பூவும் கனியும்/முதியோர் கல்வி—வழியும் வகையும்

விக்கிமூலம் இலிருந்து
IV
முதியோர் கல்வி - வழியும் வகையும்

மதிப்பிற்குரிய கனம் அமைச்சர் அவர்களே

பெரியோர்களே, தோழர்களே !

இன்று இந்த இலக்கியப் பண்ணையின் கண்காட்சியைத் திறந்து வைக்கும்படி என்னை அழைத்துப் பெருமைப்படுத்தி யிருக்கிறீர்கள். உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி. இந்த இலக்கியப் பண்ணே கோவை மாநகரிலே நடந்தது பொருத்தம் என்று. அமைச்சர் அவர்கள் சொன்னார்கள். ஏன் ? கோவை நகரம் தொழிலுக்குமட்டு மன்று, உழவுக்குக்கூடப் பேர்போனது. பாதாளத்தில் உள்ள தண்ணிரைக் கொண்டுவரும் உழவர்களையும் இந்தக் கோவை மாவட்டத்திலே காணலாம். நிலம் ஈயாது என்று சொல்லி விட்டுவிடாத உணர்ச்சியும் ஊக்கமும் பெற்று, முயற்சியில் தளராத மக்களை இங்கே பார்க்கலாம். இவ்வாறு தொழில் திறமை மிக்க மக்கள் நிறைந்த இடத்தில் கொண்டாடப்படும் இவ்விழாவும் பொருத்தமான முறையிலே கனம் அமைச்சர் அவர்கள் தலைமையில் கொண்டாடப்படுகிறது. கனம் அமைச்சர் அவர்களை உழவு அமைச்சர் என்றுமட்டும் அழைப்பித ழிலே குறிப்பிட்டுள்ளீர்கள்; ஒன்று மறந்துவிட்டீர்கள். அவர் உழவு அமைச்சர்மட்டுமல்லர், தொழில்துறை அமைச்சருங்கூட; பாரதி யார் சொன்னதுபோன்று உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்கின்ற முறையிலே, இரண்டு துறையையும் ஒரு முகமாக நடத்துகிற அமைச்சர். 'இலக்கியத் தொழிற்சாலை’(Literary Workshop) என ஆங்கிலத்திலே சொல்ல, `இலக்கியப் பண்ணை' என்று நாம் சொல்ல, இரண்டுமே பொருந்துகின்ற வகையிலே, நல்ல பணியாற்றிய இந்தக் கூட்டத்திற்கு அமைச்சர் அவர்கள் தலைமை தாங்கியது மிகப் மிகப் பொருத்தமே.

முயற்சியால் முடியாதது ஒன்றுமில்லை

இந்தக் கண்காட்சியை நான் திறந்துவைக்கப் போகிறேன். நீங்கள் நன்முயற்சி எடுத்து, நல்ல முறையிலே மடல்கள், சுவடிகள், நூல்கள் முதலியன ஆக்கியுள்ளீர்கள். இந்தப் பண்ணையின் முயற்சி முதல் முயற்சி; தமிழிலே முதல் முயற்சி. உங்களில் ஒருவரைத் தவிர, மற்றவ ரெல்லாம் இந்த முயற்சியிலே முதன்முதலாகப் பங்குகொள்கிறீர்கள் என்று சொல்வேன். இது முதல் முயற்சிமட்டு மன்று; பலருக்கு முதற்பயிற்சியுங்கூட. இதுவரையில் முதியோர் கல்வியில் ஈடுபடாத பலர், பல துறையில் ஆடிக் கொண்டிருந்த பலர், இது முடியுமா முடியாதா என அரை மனத்தோடு உள்ள பலர் இதனைத் தொடங்கினீர்கள். ஆனால், எனக்குமட்டில் ஒரு மன உறுதியுண்டு. பல பேர்க்குத் தங்கள் திறமை தெரிவதில்லை. நெருக்கடி வரும்போதுதான் அந்த ஆற்றல் வெளி வருகிறதே ஒழிய முன்கூட்டித் தெரிவது இல்லை. இதுதான் மனிதனிடம் உள்ள தனிப் பெருஞ்சிறப்பு. இந்தப் பெருஞ் சிறப்பைப் பற்றிய நம்பிக்கை எனக்கு உண்டு. ஆதலால் பண்ணையில் தொழில் புரிய நீங்கள் இறங்கியபின், நல்ல பலன் கிடைக்கும் என்றே நான் உறுதிகொண் டிருந்தேன்.

