மேனகா 1/012-022

விக்கிமூலம் இலிருந்து


8-வது அதிகாரம்


கும்பிடும் கள்ளன்


மக்கு நன்மைகளை அளிக்கும் விஷ்ணு, சிவன் முதலிய தெய்வங்களையும் நாம் கோயிலில் வைத்து வணங்குகிறோம்; தீமைகளைத் தரும் காட்டேறி, பிடாறி, மதுரை வீரன் முதலியவற்றையும் கோயிலில் வைத்துக் கும்பிடுகிறோம். ஆனாலும், தீமையைச் செய்யும் தெய்வங்களிடத்தில் நமக்குள்ள அச்சமும், மதிப்புமே மிக்க அதிகம். தீங்கற்றதும், நமது உணவிற்குப் பயன் படுவதுமான புடலங்காயை நாம் ஒரு பொருட்டாக எண்ணுவதும் இல்லை; அதை வணங்குவதும் இல்லை. ஆலகால விஷத்தை வாயிற்கொண்டு நம்மைக் கொல்ல ஆயத்தமாக இருக்கும் நாகப்பாம்பையே நாம் பெரிதும் நன்கு மதிக்கிறோம்; அதன் புற்றில் பால் தெளித்து அதை வணங்குகிறோம்; அதைக் கண்டு அஞ்சி ஒடுகிறோம். அவ்வாறே தஞ்சையை ஆண்ட தாசில்தார் தாந்தோனிராயருடைய அருமையான புகழை நாம் இனியும் பாடாது இருப்போமானால், அவருக்கு நம்மீது கோபம் பிறக்கும். ஆதலால், அவரைப் பற்றிய விவரத்தை நாம் சிறிது அறிந்து கொள்வோம்.

அவர் எந்த விஷயத்திலும் எதிர்மறையான கொள்கை களைக் கொண்டவர் முரண்களுக்கே இருப்பிடமானவர். அவர் தோற்றத்தில் ஒரு விதமாயும், உண்மையில் வேறு விதமாயும் இருப்பவர். அவர் வயதில் முதுமையடைந்தவர் அல்லர்; ஆனால், தலையின் உரோமமோ முற்றிலும் வெளுத்திருந்தது. அவருடைய மேனி பறங்கிப்பழம் போலச் சிவந்திருந்தது; மனதோ களாப்பழத்திலும் அதிகமாய்க் கறுத்திருந்தது. சொற்களோ தேனும்பாலுமாய் ஓடின; செயல்களோ எட்டிப்பழங்களாய் உதிர்ந்தன. அகமோ ஆழந்தெரியா அகழியாய் இருந்தது; முகமோ கண்களையும், மனதையும் குளிரச் செய்து, கவரும் வண்ணம் அந்த அகழியின் மீது மலரும் தாமரைப்பூவை யொத்திருந்தது. வாயில் வருவது இன்சொல்; நெஞ்சில் மறைந்திருப்பது வஞ்சம்; புரிய முயல்வது பொல்லாங்கு. கடைவாயில் காலகோடி விஷத்தை ஒளிய வைத்துள்ள நாகப்பாம்பு பரம பக்தனைப்போல நெற்றியில் திருநாமம் அணிந்திருப்பதை நாம் காண்கிறோம் அல்லவா. அவ்வாறே தாந்தோனிராயருடைய கழுத்தில் உத்திராட்சம், நெற்றியில் விபூதி, குங்குமம், அட்சதை முதலிய பக்த அலங்காரம்; அதிகாலை தொடங்கி பகல் பன்னிரண்டு மணிவரையில் சிவபூஜை, காதில் வில்வப்பத்திரம், ஆனால் சுவாமி வைக்கப்பட்டிருக்கும் பெட்டியை நோக்கி, அர்ச்சனை நிவேதனம், ஸ்தோத்திரம் முதலியவை செய்யும்போதே இப்புறம் தன் மனைவியைப் பார்த்துக் கண் சிமிட்டித் தாம் ஈசுவரனிடம் பாசாங்கு செய்து அவனை ஏமாற்றுவதாய்ச் சைகை காட்டக் கூடிய மனப்பான்மை உடையவர். அவருடைய கைகள் பிறரிடம் பெறுதலை அறியுமன்றி கொடுத்தலை அறிந்தனவன்று. அவருடைய நாவிற்குப் பிறர் வீட்டுச் போஜனத்தில் விருப்பம் அதிகமன்றித் தமது வீட்டுச் சோற்றில், ஆசையில்லை. அவருடைய மனது பொதுவாக ஆண்பாலரிடம் அருவருப்பையும் பெண்பால்ரிடம் விருப்பையும் கொண்டது. கால் முதல் தலை வரையில் வைரங்களையும், பட்டாடை களையும் அணிந்து எழிலை ஏந்தி பூங்கொம்பு போல இருப்பவளும், லட்டு, ஜிலேபி, ஹல்வா முதலியனவே எனக் கண்டோர் வாயில் தேனூறும் வண்ணம் இனிமைத் திரளாகத் தோன்றும் மயிலியலாளுமான அவரது மனையாட்டியின் மீது அவருக்கு முற்றிலும் வெறுப்பு: மூன்றுகாததுரம் முடைநாற்றம் கமழும் தலையாரி எல்லப்பனுடைய தலைகாய்ந்த மனைவி முளியம்மாளின் மீதே அவருடைய காதலும் கண்ணோக்கமும் பிடிவாதமாகச் சென்றன. வெளியூர்களில் சுற்றுப் பிரயாணம் வரும் தாசில்தார்களெல்லோரும் ஊருக்குள் ஆண்பாலார் இருக்குமிடத்தில் முகாம் செய்வர்; தாந்தோனிராயரோ, அவ்வூர் மகளிர் தண்ணீரெடுக்கவும், நீராடவும் வரும் குளம், ஆற்றுத்துறைகள், கிணறுகள் முதலியவற்றிற்கு அருகிலேதான் கச்சேரி செய்வது வழக்கம். உலகில் பிறர் யாவரும் அவரிடம் உண்மை யொன்றையே பேசுதல் வேண்டும்; நல்லொழுக்கம், நற்குணம் முதலியவற்றை உடையவராயிருத்தல் வேண்டும்; ஆனால், அந்த விதி அவரை மாத்திரம் கட்டுப்படுத்தாது, பிறர் எவரும் எத்தகைய சுகத்தையும் அநுபவித்தல் கூடாது; அதற்குப் பிறந்தவர் அவர் ஒருவரே. அவருடைய மேலதிகாரிகள் எதைக்குறித்தும் அவரைக் கண்டித்தலும், அவர் மீது குற்றங் கூறுதலும் தவறு; அவர் தமக்குக் கீழிருந்தோரை மாத்திரம் நினைத்த விதம் பேசலாம்; எண்ணிய விதம் ஏசலாம்.

