உள்ளடக்கத்துக்குச் செல்

உணர்ச்சி வெள்ளம்/உண்மையை உணர்ந்திருந்தால் ஊர்ச் சண்டை ஏது?

விக்கிமூலம் இலிருந்து

உண்மையை உணர்ந்திருந்தால்
ஊர்ச் சண்டை ஏது?

யிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னாள் தோன்றிய ஜைன நெறியை நல்ல முறையில் பாதுகாத்து, அந்த நெறியிலேயே நடப்பது மட்டுமல்லாமல் மற்ற சமுதாயத்தினரும் அந்த நெறியிலே நடந்து வாழ்ந்து சிறக்க வேண்டுமென்பதிலே அக்கறை காட்டுகின்றவர்களைப் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.

மகாவீரர் போதித்த தத்துவங்கள் நல்ல மார்க்கங்களாகும்--நல்ல நெறிகளாகும்.

"ஐம்புலன்களை அடக்கு--பொருள்களின்மீது ஆசைவைக்காதே" என்றெல்லாம் இங்கு எழுதியிருப்பதைக் காண்கிறேன். இந்த உண்மைகளையெல்லாம், உணமையிலேயே உலகில் உள்ளோர் அறிந்து உணர்ந்திருப்பரேயானால், சண்டைச் சச்சரவுகள் ஏற்பட்டிருக்காது. ஐக்கிய நாடுகள் மன்றமும் தேவைப்பட்டிருக்காது.

மனித சமுதாயத்தை வழி நடத்தும் மார்க்கங்கள் எல்லாம் நான்கு மாடிக் கட்டிடங்களாக உள்ளன என்றாலும், இரண்டு மூன்று மாடிகளுக்குத்தான் ஒழுங்கான பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. மூன்றாவது மாடியிலிருந்து அடுத்த மாடியைப் பார்த்தால், தொங்குகிற நூல் ஏணியில் ஏறிச் செல்ல வேண்டிய நிலை இருக்கிறது.

ஜைன மதத்தை அறிந்த அறிஞர்களிடமும், பெரியவர்களிடமும் எனக்கு நெருங்கிய தொடர்பும், பழக்கமும், உண்டு. ஜைன சமயம் பற்றிப் பல தடவை நாங்கள் விவா தித்திருக்கிறோம். அப்போது நான் வருத்தப்பட்டேன். நெறிகள் சரியில்லை என்பதால் அல்ல! இந்த நெறிகளை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு நாம் வளர்ந்துகொள்ளவில்லையே என்பதுதான் அதற்குக் காரணம். அந்த நெறிகளுக்கு ஏற்ற வளர்ச்சி இல்லையே என்ற குறை இருப்பதால், அந்த நெறிகளை எல்லாம் மறந்துவிட வேண்டும் என்று நான் கூறமாட்டேன்!"

வேலூரில் 35 ஆண்டுகள் பணிபுரிந்த ஒரு வெள்ளைக்காரர் ஓய்வு பெற்ற காலத்தில் தாயகம் செல்லவிருந்த பொழுது, வழியனுப்பு விழாவுக்கு என்னையும் அழைத்திருந்தார்கள்; எவ்வளவோ மைல்களுக்கு அப்பாலேயிருந்து வந்து--வேற்று நாட்டுக்காரராக இருந்தாலும் விழுமிய தொண்டராக--பிறர் பயனடையும் மருத்துவ நிலையங்களையும் கல்விக்கூடங்களையும் அரண்மனைகளையும் கட்டித் தந்து பணிபுரிந்தவர்களாயிற்றே என்ற கருத்தில், அமெரிக்காவிற்குச் செல்லவிருந்த அந்தக் கிருத்தவரை வழியனுப்பச் சென்றேன்.

அப்போது வேலூரிலிருந்து இந்த மதத்தைச் சார்ந்த ஒருவரிடமிருந்து எனக்கு மிரட்டல் கடிதம் வந்தது. 'கிருத்துவரை வழியனுப்பும் விழாவிலே கலந்து கொள்ள வந்தால் நாங்கள் கறுப்புக் கொடி காட்டுவோம்!' என்று அந்தக் கடிதத்தில் எழுதியிருந்தது; எங்கள் கட்சிக் கொடியிலேயே கறுப்புத்தான் இருக்கிறது என்று அப்போது வேடிக்கையாகச் சொன்னேன்.

