அறிவுக் கனிகள்/ஆன்மா
244.உடல்-அது மண்ணேயன்றி வேறன்று; ஆன்மா-அது நித்தியத்தின் முகை ஆகும்.
245.மனிதனையும் அவன் செயல்களையும் அடக்கியாள்வது ஜட சக்தி அன்று, ஆன்ம சக்தியே யாகும்.
246.ஆன்மாவின் கதவை ஒரு விருந்தாளிக்கு ஒருமுறை திறந்து விட்டால், பின் யாரெல்லாம் உள்ளே வந்து புகுவர் என்று கூறிவிட முடியாது.
247.அறிவு கண்ணில் விளங்கும்-அன்பு முகத்தில் விளங்கும்-ஆனால் ஆன்மா விளங்குவது மனத்தில் கேட்கும் அந்தச் சிறு குரலிலேயே.
248. மனத்தில் உயர்ந்த எண்ணங்களும் இலட்சியங்களும் இருக்குமானால், ஆன்மா உடம்பில் இருக்கும் பொழுதே ஆண்டவன் சன்னிதானத்தில் இருப்பதாகும்.
249.ஆன்மா சூரியனை ஒக்கும். இரவில் அஸ்தமித்து விடுகிறது. கண்ணுக்குப் புலனாவதில்லை. ஆனால் வேறிடத்தில் வெளிச்சம் பரப்புவதற்காகவே சென்றுளது என்பதே உண்மை.
250.ஆன்மாவின் செல்வம் அது எவ்வளவு அதிகமாக உணரும் என்பதைக் கொண்டு அறியப்படும்; ஆன்மாவின் வறுமை எவ்வளவு குறைவாக உணரும் என்பதைக் கொண்டு அறியப்படும்.
251.நாகரிக முன்னேற்றத்திற்கு வகுக்கப்பட்டுள்ள கருவிகளில் எந்தக் காலத்திலும் சான்றோரின் ஆன்மசக்தியே தலைசிறந்ததாகும்.
252.உழைப்பை மட்டுமே விற்கலாம். ஒருநாளும் ஆன்மாவை விற்கலாகாது.
253.ஆன்மா ஆளவில்லையானால், அது தோழனாயிருக்க முடியாது. அது ஆளவேண்டும், அல்லது அடிமையா யிருக்கவேண்டும்-அவ்வளவே. வேறெதுவாயும் இருக்க முடியாது.
254.ஆன்மாவைப் பற்றிய முக்கிய பிரச்சினை அது எங்கிருந்து வந்தது என்பதன்று, அது எங்கே போகிறது என்பதாகும்.- அதை அறிய வாழ்நாள் முழுவதும் தேவை.
255.ஆன்ம அபிவிருத்தி- மனிதனைப் பரிபூரண மாக்குவதே அதன் லட்சியம். அதனால் அது சரீர வாழ்வை யெல்லாம் சாதனமாகத் தாழ்த்திவிடும்.