அதுகாறும் அவர் பெரிய கலெக்டர் கச்சேரியில் சிரஸ்தார் உத்தியோகத்தில் இருந்து மகா பயங்கரமான பிளேக் நோயைப் போலத் தம்மை நடுங்கும்படி அந்த ஜில்லாவில் எல்லோரையும் ஆட்டி வந்தவர். கட்டை விரல் பருமனிருந்த அகஸ்தியர் தமது வயிற்றில் எட்டாவது கடலுக்கும் இடமிருக்கிறதே, கடலில்லையே என்று ஏங்கினாராம். அதைப் போல் எத்தனையோ கலெக்டர்களை விழுங்கிய தமது சொக்காப்பையில் இன்னம் இடமிருக்கிறதே என்று தாந்தோனியப்பர் ஏங்கினார். இலங்கையை ஆண்ட இராவணன் வீட்டில் வாயுபகவான் விசிறி கொண்டு வீசினான்; அக்கினி பகவான் அடுப்பெறித்தார்; சூரிய பகவான் விளக்கேற்றும் வேலை செய்தான்; வருண பகவான் தண்ணீர் குடமெடுத்தான். நவகிரகங்களே ஜாதகம் கணித்தன. அவ்வாறே நமது சிரஸ்ததாரான தாந்தோனி ராயர் வீட்டில் அறந்தாங்கித் தாசில்தார் முறந்தாங்கிப் புடைத்தார். திருவையாற்று போலீஸ்தார் திரிகை பிடித்தறைத்தார். பட்டுக்கோட்டைத் தாசில்தார் கட்டைகளைப் பிளந்தார். மன்னார்குடித் தாசில்தார் வெந்நீர் தயாரித்தார். கும்பகோணம் தாசில்தார் செம்பு தவலை கழுவினார். வலங்கிமான் போலீஸ்தார் பாயைப் பிரித்தார். அந்த ஜில்லாவிலிருந்த எல்லா உத்தியோகஸ்தர்களின் குடுமியும் அவருடைய கையிலிருந்தது. அவர்கள் செய்த நற்காரியங்கள் யாவற்றையும் ராயர் மறந்துவிடுவார். எவனாயினும் அவருடைய கோபத்திற்கு இலக்கானால், ஒரு வாரத்திற்குள் அவனுடைய தலைச்சீட்டு கிழிபட்டுப்போம். தையல் இலையின் கோணலை நிமிர்த்தக் கல்லியந்திரத்தைப் பாரம் வைத்தலைப் போல, அவன் தலையைத் துக்கா வண்ணம், அவனைப் பாதாளத்தில் ஆழ்த்தி அவன் மீது பாரம் வைத்து விடுவார். அத்தகைய உன்னத பதவியான சிரஸ்ததார் வேலையிலிருந்து தஞ்சையின் தாசில்தார் வேலைக்கு வந்தவ ராதலால், தாந்தோனி ராயர் இன்னமும் பழைய மேன்மையை விடாமல் பாராட்டி வந்தார். அதற்கு முன் தமது வீட்டில் தஞ்சையின் தாசில்தார் மஞ்சள் அரைத்ததை மறந்து, தலை கால் தெரியாமல் அதிகாரமும் ஆடம்பரமும் செய்து தாசில் வேலை பார்த்து வந்தார்.

