வேண்டும் விடுதலை/இந்தியாவின் அரசியல் வீழ்ச்சியும் தமிழனின் விடுதலை எழுச்சியும்

விக்கிமூலம் இலிருந்து


 



இந்தியாவின் அரசியல் வீழ்ச்சியும்
தமிழனின் விடுதலை எழுச்சியும்!


ந்தியக் குடியரசு வரலாற்றிலேயே இதுவரை ஏற்பட்டிராத பெரியதோர் அரசியல் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதை இன்று நாட்டைப் பற்றியும் மக்களைப் பற்றியும் எண்ணிக் கொண்டிருப்பவர் அத்தனைப் பேரும் உணர்ந்து வருந்துகின்ற நேரம் இது. இந்திய அரசியல் அமைப்பில் வலிந்ததும் மிகப் பெரியதுமான பேராயக் கட்சியில் தாய்ச்சுவரிலேயே வெடிப்பு கண்டுள்ளது! அடிமரமே பிளவுபட்டுள்ளது. இப் பிளவு அதிகாரச் சார்பினது மட்டுமன்றிக் கொள்கைச் சார்பினதுமாகும் என்று இருதரப்பினரும் பன்னிப்பன்னி உரைத்து வருகின்றனர். கட்சித்தலைவரும், ஆட்சித்தலைவரும் தங்களின் கட்சியை மட்டுமன்றி மக்கள் கூட்டத்தையே கூறுபோட்டுப் பிரிக்கத் தொடங்கிவிட்டனர். பிரிக்கத் தொடங்கியதோடமையாமல் தம்தம் பங்குக்கு வலிவு, மெலிவுகளையும் எடை போடத் தொடங்கிவிட்டனர். ஒற்றுமை என்றும் ஒருமைப்பாடு என்றும் பேசிய கட்சி மேலாண்மையும், அதிகாரமும் இன்று ஒற்றுமை குலைந்து ஒருமைப்பாடு சிதைந்துள்ள நிலைக்கு வந்துவிட்டன. மக்களைத் திருந்த வேண்டும் என்று வேண்டிக்கொண்டவர்கள் மக்கள் திருத்தியும் திருத்த முடியாத அளவு இழிந்துவிட்டனர். அமைப்பும் அதிகாரமும் ஒன்றை யொன்று அழிக்கத் தொடங்கிவிட்டன. கணவனும் மனைவியுமாக இயங்கவேண்டிய கட்சியும், ஆட்சியும் பிரிவினை மனப்பான்மையுடன் தம்முள் வாய்ச்சண்டையும், கைச் சண்டையும் போடத் தொடங்கிவிட்டன. குடியும், குடித்தனமுமாக விரிந்து சிறக்கவேண்டிய இப்பெற்றோர்களிடையே போராட்டங்களைப் பார்த்துப் பிள்ளைகளாகிய மக்கள் மருண்டு திகைப்புண்டு என்ன செய்வதென்று அறியாமல் கூனிக்குறுகிப் போய்விட்டனர். மொத்தத்தில் இந்திய அரசியல் அமைப்பே ஆட்டங் காணத் தொடங்கிவிட்டது. இந்நிலை இந்தியாவிற்குப் பெரியதோர் அரசியல் வீழ்ச்சி என்பதை எவரும் மறுக்க முடியாது.

