முடியரசன் தமிழ் வழிபாடு/042-049

விக்கிமூலம் இலிருந்து


42. தமிழ் – என் காதலி


பாரி மலை யருகில் - நல்ல
          பண்பினர் வா ழிடமாம்
ஊரில் ஒரு பொழிலில் - உனை நான்
          உற்றறி நாள் முதலே
மீறிய கா தலினால் - தமிழே
          மெய்ம்மறந் தே உழல்வேன்
கூரிய நின் விழியால் - எனை நீ
          கொல்வது தான் சரியோ

ஆசை மனத் திரையில் - எண்ணம்
          அத்தனை யுங் கலந்து
பாச முடன் எழுதி - உருவைப்
          பார்த்து மகிழ்ந் திருப்பேன்
பேச மன மிலையேல் - உயிரைப்
          பிய்த்தெனைக் கொன் றுவிடு
மோசம் புரி வதென்றால் - என்றன்
          மூச்சை நிறுத் திவிடு

உன்னைப் பெறு வதற்கே - இங்குநான்
          ஓடித் திரி வதெல்லாம்
என்னைப் புறக் கணித்தால் - உயிரை
          எப்படி நான் சுமப்பேன்
உன்னெழிற் கா தலன்றோ - என்னை
          உன்மத் தனாக் குதடி
கன்னற் சுவை மொழியே - என்னைக்
          கட்டி யணைத் திட்டி

செல்வம் உற வரினும் - வறுமை
          சேர்ந்து துயர் தரினும்
பல்வகை இன் னலிலும் - என்மனப்
          பாவையே நான் பிரியேன்
நல்வழி காட் டிடடி - உன்றன்
          நட்பொன்று போ துமடி
சொல்வது சொல் லிவிட்டேன் - பிறகு
          தோழியுன் சித் தமடி

நாட்டவர்க் கஞ் சுதியோ? உலகில்
          நம்மைத் தடுப் பவர் யார்?
காட்டுப் புலி யடிநான் - போரில்
          காத்திடு வேன் உனையே
வாட்டம் தவிர்ந் திட்டி - கொடிய
          வாளுக்கும் அஞ் சுகிலேன்
கோட்டை மதி லகத்தோர் - முழக்கும்
          கொட்டுக்கும் அஞ் சுகிலேன்

காதல் உல கினிலே - அகப்பொருள்
          காவின் நடு வினிலே
மேதைகள் ஆக் கியதோர் - மாளிகை
          மீதினில் நா மிருப்போம்
மாதுநீ யா ழெடுத்தே - இசை
          மாரி பொழிந் திடுவாய்
காதற் களி யினில்நான் - பற்பல
          காவியம் பா டிடுவேன்

[காவியப் பாவை]