திருவடிப் புகழ்ச்சி

விக்கிமூலம் இலிருந்து

அருட்பிரகாச வள்ளலார் பாடியருளிய திருவடிப் புகழ்ச்சி[தொகு]

(எண்சீரடி யாசிரிய விருத்தம்)
திருச்சிற்றம்பலம்


பாடல் 01 (வானிருக்கும்)[தொகு]

வானிருக்கும் பிரமர்களு நாரணரும் பிறரும் மாதவம்பன் னாட்புரிந்து மணிமாட நடுவே
தேனிருக்கு மலரணைமேற் பளிக்கறையி னூடே திருவடிசேர்த் தருள்கவெனச் செப்பிவருந் திடவும்
நானிருக்குங் குடிசையிலே வலிந்துநுழைந் தெனக்கே நல்லதிரு வருளமுத நல்கியதன் றியுமென்
ஊனிருக்கும் குடிசையிலு முவந்துநுழைந் தெளியேன் உள்ளமெனுஞ் சிறுகுடிசை யுள்ளுநுழைந் தனையே. (01)


பாடல் 02 (படிசெய்பிரமன்)[தொகு]

படிசெய்பிர மன்முதலோர் பற்பலநாள் முயன்றே பகலொளிசெய் நவமணிகள் பதித்தசிங்கா தனத்தே
அடிசெய்தெழுந் தருளியெமை யாண்டருளல் வேண்டும் அரசேயென் றவரவரு மாங்காங்கே வருந்த
வடிசெய்மறை முடிநடுவே மன்றகத்தே நடிக்கும் மலரடிகள் சிவப்பவொரு வளமுமிலா வசுத்தத்
குடிசைநுழைந் தனையேயென் றேசுவரே யன்பர் கூசாம லென்னுளமாங் குடிசைநுழைந் தனையே. (02)


பாடல் 03 (உள்ளபடி)[தொகு]

உள்ளபடி யுள்ளதுவா யுலகமெலாம் புகினும் ஒருசிறிதுந் தடையிலதா யொளியதுவே மயமாய்
வெள்ளவெளி நடுவுளதா யியற்கையிலே விளங்கும் வேதமுடி யிலக்கியமா மேடையிலே யமர்ந்த
வள்ளன்மல ரடிசிவப்ப வந்தெனது கருத்தின் வண்ணமெலா முவந்தளித்து வயங்கியபே ரின்பங்
கொள்ளைகொளக் கொடுத்ததுதான் போதாதோ அரசே கொடும்புலையேன் குடிசையிலுங் குலவிநுழைந் தனையே. (03)


பாடல் 04 (தடையறியாத்)[தொகு]

தடையறியாத் தகையினதாய்த் தன்னிகரில் லதுவாய்த் தத்துவங்க ளனைத்தினுக்குந் தாரகமா யவைக்கு
விடையறியாத் தனிமுதலாய் விளங்குவெளி நடுவே விளங்குகின்ற சத்தியமா மேடையிலே யமர்ந்த
நடையறியாத் திருவடிகள் சிவந்திடவந் தெனது நலிவனைத்துந் தவிர்த்தருளி ஞானவமு மளித்தாய்
கொடையிதுதான் போதாதோ வென்னரசே யடியேன் குடிசையிலுங் கோணாதே குலவிநுழைந் தனையே. (04)


பாடல் 05 (இறையளவுந்)[தொகு]

இறையளவுந் துரிசிலதாய்த் தூய்மையதாய் நிறைவாய் இயற்கையதா யநுபவங்க ளெவைக்குமுத லிடமாய்
மறைமுடியோ டாகமத்தின் மணிமுடிமேன் முடியாய் மன்னுகின்ற மெய்ஞ்ஞான மணிமேடை யமர்ந்த
நிறையருட்சீ ரடிமலர்கள் சிவந்திடவந் தடியேன் நினைத்தவெலாங் கொடுத்தருளி நிலைபெறச்செய் தனையே
குறைவிலதிப் பெருவரந்தான் போதாதோ அரசே கொடும்புலையேன் குடிசையிலுங் குலவிநுழைந் தனையே. (05)


பாடல் 06 (உருவினதா)[தொகு]

