உள்ளடக்கத்துக்குச் செல்

மகாகவி பாரதியார்/மகா கவி பாரதியார்

விக்கிமூலம் இலிருந்து

மகா கவி
பாரதியார்



பாரதியார் உலககவி !— அகத்தில் அன்பும்
பரந்துயர்ந்த அறிவினிலே ஒளியும் வாய்ந்தோர் !
ஒரூருக் கொருநாட்டுக் குரிய தான
ஒட்டைச் சாண் நினைப்புடையார் அல்லர். மற்றும்,
வீரர் அவர் !—மக்களிலே மேல்கீழ் என்று
விள்ளுவதைக் கிள்ளிவிட வேண்டும் என்போர் !
சீருயர்ந்த கவிஞரிடம் எதிர்பார்க்கின்ற
திவ்யநலம் எல்லாமும் அவர்பாற் கண்டோம்.

அகத்திலுறும் எண்ணங்கள், புவியின் சிக்கல்
அனுப்பலைகள்; புதியவைகள். அவற்றையெல்லாம்,
செகத்தார்க்குப் பாரதியார் சித்தி ரிப்பார்
தெளிவாக, அழகாக, உண்மை யாக !
முகத்தினிலே கலையிழந்த மக்கள் தம்மை
முனைமுகத்தும் சலியாத வீர ராக்கப்
புகுத்துமொளிப் பேச்செல்லாம், கங்கை யாற்றுப்
புனல்போலத்தொடர்வதுண்டாம் அன்னார்பாட்டில் !


பழயநடை, பழங்கவிதை, பழந்தமிழ்நூல்,
பார்த்தெழுதிப் பாரதியார் உயர்ந்தா ரில்லை !
பொழிந்திடு சன் னத்த உள்ளம் கவிதை யுள்ளம்
பூண்டிருந்த பாரதியா ராலே இந்நாள்,
அழுந்தியிருங் திட்டதமிழ் எழுந்த தென்றே
ஆணையிட்டுச் சொல்லிடுவோம் அன்னைமீதில் !
அழகொளிசேர் பாரதியார் கவிதைதன்னை
அறிந்திலதே புவிஎன்றுல், புவிமேற் குற்றம் !

கிராமியம் நன் னாகரிகம் பாடி வைத்தார்;
கீர்த்தியுறத் தேசீயம் சித்தி ரித்தார்;
சராசரம்சேர் லௌகிகத்தை நன்றாய்ச் சொன்னார்.
தங்குதடை யற்ற உள்ளம், சமத்வ உள்ளம்,
இராததென ஒன்றில்லாப் பெரிய உள்ளம்,
இன்புள்ளம் அன்புள்ளம் அன்னுர் உள்ளம் !
தராதலத்துப் பாஷைகளில், அண்ணல் தந்த
தமிழ்ப்பாட்டை மொழிபெயர்த்தால் தெரியும்சேதி !

ஞானரதம் போலொருநூல் எழுதுதற்கு
நானிலத்தில் ஆளில்லை. கண்ணன் பாட்டுப்
போல்நவிலக் கற்பனைக்குப் போவதெங்கே?
புதியநெறிப் பாஞ்சாலி சபதம் போலே
தேனினிப்பில் தருபவர்யார்? மற்றும் இந்நாள்,
ஜெயபேரி கைகொட்ட டாஎன் றோதிக்
கூனர்களும் குவலயத்தை அளாவும் வண்ணம்
கொட்டிவைத்த கவிதை திசை எட்டும் காணோம் !


"பார்ப்பானை ஐயரென்ற கால மும்போச்
சே"யென்று பாரதியார் பெற்ற கீர்த்தி,
போய்ப்பாழும் கிணற்றினிலே விழாதா என்று
பொழுதெல்லாம் தவங்கிடக்கும் கூட்டத்தார்கள்
வேர்ப்பார்கள்; பாரதியார் வேம்பென்பார்கள்;
வீணாக 'உலககவி' அன்றென் பார்கள்.
ஊர்ப்புறத்தில் தமக்கான ஒருவனைப்போய்
உயர்கவிஞன் என்பார்கள் வஞ்ச கர்கள் !

சாதிகளே இல்லையடி பாப்பா என்றார் !
தாழ்ச்சி உயர்ச்சிகள் சொல்லல் பாவம் என்றார்.
சோதிக்கின் "சூத்திரற்கோர் நீதி தண்டச்
சோறுண்ணும் பார்ப்புக்கு வேறோர் நீதி"
ஓதியதைப் பாரதியார் வெறுத்தார் நாட்டில் !
ஒடுக்கப்பட்டார் நிலைக்கு வருந்தி நின்றார் !
பாதிக்கும்படி "பழமை பழமை என்பீர்;
பழமை இருந் திட்டநிலை அறியீர்" என்றார்.

தேசத்தார் நல்லுணர்வு பெறும் பொருட்டுச்
சேரியிலே நாள்முழுதும் தங்கி யுண்டார் !
காசு தந்து கடைத்தெருவில் துலுக்கர் விற்கும்
சிற்றுணவு வாங்கி, அதைக் கனிவாய்த் தின்றார் !
பேசிவந்த வசைபொறுத்தார்! நாட்டிற் பல்லோர்
பிறப்பினிலே தாழ்வுயர்வு பேசு கின்ற
மோசத்தை நடக்கையினால், எழுத்தால், பேச்சால்
முரசறைந்தார். இங்கிவற்றால் வறுமை ஏற்றார் !


வையத்து மாக்கவிஞர் மறைந்து போனார்!
வைதிகர்க்குப் பாரதியார் பகைவ ரேனும்,
செய்வதென்ன ? மேலுக்குப் புகழ்ந்தே வந்தார்!
சில நாட்கள் போகட்டும் என இருந்தார்.
உய்யும்வழி கெடாதிருக்க மெதுவாய் இந்நாள்
உலககவி அல்ல அவர் எனத் தொடங்கி,
ஐயர்கவி தைக் கிழுக்கும் கற்பிக் கின்றார்;
அழகாக முடிச்சவிழ்த்தால் விடுவார் உண்டா !