ஆளுடையநம்பிகள் அருள்மாலை

விக்கிமூலம் இலிருந்து

ஆளுடைய நம்பிகள் அருள்மாலை[தொகு]

(ஆளுடைய நம்பிகள் என்று குறிக்கப்படுவோர் சுந்தரர் ஆவார். இறைவனால் தடுத்தாட்கொள்ளப்பட்ட பெருமையுடையவர். வன்றொண்டர் எனும் சிறப்புப்பெயர் பெற்றவர்.)


திருச்சிற்றம்பலம்
(கொச்சகக்கலிப்பா)


பாடல் 01 (மதியணிசெஞ்)[தொகு]

மதியணிசெஞ் சடைக்கனியை மன்றுணடம் புரிமருந்தைத்
துதியணிசெஞ் சுவைப்பொருளிற் சொன்மாலை தொடுத்தருளி
விதியணிமா மறைநெறியு மெய்ந்நிலையா கமநெறியும்
வதியணிந்து விளங்கவைத்த வன்றொண்டப் பெருந்தகையே.


பாடல் 02 (நீற்றிலிட்ட)[தொகு]

நீற்றிலிட்ட நிலையாப்புன் னெறியுடையார் தமைக்கூடிச்
சேற்றிலிட்ட கம்பமெனத் தியங்குற்றேன் றனியாளாய்
ஏற்றிலிட்ட திருவடியை யெண்ணியரும் பொன்னையெலாம்
ஆற்றிலிட்டுக் குளத்தெடுத்த வருட்டலைமைப் பெருந்தகையே.


பாடல் 03 (இலைக்குளநீ)[தொகு]

இலைக்குளநீ ரழைத்ததனி லிடங்கருற வழைத்ததன்வாய்த்
தலைக்குதலை மதலையுயிர் தழைப்பவழைத் தருளியநின்
கலைக்கும்வட கலையின்முதற் கலைக்குமுறு கணக்குயர்பொன்
மலைக்குமணு நிலைக்குமுறா வன்றொண்டப் பெருந்தகையே.


பாடல் 04 (வேதமுதற்)[தொகு]

வேதமுதற் கலைகளெலாம் விரைந்துவிரைந் தனந்தமுறை
ஓதவவைக் கணுத்துணையு முணர்வரிதா மெம் பெருமான்
பாதமலர் நினதுதிருப் பணிமுடிமேற் படப்புரிந்த
மாதவம்யா துரைத்தருளாய் வன்றொண்டப் பெருந்தகையே.


பாடல் 05 (ஏழிசையாய்)[தொகு]

ஏழிசையா யிசைப்பயனா யின்னமுதா யென்னுடைய
தோழனுமா யென்றுமுன்னீ சொன்னபெருஞ் சொற்பொருளை
ஆழநினைத் திடிலடியே னருங்கரணங் கரைந்துகரைந்
தூழியிலின் புறுவதுகா ணுயர்கருணைப் பெருந்தகையே.


பாடல் 06 (வான்காண)[தொகு]

வான்காண விந்திரனு மாலயனு மாதவருந்
தான்காண விறையருளாற் றனித்தவள யானையின்மேற்
கோன்காண வெழுந்தருளிக் குலவியநின் கோலமதை
நான்காணப் பெற்றிலனே நாவலூர்ப் பெருந்தகையே.


பாடல் 07 (தேன்படிக்கு)[தொகு]

தேன்படிக்கு மமுதாமுன் றிருப்பாட்டைத் தினந்தோறும்
நான்படிக்கும் போதென்னை நானறியே னாவொன்றோ
ஊன்படிக்கு முளம்படிக்கு முயிர்படிக்கு முயிர்க்குயிருந்
தான்படிக்கு மநுபவங்காண் தனிக்கருணைப் பெருந்தகையே.


பாடல் 08 (இன்பாட்டுத்)[தொகு]

இன்பாட்டுத் தொழிற்பொதுவி லியற்றுகின்ற வெம்பெருமான்
உன்பாட்டுக் குவப்புறல்போ லூர்பாட்டுக் குவந்திலரென்
றென்பாட்டுக் கிசைப்பினுமென் னிடும்பாட்டுக் கரணமெலாம்
அன்பாட்டுக் கிசைவதுகா ணருட்பாட்டுப் பெருந்தகையே.


பாடல் 09 (பரம்பரமாந்)[தொகு]

பரம்பரமாந் துரியமெனும் பதத்திருந்த பரம்பொருளை
உரம்பெறத்தோ ழமைகொண்ட வுன்பெருமை தனைமதித்து
வரம்பெறநற் றெய்வமெலாம் வந்திக்கு மென்றாலென்
தரம்பெறவென் புகல்வேனான் றனித்தலைமைப் பெருந்தகையே.


பாடல் 10 (பேரூரும்)[தொகு]

பேரூரும் பரவைமனப் பிணக்கறவெம் பெருமானை
ஊரூரும் பலபுகல வோரிரவிற் றூதனெனத்
தேரூருந் திருவாரூர்த் தெருவுதொறு நடப்பித்தாய்
ஆரூர நின்பெருமை யயன்மாலு மளப்பரிதே.


திருச்சிற்றம்பலம்


அருட்பிரகாச வள்ளலார் பாடியருளிய ஆளுடையநம்பிகள் அருள்மாலை முற்றும்.[தொகு]

பார்க்க
அருட்பிரகாச வள்ளலார் பாடல்கள்
வயித்தியநாதர் பதிகம்
திருவடிப் புகழ்ச்சி
வள்ளலார் பாடல்கள் - தெரிவுசெய்யப்பட்டவை
ஆளுடையவடிகள் அருள்மாலை
ஆளுடைய அரசுகள் அருள்மாலை
ஆளுடைய பிள்ளையார் அருள்மாலை [[]]