மகாபாரதம்-அறத்தின் குரல்/14. யாத்திரை நேர்ந்தது

விக்கிமூலம் இலிருந்து

14. யாத்திரை நேர்ந்தது

பாண்டவர்கள் எது நடக்கக் கூடாது என்று கருதினார்களோ அதுவே ஒரு நாள் நடந்து விட்டது. வேண்டுமென்று நடக்க வில்லை . சிறிதும் எதிர்பாராத நிலையில் தற்செயலாக நடந்து விட்டது. அர்ச்சுனன் அன்று காலை ராஜமாளிகையின் பிரதான வாயிலில் ஏதோ காரியமாக நின்று கொண்டிருந்தான். அப்போது திடீரென்று யாரோ ஒருவர் பரிதாபகரமாக ஓலமிட்டுக் கொண்டே வாயிலுக்குள் நுழைந்து வரும் ஒலி கேட்டது. அர்ச்சுனன் திடுக்கிட்டுப் போய்த் தலை நிமிர்ந்து பார்த்தான். ஓர் அந்தணர் பதறியடித்துக் கொண்டு வேர்க்க விறுவிறுக்க உள்ளே நுழைந்து வந்து கொண்டிருந்தார். அவன் அவரை அங்கேயே தடுத்து நிறுத்தி “உம்முடைய குறை என்ன? எதற்காகத் துயரமுற்றவர் போல் காணப்படுகிறீர்?” என்று வினவினான்.

“அரசே! நான் என்ன வென்று கூறுவேன்? தருமமே உருவான தங்கள் தமையனார் ஆட்சியில் கூட இப்படி நடக்குமா? எனக்குச் சொந்தமான பசுக்களைக் காட்டு வேடர்கள் திருடிக் கொண்டு போய்விட்டனர். அவைகளை மீட்டுத் தருவதற்கு உதவி நாடி இங்கே வந்தேன்” -என்று பரபரப்புடனும் பதற்றத்துடனும் அந்த அந்தணர் மறுமொழி கூறினார். “அஞ்சாதீர்! இப்படியே நில்லும். நான் மீட்டுத் தருகிறேன் உம்முடைய பசுக்களை. இதோ, உள்ளே சென்று வில்லும் கணைப்புட்டிலும் எடுத்துக் கொண்டு வருகிறேன்” -என அவருக்கு மறுமொழி கூறி அங்கேயே நிறுத்திவிட்டு, தான் வில்லெடுத்து வருவதற்காக உள்ளே சென்றான் அருச்சுனன் . அப்போது தான் அந்தச் சம்பவம் நடந்துவிட்டது! மாளிகைக்குள் நுழைந்து படைக்கலங்களாகிய வில், வேல், முதலியன வைக்கப் பெற்றிருக்கும் இடத்தை அடைவதற்கு நடுவில் ஓர் பூம்பொழிலைக் கடக்க வேண்டும். இந்தப் பூம்பொழில் திரெளபதிக்கும் அவளுடைய அந்தப்புரத்தைச் சேர்ந்த பெண்களுக்கும் பழகுவதற்குரிய இடம். அந்தணருக்கு உதவி செய்து அவருடைய பசுக்களை மீட்டுத் தரவேண்டுமென்ற அவசரத்தினால் மகளிர்க்குரிய அந்தப் பூம்பொழிலின் நடுவே செல்லும் குறுக்கு வழியாகப் படைக்கலச் சாலையை நோக்கி நடந்தான் அர்ச்சுனன். அங்கே திரெளபதி தன் தோழிகளோடு விளையாடிக் கொண்டிருக்கிறாள் என்பது அவனுக்குத் தெரியாது. தருமனும் அப்போது அவளோடு பூம்பொழிலில் இருந்தான். ஒரு பூஞ்செடிக்குக் கீழே திரெளபதியின் பாடகமும் சிலம்பும் சுமந்த பாதங்களை மட்டும் அர்ச்சுனன் பார்க்கும்படியாக நேர்ந்து விட்டது. தீயை மிதித்து விட்டவன் போலத் திடுக்கிட்டான் அவன். நாரதர் கூறிய நிபந்தனை நினைவிற்கு வந்தது. திரெளபதியையே பார்க்கக் கூடாது என்றால் அவள் திருவடிகளை மட்டும் எப்படிப் பார்க்கலாம்? அதுவும் பிழைதானே? எனவே கட்டுப்பாட்டுக்கு அடங்கி நிபந்தனைப்படி தான் தீர்த்தயாத்திரை போவதென்று மனத்திற்குள்ளேயே தீர்மானம் செய்து கொண்டான்.