இன்றுவரை தமிழகம் இந்தியாவின் ஒரு பகுதியாதலின் இந்திய அரசியல் அல்லது பொருளியல் அல்லது குமுகாய வீழ்ச்சி எந்த அளவினதாயினும் அந்நிலை தமிழகத்தையும் ஓரளவு தாக்கவே செய்யும். எனவே இந்தியாவின் நடுவணரசில் ஏற்படுகின்ற மாற்றங்கள், கட்டுக்குலைப்புகள் அல்லது சீர்குலைவுகள் தமிழகத்திலும் ஒருவகை மாற்றத்தை, ஏற்படுத்தியே தீரும். இந்திய அரசியலில் இக்கால் ஏற்பட்ட குமட்டல் கொந்தளிப்புகளும் அதிகாரப் பொருமல்களும் தமிழகத்தையும் தாக்கியுள்ளதாக நாம் கருதிக் கொள்ள வேண்டும். ஆகையால் இந்திய அரசியலின் செரிமானக் குறைவு நம் ஆராய்ச்சிக்குகந்த முழுப்பொருளாக அமையாவிடினும் தமிழகத்தை இந்த நிலை எந்த அளவு தாக்குகின்றதோ அந்த அளவிற்கு நாம் இதைப்பற்றிக் கவலைப்பட்டாகல் வேண்டும். கப்பலில் ஓட்டை ஏற்பட்டு அது முழுக வேண்டிய நிலையில், இதில் அடிமையாக்கப் பட்டுக் கிடக்கும் ஓர் அரசியல் அடிமை, கப்பல் மூழ்கிவிட்டால் என்ன செய்வது என்று எந்த அளவில் வருந்துவானோ, அந்த அளவில் நாமும் வருந்தியாக வேண்டி உள்ளது. எனவே பேராயக்கட்சியின் பிளவு அக்கட்சிக்காரன் ஒருவனை எவ்வளவு வருத்துமோ அந்த அளவு இல்லாமற் போயினும், அக்கட்சியின் நடுவணரசு ஆளுகைக்குட் பட்டுக் கிடக்கும் நாம் அதன் கட்டுக்குலைவை எண்ணிப்பார்க்க வேண்டியுள்ளது. இந்த நிலை நமக்கு ஒரு புடை தீமையாகவும் ஒரு புடை நன்மையாகவும் அமையலாம்.

பொதுவாக நம்மை அஃதாவது தமிழர்களைப் பொறுத்த அளவில் நாம் வடநாட்டானின், அஃதாவது நடுவணரசின் அரசியல் அடிமைகளே. நாம் அடிமைகள் ஆகமாட்டோம் என்று நினைக்கும் அளவிற்கு நமக்குள்ள உரிமைகளில் எதுவும் நமக்கு உறுதிப்படுத்தப்படவில்லை. அரசியல் சட்டங்களில் எவ்வளவோ பேசப்பட்டிருக்கலாம். ஆனால் அவற்றின் நடைமுறைகள், அவ்வரசியல் சட்டங்களைப் பொருளற்றவையாகச் செய்துள்ளன. எனவே பேராயக்கட்சி ஒரு யானையின் அளவிற்கு வலிமை பெற்றாலும் சரியே. அல்லது, ஒரு பூனையின் அளவிற்கு மெலிவுற்றுப் போனாலும் சரியே, நாம் அக்கட்சியின் அஃதாவது அக்கட்சிப் பெரும்பான்மையின் அஃதாவது அக்கட்சியை ஆட்டிப்படைக்கும் வடநாட்டாரின் - இந்திக்காரரின் அடிமைகளே. அந்த அடிமைக் கூட்டத்திற்குத் தலைமை என்று கூறிக் கொண்டு ஓர் அநும பகத்தவத்சலம் போனாலும் சரியே - அல்லது ஒரு வீடண சுப்பிரமணியம் போனாலும் சரியே. அல்லது ஒரு சுக்ரீவக் காமராசு போனாலும் சரியே. வடநாட்டானிடம் நமக்கென்று ஒரு தனிப்பெருமை, இன்றன்று, இனி என்றும் வரப்போவதில்லை. இந்தியாவின் இனத்தை இன்று நேற்றுன்று ஏறத்தாழ மூவாயிரமாண்டுக்காலமாகத் தமிழன் நம்பிப் பார்த்துவிட்டான். அந்த அம்மையினத்தாரின் குருதியில் என்றைக்கும் அழுத்தம் குறைந்ததே இல்லை. அது முன்னேற்றப் பேராயக் கட்சி என்று பேசினாலும் சரி; அல்லது உண்மைச் சமவுடைமைக்கட்சி என்று கூறினாலும் சரி; அல்லது பொதுவுடைமைக்கட்சி என்று கூப்பாடுப் போட்டாலும் சரி; அந்த அம்மையாரின் குரலையும் தமிழர்கள் நம்ப வேண்டியதில்லை. அவரின் எழுத்தையும் தமிழர்கள் ஒப்பவேண்டியதில்லை; அவர் ஒரு முழு ஆரியப் பார்ப்பனத்தி, நம்மைப் பொறுத்தவரை ஆரியப் பார்ப்பானுக்கு இருக்கின்ற இனப்பாங்கைவிட ஆரியப் பார்ப்பனத்திக்கு இருக்கின்ற இனப்பாங்கு இரண்டு மடங்காகவே இருக்கின்றது என்று சொல்லலாம்."பார்ப்பனர்கள் இன்று திருந்திவிட்டனர்; நேற்றுப்போல இல்லை" என்று பேச்சில் பேசலாம்.அல்லது எழுத்தில் எழுதலாம்; ஆனால் பார்ப்பனன் என்றும் திருந்தான். அது நிலவுலகமானாலும் சரி; நிலா உலகமானாலும் சரி. இந்திர பிரம்ம உலகங்கள் ஆனாலும் சரி. அங்குள்ள பார்ப்பனனும் பூணுலைத்தான் போடுவான். பார்ப்பனத்தியும் பார்ப்பானுக்கு மேலாகத்தான் இருப்பாள். அவர்கள் வேலை உட்காய்ச்சல் போன்றது. அவர்களிடம் காமராசரின் அரசியல் தந்திரமும் செல்லாது. கருணாநிதியின் அரசியல் மந்திரமும் ஏறாது. காமராசர் அந்த வகையில் தம் தோல்வியை உணர்ந்து விட்டார். கருணாநிதி உணர்வார். இனி, இந்திராவின் கண்ணாடிக்குக் காமராசரும். கருணாதிதியும், சுப்பிரமணிய, பக்தவத்சலங்களும் இன்னும் யாவரும் கறுப்பாகத்தான் தோன்றுவர். அதில் எள்ளளவும் ஐயப்பாடில்லை. காரணம் இந்தியாவில் நடப்பது முழு அரசியல் அன்று; ஆரியவியல் கலந்த அரசியல்.

