கனிச்சாறு 1/013-089

விக்கிமூலம் இலிருந்து

10  தமிழ் நாட்டவரே!


தாதயிறுங் களிவண்டுந் தளிரயிறும் பைங்கிளியுங்
கோதயிறுங் குயிற்பிணையுங் குறியயருங் குருகிணையுங்
காதயருங் கருத்தயரக் கனிந்துடலங் கண்ணயரத்
தீதயரு மிசைமொழியாந் தெள்ளுதமிழ் மொழியாமே,

தீங்கைநினைந் தோராமே தெளிவிறந்து பொலிவழிய
மூங்கையவர் சொற்கலந்து மொழிகுவதுந் தமிழாமோ?

இணரவிழ்ந்து மணமெழுப்பு மினியதமிழ் நிலைகுலைய
உணர்விழந்து வடமொழிச்சொல் உலப்பதுவுந் தமிழாமோ?

பயிரிழந்த களைவளர்ப்பார் பசுந்தமிழ்ப்பைங் கூழ்கருக
உயிரிழந்த சொற்கலந்தே உரைப்பதுவுந் தமிழாமோ?

அரசிருந்து தமிழ்காத்தார் அரும்புகழும் புதைவுறவே
முரசிருக்க வடபறையை முழக்குவதுந் தமிழாமோ?

சிறைப்படுக்கும் சிறப்பிழக்கும் என்றுணராச் செழும்புலமை
குறைப்படுக்கும் மொழிகலந்து கூறுவதுந் தமிழாமோ?

கூற்றுக்கே வழியென்று கொடும்பழியை நினையாமே
சோற்றுக்கே நாத்திறம்பிச் சொல்லுவதுந் தமிழாமோ?

அஃதிலையால்

மொழியெனப் படுவது விழியெனக் கருதிப்
பழியெனப் பிறமொழி பயில்வது துறந்து,
புதுச்சொற் புனைவும் புதுநூல் யாப்பும்
எதுகுறை வெனவாய்ந் ததுவது இயற்றலும்
வளர்தலென் றறிகுமின் அல்லதைத்
தளர்தலென் றறிகுமின் தமிழ்நாட் டவரே!

-1959
"https://ta.wikisource.org/w/index.php?title=கனிச்சாறு_1/013-089&oldid=1514329" இலிருந்து மீள்விக்கப்பட்டது