செயலும் செயல்திறனும்/முன்னெச்சரிக்கையும் கண்காணிப்பும்

விக்கிமூலம் இலிருந்து

17. முன்னெச்சரிக்கையும் கண்காணிப்பும்

1. வரலாறு, வாழ்க்கை, அறிவியல்

பொதுவாகவே அறிவு மூன்று காலத்துக்கும் உரியது. ஆனால் அதன் பயன் நிகழ்காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் மட்டுமே உரியது. நேற்றைய அறிவால் இன்றைக்குப் பயன் வரும். இன்று பெறுகின்ற அறிவால் நாளைக்குப் பயன் வரும். ஆனால் இன்று பெறுகின்ற அறிவு நேற்றே பயனை விளைவித்திருக்க முடியாது. பயன் என்பது விளைவும் துய்ப்பும். எனவே ஒரு விளைவுக்கான அறிவு பின்னால் வந்து பயனில்லை. முன்னாலேயே அறிவு அறியப் பெற்றால்தான் அது பயன்தர முடியும். அதனால்தான், திருவள்ளுவப் பேராசான் எதிரதாக் காக்கும் அறிவு (429) என்று அதனைச் சிறப்பித்துக் கூறுவார்.

காலத்துக்கு ஏற்ப அறிவு மூன்று பெயர் பெறும். கடந்த கால அறிவு வரலாறு என்றும் நிகழ்கால அறிவு வாழ்க்கை என்றும், எதிர்கால அறிவு அறிவியல் என்றும் பெயர் பெறும்.

செயலைப் பொறுத்த அளவில் முதலிரண்டு அறிவு நிலைகள் கட்டாயம் ஒருவர்க்கு வேண்டும். எதிர்கால அறிவு ஆராய்க்குப் பின்னால் விளைவது, முன்னிரண்டு நிலைகளால் அறிவு துலங்கத் துலங்க, எதிர்கால அறிவு நமக்குத் தானே விளங்கும். எதிர்கால அறிவைப் பெறுவதில் நமக்கு விழிப்புணர்வு பயன்படுகின்றது. விழிப்போடிருப்பது எச்சரிக்கை.

2. எச்சரிக்கை உணர்வு

தொழில் நிலையில் இவ்வெச்சரிக்கை உணர்வு நமக்கு எப்பொழுதுமே இருத்தல் வேண்டும். இதைச் செய்தால் இது விளையும் என்று நமக்குத் தெரிந்திருத்தல் எச்சரிக்கை ஆகும். கடந்தகால அறிவு விதை போன்றது. நிகழ்கால அறிவு நிலம் போன்றது. விதையை நிலத்தில் ஊன்றினால் விளையும் விளைவு எதிர்கால அறிவு போன்றது. நல்ல விளைவை ஒருவன் பெற விரும்பினால், விதையையும் நிலத்தையும் ஒருவன் முன்கூட்டியே பெற்றிருக்க வேண்டும். தவறான விதை நல்ல விளைவைத் தராது. எனவே, உற்ற அறிவால் உறவேண்டிய பயனை

அடைய விரும்புபவர், அதை நல்ல முறையில் ஈடுபடுத்த வேண்டும். ஒவ்வொரு நிலையிலும் அத்தகையவர்க்கு விழிப்புணர்வு மிகவும் இன்றியமையாதது.

இந்த விழிப்புணர்வாகிய எச்சரிக்கை இல்லாமற் போனால் ஒருவர் பல இடர்ப்பாடுகளை எதிர்நோக்க வேண்டியிருக்கும். எச்சரிக்கையாக இருப்பவர்க்கு இவ்விடர்ப்பாடுகள் ஏற்படுவது இல்லை. அல்லது அவை குறைவாகவே இருக்கும்.

எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை

அதிர வருவதோர் நோய்.

(429)

முன்னறிவுடையவர்கள் என்பவர்கள் எப்பொழுதுமே எச்சரிக்கையாக இருப்பார்கள். பொதுவாக மக்கள் எல்லார்க்கும் நிகழ்கால அறிவே அஃதாவது வாழ்க்கை அறிவே இருக்கும். ஒரு சிலர்க்கே கடந்தகால அறிவு இருக்கும். மிகச் சிலர்க்கே எதிர்கால அறிவு இருக்கும். இந்த மூன்று அறிவு நிலைகளும் கூட ஒருவர்க்கே வேறுபட்டதாக இருக்கும். பலரிடமோ இவ்வறிவு உணர்வுகள் பல்வேறுபட்ட நிலைகளில் இருக்கும். அதனாலேயே பலவகையான சிக்கல்கள் அவ்வப்பொழுது எழுந்து கொண்டிருக்கும். இவற்றைத் தீர்வு செய்வதற்கே பலர்க்கு வாழ்க்கை சரியாகப் போய்விடும். எனவேதான் மிகமிகச் சிலரே வாழ்க்கையைத் தாங்கள் எண்ணியபடி பயனுடையதாகச் செய்து கொள்ள முடிகிறது.

3. முன்னறிவே அறிவு

முன்னறிவுடைமையே சிறப்பான அறிவாகும். மிகப் பலருக்கு இச்சிறப்பறிவு இருப்பதில்லை. அப்படிப்பட்டவர்கள் அவ்வப்போது அவர்களுக்கு கிடைக்கும் அறிவுநிலைகளை வைத்துக்கொண்டு வாழ்க்கை நடத்துகின்றனர். சிலர் தாங்கள் பெற்ற கடந்தகால அறிவை வைத்துக் கொண்டு, அதனை நிகழ்கால அறிவுடன் பொருத்திக் கண்டு, தங்கள் வாழ்வை இன்னுங் கொஞ்சம் மேம்பட்டதாக அமைத்துக் கொள்கின்றனர். ஆனால் மிகமிகச் சிலரே, தாங்கள் பெற்ற கடந்தகால அறிவு, தாங்கள் பெற்ற நிகழ்கால அறிவு, இதனுடன், தாங்கள் பெறவேண்டிய எதிர்கால அறிவு, இவற்றுடன், தாங்கள் பெற வேண்டிய எதிர்கால அறிவை ஆராய்ந்துணர்ந்து அறிவியல் சார்ந்த சிறப்பான வாழ்க்கையை வாழ்ந்து, பயனும் பெருமையும் பெறுகின்றனர். இந்த மூன்று நிலை அறிவை உடையவர்களைத் தாம் அறிவுடையவர்கள் என்று சொல்லலாம். இவர்களே எதிர்வரும் விளைவுகளை அறிந்து

அதற்கேற்பத் தாங்கள் வாழ்ந்து வருவார்கள். மற்றவர்கள் அவ்வாறு வாழ்வதற்கு இயலாது.

அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்

அஃதறி கல்லா தவர்

(427)

பெரும்பாலும் அறிவுடையவர்கள் என்றாலே முன்னறிவுடையவர்களே என்று கருதுதல் வேண்டும். ஏனெனில் விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் பொதுவாக நிகழ்கால அறிவுமட்டுமே இருக்கும். உணவை உண்ணுதல், நீர் அருந்துதல், பகைக்குத் தப்புதல், மற்ற தன்னினத்துடன் ஒன்றாயிருத்தல், ஆணும் பெண்ணும் சேர்ந்து இனப்பெருக்கச் செயலில் ஈடுபடுதல், சண்டையிட்டுக் கொள்ளுதல், உறங்குதல் முதலிய செயல்களுக்கும் நிகழ்கால அறிவே போதுமானதாகும்.

பறவைகளுள் சிலவும் விலங்குகளுள் சிலவும் கடந்தகால அறிவையும் நினைவில் வைத்திருக்கும். அவ்வகைய உயிரினங்கள் தாங்கள் சென்ற வழியை அடையாளம் வைத்திருத்தல், இரை கிடைக்கும் இடங்களை நினைவில் வைத்திருத்தல், தம்மிடம் பழகியவரை நினைவில் வைத்திருத்தல், அவர்களிடம் அன்பு காட்டுதல் தம் தம்துணைகளையும் குஞ்சுகளையும், குட்டிகளையும் அடையாளந் தெரிந்து கொள்ளுதல், கற்றுக் கொடுத்த செயல்களைத் திரும்பச் செய்தல், சொல்லிக் கொடுத்த ஒலிகளையும், சில சொற்களையும் திரும்ப ஒலித்தல், சொல்லுதல் முதலிய செயல்களுக்கும் கடந்த கால அறிவு உதவுவதாகும்.

ஆனால் மாந்தர்களுக்கு மட்டுமே சிறப்பாக உள்ள எதிர்கால அறிவியல் அறிவு அவற்றிற்குச் சிறிதும் இருப்பதில்லை. அதனால்தான் புதிய சூழ்நிலைகளை அவை ஆராய்ந்து அறிவதில்லை. தங்களுக்குரிய உணவை அவை விளைவித்துக் கொள்வதில்லை;அவற்றின் ஒலியிலும் நடையிலும் வளர்ச்சியிருப்பதில்லை.

எனினும், பறவையினங்களுள் சிலவற்றிற்கும், விலங்கினங்கள் சிலவற்றுள்ளும் சில முன்னுணர்வுகள் உண்டு. அவை, வருகின்ற பருவகாலங்களை உணர்ந்து, அவற்றுக்கேற்பத் தங்கள் இருப்பிடங்களை மாற்றிக் கொள்ளுதல், எதிர்காலத்திற்கு வேண்டிய உணவுகளைச் சேமித்து வைத்தல், தங்கட்குக் குஞ்சுகளோ, குட்டிகளோ பிறக்கும் காலங்களை உணர்தல், அவற்றிற்கேற்பப் பிறப்பிடங்களை அமைத்தல், தொலைவிலுள்ள நீர் நிலைகளை உணர்ந்து அவற்றைத் தேடிச் செல்லுதல் முதலியன அவற்றின் உணர்வு நிலைகளே தவிர அறிவு

நிலைகள் அல்ல. அதனால்தான் இந்நிலை உணர்வுகள் அவற்றிற்குப் படிநிலை வளர்ச்சி பெறுவதில்லை. பொதுவாக அறிவுநிலைகளே வளர்ச்சி பெறக் கூடியன. உணர்வுநிலைகள் எல்லா உயிர்களுக்குமே பொதுவானவை. அவ்வுணர்வு நிலைகள் கூட அவற்றின் மன உணர்வுகள் அல்ல. உறுப்பு உணர்வுகளே.

4. எதிர்கால அறிவு - ஆவதறியும் அறிவு

கண்களுக்குப் பார்க்கின்ற உணர்வும், காதுகளுக்குக் கேட்கின்ற உணர்வும் பிற பொறிகளுக்கு அவ்வவற்றிற்குரிய உணர்வுகளும் இருப்பன போலவே, அவற்றிற்குச் சில உடல்நிலை ஊறுணர்வுகளும் உண்டு. எறும்புக்கும், தும்பி முதலிய பூச்சிவகைகளுக்கும் மழை வரப்போவது தெரிந்திருப்பது ஊறுணர்வே தவிர, அறிவுணர்வன்று. அறிவுணர்வு ஊறுணர்வுகளையும், உள்ள வுணர்வுகளையும் கூட நுனித்து அறியும் உணர்வாகும். அது விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் அறவே இல்லை. சில பறவைகளும், விலங்குகளும் தங்களுக்கு மாறான சில உணர்வுகளை மோந்து பார்த்த அளவில் தவிர்த்து விடுகின்ற உணர்வும் மூக்கின் ஊறுணர்வே ஆகும்; அறிவுணர்வு அன்று. நாயும் பூனையும் கோழியும் போன்றவை தம்மிடம் பழகுகின்றவர்களை அறிந்து கொள்ளுதல் ஊறுணர்வே ஆகும். ஆனால் மாந்தர்களிடம் உள்ள அனைத்து உணர்வு நிலைகளுக்கும் அறிவுக்கும் நிறைய தொடர்புண்டு அறிவுணர்வு வளர வளர ஊறுணர்வு குறைந்து விடுகிறது. எனவே, மாந்தனை மட்டுமே அறிவுள்ள விலங்கு என்று கூற முடியும். ஆனால் இக்காலத்து மாந்தத் தொடர்புடைய குரங்கு முதலிய அறிவு நிலை வளர்ச்சி உடைய விலங்குகளுக்கும் ஓரளவு அறிவியலறிவு ஊட்டப் பெறுகின்ற முயற்சிகள் நடக்கின்றன. எனினும் இவ்வறிவு படிநிலை வளர்ச்சிப் பெறுவதில்லை.