சில வருஷங்களுக்கு முன்னர் பி.ஏ., பி.எல்., முதலிய பாடங்களைப் பெற்ற ஒருவர் தேசத்தில் தாசில்தாராக நியமிக்கப்பட்டார். அவர் மகா புத்திமான். ஆனால், கீழிருந்த சிப்பந்திகளை மிரட்டி இரக்கமற்ற மனதோடு வேலைவாங்க அறியாதவர். மேலதிகாரிகளையும் வசியப்படுத்த அவர் கற்க வில்லை. இரண்டொரு வருஷங்களில் அவர் தமது உத்தியோகத்தை விட்டுவிட நேர்ந்தது. அப்போது அவர் தம் நண்பர் ஒருவருக்கு அடியில் வருமாறு கடிதம் எழுதி அனுப்பினார். “ தாசில் உத்தியோகத்திற்குக் கல்வியும் தேவையுமில்லை. மூளையும் தேவையுமில்லை. மாதம் இரு நூறு ரூபாயை வீண் செலவு செய்து ஒரு மனிதனையும், அந்த வேலைக்கு வைக்கவேண்டுவதில்லை. பயங்கரமான ஒரு தோற்றத்தைக் கொண்ட ஒரு நாயைப் பிடித்து அதற்குச் சொக்காய், தலைபாகை முதலியவற்றை அணிவித்து நாற்காலியில் உட்கார வைக்க வேண்டும். பக்கத்தில் ஒரு டபேதார் நிற்க வேண்டும். எதிரில் வரும் ரெவின்யூ இன்ஸ்பெக்டர், தாலுக்கா குமாஸ்தாக்கள், கிராம முனிசீப்புகள், கணக்குப் பிள்ளைகள் முதலியோரைக் கண்டு அந்த நாய் நன்றாய்க் குலைத்துக் கடிக்கப் போவதைப்போலப் பாய வேண்டும். அதே காலத்தில் கலெக்டர் முதலிய மேலதிகாரிகளைக் கண்டால், அன்னமிடுவோரின் பின்னர் வாலைக் குழைத்துச் செல்லும் நாய்களைப்போல, அந்த தாசில் நாய் உடனே செய்யவேண்டும். இவ்வாறு ஒரு நாய் இரண்டு தாலுக்காக்களின் தாசில் வேலையைத் திறமையோடு செய்யும்” என்று எழுதினார். அவர் பொறாமையால் அவ்வாறு கூறினாரோ அன்றி அது உண்மையோ வென்பதை அந்த இலாகாவில் இருப்பவர்களே நன்கறிவர். ஆனால், தாந்தோனிராயர் விஷயத்தில் இரண்டொரு விஷயங்கள் மாத்திரம் உண்மையா யிருந்தன. அவர் கீழிருந்தவர் விஷயத்தில் சாதாரண நாயைப் போல் நடக்கவில்லை; பைத்தியங் கொண்ட நாயைப்போலிருந்தார். மேற்கண்ட கடிதத்தில், “குலைத்துக் கடிக்கப் போவதைப் போல பாயவேண்டு” மென்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், நமது தாந்தோனி ராயர் உண்மையிலேயே வீழ்ந்து கடித்துவிடுவார். அவருடைய ஆளுகையில் கீழிருந்த அதிகாரிகள் ரத்தக்கண்ணிர் விடுத்தனர். ஆனால், அவர் மேலதிகாரிகளான துரைகளை மயக்குவதில் யெளவனப் புருஷரை மயக்கும் வேசையரைக் காட்டினும் பெருந் திறமை வாய்ந்தவர். அவர் ஆணாய்ப் பிறவாமல் பெண்ணாய்ப் பிறந்திருந்தால், ஐரோப்பாக் கண்டமே அவரது காலடியில் வீழ்ந்து கிடக்குமோ வென்று பலரது மனதில் ஐயம் தோன்றலாம். அதற்கு நாம் என்ன செய்வது? அது அவருடைய பாக்கியம். பெரிய கலெக்டர் துரையின் பூரணமான தயவை அவர் பெற்றிருந்தமையால், டிப்டி கலெக்டர் முதலிய சிறிய அதிகாரிகள் அவருக்கு அதிகாரிகளாய்த் தோன்றவில்லை. மலையை விழுங்கும் மகாதேவ சாமிக்குக் கதவு ஒரு அப்பளமா மென்பர் நமது பெண்டீர். தாந்தோனிராயர் நமது சாம்பசிவ ஐயங்காரிடத்தில் வெளிக்கு மாத்திரம் பணிவும் அன்பும் கொண்டவரைப் போல நடித்துப் பகட்டி வந்தார்; உண்மையிலோ சாம்பசிவ ஐயங்கார் முன் கோபத்தால் அப்போதைக்கப்போது திட்டியதும் கடிந்து கொண்டதும் ஈட்டியாற் குத்துதலைப் போல தாந்தோனி ராயருடைய மனதில் தைத்தமையால், அவரிடம் உள்ளுற வெறுப்பும், பகைமையுங் கொண்டிருந்தார். தாந்தோனி ராயர் பெரிய கலெக்டரிடம் சென்றால், அவர் தாசில்தாருக்கு ஆசனமளித்து அவரை உட்காரவைத்தல் வழக்கம். நமது சாம்பசிவமோ உட்காரச் சொல்லுவதுமில்லை.