ஆகவே தமிழர்கள் இத்தகைய அரசியல் வண்ண மத்தாப்புகளின் வெளிச்சத்தில் தங்கள் மேனி யழகுகளைப் பார்த்து மகிழ்ந்து கொண்டிருக்க வேண்டா. அவர்தம் நோக்கமும் கொள்கையும் இனம் வீழ்த்தப்பட்டதையும், தம் பெருமை சாய்க்கப்பட்டதையும் எண்ணிப்பார்க்க வேண்டும். இவற்றைப் பற்றி அறிவுணர்ச்சியற்ற உடம்புகளும், வினையுணர்ச்சியற்ற மேனிகளும் வேண்டுமானால் “அவன் நல்லவன்: இவன் வல்லவன்; அவன் சொத்தை, இவன் சொள்ளை” என்று சொல்லிக் கொண்டு திரியட்டும். மானமுள்ள நாம் அடிமைத்தனத்தினின்று விடுதலை பெற்றாக வேண்டும் அரசியல், பொருளியல், குமுகாயவியல் அல்லது பண்பாட்டியல் முதலிய நிலைகளினின்றும் நாம் விடுதலை பெற்றாக வேண்டும். இவ்வத்தனைத் துறைகளிலும் நாம் முன்னேறியாகவும் வேண்டும்.

எங்காவது எவனாவது "தமிழ் முன்னேறிவிட்டது; தமிழ் ஆளுகிறது; தமிழ் வாழுகிறது; அங்குத் தமிழ்; இங்குத் தமிழ்” என்று சிலம்பாடுவானானால் அவனுக்காக இரக்கப்படுங்கள். அவனிடத்தில் இப்படிக் கூறுங்கள்: "ஐயா, தமிழரே! தமிழ் எவ்வளவு முன்னேறி இருக்கின்றது என்று கூறுகின்றீரோ; அவ்வளவில் அது வீழ்த்தப்படவிருக்கின்றது. மணலுள் நட்ட மரம்போல் விரைவில் சாய்ந்துவிடப் போகின்றது. ஏனென்றால் நீர் கூறும் முன்னேற்றத்தில் அடிப்படை என்பது எள்ளத்துணையும் இல்லை; உண்மையில்லை; இனி விளைந்துபோக வேண்டிய எருவில்லை; அதன் பருமையில் திண்மையில்லை; அதன் பளபளப்பு உடலின் ஒளியன்று; நோயின் மினுக்கு மொத்தத்தில் தமிழ் “சட்டிக்குத் தப்பி நெருப்பில் விழுந்த கதை” - என்று விளக்கிக் காட்டுங்கள். விளங்கிக்கொண்டால் போகட்டும்; விளங்காவிடில் கவலை வேண்டா. பக்தவத்சலத்தின் கொடியைவிட உயரமாகப் பறந்த கொடி வேறில்லை; காமராசரின் ஒரு கை கன்னியாகுமரி முனையையும் மறுகை பனிமலை உச்சியையும் தொட்டுக் கொண்டிருந்தது; அக் கால்கள் இந்தியாவைச் சுற்றிச் சுற்றி நடையிட்டன. இன்று அவர்தம் கைகால்களை முடக்கிக் கொண்டு நிசலிங்கப்பாவின் வீட்டுத் திண்ணையில் முடங்கிக்கொண்டு கிடக்கின்றார். இப்படிப் பெரிய அரசியல் மூளைகளெல்லாம் மூழ்கிப் போயின. இவர்கள் எம்மாத்திரம் வற்றிய ஓலை சலசலக்கும்: எஞ்ஞான்றும் பச்சோலைக்கில்லை என்பது அழிக்கமுடியாத உண்மை