ஆகவே, மாந்த அறிவுநிலை என்பது, எதிர்கால அறிவை ஆராய்கின்ற அறிவியலறிவு ஆகும். இதைப் பகுத்தறிவு என்று குறிப்பிடுவது சரியன்று. நன்மை தீமைகளைப் பகுத்துப் பார்க்கும் அறிவையே பகுத்தறிவு என்று கூறிவருகின்றோம். ஆனால், அறிவு வளர்ச்சியில் பகுத்தறிவு ஒரு படிநிலையே தவிர முற்ற முடிந்த அறிவாகாது. அதற்கு மேலும் அது வளர்ச்சி பெற்று அறிவியலறிவாகவும், மெய்யறிவியலறிவாகவும் விளங்குவது உண்டு. அவற்றின் விளக்கங்களெல்லாம் இங்குத் தேவையில்லை.

இனி, எதிர்காலத்தை ஆய்ந்தறியும் அறிவியலறிவே மாந்தர் அனைவர்க்கும் மிகச் சிறப்பையும் பயனையும் அளிப்பது; இந்த அறிவுநிலகளையே திருவள்ளுவப் பெருமான், ஆவதறியும் அறிவு (427),

எதிரதாக் காக்கும் அறிவு (429), வருமுன்னர் காக்கும் அறிவு (435), முற்காக்கும் அறிவு (442), ஒவ்வதறியும் அறிவு (472), எண்ணித் துணியும் அறிவு (467), மூத்த அறிவு (411), ஆயும் அறிவு (198, 914, 918, 622, 517, 79) வழக்கறியும் அறிவு 795, ஆராய்ந்த அறிவு (682, 634, 586, 682, 711, 584) என்று பலவாறு விதந்தும் போற்றியும் கூறுவார்.

{gap}}இத்தகைய சிறப்பான அறிவியலறிவே, உலகின் அனைத்துத் தொழில்களுக்கும் காரணமாகி நின்று, இன்பத்தையும் பயனையும் தருகின்றது. எந்தச் செயலை அல்லது வினையைச் செய்பவரும் இந்த அறிவுநிலை வளர்ச்சி பெறப்பெறத்தான், அவர் அதில் சிறப்புற இயங்குதல் இயலும் இல்லெனில் அவர் அதில் சிறப்புற இயலாததுடன், இழுக்கையும் இழப்பையும்கூட எய்துவது திண்ணம்.

எனவே, ஒரு செயலில் ஈடுபட விரும்புவார், அதற்குரிய பொருள் முதலிய கருவிகளை அறிந்து அவற்றைத் தேடிக் கொள்வதைப் போலவே, தாம் செய்யப் புகும் தொழிலில் முன்னெச்சரிக்கையுடன் இருப்பதும் மிகவும் இன்றியமையாத விழிப்புணர்வாகும். கருவிகளை அறிந்து கொள்ளுதலும் ஒரு முன்னுணர்வுதான். அதுபோல் தமக்குரிய செயலைச் செய்யப் புகுவதும் ஒரு முன்னுணர்வாலேயே நடைபெறுதல் வேண்டும். இம்முன்னுணர்வே முன்னெச்சரிக்கையாக வளர்கிறது.

5. உள்ள உணர்வும், அறிவுணர்வும்

பெரும்பாலும் உணர்வு உள்ளத்தினது; அஃது அறிவுணர்வாக வளர்ச்சியடையும் பொழுதுதான் அதனால் பயன் கிடைக்க முடியும். மேலும் உள்ள உணர்வு உயிர்த்தொடர்புடையது; அறிவுணர்வே பொருள் தொடர்புடையது. முன்னெச்சரிக்கையாக இருப்பதற்கு அறிவுணர்வே பெரிதும் வேண்டும். இந்த இரண்டு நிலைகளையும் விளக்குவதற்கு ஓர் எடுத்துக்காட்டைப் பயன்படுத்துவோம்.

திருமணமாகாத பெண் ஒருத்தி ஒருவனைக் கண்டு, இவன்தான் நம் கணவனாவதற்கு உரியவன் என்று எண்ணுவாளானால், அது முற்றும் உள்ள உணர்வின்பால் படுவது ஆகும். இது பெரும்பாலும் உயிர்த்தொடர்பால் அறியத்தகும் உள்ளுணர்வாகும். அதன்பின் அவள், அவனைப் பற்றி மேலும் அறிய விரும்பி, அவன் யார், எந்த ஊர், எந்தக் கல்வி கற்றவன், என்ன பொருளேந்துகளைப் படைத்தவன், என்ன அளவில் துணிவுள்ளவன் என்பன பற்றிய அறிய விரும்புவாளானால், அவ்வுணர்வு அறிவின்பால் படுவதாகும்.

எனவே, ஒரு செயலை மேற்கொள்ள விரும்புபவன், அச்செயலைச் செய்ய விரும்புவது உள்ளத்தின் உணர்வாகவே தோன்றும். அக்கால் அது முன்னுணர்வு என்று பெயர்பெறும். அதன் பின் அந்தச் செயலுக்கும் தனக்கும் உள்ள பொருத்தத்தைப் படிப்படியாக ஆய்ந்து பார்க்க முற்படும் பொழுது, அது முன்னெச்சரிக்கை என்று பொருள்படும். முன்னது வாழ்க்கை அறிவு. பின்னது அறிவியல் அறிவு.

இவ்வாறு ஒருவன் தனக்கு இயலுகின்ற செயலையும் அதன் பொருட்டுத் தேவையான பிறவற்றையும் அறிந்து எப்பொழுதும் விழிப்புணர்வுடனேயே இயங்குதல் வேண்டும் அவ்வாறு இயங்குவார்க்கு இவ்வுலகில் இயலாத செயல் ஒன்றுமே இல்லை என்பார் திருவள்ளுவர்.

ஒல்வது அறிவது அறிந்துஅதன் கண்தங்கிச்

செல்வார்க்குச் செல்லாதது இல்.

(472)

என்பது அவர் வாய்மையுரை. 'எண்ணித் துணிக கருமம்' (467) என்பதும் இதுவே.

