக்கூடாது. இங்கே இப்போது வழிகாட்டிகளாய் இருப்பதுபோல, ஒரே சமுதாயம் ஏற்படுவதற்கு வாழ்க்கையிலும் வழிகாட்டவேண்டும் என்று இளைஞர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

எது உத்தியோகம் ?

`நீங்கள் படிக்கவேண்டும். படித்தவர்கள் எல்லோரும் அரசியலில் அலுவல் பார்க்கவேண்டும்' என்றால், எழுதுவதுதான் உத்தியோகம் என்றும், அதிகாரம் பண்ணுவதுதான் உத்தியோகம் என்றும் எண்ணிவிடாதீர்கள். அந்த மாதிரி உத்தியோகம் விரைவில் குலைந்துபோகும். தொழில் செய்வதும் உத்தியோகம்தான்; பாடுபடுவதும் உத்தியோகம் தான். இயந்திரம் ஒட்டுவதும் உத்தியோகம்தான்.

பசியும் படிப்பும்

நம் நாட்டில் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பினால் மட்டும் போதாது. கட்டுப்பாடு பண்ணியோ நல்லதனமாகவோ, உற்சாகம் ஊட்டியோ பள்ளிக்குக் கொண்டுவந்து விட்டால்மட்டும் என்ன பயன்? பள்ளிக்குப் போகும் பிள்ளைக்குப் பசி இல்லாமல் இருந்தால்தானே படிப்பு வரும்? பசி வந்திடப் பத்தும் பறந்துபோம். எல்லோரும் இப்படித்தான் சொல்கிறார்கள். படித்தவர்களுக்கு நன்றாகத் தெரியும். ஆனால் அதே படித்தவர்கள் ஒன்றை எதிர்பார்க்கிறார்கள். அதாவது பிள்ளைகளுக்குப் பசித்தாலும் படிப்புச் சொல்லிக்கொடுக்க முடியும் என்று. அவர்கள் படித்த பாடத்தை அவர்களே மறந்துவிட்டார்கள். பசித்த பிள்ளைகளுக்கு எப்படிப் பாடம் சொல்லிக்கொடுப்பது? நாம் வேண்டுமானல் கிராமபோன் மாதிரி சொல்லிக்கொண்டே யிருக்கலாம். ஆனால் பசித்த பிள்ளைக்கு ஏறுமா? பயந்து வேண்டுமானால் கேட்டுக்கொண்டிருக்கும். மூளையில் ஏறுமா? ஏறவே ஏறாது. ஆதலால் அது தவறிப் போகிறது. தரம் குறைந்து போகிறது. '`இதெல்லாம் படிக்குமா? உருப்படுமா?" என்று பின்னால் சொல்கி றார்கள், நிரம்பப் பெரியவர்கள். நம்மால் அப்படிச் சொல்ல முடிவது இல்லை. எல்லோரும் முன்னுக்கு வருவார்கள். எப்பொழுது பசி இல்லாமல் குழந்தைகள் வயிறாரச் சாப்பிட்டால்; அப்போதுதான் ஆசிரியர் சொல்லும் படிப்பு ஏறும்; பயன் விளையும்; மேல் வகுப்புக்குப் போகும். ஆதலால் இல்லாத குழந்தைகட்குச் சோறு போடவேண்டும். எதற்காக?

பசியும் பாடும்

படிபபதறகுமட்டும் அன்று. இன்றைக்குப் பச்சைக் குழந்தை; 15 வருடத்திலே இந்தத் தேசத்து ராசா. குடித்தலைவனும் இங்கேதான் இருக்கிறான்; படைத்தலைவனும் இங்கேதான் இருக்கின்றான். அன்றைக்கு நல்ல முரட்டு ஆளாகப் பட்டாளத்திற்கு வேண்டுமென்றால்-சின்ன வயதிலே பட்டினி போட்டு விட்டு, இருபத்தைந்து வயதிலே பட்டாளத்திற்கு ஆள் தேடினால் -எங்கே கிடைப்பார்கள்? படிப்பு வரநல்ல உடல் வலிமை இருக்க-குழந்தைகளுக்கு உணவு போடவேண்டும். இதுபற்றி அரசு எண்ணிவருகிறது. செய்வதற்கு நாமும் கை கொடுக்கவேண்டும். ஒரு கை தட்டினால் ஒலி வருமா? இரண்டு கை தட்டினால்தானே ஒலி? அதைப்போல அரசினர் செய்தாலும், ஒத்துழைப்பும், உடல் உழைப்பும் கொடுக்க வேண்டும். அவர்கள் கொடுக்கிற உதவியைப் பெற்று, நமது நாட்டில் எல்லாக் குழந்தைகளும் படித்துப் பட்டினி இல்லாமல் இருக்கப் பார்த்துக் கொள்வது நமது பொறுப்பு.