எவ்வளவோ--தூரத்திற்கு அப்பாலிருந்து வந்தவர்கள் என்றாலும்--அயலவர்கள் என்றாலும்--அவர்கள் செய்த நல்ல காரியத்தைத் தமிழக மக்கள் வரவேற்க வேண்டும்; அது போன்ற காரியங்கள் செய்யவும் வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்--ஜைன மதத்தைச் சேர்ந்தவர்களும் மருத்துவ மனைகளையும், கல்லூரிகளையும் ஏற்படுத்தி, ஈட்டிய பொருளை நல்ல காரியங்களுக்குப் பயன்படுத்துவதைக் கண்டு மகிழ்ச்சியடைகின்றேன்.

நான் பிறந்த காஞ்சிபுரத்திலும், அதைச் சுற்றிய சிறூர்களிலும் ஜைன மதத்தைச் சேர்த்த மக்கள் இருக்கிறார்கள். அவர்களுடன் எனக்குத் தொடர்பு உண்டு.

'இந்த மார்க்கம் தமிழர்களுக்கே உரிய மார்க்கம்' என்று கூட., தமிழ் ஆய்ந்த வல்லுநர்கள் சிலர் கூறுகின்றனர்; ஆகவே, இந்த மார்க்கத்தில் எனக்குத் தொடர்பும் ஈடுபாடும் உண்டு.

வழிகாட்டிகள் இருந்தும் வாழ்வில்
முன்னேறவில்லை நாம்

உலகத்திலேயே நம்முடைய நாட்டில் தான் பெரும் பெரும் மகான்கள்-வழிகாட்டிகள் தோன்றி இருக்கின்றார்கள். நான்கூடச் சில சமயம் நினைத்துப் பார்ப்பேன்--இப்படிப்பட்ட பெரியவர்கள் தோன்றாமல் இருந்திருக்கலாம்; அவர்கள் தந்த அந்த நல்ல சிந்தனைகள் தோன்றாமல் இருந்திருக்கலாம், என்று; பெருமைக்குரிய வழிகாட்டிகள் பலர் இருந்தும் கூட; நாம் இந்த அளவுக்குக் கெட்டுப்போயிருக்கிறோமே உயர்ந்த நிலையில் இல்லையே என்பதால் தான், அப்படிக் கருதத் தோன்றியது.

இது போன்ற வழிகாட்டிகளே தோன்றாத நாடுகளில், எவ்வளவோ முன்னேறி இருக்கிறார்கள்--வளர்ச்சி அடைந்திருக்கின்றார்கள்; ஆனால், வழிகாட்டிகள் இருந்தும்--அவர்கள் வழிநடத்திச் செல்பவர்களாக இருந்தும் நாம் முன்னுக்கு வரவில்லை! காரணம், நாம் சொல்பவர்களாக இருந்தோம் செய்யத் தவறிவிட்டோம்! ஆகவே, இனிமேல் சொல்வதுடன் செய்து காட்டவும் வேண்டும்.

புத்தர் சொன்னார்--சித்தர் கூறினார்--மகாவீரரும், முகம்மது நபியும், காந்தியடிகளும், இராமலிங்க அடிகளும் சொன்னார்கள் என்று தான் சொல்கிறோமே தவிர, அவற்றை செய்து காட்டுகின்றோமா?

‘அவர் அப்படிச் சொன்னார்--இவர் இப்படிச் சொன்னார்' என்று கூறிவிட்டு, 'நீ என்ன செய்யப் போகிறாய்?' என்றால் விழித்து நிற்போரைத்தான் நாம் பார்க்கின்றோம்!

ஆகவே, சொல்லுவதோடு மட்டும் நில்லாமல் செய்தும் காட்ட வேண்டும்; அப்போதுதான் அந்த நன்னெறிகளை உணர்ந்தவர்கள் ஆவோம்!

மகாவீரர், ஆண்ட அரசர்களையும்--அண்டி உயிர் வாழ்ந்த ஆண்டிகளையும்--பெரும் பணக்காரர்களையும்--சிரமப்பட்டு பிழைத்த ஏழைகளையும்--'உயர்ந்தோர்' என்று சொல்லிக் கொண்டோரையும்-- 'தாழ்ந்தவர்' என்று கூறப்பட்டோரையும் தமக்குப் பின்னே வழிநடத்திய மாமனிதர் பின் செல்லவும் அவர் விட்டுச் சென்ற நல்ல காரியங்களை நாமும் கடைப்பிடித்து ஒழுகி, அதன் மூலம் நல்ல வாழ்க்கை வாழவும் வேண்டும்.

நான், நல்ல வாழ்க்கை என்று கூறியது, தாம் மட்டுமல்லாது பிறரும் உலகத்தில் மகிழ்ச்சியடையக் கூடிய அளவில் வாழலேண்டும் என்பதைத்தான் நல்வாழ்வு எனக் கருதி, மக்கள் வாழ்வாங்கு வாழ வேண்டும் என்று குறிப்பிடுகிறேன்.