6. எச்சரிக்கை உணர்வு

இனி, செயலுக்கு முன்னர் தொடக்கத்தில் உள்ள இவ்வுணர்வே, செயல் நடந்து கொண்டிருக்கின்ற பொழுதில் எச்சரிர்கை உணர்வாகச் செயல்படுகிறது. இது செயல்படும் வகையை இன்னோர் எடுத்துக்காட்டால் விளக்குவோம்.

ஓர் உழவர் ஒரு நிலத்தில் வேளாண்மை செய்யப் புகுவதாக வைத்துக் கொள்வோம். அவ்வேளாண்மைக் குரியதாக உள்ள நிலம் எத்தகைய விளைச்சலுக்கு ஏற்றது என்றோ, அல்லது தாம் விளைவிக்கும் பயிருக்கு அந்நிலம் தகுதியுடையதாக இருக்குமா என்றோ எண்ணிப் பார்ப்பது தொடங்கி, அதன்பின் படிப்படியாக விதை எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும். எவ்வளவு விதை வேண்டும். எப்பொழுது விதைக்க வேண்டும். அதற்கு என்னென்ன எருவிட வேண்டும். எவ்வெக் காலத்து நீர் பாய்ச்சுதல் வேண்டும். எக்காலத்தில் மறு உழவு செய்தல் வேண்டும், களையெடுத்தல் வேண்டும். எவ்வாறு காப்புச் செய்தல் வேண்டும் என்பன பற்றியெல்லாம் எண்ணி முன்னுணர்ந்து செய்யப் புகுவதெல்லாம் எச்சரிக்கை என்னும் உணர்வுக்குள் அடங்குவனவே ஆகும். இவ்வாறு ஒன்று, ஒன்றுக்குமேல் இரண்டு, இரண்டுக்குமேல் மூன்று என்றவாறு, ஒன்றை ஒன்று அடுத்தடுத்து எண்ணுவதும் செய்வதுமாக இருப்பது எச்சரிக்கையாகும். இவ்வாறு எச்சரிக்கையாக இருப்பவர்களுக்குப் பதினாறு போனால் பதினேழு வரும் என்று தெரியுமன்றோ?

இவ்வெண்ண வரிசையில் ஒரு செயலை எண்ணிப் பார்ப்போம். ஒருவர் ஒர் ஆற்றின் குறுக்காக ஒரு பாலத்தைக் கட்ட முயலுவதாக வைத்துக் கொள்வோம். அந்தச் செயலைத் தொடங்குமுன், பாலத்தை எவ்விடத்தில் கட்டுவது என்னும் இடத் தேர்வும், எப்படிக் கட்டுவது என்னும் திட்ட அமைப்பும், அவ்வாறு கட்டுவதற்கு எதை எதைப் பயன்படுத்த வேண்டும் என்னும் கருவிகள் தேவையும், அவற்றை வாங்குவதற்கும், கூலி ஆட்களை அமர்த்துவதற்கும் பொருள் தேவையும் நன்றாக எண்ணி வரையறுத்துக் கொள்வதும்,

அதன் பின், எக்காலத்தில் அப்பாலத்தின் வேலையைத் தொடங்க வேண்டும் என்று காலத்தை அறிந்து கொள்வதும்,

அவ்வேலையைத் தொடங்கி நடத்துங்கால் ஏற்படுகின்ற இடையூறுகளை - எடுத்துக்காட்டாக மழை வருவது, அதனால் ஆற்றில் வெள்ளம் வருவது போல்வனவற்றை எவ்வாறு தடுத்துக் கொள்வது என்று எண்ணுவதும் - படிப்படியாக வளர்ச்சியுறும் எச்சரிக்கைகளே.

மேலும், பாலம் கட்டத் தொடங்குவதற்குமுன், ஆற்றின் வேகத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்; அல்லது நீரின் வரவைத் தொலைவிலேயே தடுத்து நிறுத்த வேண்டும். அல்லது தற்காலிக அணையிட்டுத் தடுத்து நிறுத்துதல் வேண்டும் என்று எண்ணுவதும் வளர்நிலை எச்சரிக்கையே!

இவ்வாறு, ஒரு செயலில் ஈடுபடுவார், தாம் வைக்கும் ஒவ்வோர் அடிக்கும் என்ன விளைவு வரும் என்று மட்டுமே எண்ணாமல், என்னென்ன எதிர் விளைவுகள் வரும் என்று எண்ணிப்பார்ப்பதுவும், அவற்றை எவ்வாறு தடுத்து நிறுத்த வேண்டும் என்பதுவும் எச்சரிக்கையின் மிக வளர்ந்த உணர்வு நிலைகளாகும். மொத்தத்தில், இதற்குப் பின் இது, இதனால் இது, இதற்காக இது, இது போனால் இது, இது வந்தால் இது, இதுவே இது, என்னும் எண்ண முடிச்சுகளும் எச்சரிக்கை உணர்வின் ஆறு சூழ்திறங்கள் (சூத்திரங்கள்) ஆகும். ஒவ்வொரு செயலின் ஒவ்வொரு படிநிலையிலும் இவ்வாறு எண்ணக் கால்களும் ஊன்றி ஊன்றியே செயலானது நடைபெறுதல் வேண்டும். இவையே எச்சரிக்கை உணர்வுக்கு அடிப்படை உணர்வுகளாகும்.

"உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும் பெற்றி" என்பது எச்சரிக்கையின் வடிவம் தோய்ந்த அறிவுநிலையாகும். ஏற்கனவே நம் வினைக்கிடையில் வந்த இடர்ப்பாட்டை நீக்குதல் செய்து, மீண்டும் அதுபோல் ஓர் இடர்ப்பாடு வந்து விடாமல் காக்கின்ற தன்மை அது. 'வருமுன்னர் காத்தலும்' (435) அதுதான்.

தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்

ஏதப்பாடு அஞ்சு பவர்

(464)

என்னும் குறளுரையில் 'இளிவென்னும் ஏதப்பாடு' என்று குறிப்பிடுவது, எடுத்துக் கொண்ட வினைப்பாட்டைத் 'தாழ்ச்சியுறச் செய்யும் குற்றம்' என்பதாகப் பொருள்படும். இக்குற்றத்தை வராமற் செய்யும் தெளிவை, வினை செய்ய முற்படுபவர் பெற்றிருத்தல் வேண்டும்.