சாம்பசிவத்திற்கும், தாந்தோனிக்கும் பல வேறுபாடுகள் இருந்தன. சாம்பசிவ ஐயங்கார் இளகிய மனத்தினராயினும் முன்கோபமும், கடிந்த சொல்லுமுடையவர்; அதனால் பகைவர் பலரைப் பெற்றவர். தாந்தோணிராயர் கொடிய மனத்தினர் ஆனாலும் இனிய சொல்லினர்; ஏமாற்றும் திறமை உடையவர்; ஆகையால் அவரிடம் பலர் நத்தியலைந்தனர். சாம்பசிவம் தமது அலுவலையும், தமது கடமைகளையுமே மிக்க மதிப்பவர் அன்றி மனிதரைப் பற்றிக் கவனிப்பதில்லை. அவருக்குத் தமது மனிதனுக்கு ஒன்று பிறமனிதனுக்கு ஒன்று என்னும் நியாயம் கிடையாது. மேலதிகாரிகளுக்கு அஞ்சியோ, அன்றி அவர்களின் விருப்பின்படியோ, நீதிதவறி நடப்பவரல்லர். தாந்தோனி ராயர் காற்று எந்தப் பக்கம் வீசுகிறதோ அந்தப் பக்கம் திரும்பி விடுவார். அவருடைய காலை ஒருவன் நன்றாய் வருடிவிட்டால் அவனுக்குக் கணக்குப் பிள்ளை வேலைக்குச் சிபார்சு செய்து விடுவார். பருப்பு ஸாம்பாரை மிக்க மாதுரியமாகச் செய்பவனுக்குப் பட்டா மணியம் வேலை கொடுக்க எழுதி விடுவார். தாம் ஒழுங்காய் வேலை பார்ப்பவர் என்பதைப் பெரிய கலெக்டரிடம் தந்திரமாகக் காட்டிக் கொள்வார். ஆனால், அவருடைய காரியமெல்லாம் ஊழலாகவே இருக்கும். ஆறு மாதங்களுக்கு முன்னர் வந்த தபால்கள் உடைபடாமல் ஒரு மூலையில் குவிந்து கிடக்கும். குமாஸ்தாக்கள் எழுதி அவரது கை யெழுத்துக்காக வைத்த அர்ஜிகள் மலையாய்க் குவிந்து கிடக்கும். மேலதிகாரிகளிடமிருந்து ஏதாவதொரு விஷயத் திற்கு மறுமொழி வரவில்லை யென்று குமாஸ்தாவின் மீது சீறி விழுவார். அவன் அவருடைய கையெழுத்திற்கு ஆறுமாதத் திற்கு முன்னரே அனுப்பிவிட்டேன் என்பான். அது தம்மிடம் வரவேயில்லை யென்று அவர் துணியைப்போட்டு தாண்டிச் சத்தியம் செய்துவிடுவார். அந்த குமாஸ்தாவின் மீது விரோதமாக எழுதிவிடுவார். சாம்பசிவஐயங்கார் யாவரையும் முதுகில் அடிப்பார்; தாந்தோனிராயரோ வயிற்றில் அடிப்பார். சாம்பசிவம் பிறர் வீட்டில் தண்ணீர் கூடக் குடித்தறியார். பிறன் பொருளை விஷமாக மதித்தவர், தாந்தோனியோ பிச்சைக்காரனுடைய அரிசி மூட்டை பெரியதா யிருந்தால், அவனுக்கு வருமான வரி போடுவதாய்ப் பயமுறுத்தி, அவனிடம் அவ்வரிசி மூட்டையிலும் ஒரு பங்கு வாங்கி விடுவார். இருவரும் பணச் செலவு செய்வதில் செட்டுக்குணம் உடையவர்களே. சாம்பசிவம் எந்தச் செலவு இன்றியமை யாததோ அதைச் செய்வார். எது அவசியமில்லாததோ அதைச் செய்யமாட்டார். ஆனால், அவருடைய செட்டுத் தனம் கண்ணியத்திற்குக் குறைவு செய்யாதது. தாந்தோனிராயருடைய செட்டுத்தனம் பிறர் மனதில் அருவருப்பை உண்டாக்கக் கூடியது. அவர் வெளியூர்களில் சுற்றுப்பயணம் வரும்போது, அவரைச் சந்தோஷப்படுத்த