நீங்கள் எல்லாம் இந்தத் துறைக்குப் புதியவர்கள். ஆதலால் உங்களைத் தேர்ந்தெடுத்த சிறப்போ இழிவோ என்னையே சாரும். துணிவாகத் தேர்ந்தெடுத்தேன். நீங்கள் எல்லாம் ஒற்றுமையாக வாழ்ந்ததுமட்டு மன்றி, நல்ல முறையிலே பலனுள்ள பணியாற்றி நல்ல பலனை அறுவடை செய்திருக்கிறீர்கள். அதைக் காண எனக்குப் பூரிப்பு ஏற்படுகிறது. அதற்காக உங்களைப் பாராட்டுவதற்கு முன்பு என்னைப் பாராட்டிக்கொள்கிறேன். யாரும் குறை பட்டுக்கொள்ள முடியாத அளவு ஒவ்வொருவரும் நற்பணியாற்றி யுள்ளளீர்கள். அப்படி அமைந்ததைக் கண்டு என்னையே பாராட்டிக்கொள்கிறேன். உங்கள் செயல் கண்டு மகிழ்கிறேன்.

முழு வளர்ச்சி பெற்ற மனிதன் யார்?

42 நாட்கள் வேறு வேலேயின்றி உழைத்துள்ளீர்கள்; சிறப்புத்தான். அதைவிடப் பெரிய சிறப்பு ஒன்று உண்டு. மனிதன் - அதற்காக நியமிக்கப் பட்டபோது - ஒரு பணியினை ஆற்றுவது பெரி தன்று. ஆனால், பல வேலைகட் கிடையிலும் ஏதாவது ஒரு பொதுத் தொண்டு செய்தால்தான் அதற்குத் தனிச் சிறப்பு உண்டு. அதுதான் பெருஞ் சிறப்பு. நீங்கள் ஈடுபட்டிருக்கும் துறைகளிலே, கல்லூரிகளிலே, பள்ளிகளிலே, மேற்பார்க்கும் வேலைகளிலே வஞ்சனையற்ற நிலையில் ஈடுபட்டு, விரும்பத் தக்க முறையில் பணியாற்றினால் போதும் என்றுமட்டும் மனநிறைவு பட்டுவிடக்கூடாது. ஒவ்வொருவரும் தங்கள் சம்பளத்திற்காகமட்டும் செயலாற்றக் கூடாது. ஒவ்வொருவரும் ஏதாவது ஊதியம் அற்ற, ஆனால் தேவையான ஒரு பொதுநலத் தொண்டினையும் செய்ய முற்படவேண்டும். அத்தகைய தொண்டினைச் செய்யமுற்படாத மனிதன், எவ்வளவு திறமையுடைய அலுவலனாக இருப்பினும், எவ்வளவு திறமையுடைய நிபுணணாக இருப்பினும் அவன் முழு வளர்ச்சி பெற்ற மனிதன் அல்லன் என்று தா ன் கருதுகிறேன். எனவே, ஒவ்வொருவரும் பொதுநலச் சேவையிலே ஈடுபட வேண்டும்.

ஓய்வு எல்லோருக்கும் உண்டு

உங்களுக்கு நிறைய ஓய்வு நேரம் உண்டு. இல்லை என்று நீங்கள் சொன்னால், உங்கள் நேரத்தை ஒழுங்குபடுத்திக்கொள்ள வில்லை என்றுதான் சொல்வேன். வேலை மிகுதி என்று சொல்லிவிட முடியாது. காலத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டால், அதிலும் கொஞ்சம் பிடிவாதம் ஏற்பட்டுவிட்டால், கண்டிப்பாக ஒய்வு உண்டு. அந்த ஓய்வு நேரத்தை எதிலே செலவு செய்யலாம் என்று சிந்திக்க வேண்டும். நமது தொழில் ஆசிரியத் தொழில்; கல்வி கற்பிக்கின்ற தொழில்; இந்தத் தொழிலின் தொடர்பாக நாம் செய்யவேண்டிய வேலைகள்-சேவைகள்-பள்ளிக் கூடத்திற்கும் கல்லூரிக்கும் அப்பாலும் உண்டு. ஏன் அப்படிச் சொல்கிறேன் என்றால், நம் நாட்டில் தற்குறிகள் மிகுதி. இது உங்களுக்குத் தெரியும். அந்த நிலையைப் போக்கப் பாடுபடவேண்டும்.