7. எச்சரிக்கையின் ஆறு கூறுகள்

எனவே முன்கூறியபடி, தாம் எடுத்துக்கொண்ட வினைக்கு இடையில் வரும் குற்றங்கள் வராமற் காக்கின்ற வகையில் கீழ்வரும் ஆறு எச்சரிக்கைகளையும் கட்டாயம் நினைவில் வைத்திருக்க வேண்டும்.

1. இதற்குப் பின் இது : இந்த வினையைச் செய்து முடித்த பின் இந்த வினையைச் செய்ய வேண்டும்; அதற்குப் பின்னர் இதைச் செய்ய வேண்டும் என்று வரிசை முறையாக, நிரல் முறையாகத் திட்டமிட்டுக் கொண்டு, ஒரு முறைக்குப் பலமுறையாக எச்சரிக்கையுடன் எண்ணிப் பார்த்துச் செய்ய முற்படுதல் வேண்டும். எடுத்துக்காட்டாக, மின்சாரத்தைப் (Bulb) போட்டுவிட்டுக் குமிழைப் பொருத்த முற்படுதல் கூடாது. குமிழைப் பொருத்திவிட்டே மின்சாரத்தைப் பாய்ச்சுதற்குச் சொடுக்கியைப் (Switch) போட வேண்டும். பேருந்து ஒட்டுநர் சிலர், இயந்திரம் ஒடிக் கொண்டிருக்கையிலே, வண்டியினின்று இறங்கி வேறு வேலை செய்வதைப் பார்த்திருக்கலாம். இயந்திரம் ஒடிக் கொண்டிருப்பதை நிறுத்திவிட்டே வண்டியினின்று இறங்க வேண்டும் என்பதே இதற்குப் பின் இது என்னும் எச்சரிக்கை முறையாகும். ஆங்கிலத்தில் கூறப்பெறும் One by one, onething at a time என்னும் கருத்து மொழிகளும் இதையே வலியுறுத்தும்.

2. இதனால் இது : இந்தச் செயலால்தான் இந்தச் செயல் நிகழ்ந்தது அல்லது நிகழும் என்று எண்ணிப் பார்க்கும் உணர்வு இது.

எடுத்துக்காட்டாக, அடுப்பில் சமையல் செய்தபின் நெருப்பு முழுவதையும் அணைக்காமல், அர்ை. குறையாக அணைத்துவிட்டுவந்தால், அதிலுள்ள அணைக்கப்படாத ஒரு சிறு நெருப்பே, காற்றினால் மெதுவாகக் கனன்று பெரு நெருப்பாக மாறி, வீடு தீப்பற்றி எரியும் அளவுக்குக் கூட வளர்ந்துவிடும் என்ற வகையில் எண்ணிப்பார்க்கும் உணர்வு எச்சரிக்கையின் இரண்டாம்படி உணர்வாகும். புகைப்பிடிப்பவர்கள் தீயை அணைக்காமல் சுருட்டை எரிந்து விடுவதாலும் இத்தகைய தீமைகள் வரலாம் அன்றோ?

இவை போலவே, பொறிக்கு எண்ணெயிடாமல் ஒட்டினால், அதன் சுழலும் உறுப்புகள் எளிதில் இயங்காமல், அழுத்தமான உராய்தல் ஏற்பட்டு, அதனால் சூடு உண்டாகி, இரண்டு உராய்வு உறுப்புகளும் சூட்டினால் விரிவடைந்து, ஒன்றை ஒன்று சுழலவிடாமல் இணைந்து, இறுகல் (lam) ஆகிப் பிடித்துக் கொள்ளும்படியான நிலை ஏற்படும்

அன்றோ? எண்ணெய் இடாமல் ஒட்டினால் உறுப்புகள் ஒட்டிக் கொள்ளும் என்று முன்கூட்டியே உணர்தலே இதனால் இது என்னும் உணர்வாகும்.

3. இதற்காக இது : இந்த விளைவை உண்டாக்க வேண்டுமானால் இதைச் செய்தல் வேண்டும் என்று முன்கூட்டியே எச்சரிக்கையாக அறிந்து செய்தல் வேண்டும் என்னும் மூன்றாம்படி உணர்வு நிலை இது.

எடுத்துக்காட்டாக, இயந்திரங்களில் உள்ள முகாமையான உறுப்புகளை நிலையாகப் பொருத்துவதற்கு முன், அவை விரைந்து தேய்மானமுறுவதைத் தடுப்பதற்கும், பூட்டியதைப் பிறகு எளிமையாக சுழற்றுவதற்குமாக, பொருந்து வாய்களில் மசகுநெய் (Grease) போடுவார்கள். இன்ன விளைவுக்காக அல்லது விளைவைத் தடுப்பதற்காக இதைச் செய்ய வேண்டும் என்று எண்ணும் உணர்வே, இதற்காக இது எண்ணும் உணர்வாகும்.

மிதிவண்டி, உந்துவண்டிச் சக்கரங்களிளால் அடிக்கும் சேற்றைத் தடுப்பதற்காகச் சக்கரங்களின் மேல் மட்காப்பு (Mudguard) போடுவதும், மிதிவண்டித் தொடரி(Chain)யின் மேல், உடைகளும், அழுக்கும், துரசும் படாமல் காப்பதற்காக அதன்மேல் தொடரிக்காப்பு (Chain guard) போடுவதும் இந்த எச்சரிக்கை உணர்வின் அடிப்படையால்தாம் என்று எனணுக.

4. இது போனால் இது: ஒரு செயலுக்குப் பொருத்தமான முறையை நாம் தேர்ந்தெடுத்து, அதற்குரிய முறையில் கருவிகளை நாம் வாங்கியிருப்போம். ஆனால், அவற்றில் ஒரு கருவி மட்டும் பொருத்தமாகக் கிடைக்கவில்லை என்று வைத்துக் கொள்வோம். அந்த நிலையில் அத்ற்கிணையாக எந்தக் கருவியைப் பயன்படுத்த வேண்டும் என்று உணர்ந்துள்ள நான்காம் படிநிலை எச்சரிக்கை உணர்வாகும் இது.