அந்தணருக்கு வாக்களித்தபடி பசுக்களை மீட்டுத் தந்த பின் யாத்திரையைத் தொடங்க முடிவு செய்து கொண்டு வில்லும் கணையும் ஏந்தி அந்தணரோடு புறப்பட்டான். காட்டு வேடர்களை வென்று அந்தணரின் பசுக்களை மீட்டுக் கொடுத்த உடனே அவசரமாக அரண்மனை திரும்பி யாத்திரைக் கோலம் பூண்டான். புறப்பட்டுச் செல்வதற்கு முன் சகோதரர்களிடம் நிகழ்ந்த செய்தியைக் கூறி விடைபெற்றான். பாரத தேசத்தில் மானிட சரீரத்தின் பாவங்களைக் கழுவி பவித்திரமாக்கும் புண்ணிய நதிகள் அநேகம் இருக்கின்றன. அவற்றுள் சிறந்ததும் முதன்மை வாய்ந்ததும் கங்கை நதியே. வேறு பல முனிவர்களுடனும் தேசயாத்திரை புரிபவர் களுடனும் சேர்ந்து பிரயாணம் செய்த அர்ச்சுனன் முதன்முதலாக இவ்வளவு சிறப்புப் பொருந்திய கங்கை நதியில் நீராடும் வாய்ப்பைப் பெற்றான். உடன் வந்த முனிவர்கள் யாவரும் அவரவர்களுக்குத் தோன்றிய துறைகளில் நீராடுவதற்காக இறங்கினர். அர்ச்சுனன் மட்டும் ஒதுக்குப்புறமாகத் தனியே ஓர் துறையில் இறங்கினான்.

அந்தத் துறையருகே பெரும் பெரும் பாறைகளும் பாறைக் குகைகளும் இருந்தன. துறையில் இறங்கி நதியின் நடுப்பகுதிக்கு வந்து நீராடிக் கொண்டிருந்தான் அர்ச்சுனன். அப்போது கரையருகே இருந்த பாறைப் பிளவுகளோடு கூடிய குகை ஒன்றிலிருந்து யாரோ சில பெண்கள் சிலம்பு குலுங்க நடந்து வரும் ஒலி கேட்டது. வளையொலியும் சிலம்பொலியும் கேட்டு வருபவர் யௌவன மகளிர் என்பதை அனுமானித்துக் கொண்டான் அவன். உடனே அவர்கள் தன்னைக் கண்டு அஞ்சி ஓடிப் போய்விடாமல் இருப்பதற்காகச் சில வினாடிகள் மூச்சை அடக்கி நீரில் மூழ்கிக் கொண்டான். மேலெழுந்து மறுபடி அவன் தலை நிமிர்ந்து பார்த்தபோது செளந்தரியமான காட்சியை அங்கே கண்டான். விண்மீன்களுக்கு நடுவே எடுப்பாக விளங்கும் தண்மதியைப் போல, பல இளம் பருவத்துத் தோழிப் பெண்களுக்கு நடுவே தனியழகுடன் நாககன்னிகை போலத் தோன்றிய யுவதி ஒருத்தி நீராட இறங்குவதற்காக ஆடை அணிகளைக் கழற்றிக் கொண்டிருந்தாள். அங்கங்கள் அத்தனையும் கண்களாகவே இருந்தால் இரண்டு கண்களால் மட்டும் பார்க்க முடியாத அவள் அழகைப் பரிபூரணமாக அனுபவிக்கலாமே என்று தோன்றியது அவனுக்கு. நீராடுவதற்குத் தயாராக ஆடை அணிகளைக் குறைத்துக் கொண்டு நின்ற அந்த நிலை அந்த யுவதியின் சரீரத்தில் ஒவ்வொரு அணுவிலும் ஜதி போடுகின்ற அழகை அவன் கண்களுக்குக் காட்டின. அர்ச்சுனன் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே நின்றான்.

சட்டென்று அவர்கள் துறையிலே இறங்குவதற்காகத் திரும்பியபோது அவள் பார்வை நீரோட்டத்தின் நடுவே நின்ற அவன் மேல் நிலைத்தது. ஓடும் நீர் நடுவே எடுப்பான தோற்றத்தோடு நிற்கும் அவன் அழகு அவளைத் தலைகுனிய வைத்தது. அவள் நாணித் தலைகுனிந்தாள். அதன் பின் நீராடும் போது அவனும் சரி, அவளும் சரி, கங்கை நீரில் மட்டும் திளைத்து ஆடவில்லை. ஒருவர் மனத்தில் மற்றொருவராக மாறி மாறித் திளைத்தாடினார்கள். கங்கையின் நீரோட்டத்தில் இடையிடையே தென்படும் கயல் மீன்களைப் போன்ற அவள் விழிகள் அவனையே கடைக்கணித்தன. அவன் கண்களோ, அவள் தோற்றத்தை நோக்குவதிலிருந்து இமைக்கவே இல்லை. கண்களின் இந்த ஒத்துழைப்பு, காதலின் பாஷையோ என்னவோ?