எனவே தமிழா, “நாம் முன்னேற்றம் அடைந்துவிட்டோம். இனி நமக்கு வேறொன்றும் வேண்டுவதில்லை; நடப்பது நம் தமிழ் ஆட்சி: ஆளுவது நம் தமிழன்” என்றெல்லாம் கனவுலக வாழ்க்கையின் காட்சியில் இறுமாந்து போகாதே! பேராயக் கட்சியும் தொலைந்துவிட்டது. காமராசும் பக்தவத்சல சுப்பிரமணியங்களும் ஒருவரையொருவர் அடித்துக் கொண்டு கால்முறிந்து கிடக்கின்றனர் என்று பெருமைப்படாதே என்றைக்கும் உன்னால் வீழ்த்தப்படாத ஆரியம் உன் நடவடிக்கைகளில் எது சரியோ அதற்குப் புறத்தே பாராட்டும் அகத்தே குழிப்பறிப்பும். எது தவறோ அதற்குப் புறத்தே கண்டிப்பும், அகத்தே தூண்டுதலும் செய்து கொண்டுள்ளது. ஆகையால் மொழியறிவற்ற நீ, வரலாற்றறிவுகாணா நீ, ஆட்சித்தருக்குக் கொண்ட நீ உன் பாட்டன் பூட்டன்களாகிய பாண்டிய, சோழ, சேரர்களைவிடத் தோள்வலிவற்ற நீ, அவர்களாலேயே சாய்க்கவியலாத ஆரியத்தைச் சாய்த்து அதன் வாயைக் கிழித்து விடுவாய் என்று, நீ ஏதுமற்ற நீ, நினைப்பாயானால் அந்த அறியாமைக்குத் திருவள்ளுவரின் கல்லறை சிரிக்கும்; சிவஞான முனிவரின் கல்லறை நகைக்கும்; மனோன்மணியம் சுந்தரனாரின் கல்லறை எள்ளும், பா. வே. மாணிக்கனாரின் கல்லறை இரங்கும்; மறைமலையடிகளின் கல்லறை இகழும்; சோமசுந்தர பாரதியாரின் கல்லறை ஏசும்; பாவேந்தர் பாரதிதாசனின் கல்லறை ஏங்கும். ஆகவே உனக்குத் தேவையான உண்மையான விடுதலை கிடைப்பதற்குமுன் நீ உன் முயற்சிகளில் ஒருசிறிதும் பின்னடைய வேண்டா.