கடலில், பாய்மரக் கப்பலில் போகும்பொழுது பாய்மரம் விழுந்து பாய் பழுதுற்றால் அல்லது கிழிந்து சேதமுற்றால், உடனடிப் பயன்படுத்தத்திற்குரிய வகையில் பெரிய துடுப்புகளைப் பயன்படுத்தி நிலைமையை எதிர்கொள்ளும் உணர்வு இது.

விளையாட்டில் ஈடுபடத் தேர்ந்தெடுக்கப் பெற்ற ஆட்டக்காரர் ஒருவர், ஆட்டத்துக்கிடையில் அடிப்பட்டு மேலும் ஆட இயலாத நிலையினை அடைந்தால், அவருக்கு மாற்றாக ஆட மாற்றாள் (substitute) வைத்திருப்பதும், பேருந்து வண்டி பழுதுறுமானால், மாற்று வண்டி (SpareBus) வைத்திருப்பதும் இந்த உணர்வின் அடிப்படையிலேயே

5. இது வந்தால் இது : ஒரு செயலுக்கிடையில் நாம் எதிர்பார்த்த அல்லது எதிர்பாராத விளைவுகள் வரலாம். அப்படி வருகிற பொழுது, நாம் முனைப்பாகச் செய்து கொண்டிருக்கும் இன்றியமையாத ஒரு பணி தடைப்படலாம். அந்த நிலையில் அப்பணி தடைப்படாத வண்ணம், இடையில் வந்த தடைநிலையினை அகற்றும்வரையில் வேறு ஒரு முறையில் அச்செயலை ஈடேற்றிக் கொள்ளத்தக்க வகையில் உள்ள உணர்வு இது.

மின்சாரம் தடைப்பட நேரும்பொழுது, காற்றுக்காக விசிறியையும், விளக்குக்காக மெழுகுத் திரியையும், மின் அடுப்புக்காக மண்ணெய் அடுப்பையும், மண்ணெய் அடுப்புக்காகக் கரி அடுப்பையும் அணியப்படுத்தி வைத்திருக்கும் உணர்வு இது.

இவ்வுணர்வு எச்சரிக்கை உணர்வின் ஐந்தாம் படிநிலை உணர்வாகும்.

6. இதுவே இது: எண்ணியிருக்கும் பணிக்கு ஏற்ற கருவி கிடைக்காதபொழுது, அதே பணியைச் செய்யும் வேறு ஒரு கருவியால் அதே பணியைச் செய்து கொள்ளும் உத்தி உணர்வு இது.

திருகாணியைத் திருகி எடுக்க ஏற்ற ஆணி முடுக்கி இல்லாதபொழுது, அகலமான நுனியுள்ள வேறு கத்தியையோ, ஓர் இரும்புக் கருவியையோ அக்கருவி போலவே பயன்படுத்தி அப்பணியைச் செய்து முடிக்கும் உத்தி இதுவாகும்.

எனவே இங்கு கூறப்பெற்ற ஆறு உத்தி உணர்வுகளும் எச்சரிக்கை உணர்வின் ஆறு கூறுகளாகும் என்று அறிக.

8. எச்சரிக்கைக்கு எடுத்துக்காட்டுகள்

நாம் செய்யப் புகும் வினைகளில் பல எச்சரிக்கையின்மையினாலேயே பயனற்று விடுகின்றன. சிறு சிறு செயல்களிளெல்லாம் முன் எச்சரிக்கை மிகவும் தேவைப்படுகிறது.

பாலை வாங்குமுன், ஏனம் நன்றாகக் கழுவப்பட்டிருக்கிறதா என்று பார்ப்பதும், தீப்பெட்டியைப் பயன்படுத்திக் கொண்டு, ஈரமில்லாத இடமாகவும், கவனந் தப்பாமல் உடனே எடுக்கக் கூடிய இடமாகவும் பார்த்து வைப்பதும், ஊருக்குப் போகையில், நமக்கு ஆகும் செலவுகளை எண்ணிப் பார்த்துக் கணக்கிட்டுத் தேவையான பணத்தை எடுத்துச் செல்வதும், உடலின் கூறுபாடுகளையும் தேவைகளையும் எண்ணி, அதற்குரிய வகையில், நோய் வராமல் இருக்கும் பொருட்டுப் பொருந்துகின்ற உணவை உண்பதும், வண்டி நின்றபின் ஏறுவதும் இறங்குவதும், வளாவி வைக்கப் பெற்றுள்ள வெந்நீரைத் தொட்டுப்

பார்த்து அதன் பின்னர் மேலுக்கு ஊற்றிக் கொள்வதும், பூட்டைப் பூட்டியபின் ஒன்றுக்கு இருமுறை இழுத்துப் பார்த்துச் சரியாகப் பூட்டியிருக் கின்றோமா என்று உறுதி செய்து கொள்வதும், கொடுக்கப் பெறுகின்ற சில்லறையும் உருபாத்தாள்களும் சரியாக உள்ளனவா என்றும், ஒட்டை விழாமல் கிழியாமல் இருக்கின்றனவா என்றும் நோட்டம் விடுவதும், மழைக் காலங்களில் மழை பெய்யாதிருப்பினும் வெளியே செல்கையில் குடையையெடுத்துக் கொண்டு செல்வதும், படைப்பதற்கு முன் சமைத்து வைத்த பண்டங்களுக்கு உப்பு சரியாக உள்ளதா என்று பார்ப்பதும், படைக்கின்ற இலையில் முன் கூட்டியே உப்பைக் கொஞ்சம் வைப்பதும், படித்துக் கொண்டிருக்கும் பொத்தகங்களுக்கிடையில் அடையாளத் தாள் வைப்பதும், பெட்டிகளில் பூச்சிக் குண்டுகளை இட்டு வைப்பதும், எச்சரிக்கை உணர்வுகளே.

இன்னுஞ் சொன்னால் ஆறுகளில் அணைகள் கட்டுவதும், தோட்டங்களுக்கும் தோப்புகளுக்கும் வேலிகள் போடுவதும், பணத்தை வைப்பகங்களில் இட்டு வைப்பதும், உணவுப் பொருள்களைச் சேமித்து வைப்பதும், கையில் கடிகாரம் கட்டிக் கொள்வதும், மின்சார ஆய்வுக் கருவியை வைத்திருப்பதும் முன்னெச்சரிக்கைக்கான செயல்களே ஆகும், எச்சரிக்கையே வாழ்க்கையாகப் போய்விட்ட தன்மையாலேயே சில பொருள்கள் கண்டுபிடிக்கப் பெற்றுள்ளன.