படிப்பும் அறிவும்

படித்தவர்கள் எல்லாம் அ றி வாளி கள் என எண்ணிக்கொண் டிருக்கிறோம். இல்லை, இல்லை. படிக்காதவர்களிலும் அறிவாளிகள் உண்டு. அவர்களில் பலர் நம்மைவிடச் சிறந்த அறிவாளிகள் என்பதை நான் உங்களுக்கு முன்னொரு சமயம் சொன்னேன். நீங்கள் முதியோர்களிடம் செல்லும்போது இதனை உணர்வீர்கள் என்றும் கூறினேன். உங்களுக்குப் புது அறிவும் ஏற்படப்போகிறது என்றும் சொன்னேன். அப்படியே கண்டீர்கள் என உங்கள் தலைவர் அறிக்கையில் படித்தார்கள். அது எனக்கு வியப்பாக இல்லை; உங்களுக்கு வேண்டுமானால் வியப்பாக இருந்திருக்கலாம்.

அவர்கள் படிக்காதவராக இருக்கலாம்; ஆனல் அறிவாளிகள். அதை மறந்துவிடக்கூடாது. அவர்கள் முதியோராக இருக்கலாம்; ஆனால், அனுபவம் உடையவர்கள். ஆகவே, அவர்களுக்கு அறிவும் அனுபவமும் நிறைய இருக்கின்றன. ஆனால் ஒரு வித்தைமட்டும் அவர்களுக்குத் தெரியாது. என்ன வித்தை எழுத்தைப் புரிந்துகொள்கிற வித்தை. அதுதான் அவர்களுக்குத் தெரியாது. நாம் அவர்களுக்கு அதில் ஊக்கம் அளித்துவிட்டால், விழிப்பு ஏற்படுத்திவிட்டால், அவர்கள் கண்களைத் திறந்து-விட்டால் அவர்களால் பெருங்காரியங்களைச் செய்ய முடியும்.


முதியோர் கல்வி எதற்கு ?


ஏன் இதனைச் செய்யவேண்டும் என்ற கேள்வி கூட அடுத்து ஏற்படுகிறது. பலர் முதியோர் கல்வியைப்பற்றி ஐயுறுகிறார்கள். அது, பன்னிரண்டு மணிக்குமேல் திரும்பவும் சூரியனை உச்சிக்குக் கொண்டுவர முயல்வதுபோல் வீணான முயற்சி என்றுகூடச் சொல்கிறார்கள். `அவர்கள் தலைமுறையில் எப்படியோ தொலைந்து போகிறது' என்று இருபது வருடமாகச் சொல்லிவரும் வாதமும் எனக்குத் தெரியும். படிக்கும் வயது வந்த குழந்தைகளைப் பார்த்துக்கொண்டால் போதும், முதியோர் கல்வி யைப்பற்றிக் கவலேயே வேண்டாம், அவர்களைத் திருத்த முடியாது. நாய் வாலைத் திருத்திய மாதிரி தான் ஆகும். இன்னும் 16 பேரையே சரியாகப் படிக்கவைக்க முடியாத நிலையில், 84 பேரைப் படிக்க வைப்பது எங்கே? ஆகவே முடிந்த காரியத்தில் ஈடுபடுவோம்' என்று சொல்வ தெல்லாம் சரியாகாது. முதியோர் கல்வியும் நடைபெற வேண்டும்; இளைஞர் கல்வியும் நடைபெற வேண்டும். எந்த வேகத்தில் நடைபெறவேண்டும் என்றால், மக்கள் ஆதரவு எந்த வேகத்தில் இருக்கிறதோ, அந்த வேகத்தில் அதனைச் செய்தல்வேண்டும். முதியோர் கல்வி மெல்ல நடந்திருக்கிறது என்றால், இன்னும் அவர்களுக்கு விழிப்பு வரவில்லை, கல்வியின் இன்றியமையாமையை அவர்கள் தெரிந்துகொள்ள வில்லை என்பதுதான் பொருள்.