நல்ல பழக்கமும் ஒழுக்கமும்

பிள்ளைகள் நன்றாகப் படித்தால்மட்டும் போதுமா? தொழிலைக் கற்றுக்கொண்டால் மட்டும் போதுமா? மனிதனை மனிதன் ஆக்குவது எது? மனிதனுக்கும், ஆடுமாடுகளுக்கும் வேறுபாடு என்ன? ஆடுமாடுகள் நினைத்த இடத்தில் நினைத்த செயலைச் செய்யும். மனிதன் நாகரிகமானவன். மெய்யான நாகரிக மனிதன், அது அதை அந்த

– 61 —

அந்த இடத்தில்தான் செய்வான். ஆடுமாடு மாதிரி நினைத்த இடத்தில் மலம் இருக்கவோ, சிறுநீர் கழிக்கவோ மாட்டான். அதுதான் வேறுபாடு. அது எப்படி வரும்? இந்தக் குழந்தைகளுக்கு நல்ல பழக்கம் வரவேண்டும். என்ன பழக்கம்? சுத்தமான பழக்கம், சுகாதாரமான பழக்கம். இதையும் பார்த்துக்கொள்ள வேண்டும். படிப்புச் சொல்லிக்கொடுத்தால்மட்டும் போதாது; இங்கே வருகிற மாணவர்கள் இவற்றையெல்லாம் பார்த்துக்கொள்ள வேண்டும். பாடம்மட்டும் அன்று; விளையாட்டு மட்டும் அன்று; நல்ல ஒழுக்கம், நல்ல பழக்கம் வரவேண்டும். படித்த வன் என்றால், பார்த்த இடத்திலே சொல்லும்படி இருக்கவேண்டும். மறைவான இடத்திலே, யாருக்கும் ஒட்டாத இடத்திலே எவன் இருக்கிறானோ' அவன் படித்தவன். அக்கம் பக்கம் பார்த்துவிட்டு ”யார் நம்மைக் கேட்கிறார்கள்” என்று சாலை ஓரமாக இருக்கிறானே அவன் அறிவில்லாதவன். அவனை மனிதன் என்று நினைக்காதீர்கள். இந்த நல்ல பழக்கம் குழந்தைகளுக்கு வந்துவிட்டால் பத்து வருடத் தில் நம் நாட்டில் இருக்கும் கெட்ட பழக்கங்கள்-கேவலமான பழக்கங்கள் தொலைந்துவிடும். இந்தத் திருத்தம் குழந்தைகளிடத்தில் வரப் பாடுபடவேண்டும். மாணவத் தோழர்கள் அதற்கும் பாடுபட வேண்டும்.

சுயமுயற்சி வேண்டும்

'கொடுக்கிறவர்கள் கொடுத்துக்கொண்டே யிருப்பார்கள்; நாம் பெற்றுக்கொண்டே யிருப்போம் என்றுமட்டும் எண்ணவே கூடாது. நாமும் நம்முடைய முயற்சியில் ஈடுபடவேண்டும். நம் தலைமுறையிலே நம் பெரியவர்கள் கையேந்தி நின்றால்கூட, வருகிற தலைமுறையிலே நம் குழந்தைகள் கையேந்தி நிற்கக் கூடாது. தங்கள் காலிலேயே நிற்க வேண்டும். சின்னக் குழந்தை தவழ்கிறது. நடக்க ஆரம்பிக்கும்பொழுது என்ன பண்ணுகிறோம்? நடைவண்டி பண்ணிக் கொடுக்கிறோம். அதைப் பிடித்து நடக்கி றது. காலமெல்லாம் நடைவண்டியையே பிடித்து நடந்தால் என்ன சொல்வோம்? "ஐயோ என் குழந்தை சப்பாணியாகப் போனது, நன்றாய் வளரவில்லை” என்று சொல்வோம்; திருப்தியடைவ தில்லை. அது போல, நடைவண்டிமாதிரி மாணவர்களும், மற்றவர்களும் உங்கட்கு ஒத்தாசை செய்தால் ஒரு தலை முறைக்கு ஒத்தாசை செய்யலாம். அடுத்த தலை முறைக்கும் இந்தமாதிரி யாராவது கொடுப்பார்களா என்று கை ஏந்திக்கொண்டிருந்தால், அது தேய்ந்து போன சமூகம், சப்பாணிச் சமூகம் என்றுதானே பொருள்? அப்படி ஆகக்கூடாது நீங்கள். உங்களிடம் உறுதி இருக்கிறது; ஊக்கம் இருக்கிறது. அறிவு சொல்லப் பலர் வருகிறார்கள். அவர்கள் சொல் வதைக் கேட்டுப் பிடிவாதமாக உழைத்து, வம்பு துன்புக்குப் போகாமல் நல்லபடியாக நீங்கள் முன்னேற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இங்கு வர வாய்ப்பளித்த உங்கள் எல்லோருக்கும் என் நன்றியும் வணக்கமும்.


O



(பி. எஸ். ஜி. கலைக் கல்லூரியின் சமூகப் பணி சங்கத்தின் பணிக் களமாகிய கிருஷ்ணராயபுரத்தில் ஆற்றிய சொற்பொழிவு.)