9. எச்சரிக்கையே கண்டுபிடிப்புகளாகின

குளிர்பதனப் பெட்டிகள், கத்திகள், கரண்டிகள், சூடாக்கிகள், எடைப்பொறிகள், அளவுமானிகள், படிகள் கால் மிதிகள், பூட்டுகள், சட்டைப்பைகள், பேழைகள், செருப்புகள், அழைப்பு மணிகள், இடிதாங்கிகள், நகம் (உகிர்) வெட்டிகள், சில மருந்துகள், கோப்புகள், விளக்குகள், மெழுகுத்திரிகள் எழுதுச்சுவடிகள், கத்தரிக்கோல்கள், துமுக்கிகள் முதலிய நூற்றுக்கணக்கான பொருள்கள் மாந்தருடைய எச்சரிக்கை உணர்வால் கண்டுபிடிக்கப் பெற்ற பொருள்களே.

எனவே, எச்சரிக்கை உணர்வு மாந்தனின் மிக இன்றியமையாத உணர்வாகப் போய்விட்டது. இவ்வுணர்வு வளர வளர எதிர்வருந்துன்பங்கள் நமக்கு இல்லாமல் போகின்றன. முன்னர் கூறப்பெற்ற அறுவகை எச்சரிக்கை உணர்வுகளையும் நுணுகி ஆய்ந்து ஒருவன் வாழ்க்கையில் கடைப்பிடிக்கக் கற்றுக் கொண்டால், கட்டாயம் நம் செயற்பாடுகள் அத்தனையும் செப்பமாக அமையும் என்பதைக் கூறவும் வேண்டுமோ?

10. கண்காணிப்பு உணர்வு

இனி, எச்சரிக்கை உணர்வின் அடிப்படையில் தோன்றும்

இணையான உணர்வு கண்காணிப்பு உணர்வாகும். இவ்விரண்டு உணர்வுகளும் ஒன்றையொன்று பின்னிப் பிணைந்து கொண்டுள்ள இணை உணர்வுகள். இவ்விரண்டும் ஒன்றினால் ஒன்று சிறந்து விளங்குவதாகும். எச்சரிக்கையாக இருக்க வேண்டுமானால் கண்காணிப்பு இருக்க வேண்டும். ஒரு பொருளோ செயலோ கெட்டுவிடக் கூடாது என்றால், அவற்றின்மேல் கருத்து வைத்துக் கண்காணிப்பாக இருத்தல் மிகவும் இன்றியமையாதது. முன்னதாகக் காக்காமல், பின்னதாக வரும் அழிவைத் தடுத்து நிறுத்த முடியாது.

முன்னுற காவாது இழுக்கியான் தன்பிழை

பின்னூறு இரக்கி விடும்.

(535)

என்னும் அறிவுமொழி, பிழைகள் நேர்ந்துவிடாதவாறு நாம் மிக எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும் என்பதை மிக வலிவாக வலியுறுத்துக் காட்டும் அழுந்தியுணர்ந்த மெய்ம் மொழியாகும்.

எச்சரிக்கை உணர்வும் கண்காணிப்பு உணர்வும் ஆகிய இவ்விரண்டு உணர்வுகள் மட்டும் இருந்தாலே ஒருவன் விரைவில் முன்னேறி விடுவது திண்ணம். இருளைப் போக்க நாம் விளக்கைக் கொளுத்தினால் மட்டும் போதாது. கொளுத்தப்பட்ட அவ்விளக்கு காற்றில் அணையாமல் காக்கப் பெறுதலும் வேண்டும். எனவே விளக்குக்குக் கண்ணாடிக் குமிழ் ஒன்றைப் பொருத்திக் கொள்கிறோம். இங்கு விளக்கு எச்சரிக்கை உணர்வையும், குமிழ் கண்காணிப்பு உணர்வையும் நன்கு புலப்படுத்துகின்ற எடுத்துக் காட்டுகளாம்.

11. எச்சரிக்கையினும் கண்காணிப்பு மேலானது

தொழில் ஒன்றைத் தொடங்கிய ஒருவன், தொழிலுக்கு அடிப்படையாக உள்ள பொருளைக் கண்காணிக்கவும் செய்தல் வேண்டும்.

ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்

நீரினும் நன்றதன் காப்பு.

(1038)

என்னும் உழவு அதிகாரத்தில் வரும் குறள்மொழியுள் கூறப்பெற்ற, ஏர் உழுதலும், எருவிடுதலும், களையெடுத்தலும், நீர்ப்பாய்ச்சுதலும் பயிரின் நல்ல விளைவுக்குற்ற எச்சரிக்கை உணர்வுகளாகும். அதை விலங்குகளிடமும், பறவைகளிடமும், திருடர்களிடமும் இருந்து காப்பது கண்காணிப்பு உணர்வாகும். இதில் எச்சரிக்கை உணர்வைவிடக் கண்காணிப்பு உணர்வு மிகச் சிறந்தது; தேவையானது என்று கூறப்பெறுகிறது. இதனை அடுத்து வரும் இன்னொரு குறளிலும்

வலிவாகவும் தெளிவாகவும் வலியுறுத்துகிறார் திருக்குறள் பேராசான்.

செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து

இல்லாளின் ஊடி விடும்.