நினைத்துக் கர்ணம் ரிவின்யூ இன்ஸ்பெக்டர் முதலியோர் நல்ல விருந்து தயார் செய்து அவருக்குப் பரிமாறினால், ஒட்டகம் ஆறு மாதங்களுக்குத் தேவையான தண்ணீரை வயிற்றில் சேகரம் செய்து வைத்துக் கொள்வதைப் போல, அவர் பல நாட்களுக்குப் பசியா திருக்கும்படிச் சாப்பிடுவார். ஆனால் பரிமாறும் கணக்குப் பிள்ளையின் மனைவி மீதிருக்கும் நகைகளையும், அந்த விருந்தின் சிறப்பையுங்கண்டு, அவன் லஞ்சம் அதிகமாக வாங்குகிறவனென்று நினைத்து, அவனை வேலையிலிருந்து தொலைக்க உறுதி கொள்வார். காலணாவிற்குக் கீரை வாங்குவதிலும் தாசில்தார் உத்தியோகத்தின் அதிகாரத்தைச் செலுத்தி நாலணா கீரை வாங்கிவிடுவார். அவர் எப்போதும் அம்பட்டனுக்கு முக்காலணா கொடுப்பது வழக்கம்; அவரிடம் இருந்தது ஒரு அணா நாணயமாக இருந்தால், அதைக் கொடுத்துவிட்டு, அதில் அதிகமாக இருக்கும் காலணாவிற்குத் தமது மனைவியின் தலையையும் சிறைத்துப் போகச் சொல்லக்கூடிய அற்ப குணத்தை உடையவர். இத்தகைய எண்ணிறந்த குண வேறுபாடுகளினால் தாசில்தாருக்கு டிப்டி கலெக்டர் மீது பெருத்த பகைமை உண்டாய்விட்டது. அவரை எவ்வகையாலும் கெடுத்து அவருடைய வேலையைத் தொலைத்துவிட வேண்டுமென்னும் உறுதி ஏற்பட்டு விட்டது. தாசில்தார் பெரிய கலெக்டர் துரையிடத்தில் பரம யோக்கியத்தைப் போல் நடந்து அவருடைய நன்மதிப்பையும் அன்பையும் பெற்றிருந்தார். அந்த நட்பை இழக்காமல் காப்பாற்றுவதற்காக அவர் வேறு எத்தகைய அட்டுழியம் செய்யவும் பின்வாங்கமாட்டார். ஒவ்வொருநாளும் அவர் காலையில் பெரிய கலெக்டரின் பங்களாவிற்குப் போவார். முதலில் அம்மன் சன்னிதிக்கு வெளியில் நின்று துரைசானி யம்மாளுக்குத் திருப்பள்ளியெழுச்சி பாடி ஸ்தோத்திரம் செய்து காலை வந்தனம் சமர்ப்பிப்பார். அம்மாளுடைய தேக செளக்கியத்தை விசாரிப்பதோடு நில்லாமல், அம்மாளுடைய போஜனத்திற்காக வளர்க்கப்பட்டு வரும் ஆடுகள், கோழிகள், வாத்துக்கள், அம்மாளுடைய நாய், அம்மாள் படுக்கும் கட்டில் மெத்தை முதலியவற்றின் சுகத்தைப் பற்றியும் அந்தரங்க அன்போடு கேட்பார். தினம் ஒவ்வொரு பூமாலை கொண்டு போய் அம்மாளின் நாய்க்குச் சாத்தி, அதன் நற்குணம், மேன்மைகுணம் முதலியவற்றைப் பற்றி அம்மாளுக்கு முன் ஒரு அத்தியாயம் திருப்புகழ் படிப்பார். அதன் உடம்பில் ஒடும் சீலைப் பேனை எடுத்து நசுக்குவார். அவற்றைக் கண்ட துரைசானி பெருமகிழ்ச்சியும் புன்னகையும் கொள்வாள். அதை எவருக்கும் கிடைக்காப் பெரும் பாக்கியமாக மதிப்பார் தாந்தோனியார். பங்களாவில் எத்தகைய தேவையும் உண்டாகாமல் தாசில்தார் பார்த்துக்கொள்வார். அவர்மீது துரை, துரைசானி ஆகிய இருவருக்கும் பட்சம் பெருகி வந்தது.