உருவினதாயருவினதா யுருவருவா யுணர்வாய் உள்ளதுவா யொருதன்மை யுடையபெரும் பதியாய்
மருவியவே தாந்தமுதல் வகுத்திடுங் கலாந்த வரையதன்மே லருள்வெளியில் வயங்கிய மேடையிலே
திருவுறவே யமர்ந்தருளுந் திருவடிகள் பெயர்த்தே சிறியேன்கண் ணடைந்தருளித் திருவனைத்துங் கொடுத்தாய்
குருவேயென் னரசேயீ தமையாதோ வடியேன் குடிசையிலுங் கோணாதே குலவிநுழைந் தனையே. (06)


பாடல் 07 (மணமுளதா)[தொகு]

மணமுளதா யொளியினதாய் மந்திரவா தரமாய் வல்லதுவாய் நல்லதுவாய் மதங்கடந்த வரைப்பாய்
வணமுளதாய் வளமுளதாய் வயங்குமொரு வெளியில் மணிமேடை யமர்ந்ததிரு வடிமலர்கள் பெயர்த்தே
எணமுளவென் பாலடைந்தென் னெண்ணமெலா மளித்தாய் இங்கிதுதான் போதாதோ வென்னரசே ஞான
குணமலையே யருளமுதே குருவேயென் பதியே கொடும்புலையேன் குடிசையிலுங் குலவிநுழைந் தனையே. (07)


பாடல் 08 (சிரம்பெறுவே)[தொகு]

சிரம்பெறுவே தாகமத்தி னடிநடுவே முடியுஞ் செல்லாத நிலையதுவா யெல்லாம்வல் லதுவாய்
பரம்பரமாய்ப் பரம்பரமேற் பரவுசிதம் பரமாய்ப் பதிவெளியில் விளங்குகின்ற மதிசிவமே டையிலே
தரங்குலவ வமர்ந்ததிரு வடிகள்பெயர்த் தெனது சார்படைந்தென் னெண்ணமெலாந் தந்தனையென் னரசே
குரங்குமனச்சிறியேனுக் கிங்கிதுபோ தாதோ கொடும்புலையேன் குடிசையிலுங் குலவிநுழைந் தனையே. (08)


பாடல் 09 (பற்றியபற்)[தொகு]

பற்றியபற் றனைத்தினையும் பற்றறவிட் டறிவாம் பான்மையொன்றே வடிவாகிப் பழுத்தபெரி யவரும்
உற்றறிதற் கரியவொரு பெருவெளிமேல் வெளியில் ஓங்குமணி மேடையமர்ந் தோங்கியசே வடிகள்
பெற்றறியப் பெயர்த்துவந்தென் கருத்தனைத்துங் கொடுத்தே பிறவாம லிறவாமற் பிறங்கவைத்த வரசே
கொற்றமுளேன் றனக்கிதுதான் போதாதோ கொடியேன் குடிசையிலுங் கோணாதே குலவிநுழைந் தனையே. (09)


பாடல் 10 (கருவியொடு)[தொகு]

கருவியொடு கரணமெலாங் கடந்துகடந் ததன்மேற் காட்சியெலாங் கடந்ததன்மேற் காணாது கடந்து
வொருநிலையி னனுபவமே யுருவாகிப் பழுத்த உணர்ச்சியினுங் காணாம லோங்குமொரு வெளியில்
மருவியதோர் மேடையிலே வயங்கியசே வடிகள் மலர்த்திவந்தென் கருத்தனைத்தும் வழங்கினையி்ன் புறவே
குருமணியே யென்னரசே யெனக்கிதுபோ தாதோ கொடும்புலையேன் குடிசையிலுங் குலவிநுழைந் தனையே. (10)


திருச்சிற்றம்பலம்


வள்ளற்பெருமான் பாடியருளிய திருவடிப்புகழ்ச்சி முற்றும்[தொகு]

பார்க்க:
வயித்தியநாதர் பதிகம்
அருட்பிரகாச வள்ளலார் பாடல்கள் [[]] [[]] [[]] [[]] [[]]
[[]]
திருவடிப் புகழ்ச்சி
அருள்விளக்க மாலை
ஆளுடையவடிகள் அருள்மாலை
ஆளுடையநம்பிகள் அருள்மாலை
ஆளுடைய பிள்ளையார் அருள்மாலை
தெய்வமணிமாலை
[[]]
[[]]
"https://ta.wikisource.org/w/index.php?title=திருவடிப்_புகழ்ச்சி&oldid=27329" இலிருந்து மீள்விக்கப்பட்டது