(1039)

மனைவியைப் பேணுதல் செய்யவில்லையானால், அவள் எவ்வாறு கணவனிடம் ஊடிக் கொள்வாளோ, அவ்வாறு நிலமும் தன்னைப் பேணிக் காத்தல் செய்யவில்லையானால் நிலக்கிழானிடம், வேறுபட்டுத் தன் பயனைத் தராது என்று நுட்பமாகவும் நயமாகவும் உணர்த்திக் காட்டுவார் பேராசான். இங்குச் செல்லுதல் என்னும் ஒரே சொல்லுக்குச் சென்று வருதல், சென்று கண்காணித்து வருதல், நாள் தோறும் அவ்வாறு செய்து வருதல், மனைவி கருவுயிர்க்கும் காலங்களில் அருகிருந்து கவனமுடன் கண்காணிப்புச் செய்வது போல், நிலத்தின் விளைவுக்காலங்களில் அவ்வாறு அருகிருந்து கணகாணித்து வருதல் . என்னும் வகையில் பலவாறு மேன்மேலும் பொருள் பெருகிக் கொண்டே போதலைக் கண்டு திருக்குறள் ஐயனின் நுணுகிய பேரறிவை உற்றுணர்ந்து மகிழலாம். இக்குறளின் மிக விரிவான நுட்பமான, மாந்தர் மனவியல் தழுவிய சிறந்த பொருளை, யாம் எழுதவிருக்கும் திருக்குறள் மெய்ப்பொருள் உரையில் கண்டு நிறைவு பெறுக)

இதில் உழவியலுக்குப் பொருந்திய பொருள் மட்டுமன்று உளவியலுக்கும், உலகியலுக்கும், அவை பொருந்திய வாழ்வியலுக்கும் ஒத்த பொருளைக் கண்டு உள உவகை கொள்ளலாம். உழவும் ஒரு தொழிலாதலால், தொழிலியலுக்கும் இக்கருத்து மிகவும் பொருந்துவதாகும். தொழிலுக்கும் இத்தகைய கண்காணிப்பு மிகமிகத் தேவையாகும்.

சவளி விற்பனையாளர், பெரும் முதலீடு செய்து, ஏராளமான துணிமணிகளை அணியணியாக அடுக்கி வைத்தால் மட்டும் போதாது. நாளடைவில் அவற்றைப் பூச்சி அரித்திடாமல் கண்காணிப்புச் செய்தல் வேண்டுமன்றோ? பொத்தகக் கடை, தாள் கடை வைத்திருப்பவர்களும் நாள்தோறும், இன்னுஞ் சொன்னால் பொழுதுதோறும், அவற்றைக் கண்காணிப்புச் செய்தல் வேண்டும்.

தலைமுடியை நாள்தோறும் கழுவித் துய்மை செய்ய வில்லையானால், தூசியும் துகளும் காற்றீரமும் படிந்து, தலைமுடி பிசுக்கேறிப் போவதுமட்டுமன்று, முடியொடு முடியிணைந்து, திரிந்து, சடைந்து போகுமன்றோ? பின்னர் அதில் ஈரும் பேனும் இனம் பெருக்கி வாழ்ந்து தலையையே மொட்டையடிக்கத் செய்துவிடும் அன்றோ? அதனாலன்றோ நாள்தோறும் எச்சரிக்கை உணர்வொடு தலைகழுவுவதும் எண்ணெய் தடவிப் பிசுக்கேறா வண்ணம் கண்காணிப்பதும் செய்கின்றோம். இவ்விரண்டு உணர்வுகளும் வாழ்வியல் கடமைகளில் ஒன்றாகக் கலந்துவிட்டன என்பதை எண்ணுக

12. எச்சரிக்கை முன்னுரை, கண்காணிப்பு முடிவுரை

முடிவாக, முன்னெச்சரிக்கை உணர்வு ஒரு செயலுக்கு முன்னுரைபோல் அமையவேண்டுவது என்றால், கண்காணிப்பு உணர்வு, அச்செயலுக்கு முடிவுரைபோல் அமைய வேண்டுவது, முன்னெச்சரிக்கை உணர்வின்றிக் கண்காணிப்பு உணர்வு செயல்படுவதில் பயனில்லை. பின் விளைவு கருதித்தான் முன்னெச்சரிக்கையாக செயல்படவேண்டும். அதேபோல், விளைவு நீடித்து நிற்க வேண்டும் என்பதாகத்தான் கண்காணிப்பு உணர்வு செயல்பட்டுக் கொண்டிருக்க வேண்டும்.

ஒரு பொருளை வாங்கும்போது எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும். வாங்கிய பின் கண்காணிப்போடு இருத்தல் வேண்டும். முன்னெச்சரிக்கையுடன் வாங்கியும் கண்காணிப்பு இல்லையானால், ஒரு பொருளோ, செயலோ, கட்டாயம் தம் பயன்களில் குறைவுப்பட்டுவிடும். இரண்டு உணர்வுகளும் காத்தல் உணர்வின் இரண்டு முனைகள். ஒருணர்வு பொருளின் அல்லது செயலின் தரத்தை உறுதி செய்வது. மற்றவுணர்வு அவற்றின் தரத்தைக் குறையாமல் நிலைத்திருக்கச் செய்வது வருமுன் காத்தல், வருங்கால் காத்தல், வத்தபின் காத்தல் என்னும் மூன்று காத்தல் உண்ர்வுகளில் வருமுன் காத்தல் எச்சரிக்கை உணர்வையும், வருங்கால் காத்தல், வந்தபின் காத்தல் கண்காணிப்பு உணர்வையும் வெளிப்படுத்துவதாகும். எனவே செயலுக்கு எச்சரிக்கை உணர்வும், செயல் திறனுக்குக் கண்காணிப்பு உணர்வும் மிகமிகத் தேவையானவை. ஒரு செயலால் ஏற்படும் பயனைத் தொடர்ந்து நடைபெறச் செய்பவை. முன்னெச்சரிக்கை உணர்வு புறக்காப்பு. கண்காணிப்புணர்வு அகக் காப்பு. இனி, முன்னெச்சரிக்கை உணர்வுடன் ஒரு செயலைத் தொடங்குவதும், பின் எச்சரிக்கை உணர்வுடன் ஒரு செயலைக் கண்காணிப்புச் செய்வதும், தவறாமல் நிகழ்ந்தாலும், ஒரு செயல் தொடர்ந்து நடைபெறுகையில், நம் எச்சரிக்கை உணர்வையும், கண்காணிப்புணர்வையும் மீறி, ஒரு செயல், இடையில் ஏற்படுகின்ற இடையூறுகளால் தொய்ந்தோ, சிதைந்தோ, அழிந்தோ விடுவதுண்டு. எனவே, ஒரு செயலைத் தொடங்கிய பின், அது நடைபெறுங்கால் ஏற்படும் இடையூறுகளைக் கண்டு, மனந்தளராமையும் ஒருவர்க்கு வேண்டும். அது பற்றிச் சிறிது விரிவாகப் பார்ப்போம்.