அவர் பங்களாவிற்கு வரும்போதெல்லாம் எதை மறக்கினும் தமது பகைவரான சாம்பசிவஐயங்காரை மாத்திரம் மறவாதிருந்தார். அவரைப் பற்றிப் பெரிய கலெக்டர் மனதில் கெட்ட அபிப்பிராயத்தையும், அருவருப்பையும், பகைமையும் உண்டாக்கி வந்தார்.

வராகசாமி தனது மனைவி மேனகா காணாமற் போனதைப்பற்றித் தஞ்சையில் தன் மாமனாருக்குத் தந்தியனுப்பிய தினம் காலையில் பெரிய கலெக்டர், சென்னை கவர்னருக்கு ஒரு முக்கியமான விஷயத்தில் அர்ஜி தயாரித்து அனுப்பவேண்டி யிருந்தது. அதில் தமக்குப் பக்கத்துணையா யிருக்கும் பொருட்டு கலெக்டர், தாந்தோனியாரையும், சாம்பசிவத்தையும் காலை ஒன்பது மணிக்கே வரும்படி கண்டிப்பாய் உத்தரவு செய்திருந்தார். தாந்தோ னிராயர் தகப்பனுடைய திதியை விடுத்தாலும் விடுப்பார். பெரிய துரையின் உத்தரவை மீறவே மாட்டார். அவர் விடியற்காலம் ஐந்து மணிக்கே வீட்டைவிட்டுப் புறப்பட்டார். வழக்கப்படி முதலில் அம்பாளின் சன்னிதிக்கு வந்தார். அவள் எழுந்திருக்க வில்லை. அங்கிருந்த நாய், ஆடுகள் முதலியவற்றைத் தடவிக்கொடுத்த பிறகு, சுவாமி சன்னிதிக்குச் சென்றார். தாழ்வாரத்தின் பக்கத்தில் சார்புப் பந்தலிருந்தது, அதில் ஏற்றிவிடப்பட்டிருந்த சம்பங்கிக்கொடி உட்புறத்தை நன்றாய் மறைத்துக்கொண்டிருந்தது. அதன் மறைவில் நின்று உட்புறத்தில் துரை என்ன செய்கிறார் என்பதை உணரும் பொருட்டு ஒட்டகத்தைப் போலத் தலையை நீட்டி நீட்டிப் பார்த்தவண்ணம் நின்று தத்தளித்தார். பொட்லர் அந்தோனி ஓசை செய்யாமல் பங்களாவிற்குள் நுழைவதும், வெளிப்படுவது மாயிருந்தான். அவனிடம் பரம நண்பரைப் போல அன்பும் புன்னகையும் காட்டி துரை எழுந்துவிட்டாரோ என்று தலையசைப்பாற் கேட்டார். அந்த மாதத்திற்கு தாசில்தார் அவனுக்குப் பணம் கொடா திருந்தமையால் அவன் அவருக்கு முகங் கொடாமற் போய்விட்டான். அடுத்த நிமிஷம் உட்புறம் துரையின் குரல் உண்டாயிற்று. அது கோபக்குரலாய்த் தோன்றியது. துரைமார் படுக்கையை விட்டெழுமுன் தேத்தண்ணீர் குடித்தே எழுதல் வழக்கம். அவ்வாறே, திண்டில் சாய்ந்தவண்ணம் துரை தேத்தண்ணீரைப் பருக முயன்றார். தூக்க மயக்கத்தில் கண்ணிமைகள் இன்னம் மூடிக்கொண்டிருந்தன. அப்படியே தேத்தண்ணீர் பாத்திரத்தை வாயில் வைத்தார். அதில் சருக்கரை அதிகமாய்ப் போடப்பட்டிருந்தது. துரைக்கு பெருத்த கோபம் மூண்டுவிட்டது. உரத்த குரலில் அந்தோனியை அழைத்தார். அது தாசில்தார்காதில் தாந்தோனியென்று தம்மை அழைத்ததாகப் பட்டது. உடனே தாசில்தார் குடுகுடென்று உள்ளே ஒடிக் கட்டிலண்டையில் நின்றார். துரை இன்னமும் கண்களைத் திறக்கவில்லை. தாந்தோனிராயர் “காலை வந்தனம்” கூற வாயைத் திறந்தார். அப்போது துரையின் வாயிலிருந்த தேத்தண்ணீர் வெளிப்பட்டு தாசில்தாரின், வாயிலும், மூக்கிலும், முகத்திலும் உடைகளிலும் வருணாஸ்திரம்போல மோதி அபிஷேகம் செய்தது.துரை அதே காலத்தில் “கழுதையின் மகனே! எடுத்துக்கொள் உன் தேத்தண்ணிரை. மூளையில்லா மிருகமே!” என்று தாசில்தாரை அன்போடு உபசரித்தார். எதிர்பாராத அந்த பட்சத்தைக் கண்ட தாசில்தார் சிறிது நேரம் திகைத்துக் கல்லாய் நின்றார். அவருடைய விலையுயர்ந்த ஆடைகள் கெட்டுப் போயின. என்ன செய்வார்; ஒரு வகையான அச்சத்தையும், திகைப்பையுங் கொண்டார். தேத்தண்ணிர் அளவு கடந்து தித்திப்பாயிருந்ததால், துரை தம்மை பொட்லரென நினைத்து அவ்வாறு செய்தாரென்று ஒருவாறு யூகித்தார். சிறிது துணிந்து, “துரைகளே! காலை வந்தனம். நான் தாசில்தார் என்மேல் தேத்தண்ணீர் படவில்லை” என்றார் ராயர். தாசில்தாருடைய குரலை உணர்ந்த துரை திடுக்கிட்டுக் கண்களைத் திறந்து பார்த்தார். உடனே விரைந்தெழுந்து மிகுந்த விசனத்தோடு, “தாசில்தாரே! மன்னிக்கவேண்டும், பொட்லரென்று நினைத்து இப்படி செய்துவிட்டேன். திரும்பவும் உம்முடைய மன்னிப்பைக் கேட்கிறேன்” என்றார். அங்கிருந்த தண்ணீர் பாத்திரம், துவாலை, சோப் முதலியவற்றைக் கொணர்ந்து தாசில்தாருடைய முகத்தைச்சுத்தி செய்ய முயன்றார். தாம் அறியாமல் செய்ததை மன்னிக்க வேண்டு மென்று மென்மேலும் கூறி மனதார வருந்தினார். “அதிகம் படவில்லை; பாதமில்லை; நானே துடைத்துக் கொண்டேன்.துரையவர்கள் இதைப்பற்றி வருந்த வேண்டாம்” என்று தாசில்தாரும் தாண்டவமாடினார். அவர் மீது பெரிதும் இரக்கமும், அன்புங்கொண்ட துரை, அவர் கேட்கும் வரத்தைக் கொடுக்கத் தயாராக இருந்தார். அந்தக் குறிப்பையறிந்த தாந்தோனியார் தமக்கு ஒவ்வொரு நாளும் அவ்விதம் பூஜை கிடைக்க வேண்டுமென்று ஈஸ்வரனை வேண்டினார்.

