திருக்குறள் மணக்குடவருரை/கூடா வொழுக்கம்

விக்கிமூலம் இலிருந்து

௨௯-வது.-கூடா வொழுக்கம்.

கூடாவொழுக்கமாவது, மேற் கூறிய தவத்திற்குப் பொருந்தாத ஒழுக்கம். தவமுடையோரால் விலக்கப்பட வேண்டியதாதலின், இது தவமுடைமையின் பின் கூறப்பட்டது.

னத்தது மாசாக மாண்டார்நீர் ஆடி
மறைந் தொழுகும் மாந்தர் பலர்.

இ-ள்:- மாசு மனத்தது ஆக-மாசு மனத்தின் கண் உண்டாக வைத்து, மாண்டார் நீர் ஆடி- மாட்சிமைப்பட்டார் நீர்மையைப் பூண்டு, மறைந்து ஒழுகும் மாந்தர் பலர்-(பொருந்தாத இடத்திலே) மறைந்து ஒழுகும் மாந்தர் பலர்.

[மாட்சிமைப்பட்டாரது சீர்மை-தவத்தினரது வேடம் முதலியன. பொருந்தாத இடம்-தீய ஒழுக்கத்திற்குரிய இடம். மறைந்து-பிறர் அறியாது.]

மனத்தது என்பது வேற்றுமை மயக்கம், ஆறாம் வேற்றுமை உருபு ஏழாம் வேற்றுமைப் பொருள் தந்து நின்றமையால்.

இது, கூடா வொழுக்கத்தால் மனமாசு உண்டாகு மென்றது. ௨௮௧.

புறம்குன்றி கண்டனைய ரேனும், அகம்குன்றி
மூக்கின் கரியார் உடைத்து.

இ-ள்:- புறம் குன்றி கண்டு அனையரேனும்-புறத்தில் குன்றி மணி நிறம் போன்ற தூயவேடத்தராயிருப்பபினும், அகம் குன்றி மூக்கின் கரியார் உடைத்து-அகத்தில் குன்றி மூக்குப் போலக் கரியரா யிருப்பாரை உடைத்து (இவ்வுலகம்). . இது, தவத்தினர் வடிவு கண்டு நேர்படா ரென்றது. [தவத்தினர் வடிவை ஒருவன் கொண்டுள்ளதாலேயே (அவன் உண்மையான தவத்தினனென்று கருதி) அவனோடு இணங்கார் அறிவுடையா ரென்றது இது.] ௨௮௨.

லியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று.

இ-ள்:- வலியில் நிலைமையான் வல் உருவம்-வலியில்லாத நிலைமையை யுடையவன் வலிதாகிய தவஉருவம் (கோடல்), பெற்றம் புலியின் தோல் போர்த்து மேய்ந் தற்று-பெற்றமானது (பிறர் பயப்படும்படிக்குப்) புலியினது தோலைப் போர்த்து (ப்பைங்கூழ்) மேய்ந்த தன்மைத்து.

(பெற்றம்-மன வலிவில்லாத நிலைமை-(பிறர் பொருளைக் கவர எழும் மனத்தைத் தடுத்து நிறுத்தும்) வலிவில்லாத தன்மை.]

இது, பிறர் பொருளைக் கவர்வானது தவவேடத்தைக் கண்டு அஞ்சற்க வென்றது. ௨௮௩.

வம்மறைந் தல்லவை செய்தல் புதல்மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று.

இ-ள்:- தவம் மறைந்து அல்லவை செய்தல்-தவத்திலே மறைந்து தவமல்லா தவற்றைச் செய்தல், வேட்டுவன் புதல் மறைந்து புள் சிமிழ்த்தால் அற்று-வேட்டுவன் தூற்றிலே மறைந்து புள்ளைப் பிணித்தால் போலும்.

[தவத்திலே-தவவேடத்திலே. தவமல்லாதவற்றை-காமச்செயல்களை. தூறு -புதர். சிமிழ்த்தால் என்பது ஆல் கெட்டு நின்றது.]

(அர்ச்சுனன் சுபத்திரையைக் கவர்தற்காகத் தவவேடம் கொண்டது. போலப்) பெண்களைக் கவர்தற்காகத் தவவேடம் கொள்வோரும் உண்டென்றது இது. ௨௮௪.

வானுயர் தோற்றம் எவன்செய்யும், தன்னெஞ்சம்
தானறி குற்றம் படின்?