இளைஞர்களுடைய கல்வியைமட்டும் கவனித்துக்கொண்டு ஓரிரு தலைமுறையிலே, கல்லாத முதியோர் இறந்த பிறகு, எல்லோரும் கல்வி கற்ற ஒரு நல்ல தமிழ்நாடு இந்தியாவிலே ஏற்பட்டுவிடும் என்று எண்ணினால், அது அலை ஒய்ந்த பிறகு கடலில் தலை முழுகலாம் என்று எண்ணுவது போலாகும். ஆகையால் முதியோர் கல்வி வளரவேண்டும்; வளர்ந்துகொண்டே யிருக்க வேண்டும். ஏன் என்றால், நம் நாட்டு மக்களை மன்ன ராக்கிவிட்டோம்; மன்னருக்குப் படிப்பு வேண்டும்.

நம் நாட்டு மக்கள். அறிவுடையவர்கள்; ஆதலால்தான் இந்த அளவிற்காவது குடியாட்சி ஒழுங்காக நடைபெற்று வருகிறது. மற்றப்படி எப்படி இருந்தபோதிலும் தமிழ் நாட்டிலே நல்ல அறி வுடைய மக்கள் மட்டுமல்ல, வாழையடி வாழையாக நிதானத்திலே சிறந்த மக்கள், சிந்தனையோடு கூடி வாழுகின்ற மக்கள் இருக்கிறார்கள். அவர்கள் நிறைய அறிவுபெற்று, நிதானத்தோடு நிறைய உணர்ச்சியும் உற்சாகமும் பெற்றுத் தாங்களே முன் னுக்கு வந்து, பொறுப்பினை ஏற்றுக்கொள்ளும் காலம் வந்தால்தான் மெய்யான குடியாட்சி ஏற்பட முடியும்.

குடியாட்சி பெற்றது நம்மில் பலருக்குப் பெரிய பெரிய அலுவல்கள் கிடைப்பதற்கன்று. வெள்ளைக்கார னிடத்தில் இருந்த பெரிய அலுவல்கள் எல்லாம் நமக்குக் கிடைக்கிற தென்றால் , அது போதாது. குடியாட்சி நமக்குப் பயன்படவேண்டும். மூலை முடுக்குகளி லெல்லாம் - குடிசை குப்பை மேடுகளிலெல்லாம் என்ன செய்வதென்று தெரியாமல் குந்திக் கிடக்கிறானே, அவனுக்குப் பயன்படவேண்டும். எப்படிப் பயன்பட வேண்டும் என்பதை நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதில்லை. நீங்கள் என்னைக் காட்டிலும் நன்கு அறிவீர்கள். என்னைவிட அறிவு நிறைந்த ஒருவர், உண்மையைத் துணிச்சலாகப் பேசுகின்ற ஒருவர் பாரதியாராவார்; அவர்,


வெள்ளத்தின் பெருக்கைப்போல் கவிப்பெருக்கும்
கலைப் பெருக்கும் மேவு மாயின்
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்

விழிபெற்றுப் பதவி கொள்வார்.


என்று கூறுகிறார். அந்தக் குருடரெல்லாம் விழி பெற்றுப் பதவி பெறுவதுதான் குடியாட்சியின் இலட்சியம். அதற்காகத்தான் நம் அருந்தலைவர்க ளெல்லாம் அரும்பாடு பட்டுப் பல ஆண்டுகள் தியாகம் செய் தார்கள். அந்தத் தியாகம் பலன் பெறவேண்டு மென்றால், நாம் அவ்வளவு பெரிய தியாகம் செய்ய வேண்டியதில்லை. ஆனால் சேவை செய்ய வேண்டும். பிடிவாதமான சேவை, பல நாள் செய்ய வேண்டும். முதியோர் கல்வியில் நாம் எல்லோரும் ஈடுபடவேண் டும். உங்களுக்குக் காசு கொடுக்க முடிகிறதோ இல் லேயோ, உழைப்பைக் கொடுக்க முடியும். ஒவ்வொரு வரும் சிலருக்காவது கல்வி கற்பிக்க வேண்டும். நீங்கள் ஒவ்வொருவரும் நம் பங்குக்கு என்ன செய்திருக்கிறோம் என்று எண்ணிப்பார்க்க வேண்டும்.