அந்தப் பெண்களின் உரையாடலிலிருந்து அவர்கள் நாகலோகத்தைச் சேர்ந்த கன்னிகைகள் என்றும் அவள் நாகலோகத்து இளவரசி ‘உலூபி’ என்றும் அர்ச்சுனன் பராபரியாகத் தெரிந்து கொண்டான். நீராடி முடித்த பின் அவர்கள் மீண்டும் குகை வழியாக நாகலோகத்துக்குக் கிளம்பினார்கள். அப்போது ‘உலூபி’ மட்டும் அவனைத் திரும்பி திரும்பிப் பார்த்துக் கொண்டே சென்றாள். ‘நீங்கள் என்னை இப்படித் தனியே செல்லவிட்டு வாளா இருக்கலாமோ? என்னைப் பின்பற்றி என்னோடு வந்தால் என்ன?’ -என்று அவனை அழைப்பது போல இருந்தது உருக்கம் நிறைந்த அந்தப் பார்வை. திடீரென்று அவன் மனத்திலும் மின்னலைப் போல் அதிவேகமாக ஓர் எண்ணம் தோன்றியது: ‘நாம் இந்த அழகியைப் பின்பற்றி இவளோடு சென்றால் என்ன?’ -இந்த எண்ணம் தோன்றிய மறுகணமே காவி ஆடைகளைப் பிழிந்து அரையில் கட்டிக் கொண்டு துறையிலிருந்து கரையேறிக் குகைக்குள்ளே நுழைந்து பதுங்கிப் பதுங்கி நடந்தான். உலூபியோடு நாகலோகத்தை அடைந்த அர்ச்சுனன் நாகலோகத்து அரசனால் அன்போடு வரவேற்கப்பட்டான். தன் மகளுக்கும் அவனுக்கும் கங்கைக்கரையில் ஏற்பட்ட சந்திப்பையும் காதலையும் தோழிகள் மூலம் அறிந்து இருவரையும் மணமக்களாக்கித் திருமணம் செய்து வைத்தான்.

அர்ச்சுனனும் உலூபியும் மணமான பின் பல நாள் இன்பவாழ்வில் திளைத்தனர். காதலர்களின் மனமொத்த போக வாழ்வாகிய அந்த வாழ்வில் நாட்கள் கழிந்ததே அவர்களுக்குத் தெரியவில்லை. காலம் நேரம் இவைகளை மறந்து தன்மயமாய் ஒன்றி நுகரும் இன்பந்தானே உயர்ந்த இன்பம். அர்ச்சுனனுக்கும் உலூபிக்கும் இராவான் என்றோர் புதல்வன் பிறந்தான். புதல்வன் பிறந்த சில நாட்களுக் கெல்லாம் அர்ச்சுனன் நாகலோகத்திலிருந்து புறப்பட்டு மீண்டும் தனது தீர்த்த யாத்திரையைத் தொடங்கினான். நாகலோகத்திலிருந்து திரும்பி வரும் போது, இமாசலத்தின் சாரலிலுள்ள பல தீர்த்தங்களிலும் நீராடி மகிழ்ந்தான். இவ்வாறே வடநாட்டிலுள்ள சகல தீர்த்தங்களிலும் நீராடி முடித்த பிறகு ஞானவளமும், நில வளமும் மிகுந்து, ‘சித்திக்கு ஒருவித்து’ -என்று கூறத்தக்க சிறப்பையுடைய தென்னாட்டை அடைந்தான் அர்ச்சுனன்.

தென்னாட்டில் அவன் முதல்முதலாகப் பார்த்த இடம் திருவேங்கடமலை. தமிழ்த்திருநாட்டின் வடபால் அமைந்திருந்த அந்தத் திருமலையில் உள்ள அருவிகளில் நீராடி அங்குள்ள இறைவனை வழிபட்டபின் காஞ்சிபுரம், திருவண்ணாமலை சிதம்பரம் முதலிய தலங்களைக் கண்டான். அங்கங்கே இருந்த ஆறுகளிலும் புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடி மேற் சென்றான். பூலோக வைகுண்டம் என்று சொல்லப்படுகின்ற ஸ்ரீரங்கத்திற்கு வந்து காவேரியில் நீராடி அரங்கநாதப் பெருமானைத் தரிசித்துக்கொண்டு பொதியைத் தென்றலும் தமிழ்த் தென்றலும் ஒருங்கு வீசும் சிறப்பும் தொன்மையும் வாய்ந்த மதுரை மாநகரத்தை அடைந்தான். வையை வளமும் தமிழ் வளமும் பாண்டிய மன்னர்களின் ஆட்சி வளமும் ஒருங்கு திகழும் கூடல் மாநகரில் பாண்டிய மன்னர் பரம்பரையில் அப்போது ஆண்டு கொண்டிருந்த அரசனைக் காணச் சென்றான்.

“துறவுக் கோலமுடையவர் போலத் தோன்றுகிறீர்! மிக இளம் பருவத்தில் வாழ்க்கையில் வெறுப்புற்றுத் துறவு மேற்கொண்டு விட்டீர் போலும் நீவிர் இங்கே பாண்டிய நாடு