இ-ள் :- வான் உயர் தோற்றம் எவன் செய்யும்-வான் அளவும் உயர்ந்த பெருமையுண்டாயினும், அஃது யாதினைச் செய்யவற்று, தன் நெஞ்சம் அறிய குற்றம் படின்-தன் நெஞ்சு அறியக் குற்றம் உண்டாயின்?

தான் என்பது அசை. [அறிய என்பது ஈறு கெட்டு நின்றது. வான் அளவும் உயர்ந்த பெருமை யுண்டாயினும்-(தவத்தினால்) மிக வுயர்ந்த பெருமையைப் பெற்றிருப்பினும், நெஞ்சு-மனச்சாட்சி.]

இது, கூடாவொழுக்கத்தினைப் பிறர் அறிந்து இகழாராயினும் அவன் செய்கின்ற தவத்தினால் பயன் உண்டாகா தென்றது. ௨௮௫.

ஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்.

இ-ள் :- வஞ்ச மனத்தான் படிற்று ஒழுக்கம்-கள்ள மனத்தினனது குற்றத்தினையுடைய ஒழுக்கத்தை, பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும்- (பிறர் அறியாராயினும், தன் உடம்பிலுண்டான) பூதங்கள் ஐந்தும் அறிந்து தம்முள்ளே நகாநிற்கும்.

பூதங்கள் என்றது, அவையிற்றின் காரியமாகிய பொறிகளை. [குற்றத்தினையுடைய ஒழுக்கம்-தீய ஒழுக்கம்.]

இது, பிறர் அறியாரென்று கருதித் தீயன செய்யலாகா தென்றது. ௨௮௬.

நெஞ்சிற் றுறவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணார் இல்.

இ-ள்:- நெஞ்சில் துறவார்-நெஞ்சில் துறவாராய், துறந்தார் போல் வஞ்சித்து வாழ்வாரின்-துறந்தார்போல வஞ்சனை செய்து வாழுமவர்களைப் போல, வன்கணார் இல்-கொடியார் இல்லை (உலகத்து).

இஃது, அகத்தில் பற்றினை வைத்துக் கொண்டு புறத்தில் துறவு வேடத்தைப் பூணுமவர் மிகக் கொடிய ரென்றது. ௨௮௭.

ற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்
றேதம் பலவும் தரும்,

இ-ள்:- பற்று அற்றேம் என்பார் படிற்று ஒழுக்கம்-பற்றினை அற்றேம் என்பாரது குற்றத்தினையுடைய ஒழுக்கம், எற்று எற்று என்று பல ஏதமும் தரும்-(எல்லாராலும்) எற்று எற்று என்று சொல்லும்படியாகப் பல குற்றமும் உண்டாக்கும்.

எற்று என்பது திசைச்சொல். [எற்றல் - கொல்லல், வெட்டல்.]

இது, தவவேடத்தினரது தீய ஒழுக்கம் அவருக்கு இம்மையிலும் தீமை பயக்கு மென்றது. ௨௮௮.

ழித்தலும் நீட்டலும் வேண்டாம், உலகம்
பழித்த தொழித்து விடின்.

இ-ள்:- மழித்தலும் நீட்டலும் வேண்டா-மழித்தலும் நீட்டலும் வேண்டா, உலகம் பழித்தது ஒழித்து விடின்-உலகத்தார் கடிந்தவையிற்றைத் தாமும் கடிந்து விடுவாராயின்.

[மழித்தல்-மொட்டையடித்தல், நீட்டல்-சடை வளர்த்தல். கடிதல்-விலக்குதல், உலகத்தார் கடிந்தவை-அறிவுடையோர் விலக்கியவை. அவை தீய ஒழுக்கங்கள்.]

இது, வேடத்தால் பயனில்லை, நல்ல ஒழுக்கம் வேண்டும் என்றது. ௨௮௯.

ணைகொடிது யாழ்கோடு செவ்விதாங் கன்னார்
வினைபடு பாலால் கொளல்.

இ-ள்:- கணை கொடிது-(செவ்விய) கணை கொடுமையைச் செய்யும்; கோடு யாழ் செவ்விது-கோடிய யாழ் செவ்வையைச் செய்யும்; ஆங்கு-அது போல, (யாவரையும் வடிவு கண்டு அறியலாகாது;) அன்னார் வினை படு பாலால் கொளல்-அவரவர் செய்யும் வினையின் பகுதியாலே அறிக.

இது, வேடத்தை ஆதாரமாகக் கொள்ளாது, செயலை ஆதாரமாகக் கொண்டு, ஒருவரை (இத்தன்மையரென்று) மதிக்க வேண்டு மென்றது. ௨௯0.