அரை நாழிகைக்குப் பிறகு அவ்விருவரும் தாம் எழுதக் கருதிய அர்ஜியைத் தயாரிக்க உட்கார்ந்தனர். அப்பொழுதும் சாம்பசிவம் வரவில்லை. மணி பத்தாயிற்று; துரை பொறுத்துப் பொறுத்துப்பார்த்தார். “தாசில்தாரே! ஏன் டிப்டி கலெக்டர் வரவில்லை? இது அவசரமான காரியமென்று நான் எவ்வளவு வற்புறுத்திக் கூறி தவறாமல் ஒன்பது மணிக்கே வரச் சொன்னேன். அவர் கொஞ்சமும் மதிக்க வில்லையே” என்றார் துரை.

தாசில்:- தங்களுடைய உத்தரவே இம்மாதிரியானால், எங்களுடைய கதியைப்பற்றித் துரையவர்களே யோசிக்க வேண்டியதுதான். நாங்கள் நாயினும் கீழாகவே மதிக்கப்பட்டு வருகிறோம். ஆனால், அவர் எங்களுடைய மேலதிகாரி. அவர் மீது வேண்டுமென்று கோள் சொன்னது போலாகும். கவர்மெண்டாருக்குப் போகவேண்டிய அவசர அர்ஜி விஷயத்தில் நான் என் உயிர் போவதாயிருந்தாலும் வராமல் இருக்கவே மாட்டேன். எனக்கு என்னுடைய கடமையே பெரிதன்றி மற்றது. பெரிதல்ல - என்றார்.

துரை:- இந்த விஷயம் இருக்கட்டும். அவர் லஞ்சம் வாங்கும் விஷயம் எப்படி இருக்கிறது?

தாசில்:- அதைப்பற்றி சந்தேகங் கூடவா? அது ஒழுங்காக நடந்து வருகிறது. அவருடைய மைத்துனனை அவர் எதற்காக வரவழைத்து வீட்டில் வைத்துக் கொண்டிருக்கிறார். அவன் மூலமாகவே லஞ்சம் வாங்கப்பட்டு வருகிறது. அவன் வைத்துக்கொண்டிருக்கும் தாசிக்கு மாத்திரம் மாதம் ஆயிரம் ரூபா சம்பளம் கொடுக்கிறானாம். அவனுக்கு வேறு வருமானம் இல்லை. நிலம் முதலிய எவ்வித ஆஸ்தியுமில்லை. டிப்டி கலெக்டர் மனைவியின் உடம்பில் மாதம் இரண்டாயிரம் ரூபாய்க்கு நகை ஏறுகிறது. அவருடைய சம்பளம் ரூ.400. இவ்வளவும் எங்கிருந்து வரும்? பணத்தைக் கொடுத்தவர்களில் பலர் வந்து கேஸும் தம் பட்சம் ஜெயமாகவில்லை யென்று சொல்லி என்னிடம் அழுதார்கள். நான் என்ன செய்கிறது! மேலதிகாரியின் சங்கதி-என்றார். அதைக்கேட்ட துரை உள்ளூற ஆத்திரமடைந்தார். மீசை துடித்தது. ஆனால் தம்மை நன்றாய் அடக்கிக்கொண்டார். “இந்த அர்ஜி விஷயத்தில் அவர் செய்ததை நேரில் துரைத்தனத்தாருக்கு எழுதுகிறேன். தவிர நீரும், போலீஸ் இன்ஸ்பெக்டர் புளுகுமலைப் பிள்ளையும் லஞ்சம் வாங்கும் விஷயத்தைப் பற்றி இரகசியமாக விசாரணை செய்து சாட்சியங்களை சேகரம் பண்ணுங்கள். லஞ்சம் வாங்கின கேஸ்களையும் விசாரணைக்கு எடுத்துக் கொள்வோம்-என்றார்.