இந்தியாவில் இக்கால் ஏற்பட்டிருக்கும் அரசியல் வீழ்ச்சி, உன் விடுதலை - எழுச்சிக்கு வித்திட்டிருக்க வேண்டும். உன்நிலை முன்னையினும் இப்பொழுது மிகவும் இரக்கத்திற்குரியது. ஓய்விருந்தால் இந்திய வரலாற்றைச் சற்றே திருப்பிப் பார். அரசர்கள்மூ அதிகாரத்திலிருந்தவர்கள் தங்களுக்குள் அடிபிடிச் சண்டைகள் நடத்தியவற்றிற்கு யார் காரணர்களாக இருந்திருக்கின்றனர். என்றுபார். அங்கு நடந்துள்ள வீழ்ச்சிகளெல்லாம் எந்தெந்தச் சூழலில் நடந்தன என்பதை உன்னிப்பாகப் படித்தறி. எடுத்துக்காட்டிற்கு ஒரு நிகழ்ச்சியைத் தருகின்றேன். நாகப் பேரரசின் வரலாறு உனக்குத் தெரிந்திருக்கும். அதை நிறுவியவர்கள் ‘நந்தர்கள்’ என்றழைக்கப்படும் ஒன்பது நந்தர்கள். அவர்கள் எண்பத்துமூன்று ஆண்டுகளாக இந்தியாவில் ஆரிய இனத்தை அலற அடித்தவர்கள். அவர்களின் ‘புராண’, இதிகாசங்களைக் கொளுத்தியவர்கள்! அவர்களுள் கடைசி அரசனான் 'நந்தன்' என்பவன் ஆரியர்களை மிகவும் அடக்கி ஆண்டான் என்பதற்காக, விஷ்ணுகோபன் என்னும் ஓர் ஆரியப் பார்ப்பனன் அவர்களைச் சந்திரகுப்தன் என்னும் மெளரியனைக் கொண்டு வீழ்த்தினான் என்பது வரலாறு. நந்தன் ஆரிய எதிரி. சந்திரகுப்தன் ஆரிய அடிமை. நந்தன் ஆரிய இறைமறுப்புக்காரன்; சந்திரகுப்தன் ஆரிய இனவழிப்பாட்டுக்காரன்,'நந்தன்' என்னும் அந்த சைசு நாக இனத்தின் கடைசிப் பேரரசன் மிகவும் ஆற்றல் வாய்ந்தவன்தான். அவனிடம் இருபதினாயிரம் குதிரைப் படைகளும், இருநூறாயிரம் காலாட் படைகளும், இரண்டாயிரம் தேர்ப்படைகளும், நான்காயிரம் யானைப் படைகளும் இருந்தன. அவனுக்கு அக்காலத்திருந்த தென்னக அரசர்களின் துணையும் இருந்ததாக வரலாறு உரைக்கின்றது. அத்தகைய வல்லானை, பேரரசனை, அவன் ஆரியர்களிடம் அடங்கவில்லை, மாறாக அவர்களை அடக்கியாண்டான். என்னும் ஒரே காரணத்திற்காக, சந்திரகுப்தன் என்னும் ஓர் அறியாச் சிறுவனைக் கொண்டு சூழச்சியால் வீழ்த்தியவன் ஓர் ஆரியப் பார்ப்பனன். அவன்தான் “விஷ்ணுகோபன்” அவன்தான் பிற்காலத்தில் 'சாணக்கியன்’ என்று தன் பெயரை மாற்றிக்கொண்டவன். அவன்தான் "கௌடில்யன்” அவன் எழுதிய அர்த்தசாத்திரத்தின் இறுதியில் காணப்படும் வரி வரலாற்றுப் புகழ்பெற்றது. அஃது இது. ("ஆரியர்க்கு வந்த) கொடுமைகளிலிருந்து புனித ஏடுகளையும் (சாத்திர புராணங்களையும்), போர் நூல்களையும் (ஆரியன் தந்திர நூல்களையும்) (ஆரியரை எதிர்க்கும்) நந்தரின் வயமாகிவிட்ட நாட்டையும் எவன் காப்பாற்றினானோ, அவனால் (அந்த விஷ்ணுகோபனால்) இந்த (அர்த்த) சாத்திரம் (புனிதநூல்) இயற்றப்பட்டது.”

(இந்திய வரலாறு: வின்சென்ட் ஏ. சுமித் : பகுதி.1, பக். 168)