நம்மில் யாரும் தங்கள் பொருளாலேயே படித்து விடவில்லை. ஊரார் வரிப் பணத்தையும் சேர்த்துத் தான் பள்ளிகள், கல்லூரிகள் நடைபெறுகின்றன. நாம் கட்டும் சம்பளம், கல்விக்காக நாட்டில் ஏற்படும் செலவில் ஒரு பகுதிதான். யார் வரிப் பணம் கொடுத்தார்களோ, அவர்கள் இன்னும் படிக்காமல் இருக்கிறார்கள், கண் விழிக்கா திருக்கிறார்கள். அவர்களின் கண்ணைத் திறந்துவிடுவது நம்முடைய கடமையாகும்.

பயிற்சியின் பயன் துருப்பிடிக்கக் கூடாது

நல்ல பயிற்சியைப் பெற்றுள்ள நீங்கள் அதனைத் துருப் பிடிக்கவிடாமல்-'ஓய்வு இல்லை’ என்று சொல்லாமல்-உங்கள் பணிகளையும் செய்துவிட்டு, அதற்கு மேலும் ஓய்வு இருப்பதனை உணர்ந்து, புதுப் புதுச் சுவடிகளையும் நூல்களையும் வெளிக் கொணர வேண் டும். பயிற்சி பெற்று அதனைப் பாழாக்கிவிட்டால் என்ன பயன்? எங்கள் முயற்சி வீண், உங்களுடைய காலம் விண்; பணம் வீண்; அப்படி இல்லாமல் மேலும் மேலும் நூல்களை உருவாக்க வேண்டும்.

முதியோர் கல்வி பரவ வழி

நூல்கள் வெளியிடுவதுமட்டும் போதாது. முதியோர் கல்வியும் பரவுதல் வேண்டும். 'இளைஞருக்கே படிப்புச் சொல்லிக்கொடுக்க முடியவில்லையே, முதி யோர் கல்விக்குப் பணத்துக்கு எங்கே போவது, எத்தனை கோடி சம்பாதிப்பது' என்று கணக்குப் போட்டால், அப்படித்தான் கணக்குப் போட முடியும். ரூபாய்க் கணக்குத் தேவையில்லை. ஏதோ 15 நாள் 20 நாள் கிராமப்புறங்களிலோ அல்லது நகரங்களிலோ தங்கியிருந்து ஓய்வுக் காலங்களிலே 4 பேருக்காவது சொல்லிக்கொடுக்கின்ற முயற்சியில் ஈடுபட்டால்தான் நாம் முன்னேற முடியும். எவ்வளவு சம்பளம் கொடுப்பார்கள்' என்று எதிர்பார்ப்பது தலைகீழ்ப் பாடமாகத்தான் முடியும்.

