ஆறுமுக நாவலர்
கவிமணியின் கவிமலர்கள்
ஆறுமுக நாவலர்[தொகு]
ஆசிரியர்: கவிமணி[தொகு]
(வெண்பா)
- 1. புண்ணியநாள், நாளெல்லாம் போற்றுநாள், செந்தமிழ்த்தாய்
- எண்ணியெதிர் பார்க்கும் இனியநாள், மண்ணுலகின்
- மேவுமுயர் சைவம் விளங்கிடுநாள், ஆறுமுக
- நாவலர்கோன் தோன்றியநல் நாள்.
(வேறு)
- 2. ஆடும் தில்லை யம்பலவன்
- அடிகள் மறவா அன்புடையோன்,
- பீடு பெறவே செந்தமிழைப்
- பேணி வளர்த்த பெரும்புலவன்,
- நீடு சைவம் இவ்வுலகில்
- நிலவச் செய்த குருநாதன்,
- நாடு புகழும் ஆறுமுக
- நாவ லன்பேர் மறவோமே!
- 3. இல்லா ஏழை எளியவருக்கு
- இரங்கும் இனிய குணசீலன்,
- கல்லா தவரின் கல்நெஞ்சும்
- கனியப் பேசும் கனிவுடையோன்,
- வல்லா ரறிஞர் செல்வரறம்
- வளர்க்கும் ஈழ வளநாட்டான்,
- நல்லார் போற்றும் ஆறுமுக
- நாவ லன்பேர் மறவோமே.
- பார்க்க:
- கம்பன்
- [[ ]]