அத்தகைய சூழ்ச்சியும் வஞ்சமும் கரவும் நிறைந்தவர்களாகியப் பார்ப்பனர்களும். அவர்களைச் சுற்றியுள்ள ஆரிய வெறியர்களும் அவர்களினத்தில் வந்த பெண்ணொருத்தியின் தலைமையைப் பார்ப்னர்களும் எவ்வாறு முட்டுக்கொடுத்துத் தாங்குகின்றனர் என்பதைத் தன்னுணர்வும் தன்மானமும் தன்னாண்மையும் மிக்கவர்கள் நன்கு அறிவர். பதவிப்பித்தர்களும், அதிகார மயக்குற்றவர்களும் கவலைப்படார். மறைந்த அறிஞர் அண்ணாவின் “ஆரியமாயை” நூலின் கருத்துகளை அவர் மூளையிலிருந்து மறைந்து போகுமாறு அல்லது செயலற்றுப் போகுமாறு செய்தவர்கள் ஆரிப்பார்ப்பனர்கள். இல்லையானால் அதுபோன்ற ஒரு நூலாசிரியரை ஆட்சிக்குக் கொணர்ந்த பயனை அந்த நூல் பெற்றிருக்க வேண்டும். வெளிப்புடையாகச் சொன்னால் அவர் காலத்தில் நம் குமுகாயக் கொள்கைக்கு உலை வைக்கப்பட்டது. இக்கால் நம் அரசியல் கொள்கையே ஆட்டம் கண்டுள்ளது. பக்தவத்சலமும் சுப்பிரமணியமும் முழு ஆரிய அடிவருடிகள் என்பதை வரலாற்றிலிருந்து எந்த நிலையிலும் அழித்துவிட முடியாது. அவர்கள் ஆரிய அடிமைகள் மட்டுமல்லர்; தமிழர்களின் பகைவர்கள். நாம் எதையோ எண்ணிக்கொண்டு எவருக்கோ போடும் பூமாலைகள் அப்படிப்பட்டவர்களின் கழுத்துகளில் போய் விழுகின்றன என்றால் நம் அரசியல் கொள்கையும் வீழ்ச்சியுறுங்காலம் நெருங்கிற்று என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்? அத்தகைய சூழ்ச்சிக் குப்பைகளை இப்படியே கிளறிக்கொண்டே போனால், அவற்றில் நாம் தொலைத்த கொள்கை மணிகள் இன்னும் எத்தனையோ மின்னிக் கொண்டிருப்பதைக் காணலாம். எனவே இந்த நிலையில் நாம் செய்யவேண்டுவது என்ன என்பதை மட்டும் ஒரு முறை நினைவூட்டிக்கொள்ள வேண்டும்.

தமிழகம் தன்னாட்சி பெற்றாலன்றித் தமிழும் தமிழனும் நாளைக்கன்று, இன்னும் ஆயிரமாண்டுகள் போனாலும் இப்படியே தான் இருத்தல் முடியும். அவ்வப்பொழுது எவராகிலும் சில பக்தவத்சல சுப்பிரமணியங்கள் இருக்கத்தான் செய்வர். இவர்களின் காட்டிக் கொடுப்புகளின்றும், ஆரியவடவரின் சூழ்ச்சிகளினின்றும் என்று நாம் மீட்சியுற்று நம்மைக் காத்துக்கொள்கின்றோமோ, அன்றே நாமும் வாழ்கின்றோம் என்று பொருளாகும். உலகில் அன்று தொலைநோக்கிக்கும் அகப்பட்டிராத எத்தனையோ இனங்கள், நாடுகள் இன்று தொலைக்காட்சியில் மிளிர்ந்து கொண்டிருக்கின்றன. அன்று உலகளாவிப் பெருமையுற்ற தமிழினமும், தமிழகமும் தமிழும் இன்று தேய்ந்து மாய்ந்து வருகின்றன என்பதை உலகியலறிவுற்ற ஒவ்வொரு தமிழனும் உணர்வான். போலிகள் சிலர்தாம் பெருமைப்பட்டுக் கொள்வர். அவர் தம்மை மேலும் சீர்குலைக்க ஆரிய வடவரின் அதிகார வாய்கள் சிலதாம் அவர்களையும் அவர்களின் போக்கையும் சரி, உயர்ந்தது, சிறந்தது என்று புகழ் பாடிக் குழிபறித்துக் கொண்டிருக்கும். அவற்றின் ஒவ்வொரு பாராட்டும் நம்மை ஒரு படி கீழிறக்குகின்றது. அவற்றில் மயங்கிக் கிறங்குகிறான் தமிழன். இவன் இந்தத் தலைமுறையில் தன்னை நிலைப்படுத்திக் கொள்ளத் தவறுவானானால், இனி எந்தத் தலைமுறையிலும் தலையெடுக்க மாட்டான் என்பதை நெஞ்சில் பொறித்துக் கொள்ளுதல் வேண்டும். நம்மூச்சு தமிழக விடுதலை; நம் பேச்சு தமிழக விடுதலை நம் அரசியல் கொள்கை தமிழக விடுதலை; நம் அரசியல் கொள்கை தமிழக விடுதலை; நம் முழு வாழ்க்கையும் செலவிடப் பெற்றாகல் வேண்டும். தமிழனே! வீழ்ந்து கிடவாதே; விழி எழு! நட!

- தென்மொழி, சுவடி 7, ஓலை 8, 1969