முதியோர் கல்வி மற்ற நாடுகளில் எப்படிப் பரவியது என்று நீங்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும். முதியோர் கல்வியில் முன்னணியில் நிற்பதாக ஸ்காண்டிநேவியன் நாடுகளைத்தான் கூறுவார்கள். இவற்றில்தான் `மக்கள்’ பள்ளி (Folk High School) என்று சொல்லுகிற பெரியோர் பள்ளிக்கூடங்கள் இருக்கின்றன. அவைகளை யார் ஆரம்பித்தார்கள், அரசியலார் எவ்வளவு செலவு செய்தார்கள் என்பவைகளைப் பற்றிய அறிக்கைகளைக் கொண்டு பார்த்தால், ஒன்று தோன்றும். ஏதோ ஒருசில வெறியர்-முதியோர் கல்வி பரவவேண்டும் என்று உணர்ச்சி முறுக்குக்கொண்டவர்கள்-தம்மோடு பிறந்த எவரும் படிக்காமல் இருக்கக் கூடாது என்ற உணர்ச்சி உடையவர்கள்-தாங்கள் சாவதற்கு முன்பே எல்லோரும் படித்துவிட வேண்டும் என்று எண்ணியவர்கள்-இவர்களது முயற்சியால்தான் அவைகள் உருவாயின. நாட்டு மக்கள் அவர்களுக்கு இயன்ற வகை யிலே அளித்த பொருளுதவியைக் கொண்டு, அரசியலார் கொடுத்த சிறு உதவியையும் பெற்று அந்நாடுகளி லெல்லாம் முதியோர் கல்வி பரவி வந்திருக்கிறது. காலம் சென்ற சத்தியமூர்த்தி அவர்கள் "இந்தியா பெரிய நாடு, 30 கோடி மக்களும் ஒரே சமயத்தில் ஒருமுகமாக எச்சில் துப்பினால் ஒரு கடலாகி வெள்ளைக்காரரை மிதக்கச் செய்துவிடும்" என்று அடிக்கடி கூறுவார்கள். அதாவது அவ்வளவு பெருங் கூட்டமாக வுள்ள மக்கள், கூட்டாகச் சிறு எச்சிலைத் துப்பினால்கூட அது பெரும் .வெள்ளமாகும். என்பதை யன்றோ அது காட்டுகிறது? மேலும், நமது இந்தியா தருமத்திற்குப் பெயர்போன நாடு. ஏதாவது தருமம் செய்துகொண்டே இருக்கும் நாடு. ஆனால் புதிய முறையிலே, காலத்திற்குத் தேவையான வகையிலே, தேசத்திற்கு இன்றியமையாத நிலையிலே, அறம்செய்யக் கற்றுக்கொள்ள வேண்டும். இந்த முதியோர் கல்வித் தானத்திற்காகத் தங்கள் பொருளை, உழைப்பை, முயற்சியைத் திருப்பிவிட்டால், வெற்றி விரைவிலே கிடைக்கும். ஸ்காண்டிநேவியன் நாட்டிலேமட்டு மன்று, இங்கிலாந்திலும் முதியோர் கல்வி பரவிய முறையும் இதுபோலத் தான். இங்கிலாந்தில் உள்ள முதியோர் பள்ளிகள் ஆட்சியாளரால் - அரசியலாரால் ஏற்படுத்தப்பட்டவை யல்ல. எந்த நாட்டிலும்-எங்த ஆட்சியிலும் புது முயற்சிகள் எல்லாம் நம்பிக்கையுடைய, பிடிவாதம் உடைய ஒரு சிலரால்தான் தொடங்கப்பெற்று நடைபெற்றன.

இந்த இலக்கியப் பண்ணையிலே இவ்வளவு விளையும் என்று தெரிந்து, அரசியலாரும் பொதுப் பணத்துக்குப் பொறுப்பாக உள்ளவரும் ஓரளவுக்குச் செலவு செய்யமுடியுமே தவிரப் புது முயற்சியிலேயே ஏராளமாகப் பொதுப் பணத்தை எடுத்து விருப்பப்படி செலவு செய்துவிட முடியாது. இங்கிலாந்திலே சட்டத்தாலோ, அரசியலாரின் செலவினாலோ முதியோர் கல்வி பரவவில்லை. ஆனால் தெளிவான அறிவு படைத்த ஒரு சிலரின் விடாமுயற் சியாலே-உழைப்பினாலே அங்கு முதியோர் கல்வி பரவியது. அது போலத்தான் இங்கும் பரவவேண்டும் என்பது என் அவா. 1952-ஆம் ஆண்டில் தென் கிழக்கு ஆசியக் கல்வி மாநாடு பம்பாயில் நடந்தது. ஐந்து வார காலம் அங்குத் தங்கி, அதில் பங்கு கொண்டேன். அப்போது பம்பாயில் முதியோர் கல்வி எப்படி நடக்கின்றது என்று கணக்கிட்டுப் பார்த்தேன். அவர்கள் நம்மைவிட மிகுதியாகத்தான் செய்கிறார்கள். நாம் எல்லாவற்றிற்கும் அரசியலாரைக் கேட்கின்றோம். முழுக்க முழுக்க அரசியலார் உதவி பெற்று, நாம் அதில் வெளிச்சம் போட்டுக் கொள்ளுகிறோம். "நாங்கள் எவ்வளவு சேவை செய்கிறோ பாருங்கள்’ என்று பறை சாற்றுகிறோம். அங்கே அரசியலார் உதவி 80 சத விகிதத்திற்கும் குறைவுதான். மற்றப் பொருள், நாட்டு மக்களிடம் இருந்து நன்கொடையாக வருகின்றது. அதைக் கொண்டுதான் இங்கும் நடைபெற வேண்டும். நாம் தருமம் செய்பவர்கள்; எது தேவை என்று உணர்ந்து செய்ய வேண்டும்.