தாசில்:- அதில் இன்னொன்றிருக்கிறது. அவர் மேலதிகாரி. உண்மையை அறிந்தவர்கள் அவருக்குப் பயந்து இரகசியத்தை வெளியிடப் பின் வாங்குகிறார்கள். ஆகையால், ஒரு காரியம் செய்தால் நலமாயிருக்கும்; ஆனால் அது என் மனதிற்குப் பிடிக்கவில்லை. அவரை வேலையிலிருந்து மறு உத்தரவு வரையில் நீக்கி(சஸ்பெண்டு செய்து) வைத்தால், யாவரும் உண்மையைச் சொல்லுவார்கள், லஞ்சம் வாங்கின கேஸ் களெல்லாம் பிறகு வெளியாகும்- என்றார்.

துரை :- இருக்கட்டும்; அதைப்பற்றி நான் நன்றாக யோசனை செய்து மேலே எழுதி அவரை நீக்கி வைக்கிறேன் என்றார்.

அதற்குள் சலாம் செய்து டபேதார் உள்ளே வந்து ஒரு கடிதத்தைப் பெரிய கலெக்டரிடம் கொடுக்க, அவர் அதை வாங்கிப் பார்த்தார்.

அது டிப்டி கலெக்டரிடமிருந்து வந்திருந்தது; அதைப் பிரித்து அடியில் வருமாறு படித்தார்.

“ஐயா!

சென்னைக்கு நான்மிக்க அவசரமான சொந்த விஷயத்தின் பொருட்டு போகவேண்டியிருப்பதால், எனக்கு இன்று முதல் நான்கு நாட்களுக்கு ரஜாக் கொடுக்கக் கோருகிறேன்.”

என்று எழுதப்பட்டிருந்த கடிதத்தைப் படித்தவுடன் துரை தாசில்தாரின் முகத்தைப் பார்த்தார். அவர் புன்னகை செய்து, “சென்னைக்கு இராத்திரி 7-மணிக்கல்லவா ரயில் புறப்படுகிறது. அவர் இப்போது வந்து விட்டுப் போவதற்குத் தடை யென்ன?” என்று கூறி எரிகின்ற கட்டையைத் தட்டி விட்டார்.

துரை:- டபேதார்! இதை யார் கொண்டு வந்தவர்?

டபே:- டிப்டி கலெக்டருடைய மைத்துனர் கிட்டையர் என்றான். உடனே துரை வேறொரு காகிதத்தை எடுத்து அதில், “ரஜாக் கொடுக்கப்படமாட்டாது” என்று எழுதி மடித்து ஒரு உறையில் போட்டு ஒட்டி டபேதாரிடம் கொடுக்க, அவன் அதை வாங்கி வெளியிற் சென்றான்.

துரை:- அவ்வளவு அவசரமான காரியம் என்ன விருக்கும்?

தாசில்:- என்ன சூதோ தெரிய வில்லை. ஏதாயினும் லாபத்தை உத்தேசித்ததாகவே யிருக்கும். எல்லாவற்றிற்கும் நான்தந்தி ஆபீஸுக்குப் போய் டிப்டி கலெக்டருக்கு ஏதாயினும் தந்தி வந்ததா வென்று கேட்டு உண்மையை அறிந்து கொண்டு அவருடைய வீட்டிற்கே போய் தந்திரமாக விஷயத்தை அறிந்து கொண்டு வருகிறேன்- என்றார்.

துரை:- சரி; அப்படியே செய்யும் - என்றார்.

உடனே தாந்தோனிராயர் குனிந்து சலாம் செய்துவிட்டு தந்தி ஆபீசுக்குப் புறப்பட்டார்.


❊ ❊ ❊ ❊ ❊

"https://ta.wikisource.org/w/index.php?title=மேனகா_1/012-022&oldid=1252386" இலிருந்து மீள்விக்கப்பட்டது