ஆகவே, நீங்கள் பயின்று, சுவடிகளையும், நூல்களையும் ஆக்கியதோடுகூட முயன்று கற்றுக்கொடுக்கவும் வேண்டும். மற்றவர்களை இத்துறையின் வளர்ச்சிக்காக நன்கொடை அளிக்கத் தூண்டவேண் டும். இப்படிப் பலரும் கை கொடுத்து, பலரும் பல முயற்சியில் ஈடுபட்டால்தான் முதியோர் க ல் வி நன்றாய பரவ முடியும்.

எதிர்காலத்தில்

முதியோர் கல்வி விரைவிலே பரவ வேண்டும் என்பதுதான் என் ஆவல். அது ஐந்து ஆண்டிலா பத்து ஆண்டிலா என்று கணக்குப் போட்டால், ஓர் ஆண்டிலும் நடக்காது, ஒரு தலைமுறையிலும் நடக் காது. நான் 1940-ஆம் ஆண்டில் இந்தத் துறைக்கு வந்தேன். அப்போதெல்லாம்.'பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்புங்கள்' என்று வீடு விடாய்ச் சென்று கேட்டோம்; பெற்றோர் கூட்டம் கூட்டிக் கேட்டோம். ஆயினும் அதிகப் பலன் இல்லை. இப்போதோ நிலை தலைகீழாய் உள்ளது. பிள்ளைகள் வருகிறார்கள், பள்ளிகளில் இடம் இல்லை. எவ்வளவு மாறுதல்! முன்பு `பலாப் பழம் உண்ண வாரீர்’ என்று அழைத்தோம்; இன்று பழம் இருப்பதனை உணர்ந்துவிட்டனர். ஈ மொய்ப்பதனைப் போன்று நிறைய வருகின்றனர். அதுபோன்று 2 வருடம் 4 வருடம் உணர்த்தி வந்தால் இந்தப் புதிய முயற்சி கிராமப் புறங்களிலும் மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ள இந்த நேரத்திலே நல்ல பலனைத் தரும். இன்று போய் விட்டால் நாளை இந்த மலர்ச்சி வராது, உற்சாகம் காணப்படாது, ஊக்கம் இருக்காது. எனவே, இந்த நேரத்தில் எவ்வளவுக் கெவ்வளவு குழப்பம் இல்லாமல், சந்தடி இல்லாமல், ஆரவாரம் இன்றி, மிகுதியான விளம்பரம் இன்றி முதியோர் கல்வியினைப் பரப்ப முடியுமோ அவ்வளவு மிகுதியாகப் பரப்ப வேண்டும். சந்தடி இல்லாமல் நடக்கின்ற காரியம்தான் நிலையான காரியமாக இருக்கும்; பெரிய காரியமாக அமையும். அதிக விளம்பரம் இல்லாமல் இத்துறையில் ஈடுபட்டு, இந்நாட்டில் `எல்லோரும் கல்வி கற்றுப் பன்னருங்கலை ஞானத்தால், பராக்கிரமத்தால் அன்பால் உன்னத இமமலைபோல் ஓங்கிடும் கீர்த்தி எய்திடும்’ அந்த நல்ல நாள் நம் காலத்திலே வருவதற்கு நாம் பாடு படுவோமாக. உங்கள் பயிற்சியின் பயணாகப் பல நல்ல சுவடிகளை, நூல்களை இடைவிடாது ஆக்கிக் கொண்டே இருப்பீர்களாக எனக் கூறி அமைகின்றேன். வணக்கம்.

O

(முதலாவது முதியோர் இலக்கியப் பண்ணையின் நிறைவு விழா 13-12-66-இல் நடந்தபோது, கண்காட்சியைத் திறந்து வைத்து ஆற்றிய சொற்பொழிவு)